"நேரிய பாதையில்"

"நேரிய பாதையில்"

 


"நேரிய பாதையில் மனிதா நட

நேர்மை கொண்ட தீர்மானம் எடு!

நேசம் உள்ள நண்பர்களை அணைத்து

நேரார் தரும் தொல்லைகளை அகற்று!

ஆர்வம் வேண்டும் ஆராவாரம் வேண்டாம்

ஆசை வைத்து செயலில் ஈடுபாடு!

இன்பம் துன்பம் யாரும் தருவதில்லை

இருப்பதை அறிந்து நடையைக் கட்டு!

கொள்கை ஒன்றைத் தரமாக வகுத்து

கொடுத்து எடுத்து சமாதானம் காணு!

தெரிந்ததும் தெரியாததும் அறிந்து உணர்ந்தால் 

தெளிவான முடிவு தருமே வெற்றி!"


“காகிதப் படகில் விளையாடும் மழலைக்கு"

 

"காகிதப் படகில் விளையாடும் மழலைக்கு

கனமான புத்தகம் கையிலே கொடுத்து

காதோரம் கொஞ்சும் தளர்நடை குழவிக்கு

கடலளவுப் பாடம் படிப்பிப்பது எதற்கு?

காலத்தோடு ஒத்த திட்டம் இல்லையோ?"

 

"ஓயாத அலைபோல் தொடர்ந்து திணிக்காமல், இயல் இசை நாடகம் கலந்து

சிறிதாக போதித்து பெரிதாக வளர்த்து

சீராக சிறப்பாக குழந்தையை கவர்ந்து

அறிவுக் கடலில் நீந்த விடுவாயோ?"

 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்]

0 comments:

Post a Comment