"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்" / பகுதி: 05


ஒரு நாட்டில் அல்லது ஒரு பகுதியில் வாழும் மக்களின் வாழ்வை பற்றி புரிந்து கொள்ள வேண்டுமாயின் நாம் அவர்களின் பெருமைக்குரிய சிறப்பு வாழ்வையும் மற்றும் பாரம்பரியங்களையும் பார்க்கவேண்டும். இது அந்த மக்களின் முக்கியத்துவத்தை மட்டும் இன்றி, அவர்கள் எப்படி ஓய்வு எடுத்தார்கள், பொழுது போக்கினார்கள், கொண்டாடினார்கள் என்பதையும் எடுத்துக் காட்டும். உதாரணமாக இலங்கையின் ஒரு பிரதேசமான புத்தளத்தின் பாரம்பரியங்களில் ஒன்றாக இன்னும் குடும்பங்களை அறிமுகப்படுத்துவதற்கு “குடும்ப பட்டப்பெயர்” பயன்படுத்தப் பட்டு வருகின்றது. இவை அவர்களின் வரலாற்றை, அவர்களின் முன்னோர்களை மீட்டி பார்க்க, பரம்பரைகளின் அடையாளமாக வழக்கத்தில் இன்னும் இருந்து கொண்டிருக்கிறது. இவ்வாறான குடும்ப பட்டப் பெயர்கள் அந்த காலத்தில் அவர்கள் செய்த தொழில், அவர்கள் பயன்படுத்திய பொருட்கள், அவர்களின்
செயற்பாடுகள், தோற்றங்கள் என இன்னோரன்ன அமசங்களை கொண்டு வந்திருக்கலாம். அங்கு “பாசுமணி” என்ற குடும்ப பட்டப்பெயரை கொண்ட ஒரு குடும்பம் உண்டு. விசாரித்து பார்த்ததில், அவர்களின் முன்னோர்களின் அன்றைய தொழில் பாசுமணி மாலை செய்து கொடுப்பதாக இருந்ததை அறிந்தோம். அன்றைய காலங்களில் தங்கத்தின் பாவனை பெரிதாக இருந்திராத காலமென்பதால் பாசுமணி மாலைக்கான மவுசு அதிகமாம். திருமண நிகழ்வுகள், பெண்பிள்ளைகளின் பூப்படைதல் நிகழ்வுகள், பெண் குழந்தைகளின் பிறந்தநாள் நிகழ்வுகள் என இன்னோரன்ன சடங்குகளின் போது இவ்வாறன பாசுமணி மாலைகளை மக்கள் பெரும்பாலும் அணிவதை, அன்பளிப்பாக கொடுப்பதை வழக்கமாக்கி கொண்டிருந்தார்களாம். பெரும்பாலும் இந்தியாவிலிருந்தே இந்த பாசுமணி முத்துக்கள் பெற்றுக் கொள்வார்களாம். காலப்போக்கில் பாசுமணி மாலை செய்து கொடுக்கும் தொழில் அழிவடைந்தாலும் பாசுமணி என்ற அந்த குடும்ப பட்டப்பெயர் நிலைத்துவிட்டது என்கிறார்
அந்த பாசுமணி குடும்பத்தின் ஒருவர். இவ்வாறான குடும்ப பட்டப்பெயர்கள் ஒரு சில கேட்பதற்கு வெவ்வேறு விதமாக இருந்தாலும் அவை தம் வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்து இருப்பதை மறுக்க இயலாது என்றும். தமக்கு பின்னால் வருபவர்கள் தமது  முன்னோர்களின் வாழ்க்கையினை, வழிமுறைகளினை இதன் மூலம் அறிய முடிகிறது எனவும்  பெருமை படுகிறார் அவர்.

மேலே எடுத்து காட்டிய ஒரு தனிப்படட  தமிழ் முஸ்லீம் குடும்பம் ஒரு  பட்டப் பெயருக்கு பின்னாலேயே பெருமை கொண்டு பூரிக்கிறது என்றால், பெருமைக்குரிய பல கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் [culture and traditions] குறைந்தது இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளாக பின்பற்றும் முழு தமிழ் இனம் எவ்வளவு பெருமை கொள்ள வேண்டும் என்று எண்ணி பாருங்கள். தமிழ் இனம் இன்றைய உலகின் மிகப்பழையன எனலாம். தமிழரை பற்றி யாராவது சிந்தித்தால், அவர்கள் பெரும்பாலும் நினைப்பது, தமிழர்கள் பட்டுத்துணியை விரும்புகிறவர்கள் என்றும், சேலை வேட்டி உடுப்பவர்கள் என்றும், மற்றவர்களை வணக்கம் செலுத்தி வரவேற்பவர்கள் என்றும், கொண்டாட்ட காலங்களில் பெரும்பாலும் மரக்கறி உணவை வாழை இலையில் உண்ணும் மரபை உடையவர்கள் என்றும், அவர்களின் முக்கிய கொண்டாட்டம் தை பொங்கல் என்றும், இது பெரும்பான்மையான மக்கள் முன்பு விவசாயிகளாக இருந்தனர் என்பதையும், மற்றும் முக்கனி என்று சொல்லப்படும் மா,பலா,வாழை பழங்களை விரும்பி பொதுவாக உண்பவர்கள் என்பதும் ஆகும். எனினும் கால ஓட்டத்தில், குறிப்பிடத் தக்க வெளிநாட்டு தாக்கங்களால், இன்று அவர்களுக்கு இடையில் ஏற்பட்ட  கலப்பால், இது தான் அவர்களின் தனித்துவமான மரபு அல்லது பாரம்பரியம் என சுட்டிக் காட்டுவது சிக்கலாகிறது.

இன்றைய காலத்துக்கேற்ற புதுத்தினுசானபாணி[ஃபேஷன்கள்], உணவு பழக்கம், வாழ்க்கை முறை, விழுமங்கள் [மதிப்புகள்] [fashions,food habits, life-styles, values] என்பன எமது நீண்ட வரலாற்றின் விளைவுகள் ஆகும். இன்று தமிழர்கள் பெருமளவில் தமிழ் நாட்டிலும் இலங்கையிலும் தமது தாயகமாக, குறைந்தது இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வருகிறார்கள். இவர்களின் பண்பாடு பல விதங்களில் மிகவும் குறிப்பிடத் தக்க பெருமை உடையது. அத்துடன் தமிழ் மிகவும் பண்டைய மொழிகளில் ஒன்றும் ஆகும். குறைந்தது 2500 ஆண்டுகளாக அதன் அடிப்படை மொழி அமைப்பு மாறாமல் தொடர்ச்சியாக வாழும் மொழி இது ஆகும். அது மட்டும் இல்லை இன்று மேலும் நாற்பது லட்சத்திற்கு [four million] மேற்பட்ட தமிழர்கள் பரந்து பெரும் தொகையாக பல நாடுகளில், குறிப்பாக பர்மா, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, தென் ஆப்பிரிக்கா, கரிபியன் தீவுகள், ரீயூனியன் தீவு, மொரிசியஸ், பிஜி, மற்றும் புலம்பெயர் தமிழர்களாக [Tamil diaspora] அவுஸ்திரேலியா, டென்மார்க், நெதர்லாந்து, நோர்வே, சுவிற்சர்லாந்து, பிரித்தானியா, ஜெர்மனி, பிரான்ஸ், கனடா, அமெரிக்கா, நியூசிலாந்து போன்ற நாடுகளில் வாழ்கிறார்கள். பொதுவாக எங்கள் மரபும் பாரம்பரியமும் எமது முன்னோர்களிடம் இருந்து பெறப்பட்டு, அது எமது குடும்பத்தின் மூத்தவர்களாலும் குருவாலும் [ஆசான்] இளம் வயதிலேயே கல்வியுடன் சேர்த்து புகுத்தப் பட்டு, அது வாழ்வின் ஒரு பகுதியாக இன்றும் தொடர்கிறது. ஆனால் இன்று கல்வி மேலும் அதி முன்னேற்றம் அடைந்து, இன்றைய இளைய தலைமுறை ஏதாவது ஒன்றை பின்பற்ற முன் அல்லது செய்ய முன் அதைப்பற்றி கேள்வி கேட்டு, காரணம் அறிந்து, புரிந்து கொள்ள [question, reason and understand] முனைகிறார்கள். எனவே நாம் கண்மூடித்தனமாக அதை அவர்களுக்கு புகுத்தாமல் அதன் உண்மை நிலையை காரண காரியங்களுடன், எப்படி [தூண்டுதலும் துலங்கலுமுடன்] புத்தளத்து பாசுமணி குடும்பம் விளக்கியதோ, அவ்வாறு நாம் விளக்க வேண்டும். அது அவர்களுக்கு ஒரு துடிப்பையும் மகிழ்வையும் கொடுத்து அந்த பாரம்பரியத்தின் உண்மை நோக்கத்தை மேலும் அறிய அவர்களுக்கு ஒரு ஆவலையும் தூண்டும். அதை விட்டு விட்டு, இந்த பாரம்பரியம் தானாக தொடரும் என இருந்து விட்டால், அது காலப்போக்கில், நமது வாழ்க்கை முறை நீர்த்துப் போய், தளர்வூட்டு எமக்கே அது ஒரு அந்நியமாக போய்விடும். இது உங்களின் நல்ல ஆரோக்கியம் மாதிரி, அதை நீங்கள் இழக்கும் வரை அது தானாக தொடரும் என பேசாமல் இருப்பது போல ஆகும். நாங்கள் எங்கள் விழுமியங்களை பாராமுகமாக இருந்தால், அலட்சியம் செய்தால், ஒரு நாள் நாம் எம் கண்களை திறக்கும் பொழுது, விழித்தெழும் போது,  நாம் எம்மையே அடையாளம் காணாமல் போய்விடுவோம். இந்த விழுமியங்கள், எமது நாட்டின், எமது குடும்பத்தின் முதுகெலும்பு ஆகும். 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
ஈமெயில்:kandiahthillai@yahoo.co.uk ]

பகுதி: 06  வாசிக்க கீழேயுள்ளதலைப்பினைச் சொடுக்கவும். 

ஆரம்பத்திலிருந்து வாசிக்க கீழேயுள்ள தலைப்பினைச் சொடுக்கவும்.


"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்" [ஒரு ஆரம்பம்.......]

0 comments:

Post a Comment