"மனிதனை [மனித பண்புகளை] கொஞ்சம் இன்றில் இருந்து சிந்தியுங்கள்!"பகுதி:01

"THINK HUMAN [HUMANITY] FROM TODAY!"
நாம் தவழ தொடங்கும் போதே, ஆண்டவனை பற்றிய கருத்து,அல்லது சமயம்,அல்லது அதனுடன் சேர்ந்த சமய சம்பந்தமான சந்தேகமான நடைமுறைகள் எல்லாம் எமக்கு அல்லது எம்மில் பலருக்கு,எம்மை சூழ்ந்து இருப்பவர்களால் திணிக்கப் படுகின்றன.நம்பிக்கையும் நம்பிக்கையின்மையும்,ஆண்டவனும் நாத்திகமும்,சாதியும் சமத்துவமும்,போன்ற அனைத்துமே ஒன்றாக பிறந்த இரட்டை எதிரிகள் ஆகும்.இதில் எது ஒன்றாயினும் தலை காட்டும் போது,மற்றது அதை எதிர்க்க தலை காட்டும்.எல்லோருக்கும் நன்றாக தெரியும் கேள்விகளுடன் தான் அறிவு வளர்ச்சி அடையும் என்று. "பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்,பாயும் மீன்களில் படகினைக் கண்டான்,எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான்....மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிட்டான்.... பொய் நீதியும் நேர்மையும் பேசுவான்,தினம் ஜாதியும் பேதமும் கூறுவான்,அது வேதன் விதி என்றோதுவான்,மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிட்டான்..." இப்படி இன்றைய நூற்றாண்டு கவிஞன் கூறினான்.ஆமாம்,என்னை அடிக்கடி தொந்தரவு செய்வது அல்லது அதிகமாக எனது ஆவலைக்கிளறுவது அவர்களின் நம்பிக்கையை கேள்வி கேட்கும் போது ஏன் இந்த மத பக்திமார்கள் அதை அவமதிப்பாக கருது கிறார்கள் என்பதே! எமது தமிழ் சித்தர்கள் இதைத் தான் செய்தார்கள். உண்மை அல்லது நிஜ நிலை அடைய முயன்றவர்களே இந்த சித்தர்கள் ஆவார். சாதி,சமய சடங்குகளை கடந்து; சமுகத்தில் பயனுடையவை எவை, என்பதைப் பிரித்தறிந்து அவற்றுள் புதுமைகளைப் புகுத்துகின்ற அறிஞர்களாகவும், சமுதாயத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை, சாதி சமய மன
மாச்சரியங்களை [பகைமைகளை] மாற்றக் கருதிய சீர்த்திருத்த வாதிகளாகவும் இவர்கள் வாழ்ந்தார்கள்.இவர்கள் இந்த மத பக்தியாளர்களை வெளிப்படையாக கேள்வி கேட்டு எதிர்த்த தார்கள். கடவுளைத்தேடி எங்கும் அலைய வேண்டாம்.'உன்னுள்ளும் இருப்பான் என்னுள்ளும் இருப்பான்,உருவம் இல்லா உண்மை அவன்.இதை உணர்ந்தார் இங்கே உலவுவதில்லை' என்று உறுதியாக கூறினான்.இன்னும் ஒரு சித்தர் 'சாஸ்திரங்களை எரித்தவனே' சித்தர் என்கிறார்.இந்த எல்லா சாஸ்திரங்களும்,வேதங்களும்,புராணங்களும் மற்றும்  பல்வேறு மத தரப்பினரும் மனித இனத்தை ஒரு கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட மிருகம் போல் மாற்றுகிறார்கள்.பொதுவாக, அதிகமான சமயம் மனிதனை சிந்திக்க விடாமல் கட்டுப் படுத்துகிறது.பல தெய்வ வழிபாடு நம்பிக்கைகள் இருந்த ஒரு காலத்தில்,அதை எதிர்த்து அடுக்கடுக்காய் வினாக்கள் கொடுத்த சித்தர் சிவவாக்கியர் ஆகும்.பிராமணர்களின் அர்த்தமற்ற சடங்குகளை எதிர்த்து குரல் கொடுத்தவர்.'வேதம் ஓதுபவர்கள் திருவடி ஞானம் அடைந்ததுண்டோ? பெறவில்லையெனின் பாலில் நெய் இருப்பது பொய்யாகிப் போகுமே. கோயில் ஏது? குளம் ஏது? கண்ட இடமெல்லாம் குழம்பி திரியும் மூடர்காள்!' என்று சிவவாக்கியர் உரத்துப் பேசும் போது நாத்திகத்தின் குரலாகவே அவரது பாடல்கள் ஒலிக்கிறது.எம்முள்ளேயே அவன் குடிகொள்ளும் பொழுது,ஏன் நாம் புனித நீராட வேண்டும்?ஆலயம் போகவேண்டும்?புனித மலை எற வேண்டும்? இப்படி பல முக்கிய கேள்விகளை வினவுகிறார்.கடவுளின் பெயரால் சிலை உருவங்கள் செய்து வைத்து வணங்குவதும், அவைகளுக்குத்  தினசரி பூசைகள், நைவேத்தியங்கள், திருவிழாக்கள் செய்வதும் என்று தொன்று
தொட்டு நடந்து வரும் வழமைகளை மூடப் பழக்கங்கள் என்று  இவர் சாடுகிறார்.ஒரு பவுல்[Baul] பங்காள மொழி நாட்டுப் புற பாடல் 'எல்லாம் வல்லவனை எப்படி நீ அடைவாய்?போகும் வழியெல்லாம் ஆலயம்,போகும் வழியெல்லாம் மசூதி,போகும் வழியெல்லாம் குருக்கள்,எல்லா பாதையும் மூடி விட் டனவே??[the road to the Absolute is blocked by temples, mosques and the teachers '] என்கிறது மற்றும் ஒரு பவுல் பாடல்:"இவ்வுலகில் உன் மதம் என்ன? ஒவ்வொரு வனும் லாலனை கேட் டனர்.லாலன் சொன்னான்: 'எப்படி மதம் இருக்கும்?நான் அதன் மேல் கண் வைக்கவில்லை. சிலர் கழுத்தை சுற்றி பூ மாலை அணிகிறார்கள்,சிலர் தஸ்பீஹ் [tasbis] என்ற பிரார்த்தனை மணிகள் வைத்திருக்கிறார்கள் .எனவே மக்கள் சொல்கிறார்கள் இவர்கள் வேறு வேறு மதத்தினர் என,ஆனால் நான் கேட் கிறேன் ,நீங்கள் பிறக்கும் போதும் உங்கள்  மதத்தின் சின்னம் அணிந்த பிறந்தீர்களா?இல்லை சாகும் போது தானும் அதை அணிந்து போகிறீர்களா ? '[Everyone asks: "Lalan, what's your religion in this world?"Lalan answers: "How does religion look?",I've never laid eyes on it.Some wear malas [Hindu rosaries] around their necks,some tasbis [Muslim rosaries], and so people say they've got different religions.But do you bear the sign of your religion when you come or when you go? "] என்று சித்தர்கள் மாதிரி வினாவுகிறது.சித்தர்கள் எந்த சமயத்துடனும் தங்களை இணைத்துக் கொள்ளவில்லை. மேலும் அவர்களின் சில சித்தாந்தங்கள் சங்க காலத்திலேயே ஆரம்பிக்கப் பட்டதாக கருதப் படுகிறது[கி மு 700 to கி பி 300],எனினும் அவை
ஏழாம் நூற்றாண்டு முதல் பதினோராம் நூற்றாண்டுவரை வளர்ச்சி அடைந்து பண்ணிரெண்டாம் ஆண்டில் முழுமையடைந்த தாக கருதப் படுகிறது. “நட்ட கல்லைச் சுற்றி வந்து நாலு புஷ்பம் சாற்றியே; சுற்றி சுற்றி வந்து முணு,முணுக்க சொல்லும் மந்திரம் ஏதடா! சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ! நட்டகல்லும் பேசுமோ; நாதன் உள்ளிருக்கையில்” என்று சிவவாக்கியர் நேரடியாக கேட் கிறார்.அந்த மந்திரத்தால் என்ன பயன் என்று யோசித்துப் பார்த்தீர்களா? அட  மூடர்களே, கடவுள் என்பவர் தனியாக வெளியில் இல்லை, உள்ளத்திலே இருக்கிறான். அப்படி இருக்கையில் நட்ட கல்லைச் சுற்றி வந்தால் அது பேசுமோ? அடுப்பில் வைத்துச் சுடப்பட்ட சட்டியும் அதனுள்ளே இருக்கும் அகப்பையும் அதில் சமைக்கும் உணவின் ருசியை அறியாதது போலவே நீர் செய்யும் புற  வழிபாட்டினால் இறைவன் வெளித்தோன்ற மாட்டார்.இறைவனை உள்ளத்தால் மட்டுமே காண இயலும்.அவனை கல்லில் காண முடியும் என்று சொல்லுவது வெறும் பிதற்றலே என்று அந்த காலத்தில் சாடுவதென்றால்,அவர்களின் கண் மூடித் தனமான பழக்க வழக்கங்களைப் ஆட்டிப் பார்ப்பதென்றால் எவ்வளவு  துணிவு இவர்களுக்கு இருந்து இருக்க வேண்டும்? அதே போல,"மாரி தான் சிலரை வரைந்து பெய்யுமோ?காற்றுஞ் சிலரை நீக்கி வீசுமோ?மானிலஞ் சுமக்க மாட்டேனென்னுமோ?கதிரோன் சிலரைக்  காயே னென்னுமோ? ......குலமுமொன்றே குடியுமொன்றே,இறப்புமொன்றே பிறப்புமொன்றே" என பிற் கால கபிலர் 
[கபிலர் அகவல்] கேட் கிறார்.

ஆண்டவனோ அல்லது சமயமோ ,எதற்க் காக இவ்வுலகில் ஏற்படுத்தப் பட்டதோ அதை இன்று அவை வழங்க வில்லை.ஒவ்வொரு சமயத்தினதும் முக்கிய கடமை எப்படி ஒருவரை ஒருவர் அன்பு செலுத்துவது என்பதை போதித்து.அதன் மூலம் எம்மை,எமக்கும் உண்மைக்கும் அருகில் கொண்டுவருவதே ஆகும்."உன்னை அறிந்தால்...நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம் உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம்...தன்னை தானும் அறிந்து கொன்டு ஊருக்கும் சொல்பவர்கள்  தலைவர்கள் ஆவதில்லையா "ஆனால்,இன்று இதற்கு எதிர் மாறே நடைபெறுகிறது. சமயம் எம்மை ஒன்று சேர்க்கவில்லை,எம்மை பிரிக்கிறது.சமயத்திற்கு சமயம் மட்டும் அல்ல,அவை தமக்குள்ளும் பிரிந்து நிற்கின்றன.சமயம் பழைமை நெறிவாத த்தையும் சகிப்பு தன்மை யின்மை யையும் எமக்கு  கொண்டுவந்து இன்று மிக பெரிய பிரச்சனை கொடுக்கிறது.இதனால்,மத வெறியர்களை உண்டாக்கி,எமது சுதந்திரத்தை ஆண்டவனின் பெயரால்  நாசம் பண்ணுகிறது.ஆகவே,எமது நோக்கத்தை நாம் சரிப்படுத்த வேண்டும்,வாழ்க்கை வழியை சரிப்படுத்த வேண்டும், வேறுபட்ட  சமயங்கள் தொடக்கத்தில் எதை விரும்பியனவோ அப்படி மீண்டும் வார்த் தெடுக்க வேண்டும்.எல்லா சமயங்களும் மனிதாபிமான த்தையே அறிவுறுத்தின.ஆகவே அதை அப்படியே பின்பற்ற லாமே?அமைதி எமக்குள்ளே தான் உண்டு.அதே போல அன்பும் எமக்குள்ளே தான் உண்டு.ஏன் ஆண்டவனும் எமக்குள்ளே தான் உண்டு.எனவே கடவுளே அன்பு,அன்பே கடவுள்,இதை அறிந்தால்,எமக்கு அது உள் அமைதி தரும்.ஒரு குழந்தை பிறக்கும் போது அதற்கு அன்பு மட்டுமே தெரியும் , மிச்சதெல்லாம் நாம் கற்பித்ததே.வெறுப்பு,பொறாமை, பேராசை,ஏன் பயங்கரவாதம் கூட நாம் சொல்லிக் கொடுத்ததே. என்னத்தை விதைத்தாயோ அதையே நீ அறுவடை செய்கிறாய். அப்படியென்றால்  நீ ஏன் அன்பை விதைக்கக் கூடாது?அன்பை விதைத்தால் அதை விட பெருவாரியான அன்பை அறுவடை செய்யலாமே.அன்பு பலத்தினால் திணிக்க முடியாதது.ஆனால் சமயம் அப்படி அல்ல.இதை நாம் அறிய வேண்டும்.ஆகவே நாம் மனித நேயம் தழுவி புது வாழ்க்கை வழியை அமைப்போம்!



[கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ]

பகுதி:02  தொடரும் 

4 comments:

  1. சித்தர்கள் இறைவனை உணர்ந்த சீர் திருத்த வாதிகள். ஆனால் மக்கள் அவர்களை பின்பற்றவும் இல்லை.கைகொட்டி பஜனை பாடவும் இல்லை .எல்லாம் இக்காலத்தில் மந்திரவாதிகளுக்கே .

    ReplyDelete
    Replies
    1. பின்பற்றி இருந்தால் உந்த பஜனை நாடகங்கள் எல்லாம் முளைத்திருக்காதே!!!

      Delete
  2. [[என்னத்தை விதைத்தாயோ அதையே நீ அறுவடை செய்கிறாய். ]]இதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.30 வருடத்திற்கு மேல் கொட்டு கொட்டு என்று கொட்டியும் ஒரு துளிர் கூட முளைக்கக் கூட இல்லையே?

    ReplyDelete
    Replies
    1. தோழா நீ எங்கே விதைத்தாய்.கற்பாறை மேட்டில் எவ்விதையும் முளைக்காதது அறியாதவனா நீ?

      Delete