"அன்பு நெஞ்சே அரவணைத்த கையே"



[மனைவியை/தாயை இழந்து துடிக்கும் ஒரு குடும்பத்தின் ஓலம்]




"அன்பு நெஞ்சே அரவணைத்த கையே

அயராத கண்ணே அலைந்த காலே

ஆத்திரம் ஏனோ ஆவேசம் ஏனோ

ஆரிடமும் சொல்லாமல் போனது ஏனோ?"


"இருப்பாய் என்று இறுமாப்பு கொண்டோம்

இருளில் இன்று மருண்டு துடிக்கிறோம்

ஈன்ற கன்றுகள் இளைத்து வாடுகின்றன

ஈழ மண்ணின் இளைய மகளே? "


"உருவம் சுவரில் தீபத்துடன் தொங்குது

உயிர்கள் இருந்தும் பிணமாய் நடக்கிறோம்

ஊர்கள் மாறி வாரிசு வாழ்கின்றன

ஊமையாய் ஊனமாய் எதோ வாழ்கிறோம்? "


"எண்ணம் செயல் எல்லாம் நீயே

எங்கள் வீட்டு ஆண்டவனும் நீயே

ஏக்கம் தவிப்பு சுடுகுது எம்மை

ஏமாற்றம் தந்து பிரிந்தது ஏனோ?"


"ஐந்து பேராய் ஒன்றாய் இருந்தோம்

ஐயம் கொண்டு ஓடியது ஏனோ

ஒடிந்து போனோம் ஆடிப் போனோம்

ஒழிந்தது ஏனோ அழிந்தது ஏனோ?"


"ஓயாத அலையே ஓங்கார தீபமே

ஓரமாய் ஒதுங்கி அணைந்தது ஏனோ

ஔவை வழியில் பிரிவை பாடுகிறேன்

ஔதடம் உண்டோ இவளுக்கு பராபரமே?"

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

0 comments:

Post a Comment