அவள் ஏன் அப்படி?......கனடாவிலிருந்து ஒரு கடிதம்

                               26.10.2019
                                  
அன்புள்ள அப்புவுக்கு ,
 நாம் நலம்.அதுபோல் உங்கள் சுகமும் ஆகுக!                             
உங்கள் கடிதம் கிடைத்தது.உங்கள் சுகம் அறிந்து மகிழ்ச்சி.

அப்பு,நீங்கள்  கடிதத்தில் குறிப்பிட்டதுபோல் இங்கு அப்படி நடக்கவில்லை.எங்கட சமுதாயம் ஒரு வீட்டில ஒரு சம்பவம் நடந்தால் அதற்கு காது வைத்து  மூக்கு வைத்து  கதைக்கிறதில கெட்டிக்காரர்.அதிலை இந்தப் பெம்பிளையள் ஒரு பெம்பிளையைப் பற்றி காது மூக்கு வைத்துக்   கதையை பரப்புவதில்  மகாகெட்டிக்காரராய் இருக்கினம்.

அப்பு  த்ரிஷா கனடாவில் கணவனுடன் குடியேறி நன்றாகத்தான் வாழ்ந்தாள்.அவள் கனடாவில் வாழ்ந்தாலும் ஊரில் இருந்தது போலவே வேறு ஆண்களிடமோ,பெண்களிடமோ பேச்சுக்களின்றி அமைதியாகவே வாழ்ந்தாள். ஆனால்கட்டினவனோ கனடிய வாழ்வில் முழுநேர தண்ணிக்காரனாய் மாறிவிட்டான். அவனது அட்டகாசம் வீட்டில் நண்பர்களையும் அழைத்து வந்து தண்ணியடித்து  ௬த்தாடும்  அளவுக்கு மோசமாகிவிட்டது. அவளும் பொறுக்குமளவுக்கு பொறுத்துவிட்டாள். இறுதியில் வீட்டை விட்டு வெளியேறிவிட்டாள்.

அப்பு,அவன்மட்டும் விவாகரத்து செய்துகொண்டு மறுகலியாணமும்  செய்துவிட்டான். அவள் மட்டும் செய்ய நினைக்கவே கூடாதாம். எப்படி இருக்கு எங்கள் சமுதாயத்தின் நியாயம்.தவறு செய்தவன் வாழப்போகிறான். தப்பே செய்யாத ஒரு அப்பாவிப் பெண் அவள் வாழக் ௬டாதாம். அவள் ஏன் தனியே வாழ வேண்டும். அவளைப்பற்றி கதை அளந்து திரியும் இந்த மனிதக்௬ட்டம்  தங்களைபோல் அவளுக்கும் வாழ ஆசை இருக்குமென்றோ,அவளும் ஒரு மனிதப் பிறவிதான் என்பதனையோ ஏன் சிந்திக்க மறுக்கிறது.

இதை எங்கட ஆட்கள் எலும்பில்லா நாக்கால் எப்படியெல்லாம் பேசிக்கொண்டார்கள் என்பது நானும் அறிந்தேன்.

அப்பு எங்கேயோ வாசித்த ஞாபகம்.ஒரு பெண்ணுக்கு ஒருத்தியை காரணமில்லாது பிடிக்கவில்லை என்றால் அந்த ஒருத்தி மிகவும் அழகுள்ளவளாக இருக்கும்.ஒரு ஆணுக்கு  ஒருத்தியை காரணமில்லாது பிடிக்கவில்லை என்றால் அந்த ஒருத்தி அவனை ஏறெடுத்தும் பார்க்காதவள் என்றே பொருள்.

அப்பு ,மனிதர்கள் ஒவொருவருக்கும் வெவ்வேறுவிதமான கருத்துக்கள், சிந்தனைகள், எண்ணங்கள் , விருப்புக்கள், வெறுப்புக்கள் இருந்தே கொள்ளும்.  ஒரேவிதமான உணர்வுகள் இன்னொருவருக்கு இருக்கவேண்டும் ,அவருடன்தான் நான் வாழவேண்டும் என்று நினைத்தால் உலகில் யாருமே திருமண வாழ்வில் இணைய முடியாது. ஏனெனில் அப்படி எவருமே ஒத்த இயல்புடையவர்கள் உலகில் இருக்கமாட்டார்கள். திரைப்படங்களில் காட்சிப்படுத்த முடியும்.ஆனால் நிஜ வாழ்வினில் கிடையவே கிடையாது.
அதுதான் அப்பு  ,புத்திசாலிகள் வாழ்ந்து கொண்டார்கள். மற்றவரெல்லாம் வாழ்வை வீணடித்தார்கள். என்று உங்கள் பாணியிலேயே இக்கதைக்கு முடிவு கூறுகிறேன்.

அப்பு,உங்கள் சுகத்தையும் தேவைகளையும் தொடர்ந்து எழுதுங்கள்.மீண்டும் அடுத்த மடலுடன் சிந்திப்போம்.

இப்படிக்கு

உங்கள் மகன்

செ.மனுவேந்தன் .

1 comments:

  1. உண்மையான செய்திகள்

    ReplyDelete