எமது விழாக்கள் /கனடாவிலிருந்து ஒரு கடிதம்......





                                                                                                                                                                                                02.11.2019
அன்புள்ள அப்புவுக்கு,
நான் நலம்,அதுபோல் உங்கள் சுகமும் ஆகுக.
மேலும்,உங்கள் கடிதம் கிடைத்தது. புதினம் யாவையும் அறிந்தேன்.சந்தோசம்.
 அப்பு,சின்ன வயசில நான் ஊரில வாழ்ந்த காலத்திலை கோவிலின் இரவுத்திருவிழாக்களில், திருவிழா உபய காரருக்கிடையிலேயான போட்டிகள் காரணமாக ஒவ்வொரு இரவும் கூத்துக்கள் நடைபெறும்.அப்போதெல்லாம் "ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிகளுக்குக் கொண்டாட்டம்"என்று பழமொழி கூறுவீர்கள்.

ஆனால் இன்று கனடாவில் அது தலைகீழாகி விட்டது.இங்கு பல தமிழ் வானொலி(CTBC,CTR,GTR,CMR,ITC,KETHAVANY ,VANAKKAM FM,VTR), தொலைக்காட்சி (TVI,TAMIL ONE)சேவைகள் உள்ளன.வேறு நாட்டவர்களில் இல்லாதது போன்று  அவர்களிற்கு இடையில்  பகைமை உணர்வுகள் காணப்படுவது கவலைக்குரிய விடயமே.கோடை காலம் வந்துவிட்டால் இவர்கள் தனித்தனியே பெருந் திறந்தவெளியில் கலையரங்கும்,சிறுவர் விளையாட்டு திடல்களும்,கடைகளும் அமைத்து பத்தாயிரத்துக்கு மேற்பட்ட தமிழர்கள் கலந்து சிறப்பிக்கும் நிகழ்வாக பல வருடங்களாக நடந்துவருகிறது. ஆனால் அவர்களுக்கிடையில் காணப்படும் பகைமைப் போட்டி காரணமாக இவ்வருடம் அந்நிகழ்வுகளுக்கான அனுமதியினை ஒரு பகுதி இலவசமாக்கியதும் ஏனையோர்களும் தொடர ஆரம்பித்து விட்டார்கள். இது தமிழ் நுகர்வோர் பாடு கொண்டாட்டமாக அமைந்துவிட்டது. இருந்தாலும் சில பொது நோக்குடையோர் மத்தியில்  "அனுமதிக்கு சிறு கட்டணமாதல் அறவிட்டு அப்பணத்தினை பொதுச் சேவைகளுக்கு பயன்படுத்தியிருக்கலாம்" என்ற கருத்தும் ஆங்காங்கே கேட்கக்கூடியதாக இருந்தது. 

மேலும்,இன்னொரு கவலைக்குரிய விடையம் என்னவெனில் வெளிநாடுகளில் இருந்து பல ஆயிரம் டொலர் செலவழித்து கலைஞர்களை இறக்குமதி செய்யும் இவர்கள், இலவசமாக இதுவரை அவர்களுக்கு கலைநிகழ்ச்சிகளை வழங்கி வந்த உள்நாட்டு கலைஞர்களை உதறியுள்ளதேயாகும்.

இதில் நகைப்புக்கிடமான விடயம் என்னவெனில்,கலைநிகழ்வுகள் நடக்கும் மேடைகளுக்கு முன்னால் ஒன்பது கதிரையை ஒரு பெண் பிடித்து வைத்துக் கொண்டு ஏனையோரை இருக்கவும் விடாது அவர் வருவார்,இவர் வருவார் என துஷ்பிரயோகம் செய்வதுதான் பல பகுதிகளில் காணக்கூடியதாக இருந்தது. நானும் ஒருமுறை என் 5 வயது மகனுக்கு உணவினை வாங்கி அவன் அதை உண்பதற்காக ஒரு கதிரையில் உட்கார செல்கையில் பக்கத்தில் இருந்த பெண் "அவர் வருவார்" எனக்கூறியதால் அந்த வெறும் கதிரையின் பக்கத்தில் என் மகன் நின்ற நிலையில் உணவை சாப்பிட்டான். அவன் சாப்பிட்டு முடிந்த நாம் அவ்விடத்தினை விட்டு விலகும்போதும்  அந்த அம்மாவின், அந்த அவர் வரவேயில்லை. வெளிநாட்டில் வாழ்ந்தாலும் இவ்வாறு எங்கள் சனங்கள் எவ்வளவு அநாகரிகமாக  இருக்கிறார்கள் என்று பாருங்கள்.

அப்பு, எங்கள் தாய்மொழி உணர்வினை பாவித்து உயர்ந்த தமிழர் பலர். ஆனால் சிலரிடம்  மொழிப்பற்று எந்தளவில் என்பதற்கு சில சம்பவங்களினை எடுத்துச் சொல்ல விரும்புகிறேன்.

சில காலம் நானும் இணைந்து வெளியிட்ட ஒரு இலவச சஞ்சிகையினை நான் சந்தித்த இரு தமிழ் போதிக்கும் ஆசிரியர்களிடம் நீட்டினேன். அவர்கள் தாம் வாசிப்பதில்லை என்று முறித்துக் கூறிவிட்டனர்.

அடுத்து நான் குறிப்பிடுவதுவும் தமிழ்க்கல்வி பற்றியதே! எங்கள் ராமுவுக்கு ஒரே ஒரு பெண்பிள்ளை.ஆனால் அவன் மனைவி தமிழே அறியாத வேற்று நாட்டவள்.எனவே அவன் பிள்ளைக்கு தமிழ் கற்றுக் கொடுக்கச் சிந்தித்ததேயில்லை.ஆனால் அப்பிள்ளை அப்பாவின் மொழி படிக்கப்போறேன் என்று அப்பாவுக்குக் கொடுத்த தொந்தரவால் ராமுவும்  அவளை தமிழ் கல்லூரியில் சேர்த்து விட்டான்.ஆனால் நடந்ததோ வேறு.

அவளுடன் ஆங்கிலம் பேச கூச்சப்பட்ட தமிழாசிரியை அவளை முழுமையாகப் புறக்கணித்ததுடன்  "தமிழ் தெரியாத இந்தப்பிள்ளை ஏன் இங்கை வருகிறது" என்று பலமுறையும் தமிழில் நச்சரிக்க அதனை மற்றைய பிள்ளைகள் அவளிடம் எடுத்துச் சொல்ல அப்பிள்ளை மிகவும் கவலையுடன் தமிழ்க் கல்வியினை நிறுத்திக்கொண்டாள்.

தமிழ் வாசிக்க மனமில்லாதவர்கள் எப்படி பிள்ளைகளுக்கு தமிழ் கற்பிக்க முடிகிறது என்பதுவும், கற்பிக்க முடியாதவர்கள் தமிழை தாம் வளர்ப்பதாக மேடைகளில் முழங்குவதும் எனக்குப் புரியவில்லை.

அப்பு, இங்கு நடக்கும் ஏனைய புதினங்களுடன் அடுத்த கடிதத்தில் உங்களைச் சந்திப்பேன்.உங்கள் சுகத்தினையும்,தேவைகளையும் எழுதுங்கள்.

வணக்கம்.
இப்படிக்கு
அன்பின் மகன்
செ.மனுவேந்தன்

2 comments:

  1. கந்தையா தில்லைவிநாயகலிங்கம்Monday, August 19, 2013

    அந்த காலத்தில் "யாழ் தேவியில்"இருப்பிடம் [seat] பிடிப்பதில் இருந்து யாழ் தேர்தல் வரை தமது ஒற்றுமை இன்மையை,போட்டிக்கு போட்டி-தலைவர் பதவிக்காக-பிரிந்து பிரிந்து-புதிசு புதிசாய்-கட்சி ஆரம்பிப்பதில் இருந்து-இது வெளிநாட்டிலும் நீங்கள் கூறியவாறு தொடர்கிறது-ஆலயம் உட்பட. இது யாருக்கு நன்மை?கிழக்கு தேர்தல் முடிவை பார்த்தாவது திருந்தினார்களா?ஒரு அமைப்புக்குள் அவர்கள் எல்லோரும் சேர்ந்து செயல் படும் போது அதன் தரமும் வலிமையும் கூடுமே தவிர குறையாது -சிதையாது.இதை இனிமேலாவது நம்புவார்களா?

    கடவுள் ஒருவரே என நம்பும் இவர்கள்,ஏன் தமக்குள்ள போட்டி பொறாமை??அரைகுறை நிர்வாகம்?

    "ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிகளுக்குக் கொண்டாட்டம்"

    இங்கு கூத்தாடிகள் யார்? பண்பாட்டை சிதைப்பவர்களா?ஒற்றுமையை குறைத்து அதனால் தாம் இலாபம் அடைவார்களா?தமது சமுகத்தின் திறனை/பலத்தை/ஒற்றுமையை/வளத்தை வளர்க்க பாடுபடாவிட்டால் அதன் பின் இந்த எலி தலைகளால் யாருக்கு பிரயோசனம்?

    "ம‌ண்ணானாலும் திருச்செந்தூரில் ம‌ண்ணாவேன்
    ம‌ர‌மானாலும் ப‌ழ‌முதிர் சோலை ம‌ர‌மாவேன்
    க‌ருங்க‌ல்லானாலும் தணிகை ம‌லையில் க‌ல்லாவேன்
    ப‌னி பூவானாலும் ச‌ர‌வ‌ண‌ப்பொய்கை பூவ‌வேன்"

    என்று வாய்க்கு வாய் சொல்லும் இவர்கள் ஏன் இப்படி போனார்களோ?அர்த்தமே தெரியாமல் ஏன் வாழ்கிறார்களோ?

    "சிந்தனைஒளி" யில் நீங்கள் கூறியதையே ஒரு முறை திருப்ப பார்கிறேன்! ஆமமாம் அதை அப்படியே கிழே தருகிறேன்.இங்கு புலி என்பது காட்டு புலியை குறிக்கிறது.அரசியல் சார்பற்ற ஒன்று.

    "புலிக்கு வாலாக இருப்பதா? எலிக்கு தலையாக இருப்பதா? நீ முடிவு செய்!"

    இதில் தான் எமது எதிர்காலம் தங்கி உள்ளது.அது மட்டும் அல்ல,அதே "சிந்தனைஒளி" யில் இப்படியும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது!!

    "உண்மை சொல்லி கெட்டவர்களும் பொய் சொல்லி வாழ்ந்தவர்களும் இத்தரணியில் இல்லவே"

    ஆகவே நீங்கள்:"பிறரை மகிழ்வித்து -நீ மகிழ்!" என கூறுவதை விட எனக்கு ஒன்றும் தெரியா?

    ReplyDelete
  2. [கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]Tuesday, August 20, 2013

    அந்த காலத்தில் "யாழ் தேவியில்"இருப்பிடம்[seat] பிடிப்பதில் இருந்து யாழ் தேர்தல் வரை தமது ஒற்றுமை இன்மையை,போட்டிக்கு போட்டி-தலைவர் பதவிக்காக-பிரிந்து பிரிந்து-புதிசு புதிசாய்-கட்சி ஆரம்பிப்பதில் இருந்து-இது வெளிநாட்டிலும் நீங்கள் கூறியவாறு தொடர்கிறது-ஆலயம் உட்பட.இது யாருக்கு நன்மை?கிழக்கு தேர்தல் முடிவை பார்த்தாவது திருந்தினார்களா?ஒரு அமைப்புக்குள் அவர்கள் எல்லோரும் சேர்ந்து செயல் படும் போது அதன் தரமும் வலிமையும் கூடுமே தவிர குறையாது-சிதையாது.இதை இனிமேலாவது நம்புவார்களா?

    கடவுள் ஒருவரே என நம்பும் இவர்கள்,ஏன் தமக்குள்ள போட்டி பொறாமை??அரைகுறை நிர்வாகம்?

    "ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிகளுக்குக் கொண்டாட்டம்"

    இங்கு கூத்தாடிகள் யார்? பண்பாட்டை சிதைப்பவர்களா?ஒற்றுமையை குறைத்து அதனால் தாம் இலாபம் அடைபவர்களா?தமது சமுகத்தின் திறனை/பலத்தை/ஒற்றுமையை/வளத்தை வளர்க்க பாடுபடாவிட்டால் அதன் பின் இந்த எலி தலைகளால் யாருக்கு பிரயோசனம்?

    "ம‌ண்ணானாலும் திருச்செந்தூரில் ம‌ண்ணாவேன்
    ம‌ர‌மானாலும் ப‌ழ‌முதிர் சோலை ம‌ர‌மாவேன்
    க‌ருங்க‌ல்லானாலும் தணிகை ம‌லையில் க‌ல்லாவேன்
    ப‌னி பூவானாலும் ச‌ர‌வ‌ண‌ப்பொய்கை பூவ‌வேன்"

    என்று வாய்க்கு வாய் சொல்லும் இவர்கள் ஏன் இப்படி போனார்களோ?
    அர்த்தமே தெரியாமல் ஏன் வாழ்கிறார்களோ?

    "சிந்தனைஒளி" யில் நீங்கள் கூறியதையே ஒரு முறை திருப்ப பார்கிறேன்!ஆமாம் அதை அப்படியே கிழே தருகிறேன்.இங்கு புலி என்பது காட்டு புலியை குறிக்கிறது.அரசியல் சார்பு அற்றது.

    "புலிக்கு வாலாக இருப்பதா? எலிக்கு தலையாக இருப்பதா? நீ முடிவு செய்!"

    இதில் தான் எமது எதிர்காலம் தங்கி உள்ளது.அது மட்டும் அல்ல,அதே
    "சிந்தனைஒளி" யில் இப்படியும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது!!

    "உண்மை சொல்லி கெட்டவர்களும் பொய் சொல்லி வாழ்ந்தவர்களும் இத்தரணியில் இல்லவே"

    ஆகவே நீங்கள்:"பிறரை மகிழ்வித்து-நீ மகிழ்!"என கூறுவதை விட எனக்கு ஒன்றும் தெரியா?இதுவும் அதே "சிந்தனைஒளி" வார்த்தைகளே!!!

    ReplyDelete