தமிழரின் தோற்றுவாய்?[எங்கிருந்து தமிழர்?] பகுதி:82

[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

60,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆஃப்ரிக்காவில் தொடங்கிய மனித இனம் போன வழியெல்லாம் அவர்களின் ஜெனடிகல் ரேகைகளை விட்டுவிட்டு போயிருக்கிறது.ஆராய்ச்சியாளர்கள்,இந்த ப்ரொஜக்டிற்கு ஜெனொகிராபிக் ப்ரொஜெக்ட் (GP) [Genographic Project] என்று பெயரிட்டு இருக்கிறார்கள். மனிதர்களின் Y குரோமோசோம்களை அடிப் படையாக வைத்து இந்த வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது.இந்த வழித்தடங்கள் M என்கிற அடைமொழியோடு பொருத்தமான எண்ணினைக் கொண்டு அடையாளப்படுத்தப்படுகிறது.M என்பது Macro-haplogroup என்பதின் சுருக்கம். ஒவ்வொரு வழித்தடமும்,ஆஃப்ரிக்காவிலிருந்து தொடங்கி, வெவ்வேறு கண்டங்களுக்கு பயணிக்கிறது.ஸ்பென்சர் வெல்ஸ்[Spencer Wells] எழுதிய மனிதனின் பயணம் ஒரு மரபியல் சாகசப் பயணம் (“The Journey of Man A Genetic Odyssey) என்ற நூலில் இருந்து "இந்தியன் மார்க்கர்"[Indian marker] என அழைக்கப்படும் M 20,திராவிடர்களின் மூதாதையர் வழி  L(HAPLOGROUP –L) மரபுக் காட்டி,30,000 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்து இந்தியாவில் உள்ளது என்பதை அறியமுடிகிறது.இவர்கள் மத்திய கிழக்கு,தென் மேற்கு ஆசியாவில் இருந்து பலுசிஸ்தானின்[Baluchistan] ஊடாக சிந்து சம வெளி வந்து,அங்கு இருந்து இறுதியாக விந்திய மலைத்தொடரின்[Vindhya Range] தெற்கு பகுதிக்கு சென்றார்கள்.இந்த மலைத் தொடர் இந்தியாவைப் புவியியல் அடிப்படையில் வட இந்தியா, தென்னிந்தியா என இரண்டாகப் பிரிக்கின்றது.அங்குதான் திராவிடர்கள் வாழும் இன்றைய நாலு தென் மாகாணங்கள் அமைந்துள்ளன, இந்த முன்னைய மூதாதையரை/மனித இனத்தை முதனிலைத் திராவிடர் [proto-dravidian] என அழைக்கலாம்.இந்த மரபுக் காட்டி M 20 யைக் கொண்ட ஆதி மனிதக் கூட்டத்தின் இந்த முக்கிய இடம் பெயர்வு,தனக்கு முன்னால், இன்றைக்கு சுமார் 50,000 ஆண்டுகளுக்கு முன்னர் தென்னிந்தியா கரையோரம் இடம் பெயர்ந்த மரபுக் காட்டி M 130 கொண்ட  ஆதி மனிதக் கூட்டத்தினை எதிர்கொண்டது.இந்த முன்னைய கரையோர ஆதி மனிதனை முந்திய திராவிடன்[pre-dravidian] என அழைக்கலாம்.இந்த முதனிலைத் திராவிடர் கூட்டம்,முந்திய திராவிட கூட்டத்துடன் கலந்தன.இந்த கலப்பில் இருந்தே திராவிட வரலாறு பிறந்தது.மரபுக் காட்டி M 20 கூடுதலாக தெற்கு மக்களிடம் மட்டும் காணப்படுவதுடன் சிலவேளை 50 வீதத்திற்கும் அதிகமாகவும் இருக்கிறது.ஆனால் இந்தியாவிற்கு வெளியில் இங்கும் அங்கும்மாக மட்டுமே காணப்படுகிறது.அதே வேளையில் மரபுக் காட்டி M 130 இந்தியாவில் தெற்கில் மட்டுமே முதன்மையாக காணப்படுவதுடன் அதுவும் 5 வீதம்
அளவிலேயே காணப்படுகிறது.இது இந்த இரண்டு மரபுக் காட்டிகளின் கலப்பில் கரையோர மக்கள் கூட்டத்தின் ஆண் வழி பங்களிப்பு குறைவாக இருப்பதை சுட்டிக் காட்டுகிறது.ஆகவே தென் இந்தியா புகுந்த மரபுக் காட்டி M 20 கூட்டத்தினர்,அங்கு ஏற்கனவே குடியிருந்த மரபுக் காட்டி M 130 கூட்டத்தினரிடம் இருந்து தமக்கு மனைவிமாரை அல்லது ஒரு வாழ்க்கை துணைவியை பெற்றனர் என நாம் இலகுவாக ஊகிக்கலாம்.இவர்கள் கரையோர ஆண்களை பெரும்பாலும் துரத்தி,அல்லது கொலைசெய்து,அல்லது அவர்கள் இனப்பெருக்கம் செய்ய வாய்ப்பு கொடுக்காமல் இருந்து இருக்கலாம்.என நம்பப்படுகிறது.மேலும் விந்திய மலைத் தொடரின் தெற்கில் வாழ்ந்த இந்த முந்திய திராவிட குழு,முதனிலைத் திராவிடர் குழுவின் பேச்சை ஏற்றுக் கொண்டு இருக்கலாம்.அத்துடன் இமயமலை இந்தியா உபகண்டத்தை வட மத்திய ஆசியாவில் இருந்து பிரிக்கிறது.ஆகவே இது ஆதி தென் இந்தியா மக்களின் வடக்கிற்கான நடமாட்டத்தை கடினமாக்கிறது அதே போல சிந்து நதியும் தார் பாலைவனமும் மேற்கிற்கான இயற்கை தடையாக உள்ளது.அரக்கன் மலைத் தொடர்கள் இந்தியா உப கண்டத்திற்கும் தென் கிழக்கு ஆசியாவிற்குமான பயண முட்டுக் கட்டையாக உள்ளது.இதனால் ஏற்பட்ட நீண்ட கால தனிமை, நாளடைவில்,தனித்துவமான திராவிட இனத்திற்குரிய பண்புகள் தோன்ற வழிவகுத்தது எனலாம்.ஒவ்வொரு மனித குழுவினதும் வரலாறு அவர்கள் எங்காவது ஓரிடத்தில் இருந்து ஒரு கால கட்டத்தில் வந்தவர்கள் என்பதை காட்டுகிறது.அத்துடன் ஒவ்வொரு இனமும் தமக்கே உரித்தான தனித்
துவமானஅடையாளங்களை தன்னகத்தே கொண்டுள்ளன.கலை,கலாச்சாரம்,பண்பாடு இவை யாவற்றிற்கும் மேலாக மொழி என்பது ஓர் இனத்தின் முக்கிய அடையாளமாகும்.ஆனால் சிலவேளை ஒரு இன குழு தாம் சேர்ந்த மற்றும் ஒரு மேலாதிக்க மக்கள் குழு ஒன்றின் மொழியை பேச முயலலாம்.அது கால போக்கில் தமது மொழியை மறக்க ஏதுவாகலாம்.அப்படி அவர்கள் வேற்று மொழியை பேசினாலும்,இன்னும் தாம் ஒரு தனி இனம் என்றே நம்புகிறார்கள்.இதனால் இப்ப உலகில் 10,500 இனக்குழுக்கள் இருப்பினும் ஆக 6700 மொழிகள் மாத்திரமே உண்டு. ஒவ்வொரு முறையும் ஒரு மனித கூட்டம் இடம் பெயரும் போது,அங்கு முன்னமே வாழ்ந்து கொண்டு இருக்கின்ற குடிமக்களுடன் திருமணம் செய்து கொள்வதும் அதே நேரத்தில் அவைகளுக்கு இடையில் முரண்பாடு நிகழ்வதும் வழமை என வரலாறு காட்டுகிறது.இதனால் வெற்றி கொண்டவர்கள் சண்டையால் மேலாதிக்கம் கொள்வதும் பின் நாளடைவில் பெருபாலான வேளைகளில் ஒற்றுமையாகி ஒன்றாவதும் உண்டு.இதனால் படிப்படியாக பழங்குடி யினரும் புது குடியினரும் ஒரு குடியினராக மாறுகின்றனர். இப்படித்தான் மரபுக் காட்டி எம் இருபதும்[M 20] எம் நூற்றி முப்பதும்[M 130] ஒன்றாகி இன்றைய திராவிட இனம் தோன்றியது எனலாம்.ஆஃப்ரிக்காவில் இருந்து ஆசியா விற்கும் பின் ஐரோப்பாவிற்குமான இடம் பெயர்வு பல தடவை நடந்தன.மேலும் அவர்கள் ஆஃப்ரிக்காவில் இருந்து வெளியேயும் வெளியே இருந்து ஆஃப்ரிக்காவிற்கும் அலைந்தனர்.இப்படி நூற்றாண்டுகளுக்கும்,ஆயிரமாண்டு களுக்கும் மேலாக பலதரப் பட்ட மக்கள் கூட்டம் அங்கும் இங்கும்மாக அலைந்தனர்.இன்று ஐரோப்பாவில் வாழும் மக்களும்,இன்று ஆஃப்ரிக்காவில் வாழும் மக்களும் ஒரே மாதிரியான மரபணுக்களின் தொகுப்பை வைத்திருக்க மாட்டார்கள்.அத்துடன் இருவருமே முந்தைய அல்லது மூல மனிதர்களும் அல்ல.மேலும் இன்று ஆஃப்ரிக்காவில் வாழும் மக்கள் முந்தைய அல்லது மூல மனித குடும்பத்தின் மரபணுக்களின் தொகுப்பை வைத்திருக்க மாட்டார்கள். மக்கள் கூட்டம் மாற்றம் அடைவது போல,மரபணுக்களும் மாற்றம் அடைகின்றன.ஒவ்வொரு தனிப்பட்டவரின் மரபணுக்கள் தனித்துவமானவை.எந்த இரு தனிப்படவர்களின் டிஎன்ஏ வரிசை,அவர்களின் மூதாதையார் உலகின் எந்த ஒரு பகுதியில் இருந்து வந்திருந்தாலும்,கிட்டத்தட்ட 99.6 வீதம் ஒரே மாதிரியானவை.இரு தனிப்பட்டவர்களின் தனித்துவமான குறிப்பிட்ட அந்த வித்தியாசங்களில் 10 வீதம் தெரிந்தாலே அவர்கள் எந்த இன குழுவை சேர்ந்தவர்கள் என நாம் இன்று கணித்து சொல்ல முடியும்.



திராவிடன் என்றால் என்ன?இது ஒரு பண்பாடா?,மொழியியல் குடும்பமா?
அல்லது  ஒரு இனமா?இது எங்கு தோன்றியது?பிறைச் சந்திரன் வடிவில் அமைந்த வளமான நிலத்திலா[Fertile Crescent]? அல்லது தென் இந்தியா விலா? எப்பொழுது தோன்றியது? 30,000 ஆண்டுகளுக்கு முன்பா,10,000 ஆண்டுகளுக்கு முன்பா அல்லது 4,000 ஆண்டு களுக்கு முன்பா?இன்னும் திராவிடர்களின் தோற்றுவாய் ஒரு குழுப்பமான,சிக்கலான ஒன்றாகவே வரலாற் றாசிரியர்களுக்கு இருக்கிறது.இந்தியாவின் பழமையான குடிகளின் வழித்தோன்றல்களே திராவிடர்கள் என சில அறிஞர்கள் நம்புகிறார்கள்.சுமேரியனுக்கும் திராவிடனுக்கும் இடையில் உள்ள ஒற்றுமையின் அடிப்படையில் சில அறிஞர்கள் திராவிடர்கள் மேற்கு ஆசியாவில் இருந்து பலுசிஸ்தானின் ஊடாக இந்தியாவிற்கு வந்தவர்கள் என வாதாடுகின்றனர்.பாகிஸ்தானின்,பலூச்சிஸ்தான் மாகாணத்தில் இன்று பெருமளவில் புழங்கி வரும் பராஹவி மொழி (பிரஹுயி/Brahui language ] ஒரு திராவிட மொழி என்பதை கவனத்தில் கொள்க.மேலும் கிறிஸ்துவுக்கு முன்பே,தென் இந்தியா  திராவிடர்கள் தமக்கு என ஒரு தனித்துவமான பண்பாட்டையும் நாகரிகத்தையும் கொண்டு இருந்ததுடன்,அவர்கள் மிகவும் பலம் வாய்ந்த அரசையும் கொண்டிருந்தார்கள்.சில திராவிட அரசர்கள் செல்வாக்கு மிக்க வெற்றிகரமான வர்த்தகத்தை முதலில் மேற்கு ஆசியாவுடனும் எகிப்துடனும் பின் கிரேக்கம்,ரோமனுடனும் வைத்திருந்தார்கள்.இப்படி வர்த்தகம் வைத்திருந்தவர்கள் குறிப்பாக,சேர, சோழ, பாண்டிய என்னும் தமிழ் மூவேந்தர்கள் மற்றும் பல்லவ பேரரசுகள்[ கி.பி. 250 முதல் கி.பி. 850 வரை சுமார் அறுநூற்று ஐம்பது ஆண்டுகள் தமிழகத்தில் நிலைத்து ஆட்சி புரிந்தவர்கள்],தெலுங்கு பேசும் நாயக்கர் ஆட்சியாளர்கள்,கலிங்கர்[கலிங்க நாடு.தற்போதைய ஆந்திராவின் வடபகுதியையும்,ஒரிசாவின் தென்பகுதியையும் கொண்ட நாடு.], மகாராஷ்டிரா [மராட்டி,இவர்கள் கருநாடகத்தையும் ஆந்திராவையும் உள்ளடக்கி மகாராட்டிரத்தையும் ஆட்சி செய்தனர்.] ஆகும்.தமிழ் மன்னன் பாண்டியர்களுடைய காலம் கி.மு ஆறாம் நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே தொடங்கு வதாகச் சொல்லப்படுகின்றது.பாண்டிய நாடு கல்வியிலும்,வணிகத்திலும் சிறந்து விளங்கியது.இவர்கள் அக் காலத்தின் பேரரசுகளாகிய கிரேக்க,ரோமப் பேரரசுகளுடன் வணிகத் தொடர்பு கொண்டிருந்தனர்.ஆரம்பகால தமிழர் கடல் வணிகம் என்பது இந்தோனேசியத் தீவுகளில் இருந்து தமிழகம் வழியாக பாரசீக வளைகுடா வரையில் கடற்கரை ஓரமாக மட்டுமே நடந்து வந்தது.பின்னரே அது நடுக்கடல் வணிகமாக பரிணமித்தது.அதன் பின்னரே அது மேற்கே எகிப்துக்கும்,ரோமுக்கும் கிழக்கே சீனா வரையிலும் பரவியது.இந்தோ ஆரியன் இந்தியாவிற்கு வருவதற்கு முன்,திராவிட மொழி  இந்தியா முழுவதும் பரவலாக பேசப்பட்டதுடன் அதன் ஆதிக்கம் தெற்கிலும் வடக்கிலும் அதிகாரம் செலுத்தியது என கருதுவதற்கு நல்ல ஆதாரங்கள் உண்டு.திராவிட பண்பாடும் முதனிலைத் திராவிட மொழியும் பிறைச் சந்திரன் வடிவில் அமைந்த வளமான நிலத்தின் கிழக்கு பகுதியில் தோன்றியது என்பது எமக்கு கிடைக்கும் சுமேரிய இலக்கியங்கள் அறிவுறுத்துகின்றன.ஆகவே இது திராவிடரின் ஆரம்ப நாடாக இருக்கலாம் எனவும்,திராவிட மொழி அங்கு 10,000 ஆண்டுகளுக்கு முன் பேசியிருக்கலாம் எனவும் விவாதிக்கப்படுகிறது .இந்த கருதுகோள் திராவிடர்கள்,ஆரியர்கள் போலவே வெளியில் இருந்து ஆனால் ஆரியர்களுக்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பிரவேசித்தவர்கள் என சுட்டிக் காட்டுவதுடன்,தென் இந்தியா திராவிடர்களின் ஆரம்ப இடம்  என்பதை கேள்விக் குறியாக்கிறது.இது சாத்தியமாகும் பட்சத்தில்,மத்திய ஆசியாவில் இருந்து பின்னர்  இந்தியா குடியேறியவர்கள் எப்படி திராவிட மொழியை பின்பற்றினார்கள் என்ற கேள்வியும் எழுகிறது.மனிதனின் குடியேற்றம் மிகவும் பழமையானது.அவன் 50,000 ஆண்டுகளுக்கு முன்பே எல்லா கண்டங்களிலும் வாழத் தொடங்கிவிட்டான்.மனிதன் வெவ்வேறு இடங்களில் விலகி வெவ்வேறு சூழ் நிலையில் தனிமை படுத்தப்பட்ட நிலையில் தொடர்ந்து நீண்ட காலம் வாழ்ந்தது அவனுக்கு இன அம்சங்களை கொடுத்தது. நான் இந்த தொகுப்பை எல்லாம் சிறந்த அறிஞர்களுக்கும் ஒரு வேண்டு கோளுடன் நிறைவு செய்கின்றேன்.அதாவது இந்த உயர் நோக்கமுள்ள ஆய்வில் எல்லோரும் ஒன்று சேர்ந்து தமிழ் மக்களினதும் தமிழ் மொழியினதும் மகிமையை , பெருஞ்சிறப்பை,புகழை சான்றுகளுடன் ஒருமித்த கருத்துடன் உலகத்திற்கு வெளி கொண்டு வரும்மாறு கேட்டுக்கொள்கிறேன்.
(முற்றும்)-நன்றி 

ஆரம்பத்திலிருந்து வாசிக்க→ Theebam.com: தமிழரின் தோற்றுவாய்?[எங்கிருந்து தமிழர்?]பகுதி:01

0 comments:

Post a Comment