இன்று ஆலய வழிபாடும் ஆன்மீகமும் / 01


பகுதி:01

இன்றுள்ள தொழிநுட்பம் கைக்குள் அடங்கியதிலிருந்து, யார் யாரோ எல்லாம் எப்படியெல்லாம் எழுத ஆரம்பித்து இன்று மத வழிபாடாக இருந்தாலென்ன , ஆன்மிக விளக்கங்கள் என்ன ஆயினும் சரி ,மத நெறிகளிலிருந்து விலகிய கருத்துக்கள் விதைக்கப்பட்டு மனிதனை எங்கோ இழுத்து செல்வது போன்ற உணர்வு எமக்குப் படுகிறது.

இதிலும் தாம் பெரும் பக்தர்கள் என்று பிதற்றிக்கொள்பவர்கள், முகநூல்களில் தாம் வணங்கும் தெய்வங்கள் எனக் குறிப்பிடும் படங்களைப் பதிவேற்றி ,இதை பகிர்ந்துகொண்டால் ,சிலமணி நேரத்தில் நல்ல செய்தி வரும் என்று கூறி ,தம் கடவுளரை கேலி செய்யும்  பித்தலாட்ட்ங்களும் மலிந்து கொண்டுதான் இருக்கின்றன.

அஃது இருக்க , ஆலயம் ,ஆலயம் என்று ஓடும் மகா பக்தர்கள் கொரோனா வைரஸ் அச்சத்தில் ஆலயங்கள் பூட்டி இருந்த வேளையிலும், ஆலய வாசல் சென்று வழிபட்டதன் மூலம் , பூட்டியிருக்கும் கோவிலினை வழிபாடு செய்யக்கூடாது என்ற ஆலய வழிபாட்டின் அடிப்படை விதி  கூட அறியாத அளவிற்கு மக்களைசமய அறிவில்  வெறுமையாக்கிய  பொறுப்பு ஆலயங்களையே சாரும்.

பலதும் தெரிந்த மனிதர்களிடம் தான் கேள்விகள் எழும் என்றோ ,அல்லது விளக்கங்கள் தெரிந்தால் தங்கள் வருமானத்திற்கு கேடு என்றோ இன்று ஆலயங்களில் ,சமயம்சார்  அறிவுரைகள் மூடி மறைக்கப்பட்டு தொடர்வதும்  , இந்துக்கள் மூளைச் சலவை செய்யப்பட்டு மதமாற்றம் செய்ய வசதியாக்கி கொடுத்துக்கொண்டு இருக்கிறதும் இன்றய ஆலயங்கள்தான்.

தள்ளு வண்டியில் வரும் இயலாதவர்கள்களுக்கு மனஆறுதலும் வழங்காது ,மாறாக  வண்டியுடன் கோவினுள் அனுமதிக்காத ஆலயங்கள், குடும்பத்தில் ஒரு இழவு நடந்து வேதனையுடன் இருக்கும்போது ,உடைந்த மனதிற்கு  ஆறுதல் வழங்காது , ஒருவருடத்திற்கு கோவினுள் அனுமதியாத ஆலயங்கள், சாதி வேறுபாட்டினால் ,குறிப்பிட ஒரு பகுதி மக்களை தேர்வடத்திலும் முட்ட விடாது ஒதுக்கி அவர்கள் மனங்களை நோகடித்து  ,ஆலயத்தினுள் அவர்களை அனுமதியாத/மனித நேயமில்லாத  ஆலயங்கள் மனிதர் மத்தியில் இருந்து பயனென்ன?

ஆண்கள் மேலுடை, தொப்பி போடக்கூடாது என்று சட்டம் பேசுவோரினை இன்று பிராமணி முதல் அனைவரையும் முகக்கவசம் போடவைத்த கொரோனாவுக்குமுன் இவர்கள் தோற்றவர்கள் என்றுதான் கருதவேண்டும்.அதிலும் ஆலயங்களில் மேலுடை இல்லாது அப்பாவி  ஆண்கள்  விறைத்து மனித எலும்புகளை சிதைக்கும் -40  குளிர் நிலையிலும் வெளியில் நின்று சூரனையும் ,முருகனையும் தாங்கி போரிட செய்யும்  வகையினை, கொடூரமான பிராமணிய சிந்தனை, மனிதாபிமானத்தைக்  குழி தோண்டிப் புதைத்துவிட்டது  என்றே எடுத்துக்கொள்ள வேண்டும்.

அடுத்த பகுதி:முடிவு அடுத்த வாரம்.... தொடரும் . ....

எழுத்து:செ.மனுவேந்தன் 

0 comments:

Post a Comment