"அலைபாயும் மனது நான் அல்ல''

 

                                                

   

"அலைபாயும் மனது நான் அல்ல

அனைத்தையும் துறந்த ஏகாந்தம் நான்!

அன்பாய், கனிவாய், அக்கறையாய் வருபவரை

அதிகாரம் அற்று அணைப்பவன் நான்!"

 

"ஆழ்ந்த அறிவு அகன்ற பார்வை

ஆய்வு செய்திகள் விரும்புபவன் நான்!

ஆறுதல் தேடி அடைக்கலம் வந்தவர்களை

ஆரவாரம் போடாமல் சேர்ப்பவன் நான்!"

 

"அத்திவாரம் வாழ்க்கைக்கு தேவை என்று

அன்றும் இன்றும் உணர்பவன் நான்!

அறிவு ஒற்றுமை காணாத கூட்டத்தால்

அனாதை அகதி ஆகியவன் நான்!"

 

"ஆடைகளை கழட்டுவது போடுவது போல்

ஆசைக்கு பதவி சேர்ப்பவனல்ல நான்!

ஆதரவுதேடி அன்பாய் பண்பாய் வந்தவர்களை

ஆனந்தமாய் ஒற்றுமையாய் நிறுத்துபவன் நான்!"

 

"அனைவரும் ஒன்றே குலம் என்று

அகிலம் முழுவதும் நேசிப்பவன் நான்!

அனுபவம் ஆற்றல் நிறைந்த தலைவர்களை

அச்சம் இன்றி பின்தொடருபவன் நான்!"

 

"ஆட்டமாய் ஆடினாலும் கூட்டத்தை சேர்த்தாலும்

ஆத்திரமடையாமல் அன்பில் மூழ்குபவன் நான்!.

ஆவேசம் கொண்டாலும் ஆற அமர்ந்து

ஆலோசித்து முடிவு எடுப்பவன் நான்!"

 

"அடுத் தடுத்து துன்பங்கள் வந்தாலும்

அறிவுடன் சிந்தித்து செயலாற்றுபவன் நான்!

அசிங்கம் என நினைத்து ஒதுங்காது

அன்புடன் அனைவருடனும் பேசுபவன் நான்!"

 

"ஆனந்த வாழ்வின் அர்த்தம் புரிந்து

ஆறறிவு கொண்டு செயல்படுபவன் நான்!

ஆட்சிகள் பல மாறி வந்தாலும்

ஆறாத்துயர் நீங்குமென நம்புபவன் நான்!"

 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]



0 comments:

Post a Comment