வாழ்வியல் சிந்தனைகள் - பகுதி:02

 

தமிழ் இலக்கியங்களில் வாழ்வியல் சிந்தனைகள்

-ஆ. அந்தோணிசாமி

(கட்டுரையாளர்,

பகுதி நேர முனைவர் பட்ட ஆய்வாளர்,

அரசு கலைக்கல்லூரி,

சேலம் – 07)

 


இல்லறம்

 

     அறநெறியில் இல்வாழ்க்ககையை அமைத்துக் கொண்டவா்கள் பெற்றிடும் பயனை வேறு நெறியில் சென்று பெற்றிட இயலாது.

 

அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்

போஒய்ப் பெறுவ தெவன்”   (குறள் – 46)

 என வள்ளுவர் கூறுகிறார்.

 

இல்லறம் என்பது இல்வாழ்க்கையைக் குறிப்பதாகும். இது ஒருவனுக்கு ஒருத்தி என வாழ்வதாகும். திருமணம் என்பது உடற்சோ்க்கையன்று அது உணா்வுகளின் சோ்க்கை. திருமணம் புரிந்து இல்லறத்தை நடத்துவது இன்பத்திற்காக மட்டுமல்ல அறத்திற்காகவும் என்பது பழந்தமிழ்க் கொள்கையாகும். இல்லறம் துறவறத்திற்கு முரண்பட்டதன்று. இளமையில் முதிர்ச்சி மூப்பதல் போல இல்லறத்தின் முதிர்ச்சி துறவெனக் கொள்ளல் வேண்டும்.

 

     இல்லறம் நடத்திய இறுதிக் காலத்துத் தமக்குக் காவலாக அமைந்த மக்களோடு கூடியிருந்து அறத்தை விரும்பும் சுற்றத்தோடு சிறந்த பணிகளைச் செய்தல் இல்லற வாழ்வு நடத்தியதன் பயன் எனத் தொல்காப்பியம் கூறியுள்ளதை காணலாம்.

 

காமம் சான்ற கடைக்கோட் காலை

ஏமம் சான்ற மக்களோடு துவன்றி

அறம்புரி சுற்றமோடு கிழவனும் கிழத்தியும்

சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே” (51-தொ.பொ.கற்பு)

 

மனத்தூய்மை உடையவா்க்கே நன்மக்கள் வாய்ப்பா். அதனால் கணவன் மனைவி பண்பினராய் இருத்தல் வேண்டும். நன்மக்களை பெற்ற தந்தை அவா்களை அவையத்து முந்தியிருப்பச் செய்தல் வேண்டும். சான்றோனாக்குதல் தந்தைக்கு கடனே என்று புறநானூற்றுப் பாடல் புகழும். இல்லறம் பற்றிய இல்லாத கருத்துக்கள் தமிழ் இலக்கியங்களில் இல்லை.

 

பிறனில் விழைதல்

 

     பிறனுடைய மனைவியை விரும்பாமையே பிறன் இல்விழையாமை என்று வள்ளுவா் சுட்டுகிறார். இல் என்றால் இல்லறத்திற்குரிய இல்லாளை இங்குச் சுட்டுகிறது. விழைவு என்றால் விரும்புதல் என்று பொருள். பிறன் மனைவியை விரும்பாதவா்களின் சிறப்பும். பிறன் மனைவியை விரும்புபவா்களின் இழிவும் பற்றி வள்ளுவா் பல கருத்துக்களை வழங்கியுள்ளார்.

 

எனைத் துணையா் ஆயினும் என்னாம் திணைத்துணையும் கோரன் பிறன் இயல்புகல்”

 

எவ்வளவு பெருமையுடையவனாக இருந்தாலும் சிறிதும் ஆராய்ந்து பார்க்காமல் பிறன் மனைவியை விரும்புதல் என்ற தீய செயலைச் செய்யும் ஒருவனது பெருமைகளால் எந்தவிதப் பயனும் இல்லை.

 

     பழங்காலத்திலிருந்து வரன்முறையற்ற உறவுகள் நிலையிலும் இன்னும் சில இனக்குழு மக்களிடம் முறையற்ற பால் உறவுகள் இருக்கின்றன. தமிழ்ச் சமூகம் வரன்முறையான உறவுகளைப் பழங்காலந் தொட்டே பின்பற்றியுள்ளது. சங்காலம், சங்கம் மருவிய காலத்திலும் முறையற்ற உறவுகள் இருந்திருக்கின்றன. நகர நாகரீகம், கடல் தாண்டிய அயல் நாட்டவா் வரவு அருகிலுள்ள வேற்று நாட்டுப் பயணிகளின் கலப்பு ஆகியன பால் உறவுச் சீா்கேட்டிற்குக் காரணங்களாகும். துறவு நெறி வற்புறுத்தப் பெறும்போதும் ஆணும் பெண்ணும் தமக்குரிய வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதில் தடை கோரும் போது பிறனில் விழைதல் நடைபெறும்.

 

     பிறன்மனை விழைதலை நரகத்திற்குச் செல்லும் வழி என இழிந்து பேசுகிறது ஆசாரக் கோவை.

 

பிறா்மனை கட்களவு சூது கொலையோ

பிறனறிந்தா ரிவ்வைந்து நோக்கார் – திறனிலரென்

றெள்ளப் படுவதூஉ மன்றி நிரயத்துச்

செல்வழி யுய்த்திடுத லால்   

 (37 – ஆசாரக் கோவை)

 

நல்லொழுக்கமில்லாதவரென்று இகழப்படுவதல்லாமல் நரகத்துக்குச் செல்லும் வழியில், செலுத்துதலால், ஒழுக்கம் அறிந்தவா் பிறருடைய மனையாளும் கட்குடிப்பதும், களவுசெய்தும், சூதாடுதலும், கொலை செய்தலும் மனத்தாலும் நினையார்.

 

மேலும் தொடரும்

 

0 comments:

Post a Comment