நன்றி கெட்ட ....:பறுவதம் பாட்டி


வழக்கம்போல இந்தச் சனிக்கிழமை காலையிலும் எழ மனமில்லாமல் படுக்கை அறையில் படுத்திருந்த என்னை பறுவதம் பாட்டி, மாமா வீட்டில் வாழும் அண்ணாமலைத் தாத்தாவோடு தொலைபேசியில் அறுத்துக்கொண்டு இருந்தது ஈர்த்துக் கொண்டது.

''அவன் ஒரு நன்றி கெட்ட நாய்'' அண்ணாமலைத் தாத்தா யாரையோ திட்டிக்கொண்டிருந்தார்.

''அதென்ன நன்றிகெட்ட நாய் எண்டு சொல்லிறியள்.நாயெங்க மனிசரைபோல நன்றிகெட்டு நடக்கிது.''

''அதெண்டா உண்மைதான் பறுவதம்.வேற எப்பிடி இவங்களப் பேசுறது.''

''நன்றி கெட்ட உவங்கள பேசி திருந்தவா போறாங்கள்.அப்படியான உணர்வுள்ளவங்கள் இப்படியெல்லாம் இருக்கமாட்டங்கள்.''

''அதிசரி பறுவதம். இவங்கள் இப்பிடி நடப்பாங்கள் எண்டு மேன் கனவிலையும் நினைச்சிருக்கேலை.''

''நினைச்சே ஒரு மனிசருக்கு உதவியைச் செய்யிறது.இல்லை அவையிட்டை இருந்து பணத்தையோ,உதவிகளையோ எதிர்பார்த்தே செய்தவன்.அவன் எதிர்பார்த்தது அன்பையும்,பண்பையும் தானே.ஆனால் அவனுக்கு கிடைச்சது அவச்சொல்லுதானே.''

''உந்த அவச்சொல்லுகளால என்ன பிரயோசனத்தை கண்டவை. ஒருநாள் பேச்சால எதிர்காலமெல்லாம் கிடைக்க இருந்த உதவிகளையுமெல்லெ இழந்துவிட்டினம்.-ஆரால் கேடு,வாயால் கேடு- என்று சும்மாவா சொன்னார்கள்.''

''சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்தானாம் ஆண்டி,-எண்டும் ஒரு பழமொழி இருக்கு.இவங்கள் வாழத்தெரியாதவர்கள்'' என்று கூறிய பறுவதம் பாட்டி தனது கதையினை வேறுபக்கம் திருப்பிக்கொண்டார்


கடித்த சொல்லினும்,கனிந்த சொல்லே நன்மை பயக்கும் என புரிந்துகொண்ட நானும் போர்வையினை சரி  செய்து மறுபக்கம் புரண்டு படுத்துக்கொண்டேன்


ஆக்கம்:பேரன் செ.மனுவேந்தன்.



0 comments:

Post a Comment