ஓம் சீரடி சாய் பாபா

சீரடி சாயி பாபா இந்தியாவில் மஹராஸ்டிரா மாநிலம், பத்ரி என்ற கிராமத்தில் (1835-38 ம் ஆண்டளவில்?) பிறந்தவர். இவரின் குடும்பப் பின்னணி பற்றி எதுவுமே தெரியவில்லை. பிறந்த திகதியும் சரியாக அறிந்திலர். இவர் ஓர் இந்து குடும்பத்தில் பிறந்து, இஸ்லாமிய பெற்றோரால் வளர்க்கப்பட்டார் என்றும் ஊகித்துக் கொள்ளப்படுகிறது.

இவரது ஆரம்ப கால வாழ்க்கை பற்றி ஒன்றும் தெரியவில்லை. ஆனால், தனது 16 வயதினிலே,சீரடி என்ற கிராமத்தில் ஒரு வேப்பமரத்தின் கீழிருந்து இரவு பகலாக, வெயில், குளிர், பனி என்று பார்க்காமல் தியானம் செய்யத் தொடங்கினார். இதனால், இந்த 'வினோதம்' காணப் பெரும் திரளான மக்கள் திரண்டு வந்தனர், சிலர் கேலியும் செய்து கல்லெறிந்தனர்.

இக்காலத்தில் இவர் பல இஸ்லாமிய, இந்து அறிஞர்களையும்துறவிகளையும் சந்தித்து அளவளாவி தன் ஆன்மீக அறிவைப் பெருக்கினார். அதன் பின்னர் அவரை நாடிவந்த மக்களுக்கு சிறந்த ஆன்மீகத் தத்துவங்களை எடுத்துக்கூற தொடங்கினார். அவரை தரிசிக்க அதிகளவில் மக்கள் வர ஆரம்பித்தனர்.

அவர் ஒரு முஸ்லிமாகவே, பள்ளிவாசலில் ஒரு இஸ்லாமிய துறவியாக வாழ்ந்து வந்தார்,தன்னிடம் வரும் முஸ்லிம்களுக்கு குரானை நாள்தோறும் ஒதும்படியும், இந்துக்களுக்கு இராமாயணம், பகவத் கீதை, மற்றும் இந்து நூல்களை படிக்கும்படியும் அறிவுறுத்தினார். இவர் இந்து - முஸ்லிம் ஒற்றுமையை நிலை நாட்ட முனைந்தார்.

தன்னிடம் கொடிய வியாதிகளுடன் வருபவர்களுக்கு ஆசி வழங்கி அவர்களுடைய நோயைக் குணப்படுத்தினார். என்று சொல்லப்படுகின்றது. அவருடைய ஆன்மீக போதனைகள், இந்து மற்றும் இஸ்லாமியர்கள் மட்டுமல்லாமல், அனைத்துத்தரப்பு மக்களையும்கவர்ந்தது.அவருடைய போதனைகளும்தத்துவங்களும், கூற்றுகளும் பொதுமக்கள் புரிந்துக்கொள்ளும் அளவிற்கு மிக எளிமையான மொழியில் இருந்தன. அவருடைய புகழ், இந்தியா முழுவதும் பரவத் தொடங்கியது.

இஸ்லாமியர்கள், ' அல்லா' ஒருவரைத் தவிர மற்றையவர்கள் எவரையும் தொழுவதைப் பாவச் செயல் என்று நம்புவதால் இவரை ஒரு 'பக்கிர்' என்று மட்டும்தான் மதித்தார்கள். மதித்தார்களே ஒழிய வணங்க மாட்டார்கள்; ஒரு மனிதனை வணங்குபவர்கள் இறந்தபின் நரக நெருப்பினுள் தள்ளப்படுவார்கள் என்று நம்பினார்கள்.

ஆனால், இந்தியாவில் இந்துக்கள் தாங்கள் வணங்கும் கடவுள் சக்தி குறைந்தவர் என்று நம்புவதால் , மேலதிகமாக, பிற மதக் கடவுள்களையும் மிச்சம் வைக்காது சேர்த்து வணங்கி,தங்கள் தேவைகளை சகல கடவுள்மாரிடமும் சொல்லி, நேர்த்தி வைப்பது வழக்கமாகும்..எங்காவது, யாராவது ஒருவர் நல்ல விடயங்களைச் சொன்னால், உடனே அவரைக் கடவுளாக்கி,அல்லது அவரைக் கடவுளின் அவதாரம் ஆக்கிப், பூசைகள் செய்து, பஜனைகள் பாடி அமர்க்களப் படுத்துவதில் வல்லவர்கள். இந்த வகையில், சீரடி பாபாவுக்கு இஸ்லாமியரிலும் பார்க்க இந்துக்கள்தான் பக்தர்களாக நிறையச் சேர்ந்தனர். சிலர், அவர் ஒரு முஸ்லிம் என்று அறியாமலேயே, அவர் உருவத்திற்கு இந்து வடிவம் கொடுத்து முழு இந்துச் சாமியாராகவே ஆக்கிவிடுவார்கள்.

இவர் இஸ்லாமியராக இருந்ததால் இந்து மத சுவாமிக்கான கட்டுப்பாடுகளுடன் வாழவில்லை.தேவைக்கு மிஞ்சிய அளவில் புலால் உணவை உண்டார். போதை வஸ்துக்களைப் பைப்பினூடாகப் புகைத்தார். இக்காரணங்களினால் இவரது சிறு நீரகங்களும், சுவாசப்பையும் பழுதடைந்து போனதால் மிகவும் நோய் வாய்ப்பட்டு, வருந்தி - அதை அவரால் மாற்றமுடியாது(!) - [பக்தர்களின் நோய்களைத் தன்னுள் வாங்கிக்கொண்டோ என்னவோ(?),] தனது 90 ஆவது வயதில் காலமானார்.

இவர் இறந்து பலகாலம் ஆகியும், இந்து மதத்து விசுவாசிகள் இன்னமும் அவரைக் கடவுளின் அவதாரம் என்று நம்பிப் பூசைகள் செய்து வழிபட்டுக்கொண்டே இருக்கின்றார்கள். அவரின் மறு அவதார வாரிசுகள் என்று பல கடவுள்களை மேலும் மேலும் அடுக்கிக்கொண்டே போகின்றார்கள். அத்தோடு, தாம் கேட்டதை அவர் அப்படியே செய்து தந்தார் என்று கதை கதையாய்ச் சொல்லிக்கொண்டும் திரிகின்றார்கள்.

எத்தனையோ கடுவுள்மார்கள் எல்லாம் உலகில் வேறு இடம்

ஒன்றும் இல்லாமல், இந்தியாவில் மட்டும்தான் அடிக்கடி பிறக்கின்றார்களே! அப்படிப் பிறந்தும் இந்தியாவில் இன்னமும் அதிக எண்ணிக்கையான வறிய சனங்கள் இருந்துகொண்டே இருக்கின்றனரே? ஏனாம்?

வேடிக்கை என்னவென்றால், அவரின் பக்தர்கள் தமக்குக் கிடைத்தது போல உங்களுக்கும் கிடைக்க வேண்டும் என்றால் - அதாவது 'நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்ற பரந்த நோக்குடனும், தரும சிந்தனையுடனும் - உங்களுக்கு அனுப்பும் சீரடி பாபாவின் படத்தை மின்னஞ்சலிலோ, அல்லது முகநூலிலோ, கிடைத்து இரண்டு நிமடத்தினுள், மேலும் பத்துப்பேருக்கு அனுப்பினால் நீங்கள் கேட்டதெல்லாம் உடனேயே கிடைத்துவிடும் என்று அடித்துக் கூறுவார்கள். தாம் எதிர்பார்த்துக் காத்திருக்கும் விடயம் நல்லவிதமாய் நடக்கவேண்டும் என்ற ஆவலில், என்னதான் நட்டம் என்று எண்ணி, அதைத் தவறாது பிறருக்கு அனுப்பி விடும் பயந்தாங்கொள்ளிகள் ஏராளம்.

ஆஹா, ஆஹா! ஒரு வித கல்வியும் தேவை இல்லை, முயற்ச்சியும் தேவை இல்லை. மிகவும் எளிதான வழியில் வீட்டில் இருந்தபடியே கோடீஸ்வரர் ஆவது எப்படி என்று வழி சொல்கிறார்களே!

அதற்கு முதல், உந்த அனுப்புவர்களின் வீட்டு அறைகளை ஒருமுறை நான் நேரில் சென்று பார்க்க வேண்டும் என்று ஆசை, முகடு முட்டப் பணக்க கட்டுக்களுடன், நோயற்ற பெருவாழ்வு வாழ்ந்து கொண்டிருப்பதைப் பார்த்து நிச்சயப் படுத்தத்தான்!

சீரடி பாபா நல்லதைச் சொன்னார்; உண்மைதான். உயிர்கள்பால் அன்பு செலுத்துதல், பிறரை மன்னிக்கும் மனோபக்குவம், பிறரை மன்னித்தல், உதவி செய்தல், தர்மம் செய்தல், மன நிறைவு கொள்ளல், இருப்பதோடு திருப்திப்படுத்தல், சந்தோசமாய் வாழ்தல், இறைவனிடம் சரண் அடைதல், கடவுள் ஒருவர்தான் என்று உணர்தல் என்று பல நல்ல அறிவுரைகளை வழங்கினார்.

சரி; அவர்சொன்னவைஏற்கனவேபலர்சொல்லியவைதானேநல்லவை எவை, கெட்டவை எவை என்பது இன்னொருவர் சொல்லித்தான் அறிந்து கொள்ளுமளவுக்கு நாம் என்ன அறிவிலிகளா? சரி அப்படித்தான் புதிதாக அறிபவர்கள் என்று சிலர் இருந்தால், அவர்கள் எல்லாம் அந்தப் பேருண்மைகளை அறிந்துவிட்டு அதன்படி நடந்தால் மட்டும் போதுமே? பெரும் பூசைகளும், பேய்க்காட்டல்களும் செய்து, தாம் எதோ மிக உயர் நிலையை அடைந்துவிட்டோம் என்றும், ஏனையோர் மிகவும் தாழ்ந்த நிலையில் அழுந்திக்கொண்டு இருக்கிறார்கள் என்று சொல்லிக்கொண்டு, கற்பனை உலகில் வாழுவது ஏனென்றுதான் தெரியவே மாட்டோம் என்கிறது!

எதற்கும், இவரின் இன்னோர் அவதாரம் இந்தியாவில் இப்போது பிறந்திருக்க வேண்டும். அவர் வரும்வரை காத்திருப்போம், புதிய ஒரு கடவுளை காண.

நாங்க எதுக்கும் ஓம்..


                         -ஆக்கம்:செல்வத்துரை,சந்திரகாசன்


2 comments:

  1. எல்லோருக்கும் அனுப்புவது மற்றவர்களின் நன்மைக்காக அல்ல; அப்படி அனுப்பினால்தான் அனுப்புவர்களுக்கு பலன் கிடைக்கும். எல்லாம் சுய நலம்தான்!

    ReplyDelete
  2. சத்குரு என்பார் கனவிலும்கூடத் தமது அடியவர்களிடம் இருந்து எவ்விதச் சேவையையோ, இலாபத்தையோ எதிர்பார்ப்பதில்லை. மாறாக அவர்களுக்குச் சேவைசெய்ய விரும்புகிறார். தாம் உயர்ந்தவர், தமது அடியவர் தாழ்ந்தவர் என்றும் அவர் எண்ணுவதில்லை. அவரைத் தமது புதல்வன் என்று கருதுவதோடு மட்டுமல்லாது தமக்குச் சமமானவன்அல்லது பிரம்மத்துக்குச் சமமானவன் என்று கருதுகிறார். சத்குருவின்

    முக்கியமான பண்பு அவர் அமைதியின் உறைவிடம் என்பதே. அவர் அமைதியற்றோ, மனவுளைவுடனோ இருந்ததே இல்லை. கற்றோன் என்ற கர்வம், அவருக்குக் கிடையாது. ஏழை, பணக்காரன்,

    உயர்ந்தவன், தாழ்ந்தவன் யாவரும் அவருக்கு ஒன்றே.



    தம்முடைய இளமையான காலத்தில்கூட பாபா எதையும் சேகரிக்கவில்லை. (சில்லிம் என்ற புகைக்குழாய் மட்டும் இருக்கலாம்) அவருக்குக் குடும்பம் ஏதுமில்லை, நண்பர் யாருமில்லை,

    வீடு ஏதும் இல்லை, எவ்வித ஆதாரமும் இல்லை, பதினெட்டாம் வயதிலிருந்தே அவரின் மனக்கட்டுப்பாடு முழுமையானதும், அசாதாரணமானதாகவும் இருந்தது. அப்போது அவர் தனியான இடத்தில்

    பயமற்று வாழ்ந்தார். எப்போதும் அவர் ஆன்ம உணர்விலேயே மூழ்கி இருந்தார். தமது அடியவர்களின் தூய அன்பைக்கண்டு அவர்களின் விருப்பப்படியே, அவர் எப்போதும் நடந்தார். எனவே

    ஒருவகையில் அவர்கள்பால் அவர் சார்ந்தவரானார். பூதவுடலில் வாழ்ந்தபோது தமது அடியவர்களுக்கு என்னென்ன அனுபவங்களை அளித்து வந்தாரோ, அதே அனுபவங்களை அவரை நேசிப்பவர்களுக்கு மஹாசமாதியான பின்பு இன்றும் அளித்து வருகிறார்.


    அன்று

    1912, April



    சில்லிம் என்ற மட்குழாயில் புகை பிடித்துக்கொண்டிருந்த பாபா, அதை பாலாராம் துரந்தரிடம் நீட்டி புகை பிடிக்குமாறு அழைத்தார். புகைபிடித்து வழக்கமில்லை எனினும், பாலாராம் அக்குழாயை

    வாங்கிக்கொண்டு பெருஞ்சிரமத்துடன் புகைபிடித்துவிட்டு, பக்தியுடன் வணங்கி அதைத் திருப்பி அளித்தார். பாலாராமுக்கு இதுவே மிகமிகப் புனிதமான நேரம். ஆறு ஆண்டுகளாக அவர் ஆஸ்துமாவால்

    கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தார். இப்புகை அவரை முழுவதுமாகக் குணப்படுத்தியதுடன் மீண்டும் அவ்வியாதிக்கு உட்படுத்தவேயில்லை. ஆறு ஆண்டுகளுக்குப் பின் ஒரு குறிப்பிட்ட தினத்தில் மீண்டும்

    அவருக்கு ஆஸ்துமாவின் தாக்குதல் நேரிட்டது. இது பாபா மஹாசமாதி அடைந்த அதே நேரமாகும்.





    இன்று 2014 May



    தங்கள் அசீர்வாதத்தின் அடையாளத்துடன் குழந்தை பிறக்க வேண்டும் என்ற எங்கள் வேண்டுதலை ஏற்று, தாம் விரும்பிய ஒரே பொருளாகிய

    சிலீம் என்ற புகை குழாய் வடிவில் மச்சத்தை பிறக்கும் போதே எமது இளைய புதல்வியின் வலது கை மணிகட்டில் இடம்பெற செய்து லீலை செய்துள்ளார்.

    ReplyDelete