கோவிட்-19 தடுப்பு மருந்து-உண்மைத்தன்மை

 மருந்து பற்றிய போலிச் செய்திகளும்

அறிவியல் உண்மைகளும்

கடந்த ஜனவரி 16 அன்று இந்தியாவில் கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி வழங்கும் பணிகள் தொடங்கப்பட்டன. இந்த திட்டம் தொடங்கப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு முதல், தொடர்ந்து கொரோனா தடுப்பூசி குறித்த போலிச் செய்திகள் சமூக வலைதளங்களில் பரவிக் கொண்டிருக்கின்றன.

 

மக்கள் கொரோனா தடுப்பூசியை எடுத்துக் கொள்ள வேண்டும், அதே நேரத்தில் வதந்திகளை கண்டுகொள்ள வேண்டாம் என அரசு மக்களுக்கு வலியுறுத்திக் கொண்டிருக்கிறது.

 

இதுதொடர்பாக சமீபகாலமாக பரப்பப்பட்டு வரும் சில போலிச் செய்திகள் குறித்தும் அதன் உண்மைத்தன்மை குறித்தும் இங்கு பார்க்கலாம்.

 

"கொரோனா தடுப்பூசி குழந்தை பெற்றுக் கொள்ளும் தன்மையை பாதிக்கும்"

யடின் மேத்தா: இது முற்றிலும் தவறானது. கொரோனா தடுப்பூசி ஒருவரின் குழந்தை பெற்றுக் கொள்ளும் தன்மையை பாதிக்காது.

 

ஈஸ்வர் கிலாடா: அனைத்து வகையான தடுப்பூசிகள் வரும்போதும், இது போன்ற வதந்திகள் பரவுகின்றன. அது தவறானது என்று பலமுறை நிரூபணமாகி இருக்கிறது. அதே போன்றுதான் தற்போது கொரோனா தடுப்பூசிக்கும் தவறான வதந்திகளை பரப்புகிறார்கள். அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த அசுதோஷ் சின்ஹா என்பவர் "தடுப்பு மருந்தில் இருக்கும் சில பொருட்கள் நம்மை பாதிக்கலாம் என நினைக்கிறேன். நீங்கள் குழந்தையைப் பெற்றுக் கொள்ள முடியாமல் போகலாம், எது வேண்டுமானாலும் நடக்கலாம்" எனக் கூறினார். ஆனால், அவர் கருத்தை நிரூபிக்கும் வகையிலான எந்த ஆதாரத்தையும் கொடுக்கவில்லை.

 

"தடுப்பூசி குழந்தைப் பெற்றுக் கொள்ளும் தன்மையை பாதிக்கும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இது முற்றிலும் தவறானது" என இந்தியாவின் மருந்துக் கட்டுப்பாட்டாளரான (டி.சி.ஜி.ஐ) விளக்கமளித்தது. தடுப்பு மருந்துகளை எடுத்துக் கொள்வதால் சிலருக்கு மிதமான காய்ச்சல், வலி உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்பட்டாலும், இந்த தடுப்பு மருந்துகள் முற்றிலும் பாதுகாப்பானவை எனவும் அது குறிப்பிட்டுள்ளது.

 

மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தனும் தன் ட்விட்டர் பக்கத்தில் கொரோனா தடுப்பூசி தொடர்பான இந்த வதந்திகளை மறுத்திருக்கிறார்.

தடுப்பூசி போட்டுக்கொண்டால் குழந்தை பெற்றுக் கொள்ளும் தன்மையை இழந்துவிடுவோம் என இந்தியாவில் வதந்திகள் பரவுவது இது முதல் முறையல்ல.

 

இந்தியாவில் பல தசாப்தங்களுக்கு முன் போலியோ தடுப்பு மருந்து வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டபோது கூட, இதுபோன்ற வதந்திகளால் சில இந்தியர்கள் மருந்தை எடுத்துக் கொள்ள மறுத்தார்கள்.

 

அப்போதும் சரி, இப்போதும் சரி, தடுப்பூசியை எடுத்துக் கொண்டால் குழந்தையைப் பெற்றுக் கொள்ளும் தன்மையை இழந்துவிடுவோம் என்பதற்கு ஆதாரமில்லை.

 

"கர்ப்பிணி பெண்கள் கொரோனா வைரஸ் தடுப்பூசி எடுத்துக் கொள்ளக்கூடாது"

ஈஸ்வர் கிலாடா: கர்ப்பிணிப் பெண்கள் மீது கொரோனா தடுப்பூசி எந்த தாக்கமும் செலுத்தவில்லை என்று இதுவரை நடத்தப்பட்ட ஆய்வுகள் கூறுகின்றன. எனினும், அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் சீனா ஆகிய நாடுகள் கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசிகள் செலுத்த தொடங்கிவிட்டன. புதிய ஆய்வின்படி பாதுகாப்பானது என்று கருதப்பட்ட ஃபைசர் அல்லது மாடர்னா தடுப்பூசி அங்கு போடப்படுகிறது. 


அமெரிக்காவின் நோய் தடுப்பு மையத்தின் தகவலின்படி பிறரைக் காட்டிலும் கர்ப்பிணி பெண்களுக்கு கோவிட்-19 தொற்று ஏற்பட்டால் அதிகமான உடல்நலக்குறைவு ஏற்பட வாய்ப்புள்ளது.

 

நீங்கள் கருவுற்றிருந்தாலும் கோவிட்-19 தடுப்பூசி எடுத்துக் கொள்ளலாம் என்று அந்த அமைப்பு கூறுகிறது.

 

இதன் மூலம் கொரோனா தொற்று ஏற்பட்டால் தீவிரமான பாதிப்பிலிருந்து கர்ப்பிணிப் பெண்களை காப்பாற்ற முடியும் என்கிறது அந்த அமைப்பு.

 

"கோவிட்-19 தடுப்பூசி போடுவதாலும் கொரோனா தொற்று வரும்"

கொரோனா தடுப்பூசி போட்டபின் கொரோனாவின் அறிகுறிகளான காய்ச்சல், சளி, உடல்வலி போன்றவை சிலருக்கு ஓரிரு நாட்கள் வரும். ஆனால், அவை கொரோனா தொற்று காரணமாக உண்டானவை அல்ல.

 

இவ்வாறு தென்படும் அறிகுறிகள் தானாகவே மறைந்துவிடும். கொரோனா தொற்று உண்டானதைப் போல சிகிச்சை தேவைப்படாது.

 

"கொரோனா தடுப்பூசி போட்டபின் ரத்தம் உறைதல் மற்றும் இதய பாதிப்பு வரும் "

ஆக்ஸ்ஃபோர்டு - ஆஸ்ட்ராசெனிகா தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களில் பல லட்சம் பேரில் ஓரிருவருக்கு ரத்தம் உறைதல் ஏற்பட்டு இறந்துள்ளதால், அவர்களுக்கு இரண்டாம் டோஸ் வேறு தடுப்பு மருந்து வழங்கப்படும் என்று சில நாடுகள் கூறியுள்ளன.

 

இந்தியாவில் கோவிஷீல்டு எனும் பெயரில் வழங்கப்படும் இந்த மருந்தால், ரத்தம் உறைதல் பிரச்னை ஏற்பட்டதாக இதுவரை எங்கும் பதிவு செய்யபடவில்லை.

 

கொரோனா தடுப்பூசி போட்டதால் ஒருவருக்கு இதய நோய் உண்டானதாக இதுவரை உலகில் எங்கும் நிரூபிக்கப்படவில்லை.

 

"தடுப்பூசியில் பன்றி இறைச்சி இருக்கிறது"

"கொரோனா தடுப்பூசியில் பன்றி இறைச்சி இருக்கலாம், எனவே இஸ்லாமியர்கள் யாரும் கொரோனா தடுப்பூசியை எடுத்துக் கொள்ளக் கூடாது" என இந்தியாவில் இருக்கும் சில மதகுருமார்கள் கூறினார்கள்.

 

பல தடுப்பு மருந்துகளில் போர்க் ஜெலடின்களை நிலைப்படுத்தும் ரசாயனமாகப் பயன்படுத்துவார்கள். இஸ்லாத்தில் பன்றியை உட்கொள்ளக் கூடாது.

 

இந்தியாவில் கோவிஷீல்டு, ஸ்புட்னிக்-v மற்றும் கோவேக்சின் ஆகிய கொரோனா தடுப்பு மருந்துகளுக்கு மட்டுமே இதுவரை அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பு மருந்துகளின் உட்பொருட்களிலும் போர்க் ஜெலடின் இல்லை. ஃபைசர் மற்றும் மாடர்னாவின் கொரோனா தடுப்பு மருந்துகளின் உட்பொருட்களிலும் போர்க் ஜெலடின் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

"கொரோனா தடுப்பூசி போட்டபின் இறைச்சி உண்ணக்கூடாது"

கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் இந்த உணவைத் தான் உண்ண வேண்டும் என்று கட்டுப்பாடுகள் எதையும் உலக சுகாதார நிறுவனமோ, உலக நாடுகளின் அரசாங்க அமைப்புகளோ விதிக்கவில்லை.

 

ஒரு குறிப்பிட்ட உணவை உண்பதால் தடுப்பூசி பலனளிக்காமல் போய்விடும் என்பதற்கான அறிவியல் ஆதாரமும் இதுவரை இல்லை. எனவே கோவிட் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் இறைச்சி உண்பதற்கு தடையில்லை.

 

"கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டபின் மது, புகைப்பழக்கம் கூடாது"

மது உடலில் நோயெதிர்ப்பு மண்டலத்தை எதிர்மறையாக பாதிக்கிறது. எனவே உடலில் ஆல்கஹால் அளவு அதிகமாக இருந்தால் தடுப்பூசியின் நோயெதிர்ப்பு செயல்திறன் எதிர்பார்த்த இல்லாமல் போக வாய்ப்புள்ளது. புகைப் பழக்கத்துக்கும் இதே நிலைதான். ஆனால் இவற்றை நிரூபணம் செய்வதற்கான அறிவியல் ஆய்வுகள் எதுவும் இதுவரை நடத்தப்படவில்லை.

 

கோவிட் தொற்று ஏற்பட்டுள்ள சமயத்தில் மது மற்றும் புகைப் பழக்கம் இருந்தால் அது உடல் நிலையை மேலும் மோசமாக பாதிக்கக்கூடும்.

 

"மாதவிடாய் காலத்தில் பெண்கள் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ளக்கூடாது"

இந்த கூற்று தவறானது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். எல்லா பெண்களாலும் வீட்டிலிருந்தே பணிபுரிய முடியாது. அவர்கள் வெளியே செல்லவேண்டும் என்பதால் அவர்களுக்கும் கொரோனா தொற்று உண்டாவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

 

மாதவிடாய் சுழற்சி என்பது உடலில் இயல்பாக நடப்பது. அது எந்த தேதியில் வேண்டுமானாலும் வரும். ஒரு வேளை உங்களுக்கு தடுப்பூசி கிடைக்கும் தேதியன்று மாதவிடாய் இருந்தாலும் எடுத்துக் கொள்ளத் தடையில்லை என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

 

மாதவிடாய் சுழற்சிக்கு முந்தைய மற்றும் பிந்தைய 5 நாட்களில் குழந்தை தடுப்பூசி எடுத்துக் கொள்ளக் கூடாது என்று பறை வரும் செய்தி தவறானது என்று இந்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

 

"கோவிட் தடுப்பூசி போட்டபின்னும் கொரோனா தொற்று வரும்"

கொரோனா தடுப்பூசி இரண்டு டோஸ்களும் எடுத்துக்கொண்ட பின்னரும் சிலருக்கு கொரோனா தொற்று வருவதை கேள்விப்பட்டிருப்பீர்கள்.

 

ஆனால், அவர்களுக்கு லேசான கொரோனா அறிகுறி மற்றும் தென்படும். வீட்டிலேயே சுய தனிமைப்படுத்தல் அல்லது சில நாட்கள் மருத்துவ சிகிச்சையிலேயே குணமடையும்.

 

முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்ட 2-3 வாரங்களில் ஓரளவு கொரோனா எதிர்ப்பாற்றலை தடுப்பூசி உங்களுக்கு வழங்கும். இரண்டாம் டோஸ் தடுப்பூசி போட்ட சில வாரங்களில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தல் , செயற்கை ஆக்சிஜன் தேவைப்டுதல் போன்ற நிலைகளுக்கு பாதிக்கப்பட்டவர் போகாமல் தடுக்கப்படும்.

 

ஒருவேளை தடுப்பூசி போடாமல் இருந்தால் ஆரம்பமே ஆபத்தாகும் நிலைகூட வரலாம். தொற்று மிதமான அளவில் மட்டுமே உண்டாகி குணமாக தடுப்பூசியே காரணம்.

 

"இளம் வயதினர் மற்றும் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி தேவை இல்லை"

கொரோனா முதல் அலை போல் அல்லாமல் உருமாறிய கொரோனா இரண்டாம் அலையின்போது இளைஞர்களையும் தாக்குகிறது. அதனால் இளைஞர்களுக்கும் தடுப்பூசி அவசியம். அதனால்தான் 18 வயதைக் கடந்த அனைவர்க்கும் தடுப்பூசி தேவை என்று வலியுறுத்தப்படுகிறது.

 

சில நாடுகள் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசியைச் செலுத்தி வருகிறது. அமெரிக்கா, 12 - 15 வயதுள்ள குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசியைச் செலுத்த தொடக்கிவிட்டது. அடுத்த ஆண்டு 12 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த போதுமான பாதுகாப்பு தரவுகளை சேமித்து வைக்க உள்ளது அமெரிக்கா.

 

பிரிட்டன் பெரியவர்களுக்கு அதி விரைவாக கொரோனா தடுப்பூசி செலுத்தி வருகிறது. இந்த ஆண்டின் ஜூலை மாதத்துக்குள் இவர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டு விடும். ஆனால் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதில் ஒரு தீர்மானம் எடுக்கப்படவில்லை.

குழந்தைகளுக்கு வரும் கொரோனா வைரஸ் மிகவும் லேசாகவும், அறிகுறிகளை வெளிக் காட்டாததாகவுமே இருக்கிறது. இதற்கு நேர்மாறாக, வயதானவர்கள் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுவதில் முன்னுரிமை கொடுக்கப்பட்டு வருகிறது.

 

எனினும், குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதன் மூலம், மற்றவர்களின் உயிரைக் காக்கலாம். குழந்தைகளுக்கு தொற்று பாதிப்பு அதிகம் இல்லாவிட்டாலும், அவர்கள் தொற்றுக்கு உள்ளாகி, அக்குழந்தைகள் மூலம் பிறருக்கு பரவாமல் தடுக்க தடுப்பூசி உதவும்.

 

"ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தடுப்பூசி தேவையில்லை"

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடுத்த சில மாதங்கள் வரை மீண்டும் கோவிட் உண்டாவதற்கான வாய்ப்பு குறைவாக இருப்பதாகவே கருதப்படுகிறது. ஏனென்றால் முதலில் கோவிட் உண்டான போது அதற்கு எதிரான நோய் எதிர்ப்பான்களை (antibodies) உடல் உற்பத்தி செய்து விடும்.

 

இதனால் மீண்டும் தொற்று உண்டாகும் பொழுது இந்த நோய் எதிர்ப்பான்கள் கொரோனா வைரஸை எதிர்த்துப் போரிட்டு அழிக்கும். ஆனால் இந்த எதிர்ப்பாற்றல் ஆயுள் முழுவதும் நீடிக்காது. அடுத்த சில மாதங்கள் மட்டுமே நீடிக்கும். எனவே கொரோனாவால் பாதிக்கபட்டவர்களும் தடுப்பூசி எடுத்துக் கொள்வது அவசியமாகிறது.

 

ஒருவேளை இரண்டாவது முறை தாக்கும் கொரோனா வைரஸ், மரபணு மாற்றமடைந்த வேறு ஒரு திரிபாக இருந்தால் முதலில் தொற்று உண்டான போது உடலில் உண்டான நோய் எதிர்ப்பான்கள் இரண்டாவது முறை தொற்று வரும் போது உடலுக்குள் வந்த கிருமிகளை எதிர்த்து சிறப்பாக செயல்படும் என்றும் கூற முடியாது.

 

"தடுப்பூசியில் மைக்ரோசிப் இருக்கிறது"

கொரோனா தடுப்பு மருந்தில் மைக்ரோசிப்கள் இருப்பதாக இந்திய சமூக ஊடக பயன்பாட்டாளர்களிடையே தவறான தகவல் வலம் வந்து கொண்டிருக்கிறது.

 

"கொரோனா தடுப்பு மருந்தில் சிப் இருக்கிறது, அது உங்கள் மூளையை கட்டுப்படுத்தும்" என ஒரு சிறிய காணொளியில் ஓர் இஸ்லாமிய மதகுரு பேசியிருக்கிறார். அந்த காணொளி ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் இந்த மாதத்தின் தொடக்கத்தில் வைரலானது.

 

எந்த கொரோனா தடுப்பூசியிலும் மைக்ரோசிப்கள் ஒரு பகுதியாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

"ஃப்ளூ காய்ச்சல் தடுப்பூசி கொரோனாவை தடுக்கும்"

ஃப்ளூ காய்ச்சல் தடுப்பூசி கொரோனாவை தடுக்காது என்கிறது அமெரிக்காவின் நோய் கட்டுப்பாட்டு மையம். ஆனால், கொரோனா காலத்தில் ஏற்கனவே மருவமனைகளில் இடப் பற்றாக்குறை உள்ள சூழலில் ஃப்ளூ தடுப்பூசி எடுத்துக்கொள்வது நல்லது.

 

மருத்துவமனைகள் செல்லாமல் இருப்பது, கொரோனா தொற்றுக்கு ஃப்ளூ காய்ச்சல் வந்தவர்கள் உள்ளாவகும் வாய்ப்பையும் குறைக்கும்.

 

"தடுப்பூசி எடுத்துக் கொண்டு பின்பு முக கவசம் அணிதல், சமூக விலகல் கடைபிடிக்க தேவையில்லை"

இது மிகவும் ஆபத்தான போக்கு. கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களுக்கு ஒருவேளை கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் அது கோவிட்-19 நோயாக மாறாமல் தடுப்பூசி பாதுகாப்பளிக்கும்.

 

எனினும் அவர்களது உடலில் இருக்கும் வைரஸ் பிறருக்கு பரவி அவர்களுக்கு நோயை உண்டாக்க வாய்ப்புண்டு. எனவே தடுப்பூசி போட்டுக் கொண்டாலும் நோய் பரவலை கட்டுப்படுத்துவதற்காக சமூக இடைவெளியைப் பின்பற்றுதல், முகக் கவசம் அணிதல், அடிக்கடி கைகளைக் கழுவிக் கொள்ளுதல் போன்றவற்றை முறையாகப் பின்பற்ற வேண்டும்.

நன்றி:பிபிசி தமிழ் 

0 comments:

Post a Comment