பனி மற்றும் மழைக்காலங்களில் பித்த வெடிப்பு - என்ன தீர்வு?

 

எனக்கு 32 வயது. பனி மற்றும் மழைக்காலங்களில்  பித்த வெடிப்பு வந்துவிடுகிறது. இதற்கு என்ன தீர்வு?--கே. நிலானி நல்லூர்



பதில்:- பித்த வெடிப்புப் பிரச்சனை என்கிறீர்கள். பாதங்களில் அதிலும் முக்கியமாக குதிக்காலிலும் அதன் ஓரங்களிலும் ஏற்படும் தோல் வெடிப்புகளையே பித்த வெடிப்பு என்கிறோம். உண்மையில் இந்த வெடிப்பிற்கும் பித்தத்திற்கும் (Bile) எந்தவித தொடர்பும் கிடையாது. எனவே பித்த வெடிப்பு என்பது தவறான சொல்லாகும். குதிக்கால் வெடிப்பு (Heel fissures) என்பதுதான் சரியான பதமாகும். ஆனால் எல்லோருமே பித்த வெடிப்பு என்றே பேச்சுவழக்கில் சொல்லி வருகிறோம். 

பித்த வெடிப்புகள் எல்லோருக்கும் ஒரே மாதிரியாக வரும் என்றில்லை. சிலருக்கு குதிக்கால் ஓர சருமம் சொரசொரப்பாக இருக்கும். அதில் வெடிப்புகள் போன்ற அடையாளங்கள் மட்டுமே இருக்கும். பலருக்கு வெளிப்படையான வெடிப்புகள் இருக்கும். ஒரு கத்தியால் வெட்டியது போன்ற ஆழமான வெடிப்புகள் வேறு சிலருக்கு ஏற்படுவதுண்டு.

இது பெரும்பாலும் ஒரு அழகியல் பிரச்சனைதான். பார்க்கும்போது கால்கள் அசிங்கமாக இருப்பதை மட்டுமே பாதிப்பாகச் சொல்லலாம். மாறாக ஆழமான வெடிப்புகள் சற்று வேதனையை அளிப்பதுடன் நடப்பதற்கு சிரமத்தையும் தரலாம். மிக அரிதாக அதில் கிருமித்தொற்று ஏற்பட்டு வேதனை அளிப்பதுடன் புண் போலவும் தோன்றலாம்.

இது ஏன் வருகிறது.

முக்கிய காரணம் சரும வரட்சிதான். மழை மற்றும் பனி காலங்களில் சூழலின் ஈரப்பத்தன்மை மாற்றங்களால் கால் கைகளிலுள்ள சருமங்கள் வரண்டு சொரப்பாக இருப்பதை பார்த்திருப்பீர்கள். பழைய காலங்களில் இதைத் தடுக்க இலுப்பெண்ணை பூசுவார்கள். இப்பொழுது பலவகையான ஈரலிப்பை ஏற்படுத்தும் கிறீம் வகைகளை (Moisturizing cream)  பூசுகிறார்கள்.

இதைப் போன்றதுதான் குதிக்காலில் ஏற்படும் பித்த வெடிப்பும். மழை மற்றும் பனி காலங்களில் ஏற்படும் சரும வரட்சியால்தான் ஏற்படுகிறது. சருமம் வரட்சியாக இருக்கும்போது வெடிப்புகள் தோன்றுகின்றன. அதீத எடை மற்றும் நீண்ட நேரம் நிற்பதால் அல்லது நடப்பதால் குதிக்கால் சருமத்திற்கு ஏற்படுகிற அழுத்தமும் காரணம் என்று சொல்லப்படுகிறது. வெறும் காலுடன் நடப்பது மற்றும் பாதத்தை மூடாது அப்பகுதியை மறைக்காத செருப்பை மட்டும் அணிவதும் இதை மோசமாக்கும் எனகிறார்கள்.

இதற்கு என்ன தீர்வு என்பது உங்கள் கேள்வி. இப்பொழுது உள்ளதைக் குணப்படுத்த வேண்டும். மீண்டும் வராமல் தடுக்கவும் வேண்டும்.

முக்கிய விடயம் குதிக்கால் சருமத்தை வரட்சி இன்றி குளிர்மையாக வைத்திருப்பதே ஆகும். குளிர்மையாக வைத்திருப்பது என்பது தண்ணீருக்குள் காலை வைப்பது என அர்த்தப்படாது. ஈரப்பதமளிக்கும் கிறீம் (Moisturizing)  வகைகளைப் பூச வேண்டும். அவ்வாறு பூசும்போது வெடிப்புகளின் இடைவெளிகளுக்குள் அவை புகுமாறு சற்று அழுத்திப் பூசுவது நல்லது.

லோசன்களை பூசுவதை விட கிறீம் அல்லது ஓயின்மென்டாக உபயோகிப்பது கூடிய பலனைத் தரும். காலையில் எழுந்தவுடனேயே பூசிவிடுங்கள். இரவு படுக்கப் போகும் போதும் பூசுங்கள். தேவை ஏற்பட்டால் மதியமும் பூசலாம்.

சாதாரண குளிர்மையூட்டும் கிறீம்களை விட குதிக்கால் வெடிப்பிற்கு என விசேடமாக தயாரிக்கப்பட்ட கிறீம்கள் உள்ளன. அவற்றில் யூறியா, சலிசிலிக் அமிலம் போன்றவையும் கலந்திருக்கும். இவை சருமத்தைக் குளிர்மையாக வைத்திருப்பதுடன் படைபோல ஒட்டிக்கொண்டிருக்கும் இறந்த சருமப் படிவுகளை அகற்றி சொரசொரப்பின்றி மிருதுவாக்க உதவும்.

படிகக் கல் கொண்டு மென்மையாகத் தேய்ப்பது தடித்த சொரசொரப்பான குதிக்கால் சருமத்தை மிருதுவாக்க உதவும். அப்படித் தேய்க்கும் போது தோல் சருமம் ஈரலிப்பாக இருக்க வேண்டும். குளித்தபின் அல்லது கால்களைக் கழுவிய பின்னர் தேய்க்கலாம். ஆயினும் நீரிழிவு நோயுள்ளவர்கள் படிகக் கல்லால் தேய்ப்பது நல்லதல்ல. பிளேட் கத்தி போன்றவற்றால் சுரண்டுவது எவருக்கும் உகந்ததல்ல.

வெறும் காலுடன் நடக்காதீர்கள். எப்போதும் பாதணி அணிந்திருங்கள். செருப்பு, சண்டல்ஸ் போன்ற திறந்த பாதணிகள் நல்லதல்ல. குதிக்காலை மூடும்படியான சப்பாத்து போன்ற பாதணிகளே உகந்தது. காலுறை (சொக்ஸ்) அணிபவராயின் அது காற்றோட்டமுள்ளதாகவும் ஈரலிப்பைப் பேணுவதுமான பருத்தியிலான காலுறைகளான இருக்க வேண்டும். 

எடை அதிகமானால் அதைக் குறைப்பது அவசியம். அத்துடன் நீண்டநேரம் ஓரிடத்தில் நிற்பதையும் தவிர்க்க வேண்டும்.

நீரிழிவு இருந்தால் குருதிப் பரிசோதனைகள் செய்து அது கட்டுப்பாட்டில் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். எக்ஸிமா, சொரசிஸ் போன்ற சரும நோய்கள் இருந்தால் அதற்கான சிகிச்சைகளை சரியாகச் செய்ய வேண்டும்.

நீண்ட நேரம் கால்கள் தண்ணீருக்குள் ஊறுவதைத் தவிர்க்க வேண்டும். கால்களைக் கழுவினால் ஈரத்தை உடனடியாக துணியால் ஒற்றி அகற்றவும். வாசனைகள் மற்றும் மருந்துகள் கலந்த சவர்க்காரங்களை உபயோகிக்க வேண்டாம். பேபி சோப் அல்லது ஈரப்பதமளிக்கும் சோப் (moisturizing soap)  போன்றவையே நல்லது.

டொக்டர். எம்.கே.முருகானந்தன்-குடும்ப மருத்துவர்

பாருக்குள் ஒரு நாடு….ஒரு பார்வை




 


மலேசியா (Malaysia) தென்கிழக்கு ஆசியாவில் உள்ள ஒரு முடியாட்சி நாடு. இந்த நாடு தீபகற்ப மலேசியா அல்லது மேற்கு மலேசியா என்றும், கிழக்கு மலேசியா என்றும் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மலேசியாவை, மலேசிய போர்னியோ என்று அழைப்பதும் உண்டு. மலேசியாவில் 13 மாநிலங்கள் உள்ளன. அவற்றுடன் மூன்று கூட்டரசு.  மலேசியாவின் தலைநகரம் கோலாலம்பூர்.

மலேசியாவின் மக்கள் தொகை 2.5 கோடி. இவர்களில் மலாய் மக்கள் பெரும்பான்மையானவர். இவர்களுக்கு அடுத்து சீனர்களும் இந்தியர்களும் கூடுதலாக வாழ்கின்றனர். பெரும்பான்மையான மலேசிய மக்கள். இஸ்லாமைப் பின்பற்றுகிறார்கள். இஸ்லாமே மலேசியாவின் தேசிய சமயமும் ஆகும். மலாய் மொழி தேசிய மொழியாகும்.

1957 ஆகஸ்ட் 31 அன்று விடுதலை அடைந்த மலேசியா 1963 ஆம் ஆண்டு மலேசிய கூட்டரசு எனப்படும் தற்கால மலேசிய நாடாக உருவாகியது.

19ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பெருவாரியான இந்தியர்கள் மலேசியாவுக்கு பிரித்தானியர்களால் தோட்ட வேலை செய்ய அழைத்து வரப்பட்டனர். இந்தியர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள் ஆவர்.

மலேசியாவில் 137 மொழிகள் பேசப்படுகின்றன.மலேசியாவின் அதிகாரபூர்வ மொழி மலேசிய மொழி ஆகும். ஆங்கிலம் இரண்டாவது மொழியாக தொடர்ந்து உள்ளது. மேங்கிலிசும் வணிகத்தில் பெருமளவு பயன்படுத்தப்படுகிறது. மேங்கிலிசு என்பது மலாய், சீனம், தமிழ் கலந்த கொச்சைபடுத்தப்பட்ட ஆங்கிலம் ஆகும்.

மலேசியாவில் பரவலாக விளையாடப்படுபவையாக காற்பந்தாட்டம், இறகுப்பந்தாட்டம், வளைதடிப் பந்தாட்டம், பௌல்ஸ், டென்னிசு, ஸ்குவாஷ், போர்க் கலை, குதிரையேற்றம், பாய்மரப் படகோட்டம், மற்றும் ஸ்கேட் பலகையோட்டம் ஆகியன உள்ளன.இறகுப்பந்தாட்ட போட்டிகள் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை ஈர்க்கின்றன.

மலேசியாவின் ஆற்றல் உற்பத்தி பாறைநெய் மற்றும் இயற்கை எரிவாயுவை நம்பியே உள்ளது. 16 சதவீதம் நீர்மின்நிலையங்கள் மூலமும் மற்ற 84 சதவீதம் அனல்மின் நிலையங்கள் மூலமும் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

மலேசியா பொதுவாக திறநிலை மற்றும் அரசுசார் பொருளாதார நாடாகவும் புதியதாக தொழில்மயமான சந்தைப் பொருளாதார நாடாகவும் விளங்குகிறது.

வரலாற்றுக்கு முந்தைய காலச் சான்றுகள் மலேசியாவில் அதிகமாகக் கிடைத்திருக்கின்றன. 2 லட்சம் வருடங்களுக்கு முந்தைய கல்லாயுதங்கள் புகித் ஜாவாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கிழக்கு மலேசியாவின் சரவாக்கில் அமைந்துள்ள நியா குகைகளில் 40000 ஆண்டுகளுக்கு முந்தைய மனித எச்சங்கள் காணப்படுகின்றன. பூர்வகுடி செமாங் இனத்தவர்களின் மூதாதையர்கள் சுமார் 40000 ஆண்டுகளுக்கு முந்தைய ஆப்பிரிக்கர்களாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. மலேசியத் தீபகற்பத்தின் மிக முந்தைய எலும்புக்கூடான பேராக் மனிதன் 11000 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. இது லெங்கோங் எனுமிடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

கி.மு. முதல் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்தியாவிலிருந்தும் சீனாவிலிருந்தும் வந்த வணிகர்களும் குடியேற்றக்காரர்களும் வணிகத் துறைமுகங்களையும் நகரங்களையும் உருவாக்கினர். பிற்பகுதியில் மலேசியா ஸ்ரீ விஜயப் பேரரசின் ஆட்சியின் கீழ் இருந்திருக்கிறது.

பதினைந்தாம் நூற்றாண்டின் தொடக்கக் காலத்திலிருந்து பல்வேறு சுல்தான்கள் ஆட்சி புரிந்தார்கள். ஸ்ரீ விஜயப் பேரரசின் இளவரசனான பரமேஸ்வரன் மலாயத் தீபகற்பத்தின் முதல் சுதந்திர இராச்சியமாகக் கருதப்படும் மலாக்கா சுல்தானியத்தை நிறுவினான். பரமேஸ்வரன் முஸ்லிமாக மதம் மாறினான். இக்கால கட்டத்தில் இஸ்லாமிய சமயம் தீவிரமாகப் பரவியது. மேலும் இக்காலப் பகுதியில் மலாக்கா முக்கிய வாணிப மையமாகவும் விளங்கியது.

1511ல் மலாக்கா போர்த்துக்கீசர் வசமானது. பின் 1641ல் ஒல்லாந்தர்களால் (இடச்சுக்காரரால்) கைப்பற்றப்பட்டது. பிரித்தானியர் 1819ல் சிங்கப்பூரைக் கைப்பற்றினர். மேலும் 1824ல் மலாக்காவையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

1957 ஆகஸ்ட் 31 அன்று விடுதலை அடைந்த மலேசியா 1963 ஆம் ஆண்டு மலேசிய கூட்டரசு எனப்படும் தற்கால மலேசிய நாடாக உருவாகியது. 1965ஆம் ஆண்டு சிங்கப்பூர் மலேசியாவிலிருந்து பிரிந்து தனிநாடாகியது.


மலேசிய நாட்டின் 61.3% பேர் இசுலாம் சமயத்தையும் 19.8% பேர் புத்த சமயத்தையும் 9.2% பேர் கிறித்தவ சமயத்தையும் 6.3% பேர் இந்து சமயத்தையும் 1.3 பேர் தாவோ சமயம், கன்பூசிய சமயம் மற்ற சீன சமயங்களையும் [33] 0.7% பேர் எச் சமயத்தையும் சாராதவர்களாகவும் 1.4% பேர் மற்ற சமயங்களைப் பின்பற்றுவர்களாகவும் உள்ளனர்.

உல்லாசப் பயணிகளைக் கவரும்வகையில் Petronas இரட்டைக் கோபுரம் ,Teluk Cempedak கடற்கரை , Perhentian Besar கடற்கரை , Bird's-eye view ,பெட்டாலிங் தெரு, மாஸ்ஜித் ஜாமிக் மற்றும் கோம்பாக்/கிள்ளான் ஆற்றுச் சங்கமம், துகு நெகரா, நெகாரா பள்ளிவாசல் என்பன குறிப்பிடத்தக்கதாகும்.

📂செமனுவேந்தன் 

சித்தரின் முத்தான 3 சிந்தனைகள் /05

 



சித்தர் சிவவாக்கியர் சிந்தனை 038 -

இருக்கு நாலு வேதமும் எழுத்தை அறவோதிலும்
பெருக்க நீறு பூசிலும் பிதற்றிலும் பிரான் இரான்
உருக்கி நெஞ்சை உட்கலந்து உண்மை கூற வல்லிரேல்
சுருக்கம் அற்ற சோதியைத் தொடர்ந்து கூடலாகுமே!

இருக்கும் நான்கு வேதங்களில் உள்ள எழுத்துக்கள் யாவையும் மனப்பாடம் செய்து நன்கு ஒதுவதினாலோஉடம்பு முழுமையும் நிறைத்து பதினாறு பட்டைகள் போட்டு விபூதி பூசுவதினாலேயோ,  'சிவசிவஎன வெறும் வாயால் பிதற்றுவதினாலோ எம்பிரானாகிய சிவன் இருப்பதில்லை. நமக்குள்ளேயே உள்ள சிவனை அறிந்து நெஞ்சுருகி கண்ணில் நீர் மல்கி கசிந்து நினைந்து தியானிக்க வேண்டும். அந்த உண்மையான மெய்ப் பொருளை உணர்ந்து கொண்டு தியானம் தொடர்ந்து செய்தால் சர்க்கம் இல்லாத சோதியான அப்பரம் பொருளோடு கூடி வாழ்வோம். 
*****************************************
சித்தர் சிவவாக்கியர் சிந்தனை -039

கலத்தில் வார்த்து வைத்த நீர் கடுத்த தீ முடுக்கினால்
கலத்திலே கரந்ததோ கடுத்த தீ குடித்ததோ
நிலத்திலே கரந்ததோ நீள் விசும்பு கொண்டதோ
மனத்தின் மாசை நீக்கியே மனத்துள்ளே கரந்ததோ.

வெண்கலப்பானையில் பிடித்து வைத்த நீரை அடுப்பில் வைத்து தீயை அதிகமாக எரியவிட்டால்அப்பானையில் உள்ள நீர் முழுவதும் சுண்டிப்போய் ஆவியாகிவிடும். அப்பணியில் முழுவதும் வைத்த நீர் அதிலேயே கரைந்து மறைந்ததாகடுமையாக எரியவிட்ட தீ குடித்ததா? அல்லது நிலமாகிய மண்ணில் கரைந்ததாஅணைந்ததும் அடங்கிய ஆகாயத்தை அடைந்ததா? என்பதை சிந்தியுங்கள். அந்த நீர் ஆவியாகி ஆகாயத்தை அடைந்ததுவே உண்மை என்பதைப் புரிந்து கொண்டு நம் மனதினுள்ளே உள்ள மாயையான பாவங்களையும், குற்றங்களையும் நீக்கி அதே மனதை இறைவன் பால் செலுத்தி தியானம் செய்து வந்தால் நம் ஆன்மாவை மனமாகிய ஆகாயத்தில் கரைக்கலாம். எப்படி நீரானது பானையில் தீயால் மறைந்ததோ அது போல தியானத்தீயால் ஆகாயம் ஆளலாம்.
*****************************************
சித்தர் சிவவாக்கியர் சிந்தனை -040

பறைச்சியாவது ஏதடா பணத்தியாவது ஏதடா
இறைச்சி தோல் எலும்பினும் இலக்கமிட்டு இருக்குதோ
பறைச்சிபோகம் வேறதோ மனத்திபோகம் வேறதோ
பறைச்சியும் பணத்தியும் பகுத்து பாரும் உம்முள்ளே

பறைச்சி என்பதும் பார்ப்பனத்தி என்பதும் ஏனாடாஅவர்கள் அனைவரும் பெண்கள்தானே. யாவருக்கும் தசைதோல்எலும்பு யாவும் ஒரே மாதிரிதானே அமைந்துள்ளது. அதில் எதிலாவது இவள் தாழ்ந்த சாதிஅவள் உயர்ந்த சாதி என்று எழுதப்பட்டா  இருக்கிறது?  பெண்கள் பால் கிடைக்கும் சிற்றின்பம் யாவருக்கும் ஒன்றாகவே அனுபவம் கிடைக்கிறது. இவை யாவையும் நன்கு பகுத்தறிந்து உனக்குள்ளே இருக்கும் இறையை உணர்ந்து தியானம் செய்து பாருங்கள்.

*************அன்புடன் கே எம் தர்மா

ஒரு சிறுமி பள்ளி செல்கிறாள்


இலங்கையில் அது ஒரு குட்டிக் கிராமம். செல்லக்கிளி ,அவள் அக்கிராமத்தில்   அவள் பெற்றோர்களுக்கு ஒரேயொரு செல்லப்பிள்ளை. இன்றுமட்டும்  அவள் என்றுமில்லாத வகையில் மிகவும் பரபரப்பாகவும் , பதற்றத்துடனும் இருந்தாள்.

 

செல்லக்கிளி  5 ஆம் வகுப்பு வரையில் அருகே உள்ள மிஷன் பாடசாலையில் தனது வகுப்பினை சென்ற வருடம் தான்  நிறைவு செய்திருந்தாள். அவ்வூரில் 5 ம் வகுப்பிற்கு மேல் கொண்ட பாடசாலை இல்லாதபடியால் அவளை பக்கத்து ஊரில் உள்ள பாடசாலையில் சேர்த்திருந்தார் அவளின் அப்பா அழகேசன் .இன்று முதல் நாள் பேருந்தில் பாடசாலை செல்லவேண்டும், இதுவே அவளின் பரபரப்புக்கும் பதற்றத்திற்கும் காரணமாக இருந்தது.

 

'இங்க பார் செல்லம், சாப்பாடு கட்டி வச்சிருக்கேன், கொட்டாம சாப்பிடவேணும், இவ்வளவுகாலம் வாத்தியரிடடை நல்லபேர் வாங்கினமாதிரி ,பெரிய பள்ளிக்கூடத்திலும் கெட்டிக்காரியா இருக்கவேணும், உன்னோட படிச்ச ஜெயவதனியும்  பஸ்ஸில வருவாஇரண்டுபேரும் கவனமா தெருவை கடக்கவேணும்கவனம் என்ன! ' என்றவாறே அவளின் தாய் பரமேசுவும் செல்லக்கிளியின் பாடசாலைப்  பையினைச் சரிப்படுத்திக் கொண்டாள்.

 

அப்பாடசாலை சென்று இறங்கின செல்லக்கிளிக்குக்கும் , ஜெயவதனிக்கும்  பெரிய ஆச்சரியம். என்ன எவ்வளவு பெரிய கட்டடம் . எத்தனை,எத்தனை மாணவர்கள் எத்தனை,எத்தனை ஆசிரியர்கள்.,அப்பப்பாஇப்படியும்  பாடசாலை இருக்குமா? என்று எண்ணியவாறு திகைத்து நின்றவர்களை , ஓர் ஆசிரியர் அணுகி

 

'பிள்ளையள்   6 ம் வகுப்பா நீங்கள், 6ம் வகுப்புகள் அந்த கட்டிடத்தில் என சுட்டிக் காட்டினார்.

 

செல்லக்கிளிக்கு ஆசிரியர் கூறிய வகுப்புக்கள் என்றதன் அர்த்தம் புரியாமல் அருகில் வந்து கொண்டிருந்த ஜெயவதனியிடம் 'ஏண்டி? ஆசிரியர் வகுப்பு எண்டு சொல்லாமல் வகுப்புக்கள் எண்டு சொல்லுறா.என குடைந்துகொண்டாள். அவளும் 'ஒண்டும் தெரியாதடி ,பேசாமல் வா ' என்றவாறே ஆசிரியர் காட்டிய திசையில் சென்றனர். அங்கே வாசலில் நின்ற ஆசிரியர் ஒருவர் ''பிள்ளைகள் பள்ளிக்கூடத்திற்கு இன்று புதுசா நீங்கள். அப்படியெனில் 6டி அந்த அறை .அதுதான் உங்கள் வகுப்பறை'' என சுட்டிக் காட்டினார். இருவருக்கும் ஆசிரியர்களின் வழிகாட்டலும் ,அவர்கள் கூறும் விதங்களும் வியப்பினையே கொடுத்தது. மீண்டும் செல்லக்கிளி 'அதென்னடி 6 ப்பிறகு ஒரு டி ''என ஜெயவதனியிடம் காதுக்குள் குசுகுசுக்க 'ஒண்டுமில்லையடி, நீயும் நானும் டி போட்டுத்தானே பேசுறம்,அப்பிடியாக்கும்' என்றதும் 'பக்' என்று வந்த சிரிப்பினை கையினால் பொத்தி அடக்கிக்கொண்டாள் செல்லக்கிளி.

 

தன் கிராமத்துப்  பாடசாலையில் ஒவ்வொரு வகுப்பிலும் 6,5,4 மாணவருடன் படித்த செல்லக்கிளிக்கு வகுப்பினுள் நுழைந்ததும் , 40 மாணவருடன் ஒரு வகுப்பறையில்  அமர்வது   ஆச்சரியமாகவே இருந்தது. அதுவும் , 6ம் வகுப்பிற்கென A ,B ,C , D என நான்கு அறைகள் இருப்பதாக அங்கு சக மாணவர்கள் பேசிக்கொள்வதனை செவியில் விழுந்தபோது ''அப்போ 6 ஆம் வகுப்பில் மட்டும் 240 மாணவரா?' என்ற கேள்வி நெஞ்சை தொட ,அவள் வியப்பு பலமடங்காகியது. மாணவர் தொகை அதிகரிப்பால் இவ்வருடம் இந்த கட்டடம் புதிதாக கட்டித் தரப்பட்டது என்றுவேறு  மாணவர்கள் அங்கு பேசிக்கொண்டார்கள்.


அன்றய புதுமையான, வாழ்வில் மறக்கமுடியாத அனுபவங்களுடன் பாடசாலையிலிருந்து திரும்பியதும்  அழகேசன்  வேலையால் வந்ததும், அவரை முகம்கூட  கழுவக்கூட விடாது அவர் மடியில் வீழ்ந்த செல்லக்கிளி , தான் கண்ட அதிசயங்களை மூச்சுவிடாமல் சொல்லி முடித்தவள் தொடர்ந்து  ..

 

''ஏனப்பா எங்கட ஊரில  இப்பிடி ஒரு பள்ளிக்கூடம் இல்லையப்பா?

 

மடியில் இருந்த செல்லக்கிளியின் தலையினை வருடிய அழகேசன்  ''இருந்ததம்மா! நாங்க படிக்கிற காலத்தில ,நீ 5ம் வகுப்புவரை படிச்சியே அதே பள்ளிக்கூடத்தில , நிறையப்  பிள்ளைகள் படித்தார்கள்தான். எல்லாம் காலம் மாறிப்போச்சுதம்மா, இப்ப என்ன அந்தப் பள்ளிக்கூடத்தில 5 வகுப்பிலையும் ,மொத்தம் 35 பிள்ளையள் தானே படிக்கினம். பிள்ளையளின்ர வரவு குறைவு எண்டதால ,கொஞ்ச நாளிலை பள்ளிக்கூடத்தை அரசாங்கம் முடிப்போடும்''  என்றவாறே பெருமூச்சினை வெளிப்படுத்திக்கொண்டார் அழகேசன்.

''ஏனப்பா ,இப்ப இப்பிடி?

''எல்லாம் வெளிநாட்டுப் பணம் செய்த வேலையம்மா! ஊருக்குள்ள பணப்புழக்கம் கூடினதால ,பிள்ளையள் படிக்கவேணும் எண்ட ஊக்கம், பெத்தவைக்கும் குறைஞ்சுபோச்சு, பிள்ளையளுக்கும் மறைஞ்சு போச்சு! இதனால  ஊருக்குள்ள எழுத வாசிக்க தெரியாதவை எண்ணிக்கை தான் கூடிக்கொண்டிருக்கு, இப்பிடியே போன ஊரை யாரம்மா மதிப்பான்கள்?  வெளியில எங்கட ஊர் இது என்று தலை நிமிர்ந்து எப்பிடியம்மா சொல்ல முடியும்?

''ஏனப்பா! ,எங்கட ஊரில உயரமான கோவில் இருக்குதே "

சற்று சத்தமாகவே சிரித்துக்கொண்ட அழகேசன் ''செல்லக்கிளி , சனங்களுக்கு கோவில் தேவைதான், ஆனால் கோவில்கள் உயர்ந்து என்னம்மா பிரயோசனம் ? மக்களல்லவா உயரவேண்டும். கற்றவனுக்கு தானம்மா சென்ற இடமெல்லாம் சிறப்பும்,மரியாதையும் கிடைக்கும். கல்வி தானே மக்களை உயர்த்தும். கல்விதானே பெருமைகள் குவிக்கும். நீ மட்டும் படிச்சு ஒரு டொக்டராய் வந்துவிட்டால் உன் காலமெல்லாம் உனக்கு பெருமையும்,சிறப்பும், சமுதாயத்தில் மதிப்பும் இருக்காதா பிள்ளை. அப்பிடி ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையில படிச்சு முன்னேறிவிட்டால் ஒவ்வொரு குடிக்கும் பெருமை இல்லையா? ஒவ்வொரு குடியும் வளர்ந்துவிட்டா , எங்கட கிராமத்துக்கே  பெருமை இல்லையா?

''என்னப்பா என்னை டொக்டருக்கா படிக்க சொல்லுறியள்?'' சிணுங்கிக்கொண்டாள் செல்லக்கிளி

''ஏன் ,செல்லம் டொக்டருக்கு படிச்சால் படிபடாதோ? என்ற கேள்வியுடன் பக்கத்தில் வந்து அமர்ந்துகொண்டாள் பரமேசு.

''அங்க பாருங்கப்பா அம்மாவை' மீண்டும் சிணுங்கினாள் செல்லக்கிளி

''சும்மா ஒரு உதாரணத்திற்குத்தானே சொன்னன்'' என்று சமாளித்துக்கொண்டார் அழகேசன்

வாசலில் ''செல்லக்கிளி''  என்றழைத்த ஜெயவதனியின் குரல் கேட்டு சிட்டாகப் பறந்து சென்றாள் செல்லக்கிளி. இருவரும்  சேர்ந்தால் ஒரே குசு குசுத்தான். பக்கத்தில் நிற்பவர் தன் காது செவிடென்றே நம்புவர்.

கதை ஆக்கம்: செ.மனுவேந்தன்