நம்பிக்கைகள்: சில பழமொழிகள் வெறும் கிழமொழிகளா????



நம்பிக்கை 1 :    வானில் இருக்கும் பலாக்காயைவிட கையில் உள்ள கலாக்காயே மேல்.
          இப்படிப்பட்ட நம்பிக்கைகளை வைத்துக்கொண்டிருந்தால் இன்னும் குகை மனிதர்களாகவே வாழ வேண்டியதுதான். பலாக்காய் என்ன அதைவிட பெரிய நிலாக்காயக்காக ஆசைபடுங்கள் என்றுதான் நான் சொல்வேன். எதற்கோ ஆசைப்பட்டீர்கள். கிட்டவில்லைஎன்று கிடைத்ததை எட்டிப்பிடித்தீர்கள். இதுவா வெற்றி? உங்கள் கனவை நிறைவேற்ற முழு முயற்சி செய்து அதில் தோற்றால்கூட பரவாயில்லை. ஆனால் விரும்பாத ஒன்றை பெற்று அதை வெற்றி என்று கொண்டாட உங்களால் எப்படி முடிகிறது?.
              எனக்குத்தெரியும்  நான் தோற்றுபோனவனைத்தான் இறக்க போகிறேன். ஏனென்றால் என் கனவான "உலகமே அன்பின் வடிவாய் மாற வேண்டும்" என்பது அவ்வளவு பெரிய  கனவு. இதை என் வாழ் நாளுக்குள் ஓரளவே சாதிக்க முடியும். அதற்காக என் கனவை சுருக்கி கொள்வது எப்படி சாத்தியம். நான் தோற்றாலும் அதை நிறைவேற்ற என் பின்னால் ஒரு ஆயிரம் பேரையாவது விட்டு செல்கின்றேனே அதுவல்லவா வெற்றி !. என்றாவது ஒரு நாள் என் கனவு நிறைவேறுமே. எனவே நாம் செய்யும் ஒவ்வொரு சிறு முயற்சியும் நமது வெற்றி மண்டபத்துக்கு நாம் வைக்கும் ஒவ்வொரு மணல் துகள் ஆகும்.

  நம்பிக்கை 2 :  ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா ?
          மிக மிக தவறான நம்பிக்கை இது. வயது ஏற ஏற பாறைபோல் இருகிபோகும் மனிதர்களுக்கு வேண்டுமானால் இது சரி. ஒரு மலர்போல உயிர்ப்புடன் இருப்பவர்களுக்கு இது பொருந்தாது. உங்கள் கருத்துகள், தீர்மானங்கள், உணர்வுகளை உறைய விட்டு விடுவதனால், உங்களுக்கான வாய்ப்புகளை நீங்களே தாள் இட்டு கொள்கிறீர்கள்.
               மொழி, இனம், உடல் மற்றும் சமூகநிலை என்று குறிப்பிட்ட விஷயத்தோடு உங்களை அடையாளபடுத்திகொண்டு இறுகி விடாமல், திரவ நிலையிலே உங்களை வைத்திடுங்கள். அர்த்தமற்ற நம்பிக்கைகளால் உங்களை நிரப்பி கொள்ளாமல் புதியனவற்றுக்கு இடம் கொடுங்கள். அப்புறம் வயது என்ன செய்துவிடும்?.

              வாழ்க்கையின் உள்ளார்ந்த அர்த்தத்தை கவனித்து வாழ துவங்கினால் ஐந்தைவிட ஐம்பதில் அல்லவா சிறப்பாக வாழ முடியும்!. ஏனென்றால் 49 வருட அனுபவம் சேர்ந்து உங்களுக்கு கைகொடுக்குமே!.

நம்பிக்கை 3 : தகுதிக்கு மீறி ஆசைப்படாதே ........ .
                        தகுதி பெற வேண்டும் என்பதே ஓர் ஆசைதானே !!!!!!!.
             ஆசைபடுங்கள். அதைநோக்கி புத்திசாலிதனத்துடன் தீவிரமாக உங்கள் முழு திறமையை காட்டி செயல்படுங்கள். அதற்க்கு நீங்கள் தகுதியானவர் ஆகிவிடுவீர்கள். இயற்கை அப்படித்தான் உங்களை புரிந்து வைத்திருகிறது.
             ஒன்றை ஆசைப்பட்டீர்கள். அது கிடைப்பது கடினமாக தோன்றியது. உடனே வேறொன்றின் மீது ஆசையை இடம் பெயர்த்தீர்கள். அதிலும் சில பிரச்னைகள் வந்தபோது வேறோன்றின்மீது ஆசையை மாற்றிக்கொண்டீர்கள். இப்படியே செய்துகொண்டு போனால், ஆசைப்பட்டதை அடைவதற்கான தகுதி ஒருபோதும் கைவராது. தீவிரமாக செயல்படாதவர்கள்தாம் இப்படி செய்கிறார்கள்.
            நீங்கள் ஆசைபடாதபோது மதிப்புமிக்க ஒன்று கிடைத்தாலும் அதன் மதிப்பு உங்களுக்கு புரியாது. அதை நீங்கள் ரசிக்க மாட்டீர்கள். அதன் ஆழத்தை உணர மாட்டீர்கள். அதன் அழகை ரசிக்க மாட்டீர்கள். அதனால் நியாமான எல்லாவற்றுக்கும் ஆசைப்படுங்கள். அதை நோக்கி தீவிரமாக முழு மூச்சுடன் செயல்படுங்கள். அத்தகுதி உங்களுக்கு தானாக வரும்.
              நம்பிக்கை 4 : ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்  .
          மனிதனின் ஒரு செயலை வைத்தே அவனைப்பற்றி தீர்மானித்துவிடலாம் என்ற அடிப்படையில் இது சொல்லப்பட்டு இருக்குமானால் இது அரைகுறை அறிவை வெளிப்படுத்தும் ஒரு தவறான வாக்கியம் ஆகும் .உயிரற்ற விசயங்களுக்கு பயன்படுத்தும் அதே அளவுகோல்களை வைத்து மனிதனையும் எடைபோட்டால், உண்மையிலிருந்து வெகுதூரம் விலகிப்போய் விடுவீர்கள்.

              ஒவ்வொரு நபரிடமும் குறைகளும் இருக்கும் நிறைகளும் இருக்கும். நீங்கள் கண்ட ஒரு குறையை மட்டும் மனதில் வைத்து அவரை எடைபோடுவது முட்டாள்தனம். இந்த   கருத்தை மனதில் கொண்டிருந்தால், ஒவ்வொரு மனிதனிடமும் குறைகள்தான் பிரதானமாக தெரியும். உங்களைசுற்றி குறையுள்ள மனிதரே வாழ்வதாக நினைத்துவிட்டால், உங்கள் நிம்மதி போய்விடும்.
            ஒரு சமயத்தில் கடவுளைப்போல் தோன்றுபவன், வேறொரு சந்தர்ப்பத்தில் அரக்கனைவிட மோசமானவனாக தோன்றுவான். சூழ்நிலைகளுக்கு உட்பட்டு கவனமின்றி செய்யும் சில செயல்கள் ஒரு மனிதனின் குணத்தை பூரணமாக தெரியப்படுத்தாது.குறைகளோ நிறைகளோ... அதை வெளிக்கொணர்வது நாம்தான்.

        நம்பிக்கை 5 :  பொறுத்தவர் பூமி ஆள்வார் ........
இதில் சொல்லப்பட்டுள்ள பொறுமை எதையும் செய்யாமல் வாளாவிருக்கும் பொறுமை அல்ல. செயல்களில் தெளிவும் விடாமுயற்சியும் இருந்தாலும், இலக்கை எட்டும்வரை  நம்பிக்கையையும் செயல்களையும் கைவிடாத பொறுமை.
             பூமியையே ஆளவேண்டும் என்பதுபோல், உங்கள் கனவும் லட்சியமும் மிக பெரியதாக இருந்தால், அது ஒரு இரவில் முடிந்து விடாது. அது முடியும்வரை பொறுமை காக்க வேண்டும் என்பதற்கே இது சொல்லப்பட்டதாக இருக்கும்.

நம்பிக்கை 6 :  விரும்பியது கிடைக்காதபோது கிடைத்ததை விரும்பு  .
இது முற்றிலும் தோல்வி மனப்பான்மையிலே சொல்லப்பட்டதாகும்என்னைகேட்டால் இப்போது கிடைத்திருப்பதை விரும்பு. அதே நேரத்தில் உனது சொந்த விருப்பத்தை விட்டுகொடுக்காதே என்றுதான் நான் சொல்வேன்.
 விரும்பியது கிடைப்பதற்கு அந்த ஆசை மட்டும் போதுமானது அல்ல. அதைப்பெற திறமையும் விடாமுயற்சியும் அதிகம் வேண்டும். கிடைத்ததை விரும்பாமல் வெறுக்கும்போது அந்த அதிருப்தி உங்கள் திறனை மழுங்கடித்துவிடும்.

பலவிதங்களில் உங்களை முடக்கிபோடும். விரும்புவதை நோக்கி முழுமையாக செயல்பட விடாமல் தடுக்கும்.

              எனவே எந்த சூழ்நிலையில் இருந்தாலும் அதை விரும்ப கற்றுக் கொள்ளுங்கள். சொந்த வீடா? அந்த நிறைவை மகிழ்ச்சியோடு அனுபவியுங்கள். வாடகைவீடாவேண்டாமென்றால் உதறிவிட்டு போகலாம் என்ற விடுதலை உணர்வை ரசியுங்கள். நீங்கள் ஆனந்தமாக இருக்கும்போதுதான் உங்கள் திறன் உச்சத்தில் இருக்கும். அதை அடைவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகும். கிடைத்ததை மட்டும் விரும்பிக்கொண்டு இருந்தால் வேண்டியது எப்போதும் கிடைக்காது.


                                             ⇇ -மதி அங்கிள்(chennai)

1 comments: