சித்தரின் முத்தான 3 சிந்தனைகள் -/06

 

 


சித்தர் சிவவாக்கியர் சிந்தனைகள் - 047
 

சாதியாவது ஏதடா சலம் திரண்ட நீரலோ
பூதவாசல் ஒன்றலோ பூதம் ஐந்தும் ஒன்றலோ
காதில்வாளி காரைகம்பி பாடகம் பொன் ஒன்றலோ
சாதி பேதம் ஓதுகின்ற தன்மை என்ன தன்மையே.

ஆண், பெண் என்பது தானே சாதி, இதில் பல சாதிகள் ஏதப்பா? இவ்வுலகம் முழுமையும் நீர்தான் நிரம்பியுள்ளது. அதுபோலவே உயிரும் நீராகத்தான் உள்ளது. உடம்பில் பத்தாம் வாசலாகவும், பஞ்சபூதமாகவும், பஞ்சாட்சரமாகவ்வும் உள்ள பொருள் ஒன்றே. அது நகைகளில் காதில் அணியும் தோதாகவும், மூக்கில் அணியும் மூக்குத்தியாகவும், கைகளில் அணியும் வளையல் போன்ற பல வகையாகவும் இருப்பது தங்கம் ஒன்றே. இதை அறியாமல் எல்லா உயிர்களும் இறைவனிடம் இருந்து வந்ததை உணராமல் சாதி, பேதம் பேசுகின்ற உங்களின் தன்மைகளை என்னவென்று கூறுவேன்!!!!

----------------------------------------------------------

 

 

சித்தர் சிவவாக்கியரின் சிந்தனைகள - 049
அறையினில் கிடந்துபோது அன்று தூமை என்கிறீர்
துறை அறிந்து நீர் குளித்த அன்று தூமை என்கிறீர்
பறையறைந்து நீர் பிறந்த அன்று தூமை என்கிறீர்
புரை இலாத ஈசரோடு போருந்துமாறது எங்ஙனே?
 

 பெண்கள் அறையில் ஒதுங்கிக் கிடந்தால் தீட்டுஅவர்கள் குளிக்கும் அறையில் குளித்தால் தீட்டு, தாரைத் தப்பை சப்தத்துடன்பிறந்தால் தீட்டுஇறந்தால் தீட்டு என்று சொல்கின்றீர்களே! இவ்வுடம்பில் உயிரில் உள்ள தீட்டோடுதானே ஈசன் பொருந்தி இருக்கின்றான். அதனை அறியாமல் தீட்டு என்று ஒதுக்குவதில் என்ன பயன் கண்டீர்கள்?

-------------------------------------------------------

 


சித்தர் சிவவாக்கியரின் சிந்தனைகள்050 - 
தூமை தூமை என்றுளே துவண்டு அலையும் ஏழைகாள்
தூமையான பெண்ணிருக்க தூமை போனது எவ்விடம்
ஆமைபோல மூழ்கி வந்து அநேகவேதம் ஒதுரீர்
தூமையும் திரண்டுருண்டு சொற்குருக்கள் ஆனதே. 

 

தீட்டாகிவிட்டதே, தூமையாகிவிட்டதே என்று சொல்லி துவண்டு வருந்தி அலையும் ஏழைகளே! தூமையான வாலைப்பெண் உனக்குள்ளேயே இருக்கும்போது தீட்டு என்பது உன்னைவிட்டு எவ்விடம் போகும். அதுபோனால் உனது உயிரும் உடலை விட்டு போய்விடும். ஆமையைப் போல் நீரில் தலையை மூழ்கிவிட்டு, தீட்டு போய்விட்டதாகக் கூறி அனேகவித வேத மந்திரங்களை ஒதுகின்றீர்கள். அந்த வேத சாஸ்திரங்களை உங்களுக்குச் சொல்லித் தந்த சொற்குருக்களும் இந்த தூமையினால்தான் உருவாக்கி வளர்ந்து திரண்டுருண்டு ஆனவர்கள்தான் என்பதனை அறிந்துருங்கள்.

தொடரும் ..அன்புடன் கே எம் தர்மா.

0 comments:

Post a Comment