"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்" / பகுதி: 12


ஒரு மனிதனின் உடலின் ஆரோக்கியத்தைக் காப்பதில் முக்கிய அடிப்படை தேவைகளில் ஒன்று உறக்கமாகும். அவன் வாழ்வில் பொதுவாக இது  மூன்றில் ஒரு பங்கு அது வகுக்கிறது. உடலிலுள்ள அத்தனை உயிரணுக்களை [cells] தினமும் புதுப்பிக்கவும், உடலின் சோர்வு நீங்கி புத்துணர்வு பெறவும், உடல் வளர்ச்சி [குறிப்பிட்ட வயது வரை] பெறவும், அவனுக்கு தூக்கம் இன்றியமையாததாக உள்ளது. குறுந்தொகை 6, உறக்கம் [துயில், துஞ்சுதல், நித்திரை] பற்றி கூறுகையில், நடு இரவு இருட்டாக இருக்கின்றது. சொற்கள் அடங்கி விட்டன. வெறுப்பு எதுவும் இன்றி இனிமையாக மக்கள் உறங்கு கின்றனர். அகன்ற உலகமும் உறங்குகின்றது என "நள்ளென் றன்றே யாமம், சொல் அவிந்து இனிது அடங்கினரே மாக்கள் முனிவு இன்றி, நனந்தலை உலகமும் துஞ்சும்" என்கிறது. மேலும்பசிக்கு ருசி வேண்டாம், நித்திரைக்குப் பாய் வேண்டாம்என்ற பழமொழியையும் சேர்த்து பார்க்கும் பொழுது, எமக்கு ஒன்று புலப்படுகிறது. அதாவது தூங்குவதற்கு ஏற்ற காலம், பூமியின் தட்ப வெட்ப நிலைகள் மாறி குளிர்ச்சி பொருந்திய அமைதியான இரவு என்பதும், அவர்கள் அன்று பாய், அல்லது பாய் போன்ற ஒன்றில் உறங்கினார்கள் என்பதும் தெரியவருகிறது. அதே போல எல்லா உயிர்களும் எதோ ஒரு நேரத்தில்
உறங்குகின்றன. உதாரணமாக புறநானூறு, பாடல் 229 , "மைந்துடை யானை கைவைத்து உறங்கவும்" என்ற வரி மூலம் வலிமையான யானையும், துதிக்கையை நிலத்தில் போட்டு உறங்குவதையும், அதே போல புறநானூறு 384 "வஞ்சிக் கோட்டு உறங்கும் நாரை" என்ற வரியில் நாரை மரத்தின் கிளையில் உறங்குவதையும் காண்கிறோம்.

பெருவாயின் முள்ளியாரின் ஆசாரக்கோவை, தமிழரின் தூங்கும் முறையை கூறும் பொழுது, படுக்கும் முன் இறைவனை கை கூப்பி தொழுது, பின் வடக்கு மற்றும் கோண திசை பக்கம் தலை வைக்காமல், ஒரு போர்வையாவது உடல் மேல் போர்த்தி உறங்குவது நல்ல நெறி என "கிடக்குங்காற் கைகூப்பித் தெய்வந் தொழுது வடக்கொடு கோணந் தலைசெய்யார் மீக்கோள் உடற்கொடுத்துச் சேர்தல் வழி" என்று பாடல் 30 ஆல் கூறுகிறார். 'வராத வாழ்வு வந்தாலும் வடக்கே தலை வைக்ககூடாது' என்றும் 'விடக்கை ஆயினும் வடக்கு ஆகாது' என்றும் சில பழமொழிகளும் உண்டு. அதையே அவர்கள் பாரம்பரியமாக பின்பற்று கிறார்கள் எனினும், மன அழுத்தம், பணிப்பளு, பரபரப்பான வாழ்க்கை முறை [இணையம், அலைபேசி,...], இரவு வேலை என, மிகுந்த நெருக்கடிக்கு இடையே பொழுதை கழிப்பதால், எல்லோரும் அப்படி இன்று ஒழுகுவதில்லை. சிலர் பகலில் உறங்குகின்றனர். "சித்த மயக்கஞ் செறியும் புலத்தயக்க மெத்தனுக் கமைந்த மென்பவை களித்தமுற வண்டுஞ் சிலரை நாயாய்ப் பன்னோய் கவ்வுமிராக் கண்டுஞ் சிலரை நம்பிக் காண்" என ஒரு சித்தர் பாடல் கூறுகிறது. அதாவது வேட்டைக்குச் செல்லும் வேடருடைய நாய்கள் இரையைக் கவ்வுதல் போல், இரவில் நித்திரையில்லாதவரை பற்பல நோய்கள் கவ்விக் கொள்ளும் என்கிறது.

 "வாழ்ந்தாலும் வடக்கே தலைவைக்காதே, கெட்டாலும், கிழக்கே தலைவைக்காதே", என்றும் "வடக்கே தலைவைத்தால் வாடை காத்து, தெக்கே தலைவைத்தால் தென்றல் காத்து" என்றும் சொல்லும் ஒரு வழக்கம் எம் மூதாதையர்களிடம் உண்டு. நம் உடலில் ஒரு காந்த ஆற்றல் இருப்பதாகவும், நமது தலை பகுதி வடதுருவமாக செயல்படுகிறது என்றும், பூமியின் வடதுருவமும் நம் உடலில் உள்ள வடதுருவமும் ஒன்றை ஒன்று எதிர்க்கும் என்பதால், நமக்கு நிம்மதியான தூக்கம் இருக்காது என்றும்  நம்புகிறார்கள். சமீப கால ஆய்வு படுக்கும் திசை, ஆரோக்கியம், தூக்கத்தின் தரம் இவைகளுக்கு இடையில் ஒரு தொடர்பு இருப்பதை காட்டுகிறது [a significant correlation between the direction of sleep, health, and the quality of sleep].

மேலும் ஒரு புது ஆய்வு, சில பாலூட்டிகள் மேய்வதும் உறங்குவதும் வடக்கில் அல்லது தெற்கில் [some mammals graze and sleep facing north or south direction and the earth’s magnetic field is causing this.] என கண்டு பிடித்து
உள்ளார்கள். இதற்கு காரணம் பூமியின் காந்தப்புலம் என்கின்றனர். அதை தொடர்ந்து இன்னும் ஒரு ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் கிழக்கு- மேற்கு நிலையில் மனிதன் தூங்கினால், அவன் வடக்கு- தெற்கு நிலையில் தூங்குபவரை விட ஒப்பீட்டு அளவில் குறைந்த குறுகிய விரைவு விழி இயக்க [விரைவான கண் இயக்கங்கள்] தூக்க சுழற்சிக்கு உள்ளாவ தாகவும் கண்டு பிடித்து உள்ளார்கள் [ it was found that the human sleeping in the East-west position has lesser shorter rapid eye movement (REM) sleep cycles when compared to people sleeping in the north-south direction]. நாம் தூங்கும் பொழுது நான்கு நிலைகள் சுழற்சியாக மீண்டும் மீண்டும் வருகின்றன. முதல் மூன்று நிலைகளிலும் நம் விழி அசைவற்ற [Non REM]ஆழ் நிலை தூக்கத்தில் இருக்கும். நான்காவது  நிலையை அடையும் பொழுது நம் விழிகளில் அசைவு இருக்கும் [REM]. மொத்த துக்காதில் 25% மேலாக நாம் இந்த ஆர்எம் (REM)நிலையில் கழிக்கிறோம். REM அல்லது NREMன் சுழற்சி 90 நிமிடங்கள் வரை இருக்கலாம். NREMன் கடைசி கட்டத்திலேயே உங்கள் உடல் முழுமையா உறக்கத்தின் கட்டுப்பாட்டுக்கு வந்து 100% தளர்ந்திருக்கும். சுயநினைவும் முழுசா மங்கியிருக்கும். NREM நிலை முடிந்து REM நிலை
தொடங்கும் போது உங்கள் கண்கள் கொஞ்சம் இயங்கும். கனவுகளும் தோன்றும், ஆனால் இன்னும் உடல் தளர்ச்சி நிலையிலேயே இருக்கும். எனவே எந்த நிலையில் நீங்கள் படுக்கிறோம் என்பதில், சில நன்மைகளை உங்கள் ஆரோக்கியத்தில் பெறக்கூடியதாக இருக்கும். உதாரணமாக, அது விரைவு விழி இயக்கத்தை [REM] கூட்டவும் மற்றும் உங்கள் உடலின் ஆற்றல் ஓட்டத்தை கூட்டவும் துணை புரியும். [The position in which you sleep has some beneficial effect on your health like it increases REM and the energy flow of your body]. இன்னும் இந்த ஆய்வு நடைபெறுகிறது, இது வடக்கு தெற்கு, உறங்குவதற்கு ஒரு சிறந்த நிலையாக காட்டுகிறது. ஆனால் தலை வடக்கா, கிழக்கா என்பதில் ஒரு வேறுபாடும் இல்லை.

உறங்குவதற்கு தெற்கு திசை மிகச்சிறப்பான திசையாக, ஒரு நிலத்தில் கட்டிடம் கட்டுவதற்குரிய முறைகளையும், அதன் தத்துவங்களையும் விளக்கும் வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. இது ஆய்வின் ஒரு பகுதியுடன் ஒத்து போகிறது, ஆனால் மற்றவை முரணாகின்றன, உதாரணமாக, ஆசாரக்கோவை கூறுவது போல, வாஸ்து சாஸ்திரமும் வடக்கு திசையில் தலை வைத்து தூங்குவது நல்லதல்ல என கூறுகிறது. ஒரு மொழியைப் பேசுவோரின் பண்டைய அல்லது பழம் பண் பாடு, வரலாறு, விஞ்ஞான அறிவு போன்றவற்றை அவர்கள் மொழியிலுள்ள சொற்கள் நன்றாகப் புலப்படுத்தும். இதன் அடிப்படையில் நாம் நோக்கினால், உதாரணமாக, தமிழ்நாட்டின் மூன்று பக்கங்களிலும் கடல் பழங்காலத்தில் அரணாக இருந்தது. எனவே, ஊடுருவல்கள் எல்லாம் அங்கு வடக்கிலிருந்தே ஏற்பட வாய்ப்பு அதிகம். மேலும் நான்கு திசையில் இருந்தும் வீசும் காற்றுக் கும் தமிழில் வேறு வேறு பெயருண்டு. அவை பொதுவாக காரண பெயர்களாக இருக்கவே வாய்ப்பு உண்டு. வடக்கில் இருந்து  வீசும் காற்றை வாடை என்கின்றனர். இது மக்களுக்கும் மற்றும் விலங்கு, பறவைகள் முதலிய வற்றுக்கும் ஒவ்வாத குளிர் காற்று ஆகும். எனவே ஊடுருவல்கள், வாடைக்காற்று இவை இரண்டின் காரணமாகத் தமிழ் மக்கள் வட திசையை வெறுத்து வந்தனர் எனலாம். பழங்காலத்தில் வாழ்ந்த சான்றோர் மேற் கொண்ட ஒரு வழக்கு வடக்கிருத்தல் எனப் படும்.
வடக்கிருத்தல் என்பது பண்டைய தமிழரின் நம்பிக்கை சார்ந்த பழக்கவழக்கங்களில் ஒன்றாகும். இதனை ஆடவர் மேற் கொண்டனர். ஊருக்கு வடபால் ஓரிடத்தில் வடக்கு திசை நோக்கி அமர்ந்தவண்ணம் உண்ணாநோன்பிருந்து உயிர் துறப்பதே வடக்கிருத்தல் ஆகும். எனவே துக்ககரமான நிகழ்விற்கு, தனக்கு பிடிக்காத வடக்கு திசை நோக்கி இருப்பதை காண்கிறோம். இவை எல்லாம் தமிழர் விரும்பாத திசை வடக்கு என்பதை காட்டுகிறது, இதை உறுதிப் படுத்துவது போலவாழ்ந்தவன் வடக்குப் போகான்...' என்ற பழமொழியையும் காண்கிறோம், இவைகள் அவன் மனதில் பதித்த தாக்கம் 'மதியார் வாசல் மிதியாதே' என்று ஒளவையார் கூட தெளிவாக கூறியது போல, ஒரு வேளை வடக்கில் வெறுப்பை ஏற்படுத்தி இருக்கலாம். அதுவே வடக்கில் தலை வைத்து படுக்காததிற்கும் காரணமாக இருந்திருக்கலாம் என் நம்புகிறேன். ஒருவர் மரணமடைந்தவுடன், அந்த உடலை தமக்கு விரும்பாத வடக்கு - தெற்கு நோக்கி வைப்பதும், அவர்களின் அந்த வடக்கு திசையின் வெறுப்பே ஆகும் போல் எனக்கு புரிகிறது. உதாரணமாக, தமிழரின் முன்னைய நாகரிகமான சிந்து வெளி நகரத்தில் அகழாய்வு செய்கையில் அங்கு இடுகாடு [burial site] மூன்று விதமாக உள்ளது கண்டு பிடிக்கப் பட்டது. அதில் முதலாவது வகையில் இறந்தவரின் உடல் மல்லார்ந்த படுக்கை நிலையில், சவக்குழிகள் வடக்கு தெற்காக வெட்டப் பட்டு, தலைகளை வடக்குப் பக்கமாகத் திருப்பி வைத்து, புதைத்துள்ளது தெரிய வந்தது. இது அவர்களின் வெறுப்பு குறைந்தது 4500 ஆண்டுகள் பழமையானது என்பதை மேலும் எடுத்து காட்டுகிறது.
ஈமெயில்:kandiahthillai@yahoo.co.uk ]
பகுதி: 13 .வாசிக்க கீழேயுள்ள தலைப்பினில் அழுத்தவும்.
ஆரம்பத்திலிருந்து வாசிக்க கீழேயுள்ள தலைப்பினில் அழுத்தவும்.


0 comments:

Post a Comment