தமிழ் மொழி அழிந்துவிடுமா?



உலகிலே, பயன்பாட்டில் இல்லாத 25  மொழிகள் இன்னும் 50 வருடங்களில் அழிந்துவிடும் என்று உலக நிறுவனம் யுனஸ்கோ தெரிவித்துள்ளது. இதில் தமிழ் மொழி எட்டாவது இடத்தில் இருக்கின்றது என்பது ஒரு கவலைக்கிடமான விடயமாகும்.
அழியும்தான் என்பதற்கு கடந்த கால, நிகழ் கால மக்கள் நடவடிக்கைகள் பல மிகவும் சாதகமாக இருக்கின்றன.
தமிழ் செத்துக் கொண்டு இருப்பதாகக் கூறுவோர்  கண்டு மனம் கொதித்த பாரதி, அதைத் தன்  வாயால் சொல்ல விரும்பாது 'மெல்லத் தமிழ் இனிச் சாகும்' என்று அந்தப் பேதை உரைத்தான்' என்று வேறு ஒரு அறிவில்லாதவன் கூறுவதாகவே கூறினார். ஆனால், தமிழராகிய நாமே தமிழுக்கு நாளாந்தம் பாடை கட்டிக்கொன்டு இருக்கிறோம் என்பதுதான் உண்மை.
இதற்கு,
* மறை முகமாகத் திட்டம் இட்ட அரசிய நகர்வுகள்
* தமிழ் மக்களின் பொருளாதார பேராசை உந்தல்கள்
* தாழ்வு மனப்பான்மை உணர்வுகள்
* மேலை நாட்டு குடி பெயர்வு அபிலாசைகள்
* கலைத்துறையில் வெளியார் ஆக்கிரமிப்புகள்.
என்பன முக்கிய காரணிகள் ஆகும்.

தமிழ் நாட்டு அரசியல் சரித்திரத்தை உற்று நோக்குவோம்.
தமிழ், தமிழ் நாட்டில் அழிவதற்கு முக்கிய காரணம், தமிழை வளர்க்க, தமிழுக்கு முதல் இடம் கொடுக்க, தமிழை நேசிக்கும்  'தமிழர்' ஆட்சி செய்த காலப் பகுதி மிகவும் குறைவென்றே சொல்லலாம்.
தெலுங்கு, கன்னடம், மலையாள மாநிலங்களில் எந்த ஒரு தமிழனோ, அல்லது பிற மொழி பேசுபவனோ அரசுக் கதிரையில் உட்கார முடியாது; முடியவே முடியாது. ஆனால், தமிழ் நாட்டில் வேற்று மொழியினர்தான் எங்கும், எல்லாமே, எந்தத் துறையிலுமே, எப்போதுமே உயர்ந்து நிற்பது! (இந்த இயலாமைக்கு சொல்லித் தம்பட்டம் அடித்துக் கொள்வது  'வந்தாரை வரவேற்கும் தமிழ் நாடு' என்று)
மிகவும் முந்திய காலத்தில் இருந்து பாண்டிய தமிழ் மன்னர்கள் ஆண்டு வந்தாலும், மிகவும் நீண்ட காலமாக தமிழ் பேசிய  சோழர், சேரர் என்போரும் ஆண்டனர். தொடர்ந்து வேற்று மொழி பேசிய பல்லவர், கடம்பர், சாளுக்கியர், இஸ்லாமியர், விஜய நகரர், நாயக்கர், மராத்தியர், கடைசியில் ஆங்கிலேயர் என்று ஆண்டு கொண்டே வந்திருக்கின்றனர்.
உதாரணமாக, தமிழ் நாட்டு முதல் அமைச்சர்களின் பட்டியல் ஒன்றைப் பார்ப்போம்:
நாலு மொழிகளின் மாநிலம்; மதராஸ்:
1920 - சுப்பராயலு ரெட்டியார் - தெலுங்கர்
1921 - பனகல் ராஜா - தெலுங்கர்
1926  - டாக்டர் பி.சுப்பராயன் - தமிழ்
1930  - முனுசாமி நாயுடு - தெலுங்கர்
1932 - பொப்பிலி ராஜா - தெலுங்கர்
1936 - பி.டி. இராஜன் - தமிழ்
1937 - கே.வி.ரெட்டி - தெலுங்கர்
1937 -  ராஜாஜி - தமிழர் - இந்தியைத் திணித்தவர்.
1939 - ஒருவரும் இல்லை - போர் காலம்
1946  - டி.பிரகாசம் - தெலுங்கர்
1947 -  பி.ராமசாமி ரெட்டியார் - தெலுங்கர்
1949  -  பி.எஸ்.குமாரசாமிராஜா- தெலுங்கர்
1952  - ராஜாஜி - தமிழர் - இந்தி விசுவாசி

மொழி மாநிலமாகப் பிரிக்கப்பட்ட பின்னர், தமிழ் நாடு:
1954  - கு.காமராஜர் - தமிழர்
1963  -  எம்.பக்தவத்சலம் - தமிழர்
1967 - சி.என்.அண்ணாதுரை - தமிழர்
1969 -1971 , 1989 , 1996  - 2006  -  11  -  மு. கருணாநிதி - தெலுங்கர்
1977 -.80 , 80 - 84 , 85 - 87  - எம்.ஜி.ராமச்சந்திரன் - மலையாளி
1988 - ஒரு மாதம் - ஜானகி - தமிழர்
1901 - 06 , 2011  - 16  - ஜெயலலிதா  - கன்னடர்
இப்போது - பழனிச்சாமி - தமிழர்

இதைவிட, முக்கிய அரசியல்வாதிகள் பலர் தமிழர் அல்லாதவர்கள்! ஈவேரா, வைக்கோ, வியகாந்த் என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.
இங்குள்ள தமிழ் பேசும் அரசியல் வாதிகள் எல்லாம், 'திராவிடம்; என்றொரு மகுடியைப் பாவித்து தமிழ் மக்களை தமிழை மறக்கப் பண்ணி, நம்மை முன்பு ஆண்டவர்களின் கைகளில் தமிழ் நாட்டினை  திரும்பவும் ஒப்படைப்பதில்தான் மறைமுகமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மற்றைய 'திராவிட' மாநிலங்களில் இந்தத் திராவிட கோஷமும் இல்லை; திராவிடம் என்று கடசிகளும் இல்லை.

ஆங்கிலம் படித்தால்தான் வேலை வாய்ப்பு, மரியாதை, கவுரவம், பொருளாதார உயர்ச்சி என்று ஆங்கிலேயன் விதைத்த விதை மனோதத்துவ ரீதியாக தமிழன் மனதில் ஆழமாகப் படிந்து விட்டது. தமிழில் படித்தவன் முன்னேறவே முடியாது என்ற கருத்து மனதில் ஊறி இருப்பதால் தமிழ் படிப்பதையோ, தமிழில் படிப்பதையோ தமிழன் தவிர்த்துக் கொண்டே இருக்கிறான்.

தமிழ் அழிவதற்கு இன்னொரு காரணி, பிறநாட்டு மோகம். எல்லோருமே அமெரிக்காவில் போய் வேலை எடுத்து இருந்துவிட வேண்டும் என்ற ஆசையினால், ஆங்கிலத்தில் மட்டுமே தங்கள்  பிள்ளைகளை பாலர் வகுப்பில் இருந்து பட்டப்  படிப்பு வரை பாடம் புகட்டுகின்றார்கள். தமிழில் கதைத்தால் குற்றப் பணம் செலுத்த வேண்டி இருக்கின்றது. வீட்டில் பிள்ளைகள் தமிழில் ஒருசொல் தானும் கதைக்காது இருக்க மிகவும் ஜாக்கிரதையோடு பெற்றோர்கள் கவனிக்கிறார்கள். அம்மா, அப்பா இப்போது மம்மி, டாட்டி என்றுதான் வயசு போனவர்களின் வாயில் இருந்துகூடி வருகின்றது.

இதற்கு எதுவாக, அரசியல் வாதிகள், பணம் படைத்தவர்கள் எல்லோரும் ஆங்கிலக் கல்லூரிகளை எங்கும் அமைத்துப் பணம் சம்பாதிக்கிறார்கள்.

இந்த ஆங்கில மோகம் தலை விரித்தாட, மிகவும்  'டிப் டொப்' ஆக உடுத்த 'ஆங்கிலப் பிள்ளைகள் 'ஆங்கிலப் பள்ளிகள் போய், ஆங்கிலத்தில் மட்டும் படித்து, 'ஐ டோன்ட் நோ ரமில்' என்று கவுரவமாகச் சொல்ல, இதை பார்க்கும் சாதா தமிழ் பள்ளி மாணவர்கள்

வெட்கப் பட்டு, தாழ்வு மனப்பான்மைக்குள் தள்ளப்படுகிறார்கள். இதனால் தமிழ் பள்ளி செல்லும் மாணவர்கள் குறைவதால், இப்பள்ளிகளுக்கெல்லாம் மூடு விழா செய்யவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன.

அரசியவாதிகள், தங்கள் பண வருவாய் கருதி, தமிழைத் கட்டாய போதிக்கும் மொழியாக அறிவிக்கவே மாட்டார்கள்.

மற்றைய மாநிலங்களில் நிலைமை இவ்வளவுக்கு கேவலமாக இல்லை. அவர்கள் தங்கள் மொழிக்கு மட்டும் தான், தங்கள் இனத்தவர்களுக்கு மட்டுதான் முதல் இடம் அளிக்கிறார்கள்.

மேலும், இடம் பெயர்ந்து மேலை நாடுகளில் வசிக்கும் தலைமுறையின் நிலைமை கேட்கவே வேண்டாம். அங்கு சென்ற முதல் தலை முறையினர் தமிழ் பேசுவார்கள். (தங்களுக்கு ஆங்கிலத்தில் கதைப்பதுதான் சுலபம் என்று சில வைபவங்களில் ஆங்கிலத்தில் பேச முனையும் சில பெருசுகளைத் தவிர). இரண்டாம் தலைமுறையினர் இவர்களுடன் தமிழும், பிள்ளைகளுடன் தமிழும், சில வேளை அந்த நாட்டு மொழியும் கதைப்பார்கள். பிள்ளைகள் தங்களுக்குள் அந்நாட்டு மொழியில் கதைப்பார்கள். அவர்களின் பிள்ளைகளோ எனில் தமிழ் என்று ஒரு மொழி இருப்பதாகக் கண்டு கொள்ளவே மாடடார்கள்.

ஆகவே, வெளிநாடுகளில், தமிழ் சாக இன்னும் 30 வருடம் போதும். தென் ஆபிரிக்கா, பிஜி, மொரீசியஸ் நாட்டுத் தமிழுக்கு நடந்த கதிதான் இங்குள்ள தமிழுக்கும் நடக்கும்.

இந்தியாவில் 17 ஆம் நூற்றாண்டில் உருவான இந்தி மொழி 44 % தினரின் தாய் மொழி; இப்பொழுது பல மொழிகளை அழித்து 57 % தினரிடம் பரப்பப் பட்டுள்ளது. வெகு விரைவில் தமிழையும் காவு கொண்டு விடும்.பிஜி முதலிய வெளி இடங்களில் தமிழை ஒழித்து இந்தியை புகித்தியது போல தமிழ் நாட்டிலும் அது நடக்கும்.

கலைத்துறையில்கூட, உதாரணமாக சினிமாத்துறையில், நடிகர்கள், நடிகைகள், பாடகர்கள் எல்லாமே பிற மொழியினர்தான் பிரகாசித்துக்கொண்டு காலம் காலமாக இருக்கிறார்கள். போட்டிகளில் அவர்களுடன் நம்மவர்கள் முகம் கொடுக்க முடியாமல் இருக்கிறார்கள். (இயலாமைக்கு மறு பெயர் ' வந்தாரை .......)
முடிவில், தமிழ்நாட்டில் தமிழருக்கு ஆங்கிலம் முதல் மொழியாகவும், இந்தி இரண்டாவது மொழியாகவும், தமிழ் ஓர் அந்நிய மொழியாகவும் மாறும் காலம் வெகு விரைவில் இல்லை.
புலம் பெயர் நாடுகளில் தமிழ் பிள்ளைகள் அந்த, அந்த நாட்டு மொழியை மட்டுமே அறிந்து இருப்பார்கள் என்பதும் உண்மை.


ஆகவே, நாமும் அழிய, நம்மோடு நம் தமிழும் அழியும் என்ற கவலைக்கிடமான உண்மையை ஒத்துக்க கொண்டுதான் ஆகவேண்டும்.

📕 📖 📗 📘 📙 🕮 📚 📚 🕮 📙 📘 📗 📖 📕

4 comments:

  1. நாங்களே தாய் மொழியின் அழிவுக்குச் சூத்திர தாரிகளாக இருந்துகொண்டு , அரசுகளைக் குறைகூறி என்ன பயன்?

    ReplyDelete
  2. Nageswary UruthirasingamSunday, February 16, 2020

    உலகில் உள்ள மொழிகளில் எழுத்து மொழி பேச்சு மொழி என்று இரண்டு வகையிலும் சிறப்பு பெற்றது தமிழ் மொழி உலகில் உள்ள மொழிகளில் தமிழ் 7 ம் இடத்தில் உள்ளது என்று உள்ளது. பல வகையான சிறப்பு பெற்ற தமிழ் மொழியை அழியவிட்டது ஒவ்வொரு தனி மனிதனுடைய குற்றமும் ஆகும்.

    ReplyDelete
  3. Kandiah Manoharan ManoharSunday, February 16, 2020

    அழியாது. தமிழ் அழியாது.உலகம் உள்ள வரை வாழும் மொழி .
    செம்மொழி அந்தஸ்து தமிழுக்கு
    இன்னும் ஏன் தடுமாற்றம்?
    எங்கயடி போறாய் புல்லு பிடுங்கவே ?
    அது கிராமிய தமிழ்
    கம்பராமாயணத்தில் இலக்கிய தமிழ் விளையாடும். அயோத்தியில் இராமர் முடிசூட்டு விழா விமர்சனம் இவ்வாறு
    கட்டிய வாழை மரங்கள் பெண்களின் தொடையாம்
    மகர தோரண கும்பங்கள் குமரிகளின் முலையாம்
    தமிழ் சாகுமே ?÷?÷

    ReplyDelete
  4. Pathmanathan VinySunday, February 16, 2020

    அருமையான ஆக்கம் அண்ணா.ஆங்கிலம் பேசினால் எழுதினால் தான் தான் கௌரவம் என எண்ணுபவர்கள்
    இருக்கும் வரை தமிழ் அழிந்து போவதில் வியப்பில்லையே.
    வேதனையானதொரு
    விடயம்.உண்மையில் மனம் வெதும்புகிறது.
    என்னத்தை எழுத....

    ReplyDelete