தை மாதம் ஒரு சிறப்பான மாதம்!(பகுதி02‏)

  • Thai is a special month for Tamils!


  • சோழர் காலத்தில் பொங்கல் பண்டிகைக்கு "புதியீடு" என்று பெயர் இருந்தது. அதாவது, ஆண்டின் முதல் அறுவடை என்று அதற்குப் பொருள்.'புதியீடு விழா' என்று ஒரு கல்வெட்டுக் குறிப்பதாக அறிந்து உள்ளேன்.விவசாயிகள் 'அறுவடையில் ஒரு பங்கை' அரசனுக்கு/கோயிலுக்குக் கொடுக்கும் விழாவாக இருக்கலாம்?."புதியீடு" என்பது, புதுஇடு என்று பிரிபடும்? புதிய  (அறுவடையில்) ஒரு பங்கு  என்று பொருள் கொள்ள முடியும்? உழவர்கள் தை மாதத்தின் முதல் நாளில்,அந்த ஆண்டின் முதல் அறுவடையை மேற்கொள்வது வழக்கமாக இருந்தது.இதுதான் பின்னர் பொங்கல் பண்டிகையாக மாறியது என்கிறார்கள்.


    பொங்கல் என்பதற்கு  பொங்கிப் பெருகி வருவது என்று பொருள்.அறுவடை செய்துக் கிடைத்த புது அரிசியைக் (அரிசி உணவு சீனர்களால் அறிமுகப் படுத்தப் பட்டது. அதனால், பண்டைய தமிழர்கள் அரிசியைத் தவிர வேறு தானியங்களில் பொங்கல் செய்திருப்பார்கள்?) களைந்து போட்டால் அது வெண்மையாகப் பொங்கும்.அது மேகத்தின் பொங்கலாடுதல் போல இருப்பதால்,அந்த உணவுக்கும் பொங்கல் என்ற பெயர் வந்தது.பஞ்சு போல வெண்மையாக மேலெழுந்து மேகம் நின்றால் அதற்குப் பொங்கலாடுதல் என்று பெயர்.


    உழவர்கள் மழையின் உதவியால் ஆடி மாதம் முதல் உழைத்துச் சேர்த்த தானியத்தை[நெல்லை] மார்கழியில் வீட்டிற்குக் கொண்டு வந்து தமது உழைப்பின் பயனை அனுபவிக்க தொடங்கும் நாளே தைப்பொங்கல்.உழைக்கும் தமிழ் மக்கள் தாமே கண்டுணர்ந்து,தமது உழைப்பிற்கு உதவிய இயற்கைக்கும்,தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும்,தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விதமாக பொங்கல் படைத்தது வழிபட்டனர் என்பர்.

    இந்துக்கள் பொங்கலை இந்து முறைப்படி கொண்டாடுகிறார்கள் என்பது தவிர பொங்கல் இந்து மத விழாவாக அல்லாமல் தமிழர் திருநாளாகவே அன்றும் இன்றும் இருந்து வருகிறது.பொங்கல் யாரையும் வணங்குவதல்ல. மாறாக நன்றி செலுத்துவது மட்டுமே .இயற்கைக்கு நன்றி என்பதை இந்துக்கள் சூரிய வழிபாடாக வணங்குகின்றனர். உலகுக்கு உணவு தரும் உழவனுக்கு நன்றி சொல்லும் நன்னாள் தான் பொங்கல். உழவன் அதை இயற்கைக்கு நன்றி சொல்லும் நாளாக நினைக்கிறான்.அவ்வளவுதான். 

    சங்க இலக்கியத்தில் பொங்கல் உழவர் திருநாளாகக் கொண்டாடப்பட்டதா?அல்லது சூரியனுக்கு[பகலவனுக்கு] நன்றி நவிலும் நாளாகக் கொண்டாடப்பட்டதா?அல்லது இரண்டிற்கும் சேர்த்தா?இக்கேள்விகளுக்கான பதில்களை தேடித் தான் பார்க்கவேண்டும்.


    தமிழன் வாழ்வில் உழவுக்கே முதலிடம்.அதனால் தான் வள்ளுவர் உலகம் பல தொழில்களைச் செய்து கொண்டு சுழல்கிறது,இந்த உலகத்தின் சுழற்சி உழவர்களின் ஏர்[மேழி] வழியே செல்கிறது என்று மேழியின் மேன்மையை உலகச் சுழற்சி என்ற அறிவியல் மூலம் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே ” சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை'' (குறள் 1031) ”என்றார்.

    அதாவது சுழன்று கொண்டிருக்கும் இவ்வுலகத்தில் பலவகையான தொழில்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.மாறி மாறி வேறு பல தொழில்கள் செய்து வந்தாலும், ஏரால் உழுது பயிர் விளைவிக்கும் உழவுத் தொழிலைச் சார்ந்தே உலகத்தார் வாழவேண்டியிருக்கிறது.வேளாண்மையை அடிப்படையாகக் கொண்டு வாழ்வாதாரமும்,பொருளாதாரமும் அமைந்திருப்பதால்,என்றென்றும் உழவுத் தொழிலே தலைசிறந்த தொழிலாகத் தனிப்பெருஞ்சிறப்புடன் விளங்குகிறது என்கிறார் வள்ளுவர்.

    “ஏற்றுக உலையே! ஆக்குக சோறே'' (புறம் 172) எனும் புறநானூற்றுப் பாடலின் அடி, பொங்கல் விழாவின் தொடக்க கால நிலையை நினைவு கூர்கிறது.புதியதாகக் கொண்டு வந்த செந்நெல்லைப் பொங்கலாக்கிப் பலரோடும் சேர்ந்து பகுத் துண்ணும் திருநாளாக[`பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும்'] அக்காலத்தில் பொங்கல் திருநாள்' பொலிவுற்றது.

    உழவன் ஆண்டு முழுவதும் உழைத்து இயற்கையோடு இயைந்து பருவத்தே பயிர் செய்து முடிவில் பலன் காண்கின்ற மாதம் தைமாதம்."தை பிறந்தால் வழி பிறக்கும்" என்று காத்துக் கிடப்பவன் தமிழன்.சித்திரை பிறந்தால் வழி பிறக்கும் என்று யாரும் சொல்லுவதில்லை.எனவே எந்த மாதத்தில் தமிழனுடைய வாழ்வில் வழி பிறக்கின்றதோ அந்த மாதமே சிறப்பான மாதம்!

    சங்க இலக்கியங்களில் தமிழ் மாதப்பெயர்கள் காணக்கிடைக்கின்றன. தை [நற்றிணை,குறுந்தொகை; புறநாநூறு,ஐங்குறுநூறு,கலித்தொகை,], மாசி (பதிற்றுப்பத்து) பங்குனி (புறநானூறு) சொல்லப்பட்டுள்ளது.

    ஆனால் சித்திரை, சங்க மரவிய காலத்தில்,கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சிலப்பதிகாரத்திலேயே [5:64-69] சொல்லப்பட்டுள்ளது:இந்திர விழா இளவேனில் காலத்தில் அதாவது சித்திரையில் நடந்தது;ஆனா காமவேள் விழா/காதல் விழா என்று தான் பேசுகிறதே தவிர,வேறு ஒன்றும் இல்லை ....
    இவ்வாறு சங்க காலத்தில் தொடங்கிய பொங்கல் விழா,காலப் போக்கில் 
  • வழிபடுதெய்வங்களுக்குச் செய்யப்படும் விழாவாகியது.

  • [ஆரம்பத்திலிருந்து வாசிக்க கீழேயுள்ள தலைப்பினை அழுத்தவும்]
  • பகுதி/Part 03 னை  வாசிக்க கீழேயுள்ள தலைப்பினை அழுத்தவும்..]

2 comments:

  1. Nageswary UruthirasingamTuesday, January 14, 2020

    தை மாதத்தில் இத்தனை சிறப்புகளா என்று வியக்கும் வண்ணம் தகவல்கள் உள்ளன. அருமை அருமை அருமை. நன்றிகள்.

    ReplyDelete
  2. Vino PathmanathanTuesday, January 14, 2020

    நன்றி அண்ணா தகவலுக்கு.
    , நல்லதொரு தேடல் அண்ணா.
    தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்
    உரித்தாகட்டும்.தில்லைவிநாயகலிங்கம் அவர்களின் ஆக்கங்கள்
    பலவற்றை நான் தீபம்
    சஞ்சிகையில் வாசித்திருக்கிறேன்.
    சிறந்த எழுத்தாளர்.

    ReplyDelete