உழைப்பவன் பாடு கொண்டாட்டம்


ஒருமுறை புத்தரிடம் ஒரு  குடியானவன்  ஓடிவந்தான்.
  அவரை வணங்கியவாறே ''புத்தரே , என் தந்தை இறக்கப்போகிறார். அவர் சொர்க்கலோகம் செல்ல வழி என்ன? '' எனக் கேட்டான்.
புன்னகைத்த புத்தர் ,அவனிடம் ஒரு பானையில்  நெய்யும் ,மறுபானையில்  கல்லும் கொண்டு வருமாறு பணித்தார். அவனும் ஓடிச் சென்று அவ்வாறே கொண்டுவந்தான்.

கல்லும், நெய்யும் சாடிகளுடன்  பக்கத்தில் இருந்த ஆறினுள் இடச் சொன்னார். பின் ஒரு கம்பினை அவனிடம் கொடுத்து , அக் கம்பினால்
'' நெய்யே கீழே போ, கல்லே மேலே வா '' என திரும்பத் திரும்ப பானையை அடித்து உடைத்துக் கூறும்படி கூறினார்.
நகைத்த குடியானவனோ '' புத்தரே! தண்ணீரில்  நெய் மேலேதான் போகும், கல் கீழே தான் போகும் அதை கூறிக் கூறி  எப்படி நாம் கூறி வேறு  திசையில்  போகச்செய்ய முடியும்.'' என வினவினான்.
புத்தரும் அமைதியாகக் கூறினார், '  அன்பரே  ,அதேபோலத்தான் இறந்தவரின் ஆத்மாவும் அது செல்லவேண்டிய இடத்துக்குத்தான் போகும். எவராலும் அதன் பாதையை மாற்றிவிட முடியாது.

இப்படியிருக்க  நாள் ஒன்றுக்கு உலகில் சராசரி 1000:08  வீதம் அதாவது 151,600 மக்கள்  இறந்துகொண்டிருக்க , எம்மத்தியில் ஒருவர் இறந்துவிட்டால் மட்டும்  ,   மரணக்கிரியை , எட்டுக்கிரியை, மாத மாசிகம் , அந்தியேட்டி , வருடாந்தம்- திவசம் மேலும் கோவிலில் மோட்ச பூசை /அர்ச்சனை என்றெல்லாம்  சைவ குருமாருக்கும்  , பிராமண குருமாருக்கும்  வாரி வழங்கினால் தான் இறந்தவர் ஆத்மா சாந்தியடைந்து மோட்ஷம் / சொர்க்கம் சென்றடையும் என மக்கள் நம்ப வைக்கப்பட்டு தவித்த முயலினை  அடித்து உண்ணும் வழக்கம் தொடர்கிறது.

இதில் நகைப்புக்கிடமானது என்னவெனில் ஒரு ஆத்மாவை ஒருமுறை,இருமுறை  மோட் சம் அனுப்பியதில் சைவ குருமாருக்கும்  , பிராமண குருமாருக்கும் அதில் நம்பிக்கையின்மையினால் தான் ஒரு ஆன்மாவைப் பல தடவைகள் ,பல மாதங்களாக, பல வருடங்களாக மந்திரங்கள் திரும்பத் திரும்ப ச் சொல்லி அனுப்பிக் கொண்டு இருக்கிறார்களோ  என எண்ணத் தோன்றுகிறது. பாவம் நம்மவர்கள்..
அப்படியாயின் இயற்கையழிவிலும் , யுத்தத்தினால்  உலகில் கொத்துக் கொத்தாக மடிந்துகொண்டிருக்கும் மக்களின்  ஆத்மாக்கள் எல்லாம் போய்ச் சேர முடியாமல் தவித்துக் கொண்டா இருக்கிறது?
கண்ணில் தெரியும்  உணவை மாற்றிவிட்டோம், உடையை மாற்றிவிட் டோம் , நடை,பழக்கங்கள், ஏன்  தாய் மொழியையே மறக்கத் துணிந்துவிட் டோம். எல்லாவ்ற்றையும் மாற்றிவிட்டோம், ஆனால் யாரோ கூறிய, கண்ணுக்குத் தெரியாத, விஞ்ஞானிகள்  கண்டுபிடிக்காத, ஒரு இல்லாதநிரூபிக்கப்படாத   உலகத்திற்காக மண்டையைக் குழப்பிக்கொண்டிருக்கிறோம். அதை வைத்து உழைப்பவன் பாடு கொண்டாட்டம்தான்.
ஆதலால் , சித்தர்கள் கூறுவதுபோல் , அடுத்தவர் சொல்லி உண்மையினை உணரமுடியாது. ''நீ உனக்குள்  தேடு .பல உண்மைகள் புரியும்.''

🔳🔳🔳🔳🔳🔳🔳🔳🔳🔳✍செ.மனுவேந்தன்🔳🔳🔳🔳🔳🔳🔳🔳🔳









1 comments:

  1. கேது சிவராசாTuesday, January 28, 2020

    அபாராமய்யா ,அருமை

    ReplyDelete