இந்த கூறுகெட்ட மனசை என்ன செய்ய?


என் நட்பிடமிருந்து கிடைத்த மேற்படி வாசகம் என்னை மேலும் எழுதத் தூண்டியது.

இலங்கை,இந்திய நாட்டுப் பெற்றோர்கள் ஏனைய நாடுகளிலிருந்து வித்தியாசமானவர்கள். பிள்ளைகள் கருவில் உருவான காலத்திலிருந்து குழந்தைகளின்  ஒவ்வொரு படியிலும், ஆரோக்கியமாக வளர்ந்திட ஆவலோடு தாம் பசியிருந்து, உடலை உரமாக்கி பிள்ளைகளுக்காக  உழைப்பவர்கள்.

அதேவேளையில் மேலை நாடுகளில் ஒவ்வொருவருக்கும் கல்விச்சுதந்திரம் உண்டு.ஆனால் 18 வயது வந்தபிள்ளை தாமே உழைத்து  கல்விச்செலவினை சமாளிக்க வேண்டியுள்ளது. பல குடும்பங்களில் உணவு, உறைவிடம் கூட 18 வயதின்பின் பெற்றோரிடமிருந்து கிடைப்பது அரிதாகவுள்ளது. இதனால் பிள்ளைகள் பெற்றோரிடமிருந்து பிரிந்தே வாழத் தூண்டப்படுகின்றனர்.

ஆனால் நம் பெற்றோர்கள் கல்யாணம் வரையில் முழுக்கவனமும் பிள்ளைகளில் செலுத்துவதுடன் ,கல்யாணத்தின் பின்னரும் தேவையான அளவில் ,பிள்ளைகளுக்கும்,பேரர்களுக்கும் உதவி புரியும் பழக்கத்தினை காலம் காலமாகக் கொண்டுள்ளனர்.

ஆனால் இன்று இலங்கை,இந்தியா, மற்றும் தமிழர் புலம்பெயர்ந்த தேசம் எல்லாம் பெற்றோர்களைகவனியாது ஒதுக்குதல் அல்லது வயோதிப இல்லங்களில் தங்கள் தேவைகள் முடிந்ததும் கொண்டுசென்றுவிடும் நிலையே அதிகரித்துக் கொண்டு இருக்கிறது.

பிள்ளைகளும் ஆங்கிலப் பிள்ளைகளாக அல்லது மேல்நாட்டினர் போன்று  வளரும் நிலையில் அதனைப் பார்த்துப் பரவசமடையும் பெற்றோர்கள் ,அவர்கள் மேல்நாட்டினர்  போன்று , தம்மை ஒதுக்கி வைக்கும்போது மட்டும் பெரும் வேதனை கொள்கின்றனர்.

அதேபோலவே தங்களுக்கு தமிழர் பண்பாட்டின்படி கிடைக்கவேண்டிய உதவிகளை பெற்றோரிடமிருந்து பெறும் பிள்ளைகள், அவை நிறைவேறியதும் மேலைத் தேசப்  பண்பாட்டின்படி நடந்து பெற்றோர்களிடமிருந்து பிரிந்து வாழத் துடிக்கும் சந்தர்ப்ப வாதிகளாக விளங்குகின்றனர். பெரும்பாலும் மேலைநாடுகளில் பெற்றோர்களின் பெயரில் வீடு இல்லாது பிள்ளைகளின் பெயரில் வீடு உள்ளதால் பெற்றோர்களை வெளியில் அனுப்பும் அலுவல் இலகுவாக அமைந்து விடுகிறது.

எப்படியான கடினமான சூழ்நிலையில் தாம் வாழ்ந்தாலும்  பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் சந்தோஷமாக வாழவேண்டும் என்றே வாயார வாழ்த்துவதனை இங்குள்ள முதியோர் இல்லங்களில் நான் அங்கு சென்ற வேளையில் அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

பிள்ளைகள் மேலைநாட்டுக் கார மனசாய்  மாறும்போது பெற்றோர்கள் நாங்களும் அவ்வழியே மாறுவதைவிட ,

இந்தக்  கூறுகெட்ட மனசை என்ன செய்ய?

எண்ணம்: செ.மனுவேந்தன்



0 comments:

Post a Comment