நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா? பகுதி:15B [தொடர்-முடிவு]



     [சீரழியும் சமுதாயம்] 

சேர்ந்த நிலத்தின் இயல்பால் அந்த நீர் வேறுபட்டு அந் நிலத்தின் தன்மை யுடையதாகும், அதுபோல் மக்களுடைய அறிவு இனத்தின் இயல்பினை உடையதாகும் என 

"நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு இனத்தியல்ப தாகும் அறிவு" என்று கூறுகிறது குறள் 452. 
அதாவது சேர்ந்த இனத்திற்கு ஏற்ப பழக்கவழக்கமும் அறிவும் மாறும் என்கிறது. நல்ல சமுதாய சூழ்நிலைதான் தனி மனிதனுக்கு பெருமை யையும், சிறுமையையும் சேர்க்கிறது. இதனை திருவள்ளுவர் தன் குறள் 460 இல்

"நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின் அல்லற் படுப்பதூஉம் இல்"

என, அதாவது நல்ல இனத்தைவிடச் சிறந்ததாகிய துணையும் உலகத்தில் இல்லை, தீய இனத்தைவிடத் துன்பப்படுத்தும் பகையும் இல்லை என்கிறார். அது மட்டும் அல்ல ,சமுதாய அடையா ளங்களை வைத்து தான், அங்கு வாழும்  தனி மனிதனுடைய தரமும் முடிவும் செய்யப்படுகிறது. இதை திரு வள்ளுவரும் தமது குறள் 458 இல்,

"மனநலம் நன்குடைய ராயினும் சான்றோர்க்கு இனநலம் ஏமாப் புடைத்து"

என, அதாவது மனதின் நன்மையை உறுதியாக உடையவராயினும் சான்றோர்க்கு இனத்தின் நன்மை மேலும் நல்ல காவலாக அமையும் என கூறுகிறார். ஆகவே சமுதாய பார்வையில் பண்புக் குறைவை உடைய சமுதாயம் என கருதப்பட்டால் அல்லது நிருவப்பட்டால், அங்கே மன அளவில் உயர்ந்த மனிதன் என்றாலும் ,அவனை பொதுவாக உயர்வாக கருதப்படுவதில்லை, உதாரணமாக ஆபிரிக்க அமெரிக்கரை இப்படி இன்னும் பலர் கருதுகிறார்கள். எனவே எம் சமுதாயத்தின் பெயரை கெடுக்காமலும் எம்மையும் எம் சமுதாயத்தையும் சீரழிக்காமலும் நாம் பார்த்து கொள்ள வேண்டும். இது ஒவ் வொரு சமுதாயத்தினதும் ஒவ்வொரு உறுப்பினரினதும் கடமையாகும்.

சமுதாயம் மேம்பாடு அடைய, சமுதாயத்தின் வாழ்க்கைத் தரம் உயரவேண்டும் அதாவது, மனிதர்கள் நிர்வாணமாகப் பிறப்பதைப் போலவே நிர்மலமான மூளையுடனும், புலன்களுடனும் பிறக்கிறார்கள். பின் கற்றல், கேட்டல், சிந்தித்தல், செயற்படுதல் மூலம் புத்திக் கொள்முதல் செய்கிறார்கள் அறிவு பெறுகிறார்கள். எனவே முறையான அறிவு பெற்று அவர்கள் தம் வாழ்க்கை தரத்தை முறையாக உயர்த்தும் பொழுது, அவர்கள் சார்ந்த சமுதாயமும் மேம்படுகிறது எனலாம். மேலும் ஒளவையார் தனது ஒரு பாடலில்,

நாடா கொன்றோ காடா கொன்றோ
அவலா கொன்றோ மிசையர் கொன்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே"

என்று பாடினார், அதாவது, நிலத்திற்கு என்று தனியியல்பு ஒன்று இல்லை, எங்கு நல்லவர் வாழ்கின்றாரோ அங்கு நிலமும் வளமாகவே அமையும் என்கிறார். அது போலத்தான் சமுதாயமும், எங்கே மனிதர்கள் நல்லவராக முறையாக வாழ்கின்றாரோ அங்கு சமுதாயமும் முன்னேற்றமும் மேன்மையும் அடையும் எனலாம்.

எந்த ஒரு உயர்ந்த நாகரிகமும் ஒரு நாளில் ஏற்படுவதல்ல, அதே போல ஒரு நாளில் அழிவதும் அல்ல. சீரழிவு அங்கு படிப்படியாகவே நடந்து உள்ளது, எனவே அதன் தாக்கத்தை நேரத்துடன் உணரக் கூடியதாக, பார்க்கக் கூடியதாக கட்டாயம் இருக்கும். பொதுவாக அந்த சமுதாயமே அல்லது நாகரிகமே அதன் சரிவுக்கு பொறுப்பு ஆகும். உதாரணமாக ரோம பேரரசை எடுத்துக் கொண்டால், அது ஐந்து முக்கிய காரணங்களால் சரிந்ததாக கூறினாலும், ஒரு ஆங்கில எழுத்தாளர் மற்றும் வரலாற்றாளரான எட்வார்ட் கிப்பன் (Edward Gibbon, பி. மே 8, 1737 - இ. ஏப்ரல் 27, 1737) தனது ரோமப் பேரரசின் தேய்வும் வீழ்ச்சியும் (The History of the Decline and Fall of the Roman Empire) என்ற புத்தகத்தின் இறுதி தொகுதிகளில், அவர் மக்கள் தொகையை ஒரு காரணமாக கூறவில்லை, அதே போல், தொழில் நுட்பத்தின் பற்றாக்குறையையோ அல்லது பருவநிலை மாற்றத்தையோ கூறவில்லை. அவரின் முதலாவது அடிப்படை காரணம் குடும்பத்தின் முறிவு. அதன் பின் அவர் அதிகரித்த வரிவிதிப்பு, இன்பத்திற்கான ஒரு தீராத ஏங்குதல் [an insatiable craving for pleasure], பராமரிக்க முடியாத அளவில் ஆயுதங்களின் குவிப்பு [unsustainable buildup of armaments], மற்றும் மதத்தின் சரிவு என்கிறார். மேலும் அவரின் கூற்றின்படி, ரோம பேரரசின் சரிவுக்கான மூல கரணம் குடிமை நல்லொழுக்கமும், மற்றும் தனிப்பட்ட அறநெறி இழப்பும் [loss of civic virtue and individual morality] என்கிறார். அவரின் கூற்றும் காரணங்களும் இன்றும் எமது சரிவிற்கு சரியாக பொருந்துகிறது என்றே கருத வேண்டியுள்ளது. ஆகவே நாம் எம்மை தனிப்பட்ட ரீதியிலும் சமுதாய ரீதியிலும் திருத்தினால் ஒழிய, மற்றும் படி எதிர்பார்க்கப் படும் சரிவை அல்லது சீரழிவை தடுக்க முடியாது என்பதே உண்மையாகும். அதையே நானும் நம்புகிறேன்.

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]
[முற்றிற்று]

 குறிப்பு:வாசகர்கள் கவனத்திற்கு- இத்தொடர் பகுதி 01 லிருந்து வாசிக்கும் வசதிகருதி ஒவ்வொரு தொடரும் 'லிங்க்' செய்யப்படுகின்றன. கட்டுரையின் இறுதியில் காணப்படும் அடுத்த தொடருக்கான 'லிங்க்' இணை அழுத்துவதன் மூலம் நீங்கள் தொடர்ந்து வாசிக்கலாம்.நன்றி.
  பகுதி 01 இனை வாசிக்க அழுத்துங்கள் →
Theebam.com: நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா? /பகுதி: 01A

0 comments:

Post a Comment