மகாவம்சத்தில் புதைந்துள்ள...( பகுதி 22)

உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்

 


சோழ நாட்டிலிருந்து ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக, இங்கு வந்த, உயர்குடியில் பிறந்த, தமிழன் எல்லாளன் என்று [ A Damila of noble descent, named ELARA, who came hither from the Cola-country  to seize on the kingdom], அதாவது வெளியில் இருந்து வந்தான் என்று குறிப்பிட்டு கூறும் மகாவம்சம், அவனுக்கு முதல் ஆட்சி செய்த இரு தமிழரை அப்படி குறிப்பிட்டு கூறவில்லை, அவர்களை "குதிரைகளை இங்கு கொண்டு வந்து வாணிகம் செய்த ஒருவரது பிள்ளைகளான சேனன் மற்றும் குத்திகன் ஆகிய இரண்டு தமிழர்கள் சூரதீசனை வெற்றி கொண்டார்கள். பெரும் படையொன்றைத் திரட்டிக்கொண்டு, இந்த இருவரும் சேர்ந்து இருபத்திரண்டு வருட காலம், கி மு 237 இல் இருந்து கி மு 215 வரை  நீதி தவருமல் ஆட்சி செய்தனர் [Two Damilas, SENA and GUTTAKA, sons of a freighter who brought horses hither/ conquered the king Suratissa, at the head of a great army and reigned both (together) twenty-two years justly.] என்று மட்டும் கூறுகிறது. மகாவம்சத்தின் முக்கிய பிரச்சனை என்னவென்றால், இலங்கையில் வாழும் சிங்களவர்கள் புத்தரால் தன் கொள்கைகளை பரப்ப தேர்ந்து எடுக்கப்பட்ட மக்கள் [chosen people] என்ற நம்பிக்கையே ஆகும். புத்தர் காலத்தில் உலகில் எங்கும் சிங்களவர் என்ற ஒரு இனமே இல்லை, சிங்களம் என்ற ஒரு மொழியும் இல்லை. அவர் இறந்து கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்பு தான், மகாவம்சம் கதையும் அத்துடன் சிங்கள இனம் ஒன்றும் தோன்றத் தொடங்கியது என்பது வரலாற்று உண்மையாகும். எனவே தான் சாதாரண சிங்கள மக்கள், வரலாற்றை, கல்வெட்டு ஆதாரங்களை, மரபணு ஆய்வுகளை மற்றும் சிங்கள மொழியில் ஏராளமாக காணப்படும் தமிழ் சொற்களை கவனத்தில் எடுக்காமல், இன்றைய தமிழர்கள் வெளியில் இருந்து வந்தவர்கள் என்ற தப்பெண்ணம் கொண்டு உள்ளார்கள். 1956 இல் சிங்களம் மட்டும் [sinhala only act] என்ற சட்டம் கொண்டு வந்த எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா [S.W.R.D. Bandaranaike] உண்மையில் அவரது மூதாதையர் கண்டியை ஆண்ட தெலுங்கு கண்டி நாயக்கர் வம்சத்தை சார்ந்தவர் ஆகும். பதினாறாம் நூறாண்டில் தென் இந்தியாவில் இருந்து வந்த நீல பெருமாள் [Neela-Perumal], “சமன்” எனும் பௌத்தக் கடவுளின் [God Saman] பிரதம குருவாக நியமிக்கப்பட்டு ‘நாயக்க  பண்டாரம்’  [‘Nayaka Pandaram’ ] என்ற பெயரை 1454 இல் பெற்றார். அவர்களின் வாரிசே இவர் ஆவார். அதே போல, 1977, 1981,1983 இல் தமிழருக்கு எதிரான கலவரங்கள் மற்றும் யாழ் நூலக எரிப்பு [anti-Tamil pogroms of 1977,1981 and 1983 , the burning of the Jaffna public Library] போன்றவற்றின் நாயகன் ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனாவின் [Junius Richard Jayewardene] முப் பாட்டனார் [great-grandfather was called Tambi Mudaliyar] தம்பி முதலியார் ஆகும். இவை சில உதாரணங்களே. இவ்வாறு பிற்காலத்திலும் பல தென் இந்தியர்கள் பல பல சந்தர்ப்பங்களில் இங்கு அழைக்கப்பட்டு அல்லது வந்து சிங்களவர்களுடன் ஒன்றிணைந்தார்கள் என்று வரலாறு கூறுகிறது [Many South Indians, not just Tamils but also Telugus and Malayalis, migrated to southern Sri Lanka and assimilated with the Sinhalese]

 

உதாரணமாக, டச்சு [Dutch] அரசாங்கம் இலங்கையை ஆளும் பொழுது, புகையிலை சாகுபடிக்கு தமிழ் நாட்டில் இருந்து பெருவாரியான தமிழர்களை கொண்டுவந்து இலங்கையின் தென்மாகாணத்தில், மாத்தறையில் குடியேற்றினார்கள். அதே மாதிரி ஒரு 2017 அறிக்கையின் படி, 4,000 ஜிப்சிகள் தீவு முழுவதும் இருப்பதாக குறிக்கப்பட்டுள்ளது. அவர்களில் பலர் தென் இந்தியாவில் இருந்து வந்தவர்கள் ஆவார்கள். கிட்டத்தட்ட அனைவரும் இப்போது சிங்கள மொழி பேசுபவர்களாக மாறி விட்டார்கள். [The Dutch brought South Indian people in large numbers for tobacco cultivation. They were settled mostly in Matara. According to a 2017 government report, Sri Lanka has nearly 4,000 gypsies scattered across the island. Many of their origins can be traced to south India. While almost all of them are now Sinhala speakers] விஜயனும் அவனது கூட்டாளிகளும் மதுரை பாண்டிய மகளீரை திருமணம் செய்ததுடன் ஆரம்பமாகிய தென் இந்தியர் மதம் இனம் மாற்றம், கடைசியாக அண்மைய வரலாற்றில் வத்தளை, நீர்கொழும்பு முதல் சிலாபம், புத்தளம் வரை தமிழர்கள் "மதம் - இனம்" மாற்றம் வரை நடை பெற்றதை வரலாறு சான்றுகளுடன் எடுத்துக் காட்டுகிறது. அவர்கள் முதலில் கத்தோலிக்க மதத்துக்கு மாற்றப் பட்டார்கள். எனவே அவர்களது பிள்ளைகள் கத்தோலிக்க பாடசாலைகளில் கற்றார்கள். பிற்காலத்தில் அந்த பாடசாலைகளில் இருந்த தமிழ் மொழிப்பிரிவு மூடப்பட்டு அனைவரும் சிங்கள மொழி ஊடாக கற்க பணிக்கப்பட்டார்கள். வீட்டிலே தமிழ் பேசினாலும் பிள்ளைகளின் பாடசாலை மொழி சிங்களம் ஆனது. பின்னர் பிள்ளைகள் வளர்ந்து பெரியவர் ஆனதும், வீட்டு மொழியும் இயற்கையாக சிங்களம் ஆகி, முழுமையாக இன மாற்றம் அடைந்தார்கள் என்பது வரலாறு ஆகும். 

 

வரலாற்றாசிரியர் ஒருவர் ஒரு நாட்டின் தற்கால வரலாற்றை எழுதுவதற்கும் அதன் புராதனகால வரலாற்றை எழுதுவதற்கும் அதிக வேறுபாடு உள்ளது. அச்சுயந்திரம் மற்றும் தொழில் நுட்பப்பயன்பாட்டினால், வரலாறு மற்றும் செய்திகள், இன்று முறையாக ஆவணப் படுத்தப்படுகின்றன. ஆனால், ஏட்டுச் சுவடிகளையும் புராணக் கதைகளையும் செவிவழிச் செய்திகளையும் ஓரளவு கிடைத்த சாசனங்களையுமே சேர்த்து, ஆயிரம் ஆண்டுகளின் பின், இலங்கையின் பூர்வீக வரலாற்றை எழுதியவர் தான் இந்த மகாநாம தேரர். ஆகவே தான் எமக்கு கிடைத்த வரலாற்று சான்றுகளுடன் ஒப்பிட்டு, இந்த மகாவம்சம் என்ற அறிவு வயலில் இருந்து களைகளை, தக்க காரணங்களை சான்றுகளுடன் காட்டி இன்று அகற்ற வேண்டியுள்ளது. 

 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,-/-அத்தியடி, யாழ்ப்பாணம்]

பகுதி: 23 தொடரும்

  👉அடுத்த பகுதி வாசிக்க அழுத்துக 

Theebam.com: மகாவம்சத்தில் புதைந்துள்ள..... [பகுதி 23]:  

👉ஆரம்பத்திலிருந்து வாசிக்க, அழுத்துக Theebam.com: மகாவம்சத்தில் புதைந்துள்ள.../ பகுதி 01:

0 comments:

Post a Comment