தமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி-10 B:‏

 superstitious beliefs of tamils:death & Spirits:
[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்.]



நீலியின் கதைமட்டும் அல்ல,மேலும் பேயும் தீய சக்திகளும் தாக்காமல் தடுக்க ஐயவி எனப்படும் வெண்கடுகை நெருப்பில் இட வேண்டும், மணி அடிக்க வேண்டும், வேப்பிலையைப் பயன்படுத்த வேண்டும் என்பன போன்ற தகவல்களையும்  சங்க இலக்கியம் தருகிறது. 

அது மட்டும் அல்ல, சதுப்பு நிறைந்த வயல் நிலங்களில் நடக்கும் ஒருவரை கொள்ளிவாயுப் பேய்  அல்லது கொல்லி வாய் பிசாசு நெருப்பாகப் பின்தொடரும் எனவும் ஓட முற்பட்டால் இதுவும் ஓடும் எனவும் கூறப்படுகிறது. அறிவியல் ரீதியில் அணுகுபவர்கள் இதைச் சதுப்பு நிலத்தின் கீழ் அழுகும் தாவரப் பாகங்களிலிருந்து உயிரிவாயு எனப்படும் மெதேன்[Methane  CH4 ] வாயு கசிவதாகவும் சதுப்பில் புதையும் கால் வெளியில் எடுக்கப்படும் போது வாயு வெளியேறி காற்றில் தீப்பற்றிக் கொள்ளுவதாகவும் விளக்குகின்றனர்.

இறப்பை பற்றி  பல மூட நம்பிக்கைகள் பரவலாக உண்டு. குறிப்பாக மரணம் ஏற்பட்ட வீட்டில் சாப்பாடு சமைக்க மாட்டார்கள்.துடக்கு[தீட்டு/ unclean ] என்று கருதி சமையல் அறைப்பக்கம் போகமாட்டார்கள்.  அயலவர்கள் சமைத்து உணவு கொடுப்பார்கள்.ஒரு குடும்பத்தில் மரணம் நிகழும் போது அவர்கள் துக்கத்தில் ஆழ்ந்து இருப்பதாலும் சமைப்பதில் ஒரு விருப்பமோ அல்லது நேரமோ இல்லாததால் அன்றைய கூட்டு குடும்ப வாழ்வில் இப்படி ஒரு பழக்கம் தோன்றியது என நம்புகிறேன்.அது மட்டும் அல்ல இது,ஒரு பிரச்சனையான நேரத்தில், சமுகத்தின் உணர்வை[sense of community] பலப்படுத்துகிறது.

காகம் கரைதல்,ஆந்தை அலறல்,  பூனையின் கரைவு என்பன
நிமித்தம்[சகுனம்] ஆக கருதப்படுகிறது  அது போல வால் நட்சத்திரம் ஆகாயத்தில் தோன்றுவது அரசனின் சாவை குறிப்பதாக ஷேக்ஸ்பியரும்[ஜூலியஸ் சீசர்] புறநானுறும் கூறுகிறது. 

புறநானூறு 117 -  கபிலர் 
மைம் மீன் புகையினும், தூமம் தோன்றினும், தென் திசை மருங்கின் வெள்ளி ஓடினும்
...................................,
அதாவது சனிமீன் புகைகளோடு கூடிப் புகையினும்; எல்லாத் திசையினும் புகை தோன்றினும்; தென்றிசைக்கண்ணே வெள்ளி போக்குறினும்...என்கிறது.இப்படியான பாடல் வரியை சிலப்பதி காரத்திலும் காணலாம். "கரியவன் புகையினும் புகைக்கொடி தோன்றினும்,விரிகதிர் வெள்ளி தென்புலம் படரினும்" (சிலப்.10:102: 3)

வால் நட்சத்திரம் போல, ஒரு வீட்டருகே ஆந்தை அலறினாலோ அல்லது கோட்டான் (அது ஒரு வகை ஆந்தை) கூவினாலோ அந்த வீட்டில் ஒரு மரணம் சம்பவிக்கும் என்பது சிலர் எண்ணம். ஏனென்றால் அது 'powwa powwa',அதாவது  "போவா போவா" என்று கத்துவதால். 

பெரும்பாலான தமிழர்கள் இன்னும் தம் முனோர்கள் காகத்தின் தோற்றத்தில் வருகிறார்கள் என நம்புகிறார்கள்.அதனால் தான் காகத்திற்கு படைக்கிறார்கள்.  

பிண ஊர்வலம் எதிர்ப்பட்டால் எடுத்த காரியம் நல்ல முறையில் முடியும் என்றும் நீண்ட நாள் நோயால் அவதிப்படும் நோயாளிகளுக்கு அமாவாசை ஒரு கண்டமாகக் கருதப்படும் என்றும் நம்புகிறார்கள். ஏனெனில் எமன் அந்நாளில் கூடுதலான வேலை செய்யும் நாளாக மக்கள் நம்புகின்றனர் "அண்டம் காக்கா கரைந்தால், நாய் தொடர்ந்து ஊளையிட்டால் யாரோ சாகப்போகினம் என்றும் அது போல சாகக் கிடப்பவன் பக்கத்தில் வைக்கப்பட்டுள்ள சுடர் ஆடினால் இறந்துபோவான் என்றும் நம்புகிறார்கள்.

"என்னை மார்பிற் புண்ணும் வெய்ய
நடு நாள் வந்து தும்பியும் துவைக்கும்;
நெடு நகர் வரைப்பின் விளக்கும் நில்லா;
துஞ்சாக் கண்ணே துயிலும் வேட்கும்;
அஞ்சு வரு குராஅல் குரலும் தூற்றும்;"
[புறநானூறு 280] 

அதாவது என் கணவனின் மார்பில் உள்ள புண் மிகவும் கொடியது. நடுப்பகலில் வண்டுகள் வந்து ஒலிக்கின்றன; என்னுடைய பெரிய அரண்மனையில் ஏற்றிவைத்த விளக்குகள் நின்று நிலைத்து எரியாமல் அவிந்துவிடுகின்றன; என் கணவன் துன்பத்திலிருக்கும் பொழுது நான் உறங்க விரும்பாவிட்டாலும் என் கண்கள் உறக்கத்தை விரும்புகின்றன; அச்சத்தைத் தரும் கூகை தன் குரலால் அலறுகிறது,,என்கிறது.

இந்த நூற்றாண்டு பாரதி,தன் நெஞ்சு பொறுக்காமல் “அஞ்சி அஞ்சிச் சாவார்
இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே வஞ்சனைப் பேய்களென்பர்; துஞ்சுது முகட்டிலென்பார்; அந்த மரத்திலென்பார்; இந்தக் குளத்திலென்பார்"  என்று குமுறினான்.இப்படி  சில பேர் குமுறினாலும் சில சுயமரியாதையுள்ள பெரியார்கள் பேய்களுக்கெதிராக கடும் பிரச்சாரம் செய்தாலும் பேய் விசுவாசிகளின் நம்பிக்கையை இன்றுவரை அசைக்க முடியவில்லை.இது அவர்களின் இடையில் சாதாரணமாக இன்றுவரை காணப்படும் பழமொழியில் இருந்தும் உணரலாம்.இதோ அந்த பழமொழிகள்:  

"பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்"
"பெண் என்றால் பேயும் இரங்கும்"
"நோய்க்கும் பார்க்க வேண்டும்; பேய்க்கும் பார்க்க வேண்டும்."

இவை தமிழர்களின் உள்ளங்களில் பேய்களுக்கு இருக்கும் இடத்தைப் படம் பிடித்துக் காட்டுகின்றன.அது மட்டும் அல்ல பிசாசுகள், மோகினி, இரத்தக் காட்டேரி...... என பேய்களுக்கு  இருக்கும் செல்வாக்கு மேலும் சான்றுகள் ஆகின்றன.இவை மட்டும் அல்ல,நாட்டுப்புற மக்களின் உணர்ச்சியின் வெளிப்பாடாக அமையும் ஆடல், பாடல் அடங்கிய  நாட்டுப்புறக் கலைகளிலும்  "பேய் ஆட்டம்" இடம் பெறுகிறது என்றால் பாருங்களேன்!  

பேய் பிடிப்பதும், சாமி ஆடுவதும் ஒன்றோடொன்று தொடர்புடையதே. தற்போது இந்த வழக்கங்கள் வெகுவாகக் குறைந்து போய்விட்டது. இருப்பினும் ஒரு சிலரிடம்,குறிப்பாக கிராமங்களில் இந்த வழக்கம் இருக்கத்தான் செய்கிறது.சமுதாயக் கட்டுப்பாடுகளால், உள் மனதில் சில அடக்கி வைக்கப்பட்ட ஆசைகள் இருக்கும். இவையே பின்னர் அடக்க இயலாமல் வெளிக் கிளம்பும் போது ஹிஸ்டீரியா[hysteria நரம்புத் தளர்ச்சி நோய்/உள வெறுப்பு நோய்] எனும் மனஅதிர்ச்சி நோயாக மாறுகிறது. இந்த நோயுடையவர்கள்தான் பேய் பிடிப்பதும், சாமி ஆடுவதும் போன்ற செயல்களில் இறங்குகின்றனர் என நம்புகிறேன் மேலும் இந்த நோய் பெரும்பாலும் மத உணர்வு மற்றும் கடவுள் நம்பிக்கை அதிகமுடையவர்களுக்குத்தான் பொதுவாக வருகிறது. 

இறுதியாக தமிழர்களின் நாகரிகம் என கருதப்படும் நாலாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சிந்து வெளி நாகரிகத்தில் கண்டு எடுக்கப்பட்ட இரண்டு பக்க மொகெஞ்சதார முத்திரை ஒன்று பேய் அல்லது பிசாசு போன்ற உருவத்தை காட்டுகிறது. இதைப்பற்றிய சரியான விளக்கம் இன்னும் இல்லை.ஆனால் பேய்,பிசாசு நம்பிக்கைகள் இதன் மூலம்,அன்றே இருந்திருக்கலாம் என நம்பலாம்.

பகுதி/Part 11:"பெண்கள்""Women:" அடுத்த வாரம் தொடரும்

0 comments:

Post a Comment