எந்த நாடு போனாலும் எங்கள் ஊர் [நுவரெலியா] போலாகுமா?



நுவரெலியா [Nuwara Eliya] இலங்கையின் மத்திய மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு மாநகரமாகும். இந்நகரம் நுவரெலியா மாவட்டத்தின் தலை நகரமுமாகும். இது மத்திய மாகாணத்தின் தலை நகரமான கண்டிக்குத் தெற்கே சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. உயரமான மலைகளுக்கு நடுவே, கடல் மட்டத்திலிருந்து 1900 மீட்டர்கள் உயரத்தில் அமைந்துள்ள இந்த நகரமே இலங்கையில் மிகவும் உயரமான இடத்தில் அமைந்துள்ள மாநகரமாகும்.

பெயரின் தோற்றம்
சிங்கள மொழியில் நுவர என்பது நகரம் என்பதையும், எலிய என்பது வெட்ட வெளி அல்லது ஒளியைக் குறிக்கிறது.. எனவே நுவரெலியா (நுவர-எலிய) என்பது ஒளிபொருந்திய நகரம் என்னும் பொருளை உடையது. தமிழில் இந்நகரம் நூரலை எனவும் அழைக்கப்படுவதுண்டு.
 என்றும் புற்தரைகளுடன் பசுமையாக விளங்கும் இந்நகரம் பிரித்தானியர் காலத்திலிருந்தே ஒரு விடுமுறைத் தலமாக விளங்கி வந்திருக்கிறது. குடியேற்றவாத ஆட்சிக்காலத்தில் இது பெற்றிருந்த முக்கியத்துவத்துக்கான சான்றுகளாகக் குடியேற்றவாதக் கட்டிடக்கலைப் பாணியிலமைந்த கட்டிடங்கள் மற்றும் பல அம்சங்களை இன்றும் அங்கே காணமுடியும். ஆங்கிலேயர்களால் இந்தப் பிரதேசம் குட்டி இங்கிலாந்து என அழைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

குட்டி இங்கிலாந்து - தோற்றம்
நுவரெலியாவின் பலமே அதன் விக்டோரியா பாணியிலான  கட்டங்களும் வீடுகளும் எனலாம். நுவரெலியா ஆரம்பத்தில் மனிதர் வசிக்காத பிரதேசமாகவே காணப்பட்டது. பெருமளவு யானைகள் இங்கே காணப்பட்டன. நுவரெலியாவை மனிதர்கள் வாழும் பகுதியாகவும், ஓய்வு எடுப்பதற்தான இடமாகவும் மாற்றியமைப்பதில் முன் நின்றவர்களில் அன்றைய கவர்னர் சேர் எட்வர்ட் பான்ஸ் முக்கியமானவர். நுவரெலியாவுக்கான வீதியை அவரே அமைத்தார். எட்டாயிரம் ஸ்டேர்லிங் பவுண்செலவில் நுவரெலியாவில் தனக்கென ஒரு விடுமுறை பங்களாவையும்  அமைத்தார். 150 அறைகளைக் கொண்ட அந்த பங்களா பின்னர் ஹோட்டலானது.  நுவரெலியாவின் ‘கோல்ஃபேஸ்’ ஹோட்டலான கிராண்ட் ஹோட்டல், சென்ட், அன்றுஸ் ஹோட்டல், கீனா ஹோட்டல், கால்டன் ஹோட்டல் என்பனவும் மிகவும்  பழைய கட்டங்களாகும்.
பின்னர் 1831 -37 காலப்பகுதியில் இலங்கையில் கவர்னராக இருந்த சேர் வில்லியம் ஹோர்டன், நுவரெலியா பற்றி பல கட்டுரைகளைத் தனது ‘கொழும்பு ஜர்னல்’ என்ற பத்திரிகையில் எழுதியிருக்கிறார்.
கவர்னர் வில்லியம் கிரிகறி, 'இங்கே வந்து வாழுங்கள்' என்று இலங்கையர்களையும் ஆங்கிலேயர்களையும் அன்று அழைத்திருந்தார். 1910ம் ஆண்டில் அப்படி இங்கே வந்த இலங்கையர்கள்   இருவரில்  ஒருவரது பெயர், சொலமன் டயஸ் பண்டாரநாயக்க இவர்  எஸ். டபிள்யூ.ஆர். டீயின் தந்தையார் ஆவர்.. மற்றவர் எப்.டீ. லூஸ் என்பவர் ஆகும்.. 1918ஆம் ஆண்டு சேர் பென்னம்பலம் அருணாசலம் அவர்கள்  இங்கே அரை ஏக்கர் காணியை  பத்தாயிரம் ரூபா கொடுத்து வாங்கி ஒரு  வீடு அமைத்திருந்தார்.  1850களில் நுவரெலியாவில் முதலில் பண்ணையமைத்து விவசாயத்தில் ஈடுபட்ட சாமுவேல் பேக்கர் இங்கே ஏக்கர் 25 ரூபா என்ற அடிப்படையில் காணிவாங்கியிருக்கிறார்.
நுவரெலிய வீடுகளின் கூரைகளுக்கு சிவப்பு வர்ணம் பூச வேண்டும் என்று உத்தரவிட்டவர் அன்றய கவர்ணர் வெஸ்ட் ரிட்ஜ்வே, இந்த உத்தரவை அறியாமலேயே இன்றைக்கும் இதை ஒரு ‘நுவரெலிய பழக்க’மாகக் கருதி வீட்டு உரிமையாளர்கள் தமது வீட்டுக் கூரைகளுக்கு சிவப்பு வர்ணம் பூசி வருகிறார்கள்.

கவனமீர்க்கும் சில இடங்கள்
இங்குள்ள குழிப்பந்தாட்ட மைதானத்தின் முனையொன்றில் பிரித்தானிய ஆளுநர் ஒருவரின் கல்லறை தூண் உள்ளது. இவர் யானை வேட்டையில் ஆர்வமிக்கவர் என்றும் நூற்றுக்கணக்கான யானைகளை கொன்றுள்ளார் என்றும் கூறப்படுகிறது. இவராற்றிய துர்செயலுக்காக ஒவ்வொரு ஆண்டும் இத்தூணை மின்னல் தாக்குவதாகவும் உள்நாட்டு பரம்பரைக் கதையும் ஒன்று இங்கு உள்ளது. தற்போது சுற்றுலாப் பயணிகளுக்கு இந்த இடத்திற்குச் செல்ல அனுமதி அளிக்கப்படுவது இல்லை.
இங்குள்ள ஹோலி டிரினிட்டி தேவாலயத்தில் உள்ள பழைய கல்லறைத் தோட்டத்தில் உள்ள கல்லறைத் தூண்களில் பல ஆங்கிலேயர் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
இந்து தொன்மவியலின் வரலாற்றின்படி இங்குள்ள சீதாகோவில் (அனுமன் கோவில்) உள்ள இடத்தில்தான் இராமாயணக் காவியத்தின் நாயகி சீதை இராவணனால் சிறை வைக்கப்பட்டிருந்ததாக உள்ளூர் கதைகள் உள்ளன. இந்தக் கோவில் உள்ள இடம் சீதா எலியா என அழைக்கப்படுகிறது. இது நுவரெலியாவிலிருந்து பதுளை செல்லும் வழியில் ஹக்கலா தாவரப் பூங்காவை எட்டுவதற்கு முன்னர் அமைந்துள்ளது. இதனையொட்டி அமைந்துள்ள இடங்கள் இராமாயணத்தின் பல வரலாற்று நிகழிடங்களாக இலங்கை சுற்றுலாத்துறையினரால் அடையாளப்படுத்தப்பட்டு, சுற்றுலாப் பிரயாணிகளைக் கவர்வதற்காக இராமாயண வழித்தடம் என்ற சுற்றுலாப் பொதியை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. சீதை தழலில் இறங்கியதாகக் கூறப்படும் திவுரும்போலா எனும் இடத்தில் ஓர் கோவில் கட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது. 
இப்படியான பல திட்டங்களும்  இலங்கையின் சில  அமைப்புக்களின் எதிர்ப்பினால் தடைபட்டுப் கொண்டிருப்பது கவலைக்குரிய செய்தியாகும்.
நுவரெலியாவில் பார்த்து ரசிக்க மேலும்  விக்டோரியா பூங்கா, ஹக்கல பூங்கா,  கிரகறி வாவி,மேலும்  ரம்பியமான காட்சிகள், ஹோர்டன் பிளேஸ், மரக்கறி தோட்டங்கள், பியர் பார், படகு சவாரி எனப் பல விஷயங்கள் அங்கு உள்ளன.


நுவரெலிய குதிரைப் பந்தயத் திடல் தற்போது முழுமையாக சீர் செய்யப்பட்டுள்ளது. வசந்த காலத்தினை முன்னிட்டு ஒவ்வொரு வருடமும்

குதிரைப் பந்தய போட்டிகளுடன், திடலை சுற்றியுள்ள பிரதான பாதையில் மோட்டார் காரோட்டப் போட்டியும், நுவரெலியா மாநகர சபை பொது விளையாட்டு மைதானத்தில் கால்பந்தாட்டம், கரப்பந்தாட்டம், கிரிக்கெட் உட்பட பல போட்டிகள் நடைபெற்று வருகின்றமை உல்லாசப்பயணிகள் உட்பட அனைவரையும் கவர்ந்தவையாகும்.

இருந்தாலும் அன்று  இந்தியாவில் ஊட்டியை விட சிறப்பான ,கவர்ச்சியான இடமாக நுவரெலியா நகரத்தினை, அந்நியரால் அறியப்பட் ட   அளவிற்கு இன்று உல்லாசப்பயணிகளை கவரும் வகையில் நுவரேலிய நகர்   மேலும் அபிவிருத்தி செய்யப்படாதது இலங்கையின் துர்ப்பாக்கியமென்றே கருத இடமுண்டு.

🔻🔻🔻காணொளியினை காண ⇣play இணை அழுத்துக 

📂தொகுப்பு:செ.மனுவேந்தன்

0 comments:

Post a Comment