குடிகளில்லா ஊரில் கோவில் ...;பறுவதம் பாட்டி

அன்று சனிக்கிழமை அதிகாலை. நேரத்தினை கவனித்த நான் பாடசாலை இல்லை என்ற நிம்மதியுடன் படுக்கையிலிருந்து புரண்டு மறுபக்கம் படுத்துக்கொண்டேன். வழக்கம் போல் மாமாவீட்டில் வாழும் அண்ணாமலைத் தாத்தாவின் டெலிபோன்  அழைப்பு இந்த நேரத்தில் அலற பக்கத்து அறையில் படுத்திருந்த பறுவதம் பாட்டியும் ஸ்பீக்கர் பட்டினை அழுத்திக்கொண்டார்.
''கேட்டியே பறுவதம்,இரவு படுத்துக் கிடந்தது  யோசிச்சன்'' தாத்தா ஆரம்பித்துக்கொண்டார்.
''என்ன?பழசுகளையோ?''
''இல்லைப் பறுவதம்,ஊரிலை முந்தியிலை  புளியடி,வேம்படி,அரசடி
எண்டு சின்னச் சின்ன கோவிலுகள் இருந்தாலும், ஒரு கோவில்லை தானே திருவிழா,தேர் எண்டு ஊர் ஒண்டு சேர்றது.''
''ஆர் இல்லையெண்டு சொன்னது.''
''இப்ப என்னவெண்டால் அங்கை இருந்த புளி ,வேம்பு,அரசு மரங்களெல்லாம் போய் அந்த இடத்தில பெருங் கோபுரங்களோட கோயிலுகள் எழுப்பி வரியத்தில 5,6 தேர்த் திருவிழாவெல்லே நடக்குது.''
''வெளிநாட்டில இருந்து சும்மா வரும் வெள்ளிக்காசுக்கு வேலையும் வேணுமெல்லே!''
''அந்த வெள்ளியை குடுக்கிறவை ஊருக்குப் போய் திருவிழாவையுமெல்லெ சிறப்பாய் செய்துபோட்டு வருகினம்.''
''அவை வந்தபிறகு கோவிலும் ஊரும் வெறிச்சோடித் தானே கிடக்குது.''
''ஓம் பறுவதம், அங்கை சாமிக்கு மணியடிக்கக் கூட ஆளில்லையாம்.''
''அப்ப பாருங்கோ!இப்பவே இந்த நிலை.அங்கை இருக்கிற ஒரு சில பிள்ளையளும் எதோ ஒருவகையில வெளிநாடுகளுக்கு பறந்துகொன்டிருக்கிறாங்கள். யாருக்காக அங்கை கோயில்,கோயிலாக் கட்டுறாங்கள்? அந்தக்காலத்தில கோயில்லில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் எண்டாங்கள் ,அது பழமொழி .நான் கேட்கிறன். நீங்களும், பிள்ளையளும் வாழ விரும்பாத அதாவது குடிகளில்லா ஊரில்  கோயில்கள் வேண்டாம் எண்டது என்ர புதுமொழி.''
''அப்ப கோயில் வேண்டாம் எண்டு சொல்லுறியோ பறுவதம்.''
''ஆர் சொன்னது.இங்கை கோயிலுகள் சின்னச் சின்ன இறைச்சிகடைக் கட்டிடத்திலும் மீன் கடைக்கட்டிடத் திலும் கிடந்து  கும்பிடுறவையலை தொகை தாங்க முடியாம திக்குமுக்காடுது.அங்கை சந்திக்கு சந்தி கோயில் எழுப்பினமாம். இதெல்லாம் யாருக்காக? நீங்கள் வாழுற நாட்டில இருக்கிற கோயிலுகளை முதல்ல வள(ர்)க்கிறத்துக்கு பாருங்கோவன்.உங்கட பிள்ளயளுக்கெண்டாலும் பிரயோசனப்படும்.''
''நீ சொல்லுறதும் சரியாத்தான் படுகுது பறுவதம்.எங்கட காலத்துக்குப் பிறகு இந்தப் பிள்ளையள் ஊர் பக்கம் தலை வைச்சும் படாயினம்.இப்பவே ஊரில எத்தினையோ வீடுகள் வெறிச்சோடித் தானே கிடக்குது. கொஞ்சக்காலம் போனால், இருக்கிற ஒரு சில   பழசுகள் காலம் முடிய ஊர்நிலை ,அது சொல்லத்தேவையில்லை. சரி பறுவதம், மருமேளுக்கு டெலிபோன் வருகுது போல,நான் பிறகு கதைக்கிறன்.''
''சரி,சரி.''
பாட்டியின் சிந்தனைகள் என் தூக்கத்தினை துலைச்சிடவே கைபேசியினை நோண்டி facebook பக்கம் அலைய ஆரம்பித்தேன்.
கருத்து:ஆறுமுகம்.  ஆக்கம்:செல்லத்துரை,மனுவேந்தன். 





0 comments:

Post a Comment