சாரதா:திரை தந்த கதை [Old is Gold]

 

ஒவ்வொரு காட்சியும் நடிப்பும் வசனமும் பார்ப்பவர்களைக் கலங்கடிக்கும். கதறடிக்கும். கண்ணீர் விடச் செய்யும். கவியரசு கண்ணதாசனின் அண்ணன் ஏ.எல்.எஸ். தயாரித்த படம் இது. 1962ம் வருடம் ரிலீஸாகி நூறு நாட்கள் ஓடிய வெற்றிப் படம்.

Sarada

எஸ்.எஸ்.ஆர். உடன்  சாரதாவாக விஜயகுமாரி. இவரின் அப்பா எஸ்.வி.ரங்காராவ். மகளின் காதலை தந்தை எதிர்க்க, அந்த எதிர்ப்பையெல்லாம் மீறி திருமணம் செய்துகொள்வார் விஜயகுமாரி. ஆனால் திருமணத்தன்று எஸ்.எஸ்.ஆருக்கு ஓர் விபத்து. அதில் உயிர் பிழைத்தாலும் தாம்பத்தியத்தில் ஈடுபடக்கூடாது. ஈடுபட்டால், உயிருக்கே ஆபத்தாகிவிடும் என்கிறார் மருத்துவர். இது அவரைத் தவிர, வீட்டாருக்கு மட்டுமே தெரியும்.

ஆனால், இதை அறியாத கணவன், மனைவியை நெருங்க முற்படுவதும் அவளோ விலகி விலகிச் செல்வதுமாக இருக்க... ஒரு கட்டத்தில் விஷயம் எஸ்.எஸ்.ஆருக்குத் தெரியவர அதிர்ந்து போகிறார்.

இந்த நிலையில், அவருக்கு புதிய நண்பராக அசோகன் கிடைக்க... தான் நினைத்தபடி அக்கா மகளை மணக்க முடியாத ஏக்கத்தை அசோகன் பகிர்ந்துகொள்கிறார். தன்னுடைய நிலையை இவர் சொல்கிறார். அடுத்ததாக, நண்பர் அசோகனின்  அக்கா மகள்தான் நம்முடைய மனைவி என்பதை உணர்ந்த எஸ்.எஸ்.ஆர். ஒரு முடிவுக்கு வருகிறார். அதாவது விவாகரத்து செய்துவிட்டு, மனைவியை நண்பருக்கு அதாவது மனைவியை அவருடைய தாய்மாமாவிற்குத் திருமணம் செய்து வைப்பது என்று முடிவெடுக்க... கலங்கிக் கதறுகிறாள் மனைவி.

ஆனால், எஸ்.எஸ்.ஆரின் அம்மாவோ... ‘’நானே சொல்லலாம்னு இருந்தேன். நீயே முடிவு பண்ணிட்டேப்பா. உன்னைப் பெத்ததுக்கு பெருமைப்படுறேன்’ என்று சொல்ல... இன்னும் உடைந்து போவாள் நாயகி சாரதா.

ஒருவழியாக, விவாகரத்து நடந்து, திருமண ஏற்பாடுகள் நடக்க, ‘என்ன இது முட்டாள்தனம்’ என்று மகளைத் திட்டுவதற்காக ஓடோடி வருவார் அப்பா ரங்காராவ். அங்கே, அக்கா மகளை கட்டிக் கொள்ள ஆசைப்பட்ட அசோகன், நண்பரின் மனைவியாக இருக்கும் அவளை ஏற்க மனமில்லாமல் தவிப்பார். அதேநிலையில் சாரதாவும்.

க்ளைமாக்ஸில்... மணக்கோலத்தில் விஷமருந்திய நிலையில், கணவர் எஸ்.எஸ்.ஆரிடம் காலில் விழுந்து நமஸ்கரிப்பாள். அப்படியே சரிந்து இறப்பாள். படம்  நிறைவுபெறுகிறது.

 

ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால், மெல்ல மெல்ல அருகில் வந்து, தட்டுத் தடுமாறி, மணமகளே மணமகளே வா வா... என்று ஒவ்வொரு பாட்டும் செம ஹிட்டு. கே.வி. மகாதேவன் இசையில் எல்லாப் பாடல்களுமே மனதில் பச்சக்கென்று இன்றைக்கும் பதிந்திருக்கும்.

0 comments:

Post a Comment