கனடாவிலிருந்து.....இளையோரும்பெற்றோரும்



ஒரு கடிதம் 
                            19.09.2019
அன்புள்ள அப்புவுக்கு                            
நான் நலம்.அதுபோல் உங்கள் சுகமும் ஆகுக!
உங்கள் கடிதம் கிடைத்தது.வாசித்து யாவும் அறிந்தேன். 

கனடாவில் எமது பண்பாட்டுக் கோலங்களும் பழக்கவழக்கங்களும் எந்தளவில் என்பதனை நீங்கள் அறியும் ஆவலில் உள்ளதாக உங்கள் கடிதம் மூலம் உணர்கிறேன்.

அப்பு,எமது இப்போதைய பண்பாட்டுக் கோலங்களை அப்போது இருந்தவர்ருடன் ஒப்பிட்டுப் பார்த்தால் நிலைமை தலைகீழாக மாறியிருப்பதனையே காணலாம்.இங்கு பல்வேறு பண்பாட்டு மக்களோடு சேர்ந்து வாழ்வதால் அவற்றின் தாக்கம் இளைய சமுதாயத்தை பெரிதும் மாற்றிக்கொண்டு இருக்கிறது.அடுத்தவரிடமிருந்து நல்லவற்றினை பெற்றுக்கொண்டால் நாம் சந்தோசமடையலாம் .ஆனால் நடப்பதோ மறுபக்கம்.குறிப்பாக திருமண வாழ்வினை  தவறான புரிந்துணர்வுகளுடன் கனடிய சட்டங்களை அவசரப்பட்டு தவறான  வழிகளை கடைப்பிடிக்கின்றனர்.

அன்று இருந்த கூட்டு வாழ்க்கை முறை பெரியோரின் அனுபவ ஆலோசனைகளை செவிமடுப்பது இளையோரின் நிலையான திருமண வாழ்வுக்கு வழிவகுத்தது. இன்று அப்படியான செவிமடுத்தல் எந்த ஒரு உறவு முறைகளுக்குமிடையே இருப்பது என்பது முயற்கொம்பாகிவிட்டது.

அதேவேளை,இன்றோ இளையோர் ஆசையுடன் தம் பெற்றோரை கனடாவுக்கு ஸ்பொன்சரில் அழைத்தாலும்பெற்றோர்கள் கனடா வந்து சிலமாதங்களில் கனடாவை படித்துவிடுகிறார்கள். அதன் பலனாக எங்கள் வரிப்பணத்திலிருந்து கிடைக்கும் சமுக நல உதவிப்பணத்தினை பெற்றுக்கொண்டுஎம்மோடு இருப்பது தங்களுக்கு இடைஞ்சல் என்று நொண்டிச்சாட்டு கூறிக்கொண்டு தனி குடித்தனம் சென்றுவிடுகிறார்கள். காலம் காலமாக  கூடி வாழ்ந்த இப்பெரியோரே இப்படி என்றால், இங்கு வளர்ந்த இளையோரை நாம் எப்படிக் குறைகூற முடியும்.

இவர்கள் ஒரு வகையினர்.

இன்னொரு வகையில் பெற்றோர்கள் இங்கு வரவழைக்கபட்ட பின்னர் அவர்கள் பெயரில் சமுகநல உதவி பெறும்பொருட்டு    பிள்ளைகளால் பராமரிக்கமுடியாது என சமுகநல உதவி நிலையத்தில் காட்டி அவ்வுதவிப் பணத்தையும் பெற்றுக்கொண்டு பெற்றோர் சிறைக்கைதிகள் போல் நடாத்தப்படும் அவலங்களும் கனடிய மண்ணில் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

மேலும்,ஊரில் இருக்கும் காலத்தில் பிள்ளைகள் பாடசாலைக்கோ அல்லது வேலைக்கோ செல்வதன்முன் தேனீர்,உணவு அவர்களுக்கு வழங்கி வீடு   வரும்வரையில் காத்திருந்து கூடியிருந்து உணவு உண்டு வாழ்ந்த பெற்றோர்கள்இங்கு பிள்ளைகளுடன் வாழ்ந்தாலும்அவர்கள் தங்கள் தேவைகளுக்கு மட்டும் பிள்ளைகளை  பாவித்துக்கொண்டு அவர்கள் வேலைக்கு போகமுன் பிள்ளைகள் சமைத்து வைத்தவற்றை உண்டு களித்துபிள்ளைகளுக்கோபேரப்பிள்ளைகளுக்கோ எந்தவித ஒத்தாசையும் இல்லாது தொலைக்காட்சி அல்லது வானொலி நிகழ்சிகளுடன் காலத்தினை கடத்தினாலும் பிள்ளைகள் அவர்களை எக்குறையுமின்றி கவனித்து வருகிறார்கள். இவர்கள் ஒரு வகையினர். இங்கு இவர்களின் பிள்ளைகள் பாராட்டப் படவேண்டியவர்களாக விளங்குகிறார்கள்.


அப்பு,பெற்றோரின் ஸ்பொன்சர் நிறுத்தம் பற்றி வினவி இருந்தீர்கள்.வந்தவர் எல்லோரும் உழைக்கும் மக்களின் வரிப்பணத்தில்வாழ்ந்துகொண்டிருந்தால்,எதிர்காலத்தில் வாழப்போவோரின் நிலை என்னாவது?   

இவ் வயது முதிர்ந்த பெற்றோர்கள் பெரும்பான்மையோர் ஊரில் வாழ்ந்த காலத்தில் நெருப்புக் காய்ச்சல் வந்தாலும் வைத்தியரிடம் செல்லாதவர்கள்.

இங்கு இவர்களுக்கு ஒரு தும்மல் தும்மினால் போதும் குழறியடித்துக்கொண்டு வேலையால் வந்த பிள்ளை என்றும் பாராது(பக்கத்து தெருவில் வைத்தியர் இருந்தாலும் பிள்ளை வந்துதான் காரில் ஏற்றிச் செல்லவேண்டும்). அவர்கள் காரில் ஏறிச் சென்று வைத்தியர் கண்டுபிடியாத வருத்தங்களுக்கெல்லாம் சோதனை செய்வித்து ஒரு சாக்கு மருந்துகளுடன் வந்து இறங்குவார்கள். இப்படியே இவர்கள் செலவு அளவுகணக்கில்லாமல் போய்விட்டது.  

அப்பு,கருணை அடிப்படையில் பெற்றோர்களை அழைக்கும் உரிமைகளை தந்து கடைசியில் சமூக நல உதவியும்,மருந்துச்செலவும் என பெரும் பணச் செலவினையே கனடிய அரசு சந்தித்ததனாலேயே அவர்களை ஸ்பொன்சர் செய்யும் சலுகையினை அது நிறுத்திக்கொண்டது. 
இதேபோன்று, நாம் வந்த காலத்தில் இருந்த சட்டத்தின்படி நான் கல்யாணம் செய்யப்போகும் பெண்ணை 'ஸ்பொன்சர்' செய்து கனடாவுக்கு நிரந்தர வதிவு உரிமையுடன் கூப்பிடலாம் என இருந்தது. இச் சலுகை இருவகையில் இங்கு மீறப்பட்டது.
-முதலாவது- தமது உறவுப் பெண்களை கல்யாணத்திற்கான ஸ்பொன்சர் என்ற பெயரில் அழைத்து இங்கு ஏற்கனவே பேசிமுடிக்கப்பட்ட வேறு ஒருவருக்கு மணமுடித்து கொடுப்பது. சிலர் பெருந்தொகைப் பணம் வேண்டியும் செய்தனர்.
-இரண்டாவது- சிலரை நம்பி ஸ்பொன்சர் செய்து அழைக்க , வந்தவர் , இங்கு இறங்கிய விமான நிலையத்திலிருந்து  ஏற்கனவே காதலித்தவருடன்  ஓட்டம் எடுத்து மறைந்துவிடுவார். இந் நம்பிக்கைத் துரோகத்தினைக்  கூடுதலாகப் பெண்களே செய்தனர்.
இதனாலேயே இன்று கல்யாண ஆவணங்களுடன் திருமணம் உறுதிசெய்யப்பட்டு , ஸ்பான்சர் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
இதன் பின்னரும் பெண்கள் இங்குவந்து சில வருடங்களில் , விவாகப் பிரிவுக்கு முயற்சிப்பது எதிர்காலத்தில் கனடிய அரசு கடும் போக்கினைக் கடைப்பிடித்து கணவன் ,மனைவி ஸ்பான்சர் இனையும் நிறுத்தக்கூடும் என அச்சம் தெரிவிக்கப்படுகிறது.
நல்லவை நடப்பதுவும் , இழப்பதுவும் எங்கள் கைகளிலும் தங்கியுள்ளது.

அப்புஇன்னும் நிறைய உங்களுக்கு எழுதவேண்டும் போலுள்ளது. தொடர்ந்து அடுத்தமுறை எழுதுகிறேன்.உங்கள் சுகத்தையும் தேவைகளையும் எழுதுங்கள்.வணக்கம்.

இப்படிக்கு
அன்பின் மகன்

செ.மனுவேந்தன்

2 comments:

  1. எங்கட (90 )நைன்டியல் உங்கை வந்து ஆடுற ஆட்டமெல்லாத்தையும் நைசாய் சொல்லி இருக்கிறியள்.

    ReplyDelete
  2. vinothiny pathmanathan dkSaturday, August 25, 2012

    உண்மை தான் .வயதான பெற்றோர்களை முதியோர் இல்லங்களில் கொண்டு போய் தள்ளி விடுவதாக இளைய தலை முறையினர் மீது தான் அவதூறு பேசப்பட்டு வந்தது. இப்போ காலத்துக்கேற்ப எல்லோரும் மாறி வரும் போது அவர்களும் தங்கள் பணத்தில் தாங்கள் சுதந்திரமாக வாழ பிரியப்படுகிறார்கள் போல.

    ReplyDelete