"சோதிடம் பற்றி சிறு அலசல்" / பகுதி: 05



மேலைநாட்டு சோதிடத்தை கவனத்தில் கொண்டால், அங்கு அவர்களின் சோதிடம் தனித் தன்மை உடையதாக காணப்படுவதுடன் வேத அல்லது இந்தியா சோதிடத்தில் இருந்து சில அடிப்படை கொள்கையிலேயே வேறுபடுவதை காண்கிறோம். அதேபோல, சீனா சோதிடமும் ஒரு தனி முறையாகவே இன்றும் இருந்து வருகிறது. இவ்வாறாக ஒவ்வொரு நாட்டை சேர்ந்தவர்களும் தமது அறிவுக்கு எட்டியவாறு பண்டைய காலத்தில் கிரகங்களையும், நட்சத்திரங்களையும் ஆராய்ந்து, தங்களுக்கென்று ஒரு தனித்துவமான முறையை வகுத்து பின்பற்றி வருகின்றனர். பொதுவாக எல்லோரும் ஆகாய மண்டலத்தை 12 வீடுகளாக அல்லது ராசிகளாக பிரித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. என்றாலும் வேத சோதிடத்தில் பன்னிரண்டு வீடுகளும் ஒரே அளவு, மேலை நாட்டு சோதிடத்தில் அவ்வாற்றின் அளவுகள் ஒன்றுக்கொன்று வேறுபடுகின்றன [In Vedic astrology, each house is assigned an equal 30°, in Western astrology, they may not all be given an equal number of degrees.].

 

முதலில் இந்தியா சோதிடம் மறு பிறப்பையும் மற்றும் சென்ற பிறவியின் பாவ புண்ணியங்களையும் [past karma and theory of incarnation], தெய்வ நம்பிக்கையையும், அதனால் பரிகாரத்திற்கான வழிகளையும் உள்ளடக்கி உள்ளது, ஆனால் மேல் நாட்டு சோதிடம் இவைகளை உள்ளடக்காததால், இவைகளுக்கு அப்பால் உள்ளது. இந்தியா சோதிடம் பண்டைய காலத்தில் பழக்கத்தில் இருந்த சூரியன், சந்திரன் மற்றும் ஐந்து நியம கிரகங்களுடன், இரு கற்பனை கிரகங்களையும் கொண்டுள்ளது. ஆனால் மேல் நாட்டு சோதிடம் கற்பனை கிரகங்களை தவிர்த்து, இன்று நவீன உலகில் கண்டுபிடிக்கப் பட்ட மூன்று நியம கிரகங்களான,  யுரேனஸ், நெப்டியூன், புளூட்டோ [Uranus, Neptune, Pluto] போன்றவையை  சேர்த்துள்ளன.

 

இந்தியா சோதிடம் நிராயனா [The Nirayana, or sidereal zodiac or Fixed Zodiac] முறையாகும். அதாவது இது ஒரு நிலையான நட்சத்திரத்தை அதன் ஆரம்ப மற்றும் முடிவு புள்ளியாக ஏற்று சூரிய சுழற்சியை கணிக்கிறது (Spica or Chitra, brightest star in Aries constellation). மேலை நாட்டு சோதிடம் சாயன [the Sayana or tropical zodiac or Movable Zodiac] முறை, இளவேனிற் கால சம இரவு - பகல் நாளை [Vernal Equinox ஐ] அதன் ஆரம்ப மற்றும் முடிவு புள்ளியாக ஏற்று சூரிய சுழற்சியை கணிக்கிறது [Western Astrology relies on what is known as the Tropical Zodiac (Sayana cakra), which uses the Vernal Equinox as the point of reference. The Indian system - Jyotish - uses the Sidereal Zodiac (Nirayana cakra), which adopts a fixed star as the point of reference] சூரியனின் வடசெலவின் பொழுது [உத்ராயணம்], வான பூமத்திய ரேகையை [celestial equator] கடக்கும் பொழுது சம இரவும் பகலும் [equinox] அந்த கணத்தில் / நாளில்  உண்டாகும். அந்த நாளை Spring equinox or Vernal equinox என அழைப்பர். [vernal equinox, the place of the sun on the first day of spring]. இது இளவேனிற் காலத்தில் நடைபெறுகிறது. சூரியனை மையமாக வைத்து நீள் வட்டப் பாதையில் சுற்றிக் கொண்டிருக்கும் கோள்களின் பாதையையே [tropical zodiac] என்கிறோம். இந்த சுற்றுப்பாதை நிலையானதாக இல்லை. ஒவ்வொரு ஆண்டும் கோள்களின் பாதை மண்டலம் ஒரு குறிப்பிட்ட அளவு சாய்ந்து கொண்டே இருக்கிறது. இந்த சாய்ந்த நிலையில் இருந்து தொடங்கி நிலையான இராசி மண்டலத்தை கடந்து கொண்டிருக்கிற கோள்களின் நிலைகளை சாயன கோள்களின் நிலைகள் என்கிறோம்.  இந்த நிலையே வானத்தில் ஒரு கோள் சென்று கொண்டிருக்கும் உண்மையான நிலையாகும். சாயன [Sayana] நிலைகளில் உள்ள கோள்களின் அடிப்படையிலேயே மேற்கத்திய சோதிடப்பலன்கள் (WESTERN ASTROLOGY) கணிக்கப்படுகின்றன.

 

இந்த இரண்டு அமைப்புகளுக்கும், அதாவது, சாயன மற்றும் நிராயனா முறைகளுக்கும் இடையிலான முரண்பாட்டிற்கான காரணம், பூமியின் அச்சு சாய்ந்து இருப்பதால், அதன் சுழற்சியில் ஏற்படும் ஒரு தள்ளாட்டம் ஆகும் [wobble in the rotation of the earth on its axis]. புவி தனது அச்சில் தன்னைத்தானே இடஞ்சுழியாக சுற்றும் அதே நேரத்தில், புவி ஒரு வருட காலப்பகுதியில் சூரியனைச் சுற்றி அதன் சுற்றுப்பாதையில் (ecliptic) நகர்கிறது. இருப்பினும், பூமியின் சுழற்சியின் அச்சு சூரியனைச் சுற்றியுள்ள இயக்க அச்சுடன் வரிசையாக இல்லை. அதற்குப் பதிலாக புவியின்  அச்சு அதன் சுற்றுப் பாதைக்கு  23.44  பாகை சற்றுச்  சாய்ந்துள்ளது. இது ஆங்கிலத்தில் Obliquity (சரிவு) என்று அழைக்கப்படுகிறது. புவி மட்டுமன்று சூரியக் குடும்பத்தில் உள்ள அனைத்து கோள்களுமே தமது அச்சில் குறிப்பிட்ட அளவு சாய்ந்து உள்ளன. இதனால், ஒவ்வொரு ஆண்டும், இந்த இரண்டு அமைப்புகளின் வட்டப்பாதை தோராயமாக 00.00.50 விகலை அளவு (around 50 seconds of arc according to the most widely used reference point) விலகிக் கொண்டே  இருக்கிறது. அதாவது அச்சுச் சுழற்சியால், ஒவ்வொரு 72 ஆண்டும் ஒரு பாகையால் சாய்கிறது அல்லது விலகுகிறது [Due to precession they move about 1 degree every 72 years]. எனலாம். இந்த சாய்ந்த அச்சு ஒரு முழு சுழற்சி செய்ய 25,772 ஆண்டுகள் செல்கிறது [25,772 years for a complete cycle]. இதனால் இது நமது நிலையான இராசிமண்டலப் புள்ளியான மேசராசியில் இருந்து விலகிக் கொண்டே இருப்பதால் இதை சாயன நிலை என்கிறோம். ஆனால் ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன், அதிகமாக கி பி 272 அளவில், இவை இரண்டும் ஒன்றாக இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது [the coincidence of tropical & sayana zodiac was in or near 272AD] பின் விலகத் தொடங்கின. இந்திய சோதிடமுறை நிராயன மண்டலத்தில் கோள்களை நிறுத்தி பலன்கள் கூறுவதாகும். மேற்கத்தியமுறையில் சாயன மண்டலத்தில் கோள்களை நிறுத்தி பலன்கள் காணப்படுவதாகும். இரண்டாயிரம் ஆண்டு அளவில் அல்லது பண்டைய சோதிட ஆரம்பத்தில் இவைகளுக்கு இடையில் பெரிய வேறுபாடு இருக்கவில்லை, ஆனால் இன்று, இவை  ஏறத்தாழ  23.57.00 பாகை சாய்ந்துள்ளது / விலகியுள்ளது [about 23 degrees, 57 minutes] குறிப்பிடத்தக்கது. 

 

உதாரணமாக, இன்று  மாலை 7.00 மணிக்கு சந்திரனின் சாயன நிலை  234.02.58 ஆகும் என வைப்போம். இதுவே வானத்தில் சந்திரன் சென்று கொண்டிருக்கிற தற்கால கோள் நிலையும் ஆகும். எனின் சந்திரனின் நிராயன நிலைக்கு, 23.57.00 அளவை கழித்தால், 210.05.58  ஆக வரும். எனவே. உதாரணமாக இந்தியா சோதிடத்திற்கு மேடமாக [மேஷம் - Aries] இருக்கும் இரசியானது, தற்போது மேல்நாட்டவருக்கு இடபமாக [ரிஷபம் - Taurus] இருக்கும். அதாவது பொதுவாக ஒரு இராசி வித்தியாசமாக இருக்கும். [So there is a one sign difference for western & Vedic astrologers, which is big & makes an enormous difference while making predictions.] நிராயன கணிதத்திற்காக கோள்களின் சாய்ந்த அளவான அயனாம்சத்தைக் [23.57.00] கழித்துக் காணும் கோள்கள் நிலையே நிராயன கோள்கள் நிலையாகும். [By subtracting ayanmsha [23.57.00] from planet position in tropical or western sayana chart we can get the position of planets in sidereal or Vedic Nirayana chart] இது மேசராசியின் 00.00.00 அளவில் மீண்டும் கோள்கள் நிலைகளைக் கொண்டு வருவதாகும். இந்தியா சோதிடம் நாள் என்பதை ஒரு சூரிய உதயத்திலிருந்து மறு சூரிய உதயமுள்ள காலத்தை ஒரு நாள் என்கிறோம். ஆனால் மேலை நாட்டு சோதிடத்திற்கு நாள் என்பது நள்ளிரவு 12.00 மணியிலிருந்து தொடங்கி அடுத்த நாள் இரவு 12.00 மணிவரையில் உள்ள இடைப்பட்ட காலமேயாகும். இவ்வாறாக பல விதத்தில் நமது சோதிடத்திற்கும், அவர்கள் சோதிடத்திற்கும் நிறைய வித்தியாசம் உண்டு

 

சந்திர கிரகணம் அல்லது சூரிய கிரகணம் ஏற்படுவது ஒரு சாதாரண நிகழ்வு. 'சூரியன், பூமி, சந்திரன்' அல்லது 'சூரியன், சந்திரன் பூமி'  மூன்றும் முறையே இந்த வரிசையில் ஒரு நேர்க் கோட்டில் வரும் பொழுது இவை ஏற்படுகின்றன. வானியல் பற்றிய அறிவு ஆரம்ப  கட்டத்தில் இருந்த பண்டைய காலத்தில் சந்திர-சூரிய கிரகணங்களைக் கண்டு மக்கள் அச்சம் அடைந்தார்கள். அதற்கு ஒரு விளக்கமாக அல்லது தீர்வாக சமய குருக்களால் இராகு கேது என்ற பாம்புகள் சந்திர-சூரியரைக் கவ்வுவதால் கிரகணம் ஏற்படுகிறது என்று ஒரு புராணக் கதையை ஏற்படுத்தினார்கள். ஆனால் இந்த மூட நம்பிக்கையை வேத சோதிடர்கள் இன்னும் கைவிடவில்லை என்பது தான் இன்னும் ஆச்சரியமாக இருக்கிறது.

 

ஆமாம் இராகுவும்  கேதுவும் கோள்களாக கருதப்பட்டு, அது மற்ற பண்டைய காலத்தில் அறியப்படட ஏழு கோள்களுடன் வரிசைப் படுத்தப் பட்டு, ஒருவரின் மேல் அவற்றின் தாக்கங்களை கூறுகிறார்கள். ஒரு கருத்துக்கு கோள்கள் தன் ஈர்ப்பு சக்தியால் ஒருவரின் வாழ்க்கையை நிர்ணயிக்கிறது என்று வைத்துக்கொண்டால், எப்படி கற்பனை அல்லது புராண கோள்கள் அதை செய்யும் ?, இது தான் எனக்கு புரியவில்லை 

 

மறைந்த சோதிடர் பி.வி. இராமன் ஒரு உலகப் புகழ் பெற்ற இந்திய சோதிடர். இவரிடம் தங்கள் சாதகத்தைக் காட்டிப் பலன் கேட்காத இந்திய - இலங்கை  ஆட்சித் தலைவர்கள், அரசியல்வாதிகள் இல்லை என்றே சொல்லலாம். இவர் 1989 ஆம் ஆண்டு ஆந்திர சட்டசபைக்கு நடந்த தேர்தலில் என்.ரி. இராமராவ் தலைமையிலான தெலுங்கு தேசம் வெற்றி பெற்று ஆட்சிக்கு வரும் என்று கணித்துச் சொன்னார். ஆனால், அவரது கணிப்பு முற்றாகப் பிழைத்து விட்டது.  இந்திய காங்கிரஸ் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று ஆட்சிக் கட்டில் ஏறியது என்பதே உண்மை ([ndia Express Express  – 12-7-1989 ). இவ்வாறு மேலும் அவரின் சோதிட இதழில் (சனவரி 79, யூலை 79, நொவெம்பர் 79 மற்றும் சனவரி 80) சொல்லிய அரசியல் ஆரூடங்களும் பிழைத்துப் போயின என்பது வரலாறு (Ref: Science, Non – science and the Paranormal).

 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

பகுதி: வாசிக்க அழுத்துங்கள் 

👉Theebam.com: "சோதிடம் பற்றி ஒரு அலசல்" / பகுதி: 06

ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துங்கள் 

👉Theebam.com: "சோதிடம் பற்றி ஒரு சிறு அலசல்" / பகுதி: 01

0 comments:

Post a Comment