ஓசோ கூறிய சாத்தான் கதை


[-சொல்வேந்தர் சுகி-சிவம் அவர்களின் உரையினைப் பின்பற்றித் தொகுக்கப்பட்டது.]


ஒருமுறை  ஞானி ஒருவர் உலகில் தோன்றினார். எனவே  இனி உலகம் ஆன்மீகத்தில் மூழ்கி  நல்வழியில் உய்ந்துவிடும் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் ஏற்பட் டது.

இதை அறிந்த ஒரு குட்டிச்சாத்தான், தன் தலைவன் சாத்தனிடம் ஓடிவந்து வயிற்றிலும், வாயிலும் அடித்து நிலத்தினில் புரண்டு அலறியது. 
காரணம் புரியாது வினவிய சாத்தானை  நோக்கி மேலும் குட்டிச்சாத்தான் 
'' ஐயகோ! ,அக்கிரமம் ,  பூ உலகில் ஒரு மெய்ஞானி தோன்றிவிட்டார். அவரின் வழிகாட்டலில் பூமியிலுள்ள மக்கள் திருந்தி நல்ல மனிதர்களாக வாழப்போகிறார்கள். எல்லோரும் நல்லவர்களானால் எங்களை பின்பற்ற யாரும் இல்லையே! எங்களுக்கு ஒரு வேலையும் இல்லையே!'' என்று கூறி கதறியது.
சாத்தானும் சிரித்துக்கொண்டே ''பயப்பிடாதே!  இவரைப்போல் எத்தனை ஞானிகளை நாம்  சந்திச்கொண்டோம். முன்னரைப் போலவே இவரின் வருகையினையொட்டியும் இவர்கூற விருக்கும்  நல்வழிகளை முறியடிக்கத் தேவையான ஏற்பாடுகளை நாம் ஒழுங்குபடுத்திவிட்டோம் .''என்றது.
ஆச்சரியத்துடன் நிமிர்ந்து பார்த்த குட்டிச்சாத்தானிடம் சாத்தான்,'' கீழே பூவுலகினை ப் பார்,   மத போதகர்கள், பூசாரிகள் , இவரைப்பற்றி ஆன்மிகம் என்ற பெயரில்சொற்பொழிவாற்றும் இடைத்தரகர்கள் எல்லோரும் அந்த மெய்ஞானம் அடைந்த ஞானி அவரைச் சுற்றி குழுமி  நிற்கிறார்கள்.''

குறுக்கிட்ட  குட்டிச்சாத்தானும் ''அய்யகோ அத்தனைபேரும் இணைந்தல்லவா பிரசாரம் செய்யப்போகிறார்கள்.''

''அவசரப்படாதே!நடக்கப்போவதைக் கேள். நீ பார்த்துப் பயப்பிடும்  மத போதகர்கள், பூசாரிகள் , இடைத்தரகர்கள் எல்லோருமே  என்னால் நியமிக்கப்படடவர்களே!''

எதுவும் புரியாது விழித்துநின்ற குட்டிச்சாத்தானை நோக்கி மேலும் சாத்தான்  '' இந்த ஞானி நேரே மக்களுக்குக் கூறியிருந்தால் மக்களுக்குப் புரிந்திருக்கும்.அவர்களும் நல்வழியில் வாழ்ந்திருப்பார். ஆனால் என்னால் நியமிக்கப்பட்டவர்கள் அவற்றினை மக்களுக்கு புரியாத முறையில் கவர்ச்சியாக சொல்வதுபோல்  சொல்லி  மக்களை ஏமாற்றி பிழைத்துக் கொள்வார்கள். மீண்டும் எம் கை ஓங்கும்.''' என நம்பிக்கையுடன் கூறியது.
குட்டிச் சாத்தானும் அமைதியடைந்தது .

இதிலிருந்து நாம் பெரிய ஒரு உண்மையினை உணரமுடிகிறது. இன்று சைவ சமயம் அல்லது இந்துசமயம் என எடுத்துக்கொண்டால் அது முற்றாக அழிக்கப்பட்டுவிட்டது. மக்களுக்கு பய நம்பிக்கைகளை பெருக்கி பூசைகளும், விரதங்களும், கடவுள்களும் பல சமைக்கப்பட்டு ஆன்மிகத்திற்கான ஆலய வழிபாட்டினை அறவே அழித்து ஒழித்த பங்கு இன்றய ஆலயங்களும், ஐயர்மாரும் , ஆலய தொண்டர்களும் , ஆன்மீகம் என்ற பெயரில் ஐயர்மார்களுக்கு சாதகமாகப் பேசும் பேச்சாளர்களும் ,தரகர்களும் பொறுப்பு என்பது உண்மை.
எந்தவித ஆன்மீக போதனைகளற்ற ஆலய வழிபாடு மதமாற்றத்திற்கு ஏதுவாகிறது. ஆன்மீக  அறிவினை பெற்றுக் கொள்ளாமையினால் மக்களால் அவர்கள் பிள்ளைகளுக்கு அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு விடை தெரியாது விலகிக்கொள்கிறார்கள். இந்நிலைமை  எதிர்காலத்தில் பிள்ளைகளை ஆலயம் செல்லும்   அக்கறையினை அவர்கள் மனதிலிருந்து முற்றாக அகற்றிவிட்டது என்பது உண்மை . கட்டப்பட் ட ஆலயங்களும், கட்டிக்கொண்டிருக்கும் ஆலயங்களும் வெகுவிரைவில் , இந்துக்களின் நினைவுச் சின்னங்களாகவாவது இருக்கும் என்பது காலத்தின் கட்டாயம் என்பதினை மட்டும் உணரமுடிகிறது.

⏳⏳⏳⏳⏳⏳-மனுவேந்தன்-செ ⏳⏳⏳⏳⏳⏳





0 comments:

Post a Comment