நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா?/பகுதி: 04B

[சீரழியும் சமுதாயம்] 

ஒரு நல்ல சமுதாயம் எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நல்லந்துவனார் எழுதிய கலித்தொகைப் பாடல் 133-ல் 6 முதல் 14 வரைக்குமான ஒன்பது வரிகளில் பல பண்புகளை காண்கிறோம், இது இன்றைய சமுதாயத்திற்கும் பொருந்துவதாகவே காணப்படுகிறது. இந்த பண்புகள் குறைதலும் அல்லது இல்லாமல் போவதும் சீரழிவிற்கு சில காரணங்கள் ஆகலாம் எனவும் கருதத் தோன்றுகிறது.

     'ஆற்றுதல் என்பது அலந்தார்க்கு உதவுதல்
     போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை
     பண்பெனப் படுவது பாடறிந் தொழுகுதல்
     பண்பெனப் படுவது பேதையார் சொல்நோன்றல்
     செரிவேனப் படுவது மறைபிறர் அறியாமை
     முறையெனப் படுவது கண்ணோடாது உயிரேவவ்வல்
     பொரையெனப் படுவது பொற்றரைப் பொறுத்தல்' (கலி.133)

உதாரணமாக இதில் ‘போற்றுதல் என்பது, புணர்ந்தாரை பிரியாமை' என்ற ஒரு வரியை சற்று விரிவாக்கப் பார்ப்போம். அதாவது தம்மோடு கலநதோரைப் பிரியாமலிருத்தலே உறவைப் போற்றுதல் என்கிறது இந்த வரி. உதாரணமாக காதலிப்பதும் பின் ஏமாறுவதும் இன்றும் எம் சமுதாயத்தில் காண்கிறோம். அப்படி ஒரு சம்பவம் சங்க காலத்தில், கள்ளூர் என்னும் ஊரில் நடைபெற்றுள்ளது. அந்த சம்பவத்தையும், அதை மறுத்து பொய் கூறிய அவனுக்கு ஊரறிய கொடுத்த தண்டனையையும் ,அதனால் சமூகத்தில் ஏற்படுத்திய விழிப்பையும் அகநானூறு 256 பாடுகிறது.

"தொல் புகழ் நிறைந்த பல் பூங் கழனி,
கரும்பு அமல் படப்பை, பெரும் பெயர்க் கள்ளூர்,
திரு நுதற் குறுமகள் அணி நலம் வவ்விய
அறனிலாளன்,''அறியேன்'' என்ற
திறன் இல் வெஞ் சூள் அறி கரி கடாஅய்,
முறி ஆர் பெருங் கிளை செறியப் பற்றி,
நீறு தலைப்பெய்த ஞான்றை,
வீறு சால் அவையத்து ஆர்ப்பினும் பெரிதே."

கள்ளூர் என்னும் ஊரில் ஒருவன் ஒரு அழகியை காதலித்து ஏமாற்றி துரோகம் செய்கிறான், அதை விசாரித்த கள்ளூர் அவை, அவனில் குற்றம் கண்டு, அவனை ஊரார் பார்க்க, மரத்தில் கட்டி, கொதிக்கும் சாம்பலினை தலையில் கொட்டினார் என்கிறது. "கூழுக்குப் பற்பலர் வாடவும் சிற்சிலர் கொள்ளையடிப்பதும் நீதியோ? - புவி வாழ்வதுதான் எந்தத் தேதியோ?" என்றான் பாரதிதாசன். இப்படி பலர் பல காரணிகளை சுட்டிக்காட்டி ஊடக வழியாக தமது கருத்துக்களை அல்லது ஆய்வுகளை இன்று வெளியிடுவதை காண்கிறோம். எனவே அவைகளில் பெரும்பாலாக காணப்பட்டவையை இயன்றளவு தவிர்த்து, வேறு ஒரு கோணத்தில், இன்றைய நாகரிக உலகிற்கு ஓரளவு ஏற்றவாறு, கீழ் சுட்டிக்காட்டியவாறு அட்டவணைப்படுத்தி, ஒவ்வொன்றாக அதற்கான விளக்கத்தையும் எமது கருத்தையும் இயன்ற அளவு மேற்கோள்களையும் [References], அதனால் ஏதாவது விளைவுகள் பாதிப்புக்கள் ஏற்படும் என்றால் அவைகளையும் எடுத்துக் காட்ட உள்ளோம்.

1] பாலியல் நோக்குநிலை [sexual orientation]

2]குடும்ப முறிவு அல்லது குடும்ப  செயலிழப்பு [The Collapse Of The Family]

3] இணைய கலாச்சாரம் [internet culture]

4 தொழில்நுட்பத்துடன் இணைத்தல் [Fusion With Technology]

5]  இன்பம் எல்லாவற்றிற்கும் மேல் என கருதும் கலாச்சாரம் [Pleasure Uber Alles Culture].

6] பிரபலங்களை வழிபாடும் கலாச்சாரம் [Celebrity Worship Culture]

7] வரலாற்று அழிப்பு  [Erasure Of History]

8] போதைமருந்து துஷ்பிரயோகம் [Drug Abuse]

9] இல்லாமை தத்துவம் அல்லது நீலிசம் [Nihilism / Letting Yourself Go Culture] 

10] அறநெறி சரிவு அல்லது சுயக்கட்டுப்பாடற்ற ஒழுக்ககேடு [decline of morality]


 [கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]
பகுதி: 05A  தொடரும்
ஆரம்பத்திலிருந்து வாசிக்க → Theebam.com: நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா? [சீரழியும் தமிழ் ச...01A 

பகுதி: 05A வாசிக்க → Theebam.com: நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா?/பகுதி: 05A
ꔚꔚꔚꔚꔚꔚꔚꔚꔚꔚꔚꔚꔚꔚꔚꔚꔚꔚꔚ

0 comments:

Post a Comment