சித்தம் தெளிய சித்தரின் 4 பாடல்கள் /14



சிவவாக்கியம்-137


தூமை அற்று நின்றலோ சுதீபமுற்று நின்றது
ஆண்மை அற்று நின்றலோ வழக்கமற்று நின்றது
தான்மைஅற்று ஆண்மை அற்று சஞ்சலங்கள் அற்று நின்ற
தூமை தூமை அற்ற காலம் சொல்லும் அற்று நின்றதே!!!

பெண்ணிடம் தூமை என்ற மாதவிலக்கு நின்ற பிறகுதான் அங்கெ கருவாகி, ஆண், பெண், அலி என்ற தன்மையற்ற பிண்டமாக உயிர் நிற்கின்றது. அதன் பின் அப்பிண்டம் சிசுவாகி கருவறையில் வளர்ந்து குழந்தையாக வெளிவருகிறது. அது வளர்ந்து வாழ்கையில் அடையும் இன்ப துன்பங்களை பெற்று தான் என்ற ஆணவத்தால் பல சஞ்சலங்களை அடைந்து மரணம் அடைகிறது. அத்தூமையால் ஆனா உடம்பில் உயிர் போன பின் பிணம் என்ற பேர் பெற்றது, தூமை அற்றதால் என்பதனை அறியுங்கள். ஆகவே தீட்டில்லாத உடம்பு சவமே!!!
******************************************* 

சிவவாக்கியம்-138


ஊறி நின்ற தூமையை உறைந்து நின்ற சீவனை
வேறு பேசி மூடரே விளந்தவாறது ஏதடா
நாறுகின்ற தூமையல்லோ நற்குலங்கள் ஆவன 
சீறுகின்ற மூடனே அத்தூமை நின்ற கோலமே!!!

தாயின் கருவறையில் சுக்கில சுரோனித கலப்பால் தூமையில் ஊறி நின்று உருவான உயிர் மனித குலத்திற்கு பொதுவாக அமைந்துள்ளது அறியாமல் நீ வேறு குலம் நான் வேறு குலம் என்று வேறுபடுத்திப் பேசுகின்ற முட்டாள்களே! அதனால் நீங்கள் அடைந்த பலன் என்ன? நாற்றம் வீசும் தூமையில் பிறந்தவர்கல்தால் மனிதனில் ஞானியராகவும், சித்தர்களாகவும், நற்குலங்களலாகவும் உள்ளார்கள். இதை உணராது கோபப்படும் முட்டாள்களே! அத்தூமையில் பரிசுத்தனாய் நின்ற ஈசனின் களத்தை கண்டுணர்ந்து ஒன்றி தியானம் செய்யுங்கள்.
******************************************* 

சிவவாக்கியம்-139

 

தூமை கண்டு நின்ற பெண்ணின் தூமை தானும் ஊறியே

சீமை எங்கும் ஆணும் பெண்ணும் சேர்ந்து உலகம் கண்டதே
தூமை தானும் ஆசையாய் துறந்திருந்த சீவனை
தூமை அற்று கொண்டிருந்த தேசம் ஏது தேசம்?

தீட்டு நின்ற பெண்ணின் தீட்டில் ஊறி வளர்ந்த உயிரே ஊர்கள் எங்கும் ஆண்களும் பெண்களுமாய் சேர்ந்து வாழ்ந்து வருவதை இவ்வுலகம் முழுமையும் காண்கின்றோம். காம ஆசையால் தீட்டில் தோன்றி உருவாக்கி நின்ற தன்னை அறிந்தவர்கள் எல்லா ஆசைகளையும் துறந்து இவ்வுலகில் சிவனையே தியானித்து இருப்பார்கள். இருக்கும் அனைத்து சீவனிலும் தீட்டு இல்லாமல் இருக்கும் தேசம் எங்காவது உள்ளதா?
******************************************* 

சிவவாக்கியம்-140


வேணும் வேணும் என்று நீர் வீண் உழன்று தேடுவீர்
வேணும் என்று தேடினாலும் உள்ளதல்லது இல்லையே
வேணும் என்று தேடுகின்ற வேட்கையைத் துறந்தபின்
வேணும் என்ற அப்பொருள் விரைந்து கானல் ஆகுமே!!

உலகில் பிறப்பெடுத்த மனிதர்கள் இறைநிலை அடைவதற்கும், எட்டு சித்திகளை பெறுதற்கும் மெய்ப்பொருள் கிடைக்கவேண்டும். அது கிடைத்தால் எல்லாம் செய்து வளமோடு வாழலாம் என்று வீனாசைக் கொண்டு பல இடங்களிலும் அலைந்து தேடுகிறார்கள். அது வேணும் என்று எங்கு சென்று தேடினாலும் கிடைக்காது. உனக்குள்ளே உள்ளதாகவும்,இல்லாததாகவும் இருப்பதை அறிந்து கொண்டு வேண்டும் என்ற ஆசைகள் யாவையும் துறந்து தியானம் செய்யுங்கள். உண்மையான யோக ஞான சாதனங்கள் வேண்டும் என்ற அந்த மெய்ப்பொருள் கிடைக்கப் பெற்று விரைவில் சோதியான ஈசனை காண்பீர்கள் !!!

 

*******************அன்புடன் கே எம் தர்மா.

0 comments:

Post a Comment