நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா? பகுதி: 14B[தொடர்கிறது]

 [சீரழியும் சமுதாயம்] 

நமது சமுதாயத்தில் இன்று ஒழுக்க நெறிகளின் சீரழிவு ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வாக மாறியுள்ளது. அறநெறி மக்கள் இடையே, ஒரு ஆரோக்கியமான இணைப்பை வகிக்கிறது, ஒவ்வொருவருக்கு ஒருவர் ஒத்துழைக்க இது ஒத்திசைவாக உள்ளது. சரியான அல்லது தவறான நடவடிக்கைகளின் வேறுபாடு உணர்ந்து, ஒரு மதிப்பு நிறைந்த சமூகத்தை கட்டி எழுப்புகிறது. குடும்பம், சமுதாயம், கலாச்சாரம், மதம் அல்லது அவர்களின் நம்பிக்கைகள் மற்றும் சமூக மதிப்புகள் போன்றவை [family, society, culture,Religion or belief and social values etc] ஒழுக்கம் பேணுவதில் செல்வாக்கு செலுத்துகின்றன. என்றாலும் சமூக பொருளாதார காரணிகளால் பல குடும்பங்கள் நிலைதவறியும் ஒழுங்கற்றும் குழம்பியும் [disoriented, disorganised and confused] இன்று உள்ளன. இதனால் இவை ஒழுக்க நெறிகளை பேணுவதில் தவறிவிடுகின்றன. எமது கல்விக்கூடங்கள் மிக திறமையான நபர்களை இன்று உருவாக்குகின்றன, ஆனால் நல்ல குடிமகனை அல்ல என்பது ஒரு கவலைக்குரிய விடயமாக இருக்கிறது. இன்றைய சமுதாயம் பெரும்பாலும் வன்முறை, பேராசை, திருட்டு, போதைப்பொருள், மற்றும் பயங்கரவாதம் [violence, greed, theft, drug addiction, terrorism] போன்றவற்றால் பாதிக்கப் பட்டுள்ளது. ஒழுக்காறு அல்லது கட்டுப்பாடு இன்று இளைஞர்களிடம் குறைந்து காணப்படுகிறது. அவர்கள் வயதில் மூத்தவர்களை மதிப்பதும் இல்லை, அவர்களின் சொற்களை கேட்பதும் இல்லை. இன்று பலர் தங்கள் சுயநலங்களை முன்னிறுத்தி செயல் செய்வதால், அவர்கள் பொதுவாக சுயநலவாதிகள் ஆகிவிட்டனர். எனவே பொதுவாக நெறிமுறை மற்றும் தார்மீக விழுமியங்களின் [ethical and moral values] வீழ்ச்சி, இன்று பெரும்பாலும் சமுதாயத்தில் காணப்படுவதாக அமைந்து விடுகிறது.

இந்த நவீன பொருள்முதல்வாத உலகம் [materialistic world] எமது வாழ்க்கை தரத்தை உயர்த்தியுள்ளது, ஆனால் வாழ்க்கையின் மதிப்பை குறைத்து விட்டது. இன்று அதிகரிக்கும் சனத்தொகையுடன் அறிவும், குறிப்பாக, அறிவியல் மற்றும் தொழில்நுட்பமும் (science and technology) அதிகரித்து உள்ளது. அதே போல பொருளும் வசதியும் கூட அதிகரித்துள்ளது. இதனால் அவன் உலகின் பொருள் வசதிகளை உண்மையான மகிழ்ச்சியாக கருதி, பலவேளைகளில் பிழையான வழியில் செல்கிறான். இன்றைய சமுதாயத்தில் பரவலாக பரவியிருக்கும் பேராசை, தன் சக்தி, செல்வம், பதவிகளை பெருக்கும் ஆசை, கடுமையான அநீதி, மனித உரிமைகள் துஷ்பிரயோகம், அதிகாரத்தின் பரவல், சுரணையின்மை அல்லது  இரக்கமின்மை, உணர்வற்ற தன்மை, வஞ்சகம், நேர்மையற்ற தன்மை, திருட்டு, லஞ்சம், கடத்தல், ஊழல், சுரண்டல் [greed, self-aggrandizement, gross injustice, abuse of human rights, pervasion of power, callousness, insensitivity, deceit, dishonesty, thefts, bribery, smuggling, corruption, exploitation] போன்றவற்றால் மனிதன் கவ்வப்பட்டுள்ளான். இதனால் அவனின் உணர்வு நிலை அல்லது விழிப்பு நிலை [consciousness] குறைந்தும் இருண்டும் காணப்படுகிறது. மதம் மற்றும் அறநெறியும் [Religion and morality] நழுவி செல்வதும் மனிதனின் சக்தி தவறாக பயன் படுத்தப்படுவதும் இப்போது சாதாரணமாகிவிட்டது. உதாரணமாக, மதங்கள் என்பது மனிதர்கள் துன்பம் இல்லாமல் வாழும் வழிகள் அல்லது  துயர் இல்லாது வாழ வகுத்த பாதை எனலாம். அத்துடன் இது ஒரு அன்பின் அடையாளம். ஆனால் இன்று மதங்கள் மதம் கொண்டு விலகி அலைவதை, மோதுவதை காண்கிறோம்.  எனவே கல்விமுறையிலும் பிள்ளைகளை பெற்றோர் வளர்ப்பு முறையிலும், நாம் கட்டாயம் கவனம் செலுத்த வேண்டும். அவர்களுக்கு எது சரி, எது பிழை என்பதை அறியப் படுத்த வேண்டும். அதை அவர்களுக்கு போதிப்பதை விட, பெற்றோர்களும் ஆசிரியர்களும் நிபந்தனையற்ற அன்புகளின் மற்றும் மனித விழுமியங்களின் அல்லது நற் பழக்க வழக்கங்களின் படி வாழ்ந்து காட்டிட வேண்டும். விழுமியங்கள் [Values] வாழ்க்கைக்கு ஒரு கருத்தை கொடுக்கிறது. அது மட்டும் அல்ல அவை, எவை எவைக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதை நிலை நாட்டுகின்றன. இன்று பல பாரம்பரிய மதிப்புகள் வேகமாக மாற்றமடைகின்றன, அவை மனித வாழ்வை பாதிக்காத வரை தவறு இல்லை. எனினும் உதாரணமாக, பாலியல் நெறிமுறைகள் இன்று மாற்றமடைகின்றன. இதனால் திருமணத்திற்கு புறம்பான பிறப்புகளின் பரவல் [“the prevalence of out-of-wedlock births”] மற்றும் குடும்பங்களின் உடைப்பு கூடுவது, கட்டாயம், தார்மீக சிதைவுகளின் வெளிப்படையான அறிகுறி எனலாம். இவ்வாறே வேறு பல நீண்டகால மதிப்புகள் அல்லது விழுமியங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

நெறிமுறைகள் மட்டும் அல்ல, பாரம்பரியமாக இருந்து வந்த வலுவான பணி நெறிமுறையும் [strong work ethic] இன்று பாதிப்படைவதை காண்கிறோம். உதாரணமாக, வேலையாட்கள் சரியான நேரத்தில் வேலைக்கு வருவதும் மற்றும் வேலை செய்யும் அர்ப்பணிப்பும் குறைகிறது. அதேபோல பழக்கவழக்கங்கள் மற்றும் மரியாதையும் குறைந்து வியாபாரத்தில், முரட்டுத்தனமும் மோசமான வாடிக்கையாளர் சேவையும் அதிகரிக்கின்றன. இவை எல்லாம் அறநெறி சரிவுக்கு சில எடுத்துக் காட்டுக்கள் ஆகும். இறுதியாக நான் ஒன்று கூற விரும்புகிறேன். சமுதாயமும் அரசியலும் இரு ஒன்றோடொன்று தொடர்புடைய சொற்கள். ஒன்றில் ஏற்படும் மாற்றம் மாற்றத்திலும் தெளிவாகத் தெரியும். எனவே இரண்டும் தீமையிலிருந்து விடுபட்டு இருக்கவேண்டும். உதாரணமாக இன்று நாம் [தமிழர்] பெரும்பாலும் வாழும் நாடுகளான இலங்கை, இந்தியாவை எடுத்தால், நெறிமுறை விழுமியங்களை மீறி, சிறுபான்மையரான தமிழரை குறிவைத்தலை காண்கிறோம். பெரும்பான்மை மற்றும் மதத்தின் பெயரில் படுகொலையும் அடக்குமுறையும் தமிழருக்கு எதிராக நடைபெறுகின்றன. இவையும் நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறது என்பதற்கு சில உதாரணங்கள் ஆகும்.

                                                         [கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]
பகுதி: 15  தொடரும்
பகுதி 01 லிருந்து வாசிக்க அழுத்துங்கள்→ Theebam.com: நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா? /பகுதி: 01A:
பகுதி 15A வாசிக்க அழுத்துங்கள் → Theebam.com: நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா?பகுதி: 15A

1 comments:

  1. உருத்திரசிங்கம் நாகேஸ்வரிFriday, May 01, 2020


    அருமையான பதிவு. கல்வி கூடங்கள் மிகத் திறமையான நபர்களை உருவாக்குகின்றது. ஆனால் நல்ல குடிமகனை அல்ல. கல்லூரிகள் மட்டும் அல்ல பெற்றோரும் பிள்ளைகள் பிறந்த உடனேயே டாக்டர், எஞ்சினியர்,லோயர் என்று சொல்லத் தொடங்கி அதற்கு ஏற்றல் போல் பிள்ளைகளை இயக்க அல்லது உருவாக்க முயல்கின்றனர். பிள்ளைகளின் விருப்பு வெறுப்பு எதற்கும் இடம் இல்லை. இதனாலும் இளைஞர்கள் வழி தடுமாறும் நிலை உருவாகின்றது. வெகு விரைவில் பணம் காண வேண்டும் என்பதற்கான பிறளான கண்னோட்டம் ஒழுக்க கேடான இன்பம் தேடல்... விரிந்து செல்லும் கட்டுரை அருமை. பாராட்டுக்கள். தொடர்ந்தும் தங்களின் ஆக்கங்களை எதிர் பார்க்கின்றோம். நன்றி.

    ReplyDelete