"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்" / பகுதி: 10


‘‘உதியம் பெருத்தால் உத்திரத்துக்குக் கூட ஆகாது, சரீரம் பெருத்தாலும் அது மாதிரிதான்’’ என்கிறது ஒரு பழமொழி, உதியம் என்பது ஒரு வகை மரமாகும். பப்பாளி, முருங்கை போன்று எளிதில் ஒடியும் தன்மை கொண்டது. வைரமில்லாதது. அது பெருத்தால் வீட்டிற்குப் போடும் உத்திரத்திற்குக் [beam] கூட ஆகாது. அது போன்று சரீரமாகிய உடல் பெருத்து விட்டால் அதுவும் ஒன்றுக்கும் உதவாது, நோயின் இருப்பிடமாக மாறிவிடும் என்கிறது. அதே போல சித்தமருத்துவத்தில் “ஒருவேளை உண்பான் யோகி, இருவேளை உண்பான் போகி (உல்லாசி), மூவேளை உண்பான் ரோகி (வியாதியாளர்), நான்குவேளை உண்பான் பாவி”  என்றும் சொல்கிறது. எனவே, மூன்று வேளை உணவு என்பது பிற்காலத்தில் சேர்க்கப்பட்ட பழக்கம் போலும். எனவே இது இன்றைய பண்பாட்டில் ஏற்பட்ட ஒரு நடை முறையே ஆகும்.


உலகத்தில் உள்ள எல்லா மக்களும்-மேற்கு நாடு உட்பட-அனைவரும் என்றும் மூன்று முறை உணவு உட்கொள்ள வில்லை. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக ஒரு வேளை உணவு முறையே வழக்கத்தில் இருந்ததாக BBC யின் "history of breakfast, lunch and dinner."என்ற கட்டுரை ஒன்றும் கூறுகிறது. நாம் இன்று கேள்விப்படும் காலை உணவு முறை மனித வரலாற்றின் பெரும் பகுதியில் காணப்படவில்லை. ரோமர்கள் அப்படி ஒன்றை உண்ணவில்லை. அவர்கள் பொதுவாக ஒரு உணவையே மதியம் வேளை உண்டார்கள் என உணவு வரலாற்றாளர் "கரோலின் யெல்தம் [Caroline Yeldham ] கூறு கிறார். பண்டையக்கால சரித்திரத்தை புரட்டி பார்த்தோம் என்றால் அதில் கிரேக்கர்கள் மற்றும் ரோமர்களின் வரலாற்று நிகழ்வுகள் பெரும் பகுதியாக நிறைந்திருக்கும். அப்படி பெருமைப்படத்தக்க கல்வி, தடகள கலாச்சாரங்களை [academic and athletic cultures] கொண்ட இந்த மக்கள் ஒரு சமைத்த பெரிய விருந்தாக-முதன்மை
உணவாக-ஒரு நேரம்-அதிகமாக, பின்னேரம் அல்லது பிற்பகலில் உட்கொண்டார்கள். ஆகவே, அதிகமாக அவர்கள் இரண்டு உணவு உட்கொண்டார்கள் என நாம் ஊகிக்கலாம். அவர்கள் அதிகமாக, இந்த முதன்மை உணவிற்கு முன் ஒரு சிறிய உணவு எதோ ஒரு நேரத்தில் எடுத்து இருக்கலாம். "To rise at six, dine at ten, sup at six and go to bed at ten, makes a man live ten times ten.","காலை ஆறுக்கு துயில் எழுந்து, பத்துக்கு  [உணவை] உண்டு, பின் ஆறுக்கு [இரா உணவை] உண்டு, பத்துக்கு [நித்திரைக்கு] கட்டிலுக்கு போய், பத்து மடங்கு பத்து வாழவைப்போம் " என்ற பதினாறாம் நுற்றாண்டு பழமொழி ஒன்று என் நினைவுக்கு வருகிறது. எனவே மூன்று முறை உணவு, சித்தமருத்துவத்தில் நாம் பார்த்தவாறு, மிக அண்மை யானதே. ஆகவே முன்னைய எமது முதாதையர்கள்
அதிகமாக இரு முறையே உட் கொண்டிருப்பார்கள். சூரிய உதயத்திற்கு சற்றுப் பின்பும் சூரிய மறைவிற்கு சற்று முன்பும் ஆகும். இந்த ஊகம் அதிகமாக சரியாகவே இருக்கும். ஏனென்றால் இது பகல் இரவுடன் ஒத்து போவதால். இரவு உணவு முறை, அதிகமாக மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்ட பின் வந்து இருக்கலாம். நாம்,வரலாற்றில் வளர்ச்சி அடைந்து கொண்டு போகையில், எமது நடவடிக்கையும் நீண்டு பிற்பகலின் பிற்பகுதி மட்டும் சென்றது. ஆகவே அவர்களுக்கு தமது உணவை அதற்குத் தக்கதாக பரப்ப அல்லது நீட்ட வேண்டி இருந்தது.

மேலும் பதினெண் சித்தர்களுள் ஒருவரான திருமூலர் உடம்பைப் பேணுவது இன்றியமையாதது என்று ‘உடம்பார் அழியின் உயிரார் அழிவர் திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார், உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே, உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே’ என வலியுறுத்துகிறார், உணவே நம் உடலை வளர்க்கிறது. நம் உயிரைக் காக்கிறது. அதனால்தான் திருமூலர் அப்படி கூறினார். ஆகவே உடம்பை ஆரோக்கியமாக வளர்க்க, சாப்பிடும் முறையைப் பற்றி, நமது முன்னோர்கள் வகுத்த உணவுப் பழக்கங்கள் பற்றி, நாம் சற்று அறிய வேண்டி உள்ளது.


உடலுக்கு தேவையான சத்துக்களையும் கனிமங்களையும் கவனத்தில் கொண்டு, அச்சத்துகள் பொதிந்துள்ள உணவின் சுவையையும் அறிந்து, அதன் அடிப்படையில் உணவினை துவர்ப்பு, உவர்ப்பு (உப்பு), இனிப்பு, புளிப்பு, கசப்பு மற்றும் கார்ப்பு (காரம்) என அறுசுவைகளாக வகை பிரித்து, நம் முன்னோர்கள் எமக்கு வழிகாட்டி உள்ளார்கள். மேலும் அவர்களின் சமையல் சுவையோடு நில்லாமல் உடல் நலத்தையும் உணவின் மருத்துவ தன்மையையும் முதன்மையாகக் கொண்டு, நீராவியில் வேக வைத்த உணவுகள் [இடியாப்பம், புட்டு, காய்கறி அவியல்], நொதிக்க வைத்த உணவுகள் [கூல், தயிர், இட்லி, பழைய சாதம்] போன்றவை அங்கு காணப்படுகின்றன. அத்துடன் வாழை இலை, தேக்கு இலை போன்ற இயற்கை யானதை, உணவு உண்ணும் பாத்திரம் போலும், மண்பானை, மர அகப்பை, செம்பு, பித்தளை மற்றும் இரும்பு பாத்திரங்கள் போன்றவற்றை சமைக்கவும் பயன்படுத்தி உள்ளனர். காலையில் செல்வந்தனாகவும் மதியம் அரசனாகவும் இரவு கஞ்சனாகவும் சாப்பிடு” என்ற பழமொழி எவ்வளவு சாப்பிடலாம் என்பதையும் அழகுற எடுத்து இயம்புகிறது.

தமிழர்களின் நாளாந்த பிரதான உணவு மிக எளிமையானது. அது அதிகமாக வேகவைத்த அரிசி [சோறு], சாம்பார் [தமிழ் நாடு] அல்லது வேகவைத்த அரிசி [சோறு], சொதி, மரக் கறி [இலங்கை தமிழர்] ஆகியவற்றுடன், மீன் அல்லது இறைச்சி [அசைவ உணவாளர்களுக்கு], ரசம், தயிர் போன்ற வற்றை கொண்டுள்ளது. சிறப்பு சந்தர்ப்பங்களில்-அரிசி, பால், சவ்வரிசி, சேமியா, சக்கரை, ஏலக் காய், முந்திரிப்பருப்பு முதலியவற்றைக் கொண்டு செய்யப்படும், பாயாசம் பரிமாறப் படுகிறது. ஆனால், விருந்தினர்கள் அவர்கள் வீட்டில் வரும் பொழுது அல்லது திருமண வைபவம் நடை பெரும் பொழுது முற்றிலும் வேறு பாடாக, அங்கு இன்சுவை சாப்பாடு பரிமாறப்படும். அதிலும் ஒரு விழா, சடங்கு என்றால் , பாரம்பரிய முறைப்படி தலை வாழை இலையில் பரிமாறப்படும். இங்கு விருந்தினருக்கு முன்னால் இலையின் நுனி-பொதுவாக வலது கை பாவிப்பவர்கள் பெரும்பாலும் இருப்பதால்-இடது பக்கம் இருக்கக் கூடியதாக வைக்கப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சமாக சேர்க்கக் கூடிய உப்பு, ஊறுகாய், இனிப்பு இவற்றையெல்லாம், கைக்கு சீக்கிரம் எட்டாத தூரத்தில், இலையின் குறுகிய பகுதியான இடப்பக்கத்திலும், உணவு,காய்கறிகள் இவற்றையெல்லம் பெரிய பாகமான வலப்பக்கத்திலும் உள்ளதாக பொதுவாக பரிமாறப்படும். இவர்கள் இனிப்பில் ஆரம்பித்து, உப்பு, புளி, காரம், தாவர வகை கறிகள் சாப்பிட்டு கடைசியாக துவர்ப்பில் அதாவது ஊறுகாய், தயிர், உடலுக்குத் தேவையான அனைத்துச் சுவைகளையும் சேர்த்து முடிப்பது ஒரு வழமையாகும்.

வாழை இலையில் உணவு பரிமாறல் 3000 ஆண்டு பழமை வாய்ந்ததாகவும், ஆகக் குறைந்தது கட்டாயம் 1500 ஆண்டு களுக்கு முன்பே பரவலாக தமிழர் வாழ்விடங்களில் பாவிக்கப்பட்தாகவும் இருக்கலாம் எனவும் அறியப்படுகிறது. ஆகவே இது-வாழையிலையில் பரிமாறல்-ஒரு வரலாற்று ரீதியான காரணத்தையும் கொண்டுள்ளது. வாழை இலையை, அது பெரிய பரப்பளவை கொண்டதாக இருப்பதால், அதில் உணவு பரிமாறல் இலகுவாக இருந்ததாலும், மேலும் தண்ணீரை அதன் மேல் தூவுவது அல்லது தெளிப்பது மூலமே இலகுவாக கழுவக் கூடிய தாக இருந்ததாலும், அதனால் சுகாதார மானதாக அமைந்த தாலும், அதே நேரம் இது நீர் உறியாதன்மையை கொண்டிருப்பதாலும் மற்றும் சில நன்மை பயக்கும் காரணங்களாலும் எமது முதாதையர்கள் இதை தெரிந்து எடுத்து இருக்கலாம். இவ் வாழை இலையில் சூடான உணவுகளை பரிமாறும் போது, அது நல்ல நறுமணத்தை கொடுத்து ரசம் போன்ற சில உணவுகளின் சுவையையும் கூட்டுகிறது. மேலும் புறநானுறு-168, வரி11-12, கூட, "கூதளங் கவினிய குளவி முன்றில் செழுங் கோள் வாழை அகல் இலைப் பகுக்கும்" என்று கூறுகிறது. அதாவது,-காட்டு மல்லிகை மணக்கும் முற்றத்தில் வளமான குலையையுடைய வாழையின் அகன்ற இலையில் இட்டுப் பலரோடும் பகிர்ந்து உண்ணும்-என்கிறது. இவை அனைத்தும் வாழை இலை நீண்ட காலமாக உணவு சாப்பிட ஒரு தட்டு போல் பாவிக்கப் பட்டதை சுட்டிக்காட்டுகிறது.
 [ஆரம்பத்திலிருந்து வாசிக்க , கீழேயுள்ள தலைப்பினை அழுத்தவும்]
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
ஈமெயில்:kandiahthillai@yahoo.co.uk ]

பகுதி: 11 வாசிக்கக் கீழேயுள்ள தலையங்கத்தினை அழுத்தவும் 

0 comments:

Post a Comment