எந்த ஊர் போனாலும்…நம்ம ஊர் {சங்கானை } போலாகுமா!!!.

  • .


சங்கானை எத்துறையிலும் தன் நிறைவு பெற்ற ஒரு பட்டினம் ஆகும். பல தொழில்கள் செய்யும் பிரிவினர் இணைந்து வாழும் இடம் இது, ஆகையால் கைத்தொழிலுக்கும் இங்கு குறைவு இல்லை. மாற வேலை, நகை வேலை, இரும்பு வேலை கயிற்றுத் தொழில், போன்றவைகள் இங்கு குறிப்பிடத்தக்கன. மண் பாண்டத் தொழிலும் இங்கு ஓர் முக்கிய இடத்தை வகிக்கிறது. இதன் உற்பத்திகள் பலநோக்குச் கூட்டுறவுச் சங்கங்கள் மூலமும், லக்சலா மூலமும் மக்களுக்கு செய்யப்படுகின்றன.
உயர்வான உடுபுடவைகள் உற்பத்தியாகுமிடம்
வட்டுக்கோட்டைப் பாராளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட இப்பட்டினம் யாழ்ப்பாணம் - காரைநகர் பிரதான வீதியில் சண்டிலிப்பாய்க்கும், சித்தங்கேணிகளும் இடையே அமைந்துள்ளது. வடக்கே பண்டத்தரிப்பையும் தெற்கே சங்கரத்தையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது. வலிகாமம் மேற்கு கூட்டுறவு சமாசம் எமக்குக் கிடைத்த ஒரு வரப்பிரசாதம். 1944ஆம் ஆண்டு ஆடி மாதம் ஆரம்பித்த இந்நிறுவனம் 'கூட்டுறவு நாட்டுயர்வு' என்பதனை நிரூபித்து உள்ளது. 1964இல் இச்சமாசம் அராலியில் ஓர் உப்பளத்தை ஆரம்பித்தது. தனியார் நிறுவனத்தால் நடத்தப்படும் ஒரே ஒரு உப்பளம் என்ற பெயரை தேடித்கொண்டது. 25க்கும் அதிகமான கூட்டுறவுச் சங்கக் கிளைகளை நடாத்தி வரும் இந்நிறுவனம் ஒரு பாரிய மின் நெசவு ஆலையை சங்கானையில் நிறுவியது. இங்கு தயாரிக்கப்படும் உடுபுடவைகள் தரத்தில் உயர்வு பெற்றன. இதனால் இந்நிறுவனம் ஏராளமான பணத்தையும், புகழையும் தேடிக்கொண்டது. போர்த்துக்கீசியர் ஆண்ட காலத்தில் மக்களின் வாழ்க்கை பயம் மிகுந்தாகவே காணப்பட்டது. இவர்களின் ஆட்சியின் பின் "டச்சுக்காரர்" என்று அழைக்கப்படும் ஒல்லாந்தர் இலங்கையைக் கைப்பற்றினர். இவர்களும் வியாபார நோக்கத்திற்க்குகாகவே
இலங்கைக்கு வந்தனர். இந்திய மன்னர்களின் படைக்குத் தேவையான யானை, குதிரை என்பனவற்றையும் சங்கு, முத்து போன்றவைகளையும் ஒல்லாந்தர் இலங்கைலியிருந்து எடுத்துச்சென்று விற்பனை செய்தனர். இவர்கள் சங்கானைக்
கோட்டையை யானைகளையும், சங்குகளையும் சேர்த்து வைக்கும் காஞ்சியமாகப் பாவித்தனர். அதனால் சங்கு + யானை = சங்கானை என்று பெயர் பெற்றதாக ஒரு கதை உண்டு. போர்த்துக்கீசியர் இக்கோட்டையை கட்டி இருந்தாலும், அதை பாவித்த டச்சுக்காரரின் பெயரையே கொண்டு இன்றும் டச்சுக் கோட்டை என நிலைத்து நிற்கிறது.
விவசாயமும் வியாபாரமும் ஒருதாய் பிள்ளைகள்
இக்கோட்டையின் எதிர்புரத்தே அமைத்து சிறப்புறச் செயலாற்றி வரும் உள்ளூர் ஆட்சி மன்றமான பட்டின சபை பாரட்டுப்பெற்ற ஒன்றாகும். 1957இல் ஆரம்பிக்கப்பட்ட இச்சபை அரச உதவியுடன் குடியிருப்பு விடுக்களைக் கட்டி, 1961இல் வீடற்ற மக்களுக்குக் குறைந்த வாடகையில் கொடுத்துள்ளது. ஏழை மாணவர்களுக்கு வருடாப் வருட பாடப் புஸ்தங்களை வழங்கி வருகின்றது. வசதியற்ற நோயாளிகளின் நலன் கருதி இலவச ஆயுள்வேத வைத்திய நிலையம் ஒன்றை நடாத்தி வருகிறது. ' வரப்புயர நீர் உயரும், நீர் உயரக் கோள் உயர்வான்' என்றார் ஒளவையார் . மக்கள் உயர்வு பெற்றால்தான் அரசு உயர்வு பெரும் என்பது இதன் பொருள் உபஉணவுப் பொருட்கள் உற்பத்தி செய்யும் தோட்ட நிலம் சித்தங்கேணி வடலியடைப்பு பண்டத்தரிப்பு வரை பரந்து கிடக்கிறது. நெல் விளைச்சல் செய்யும் வயல் நிலம் நவாலி, சங்கரத்தை, அராலி சண்டிலிப்பாய் வரை வியாபித்துள்ளது. இதனால் எத்தனை கடினங்களுக்குக்குள்ளும் இப் பட்டினம் என்றுமே பஞ்சப்பட்டது இல்லை.
விவசாயமும், வியாபாரமும் ஒரு தாய் பிள்ளை என்று முதியோர் கூறுவார். இங்கு முன்னனி வகிக்கும் மற்றோர் தொழில் வியாபாரமாகும். 'சங்கானைச் சந்தையிலே சுங்கானைக் போட்டுவிட்டேன்' என்றோர் பழைய பாடல் உண்டு. 'சுங்கன்' பாவிப்போர் இருந்த காலத்திலேயே சங்கானை பிரசித்தி பெற்று இருந்தது என இதன் மூலம் தெளிவாகிறது. அயல் கிராமங்களான வட்டுக்கோட்டை, மூளாய், சுளிபுரம், காரைநகர், அராலி, சித்தங்கேணி போன்ற இடங்களிலிருந்து வர்த்தகர்களும் , பொதுமக்களும் அதிகாலையிலேயே இங்கு கூடிவிடுவார்கள். பொருட்கள் யாவும் அங்கு துரித கதியில் விற்பனையாகி விடும்.
மாதர்களினால் 1956ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட 'மாதர் சங்க நிலையம்' ஒரு தொழில் நுட்பக் கல்லூரியைப் போல இயங்கி வருகின்றது . இங்கு இளம்பெண்கள் நெசவுத் தொழிலைக் கற்க அனுமதிக்கப் படுகின்றார்கள். பயிலும் வேளையிலும் அவர்கள் வேதனம் பெறுகின்றனர். இங்கு பயின்ற பெண்கள் பலர் பின்னர் மின் தறி நிலையங்களில் வேலை வாய்ப்புப் பெற்றுள்ளனர்.
நற்பணிக்கு அர்ப்பணித்த நாகலிங்க சுவாமிகள்
இம்மண்ணில் உதித்து , சமயப்பணிக்கு தன்னை அர்ப்பணித்த நாகலிங்கக் சுவாமிகளைப் பலர் அறிவர். இவர் இந்தியாவில் திருவாடுதுறை ஆதினத்தில் சமய, சங்கீத திருமுறைகளை முறைப்படி கற்றார். பின் அங்கேயே பல இடங்களுக்கும் சென்று கதாப்பிரசங்கம்,. பண் இசைப்படி சமயத்தொண்டுகள் செய்து வந்தனர். இவர் தன் பிற்காலத்தில் இலங்கை திரும்பிச் சங்கானை நிகரைவைரவர் ஆலயத்திலும், இலுப்பைத்தார் முருகமூர்த்தி கோயிலிலும் சமயத் தொண்டாற்றி வந்தார் . இன்று இறைவனுடன் கலந்துவிட்ட இவரின் பெயரில் ஒரு நூல்நிலையம் நடாத்தப்பட்டு வருவது குறிபிடத்தக்கது. மேற்கூறிய ஆலயங்களை போல பிராம்பத்தை வீதியில் இருக்கும் அமெரிக்க மிசன் தேவாலயமும், சிவன் கோயில் , அரசடி வயிரவர் , மாவடி வயிரவர், காளி கோயில், முருகன் கோயில் கூடத்தம்மன் கோயில் என்பன பிரசித்தி பெற்ற ஆலயங்களாகத் திகழ்கின்றது.
கல்விக்கு முதல் இடம் கொடுத்துபல பாடசாலைகளை எமது முன்னோர்கள் அமைந்தனர். 'கல்வியே மனிதனின் கண் ஆகும்' என்பதில் அழைக்க முடியாத உறுதிக் கொண்டிருந்தனர். சிவபிரகாச மகாவித்தியாலயம் . அமெரிக்கமிசன் பாடசாலை, விக்னேசுவரா வித்தியாசாலை போன்றவை தரத்தில் முன் நிற்கும் பாடசாலைகளாகத் திகழ்கின்றன.
மின் விநியோகம் இங்கு 1966ஆம் ஆண்டு ஆவணி மாதம் கிடைத்தது. இதன் பின் பல மின் அரிசி ஆலைகள், அரிசி ஆலைகள், கைத்தொழில் சாலைகள் உருவாகின. விவசாயிகள் கூட இதனால் பயன் பெற்றனர் .
இங்கு அரச உதவியுடன் இயங்கி வரும் கால்நடைப் பராமாரிப்பு நிலையம் பணியாற்றி வருகிறது. கால்நடைகளைச் சினைப்படுத்துதல், அவற்றின் நோய்களுக்கு மருந்து கொடுத்தல், பராமரிப்பு பற்றிய அறிவுரை கொடுத்தல் போன்ற பல சேவைகளை செய்கின்றது. இதே போல அரசினர் மரக்காலையும் பல தன்மைகளைத் தருகிறது. தரம் உயர்த்தப்பட்ட புதிய கட்டிடத்தில் இயங்கிவரும் அஞ்சல் அலுவலகமும் சிறந்த சேவை புரிகின்றது.
இங்கு ஒரு பெரிய அரசு ஆசுப்பத்திரி இயங்குகிறது. நோயாளிகளுக்கு ஒவ்வொரு நாளும் இங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதைவிட இரண்டு தனியார் வைத்திய நிலையங்களும் இங்கு மிகுந்த பிரசித்தி பெற்றன. வலிகாமம் மேற்கான உதவி அரசாங்க அதிபர் பணிமனை இங்கே இயங்குகிறது. இங்கு கிராமசேவர்கள் மூலம் மக்களின் குறைகளை அறிந்து அவற்றை நிறைவு செய்கின்றனர். எல்லைத் தகராறு, புயல், வெள்ளம், பயிர்ச்சேதம் போன்றவைகளுக்கு அரசின் உதவியைத் பெற்று தருதல், கூப்பன் பால்மா வீடு, கட்டும் பொருள்களுக்கான அனுமதிகளை வழங்குதல் போன்ற சேவைகளைச் செய்கின்றது. கலைஞ்ர்களின் கருதி ஒரு கலாச்சார மண்டபத்தை இங்கு நிறுவி உள்ளனர் . சாதனை படைத்த கலைஞ்ர்களை உருவாக்கிய பெருமையும் சங்கானைக்கு உண்டு. வட மாகாணத்திலேயே முதன் முதலாக அருகருகே இரண்டு மேடைகளை உருவாக்கி, அதில் ஒரு நாடகத்தை புதுமையான முறையில் மேடை ஏற்றிப் புகழ் கண்டது சங்கானை கலையக நாடகமன்றம், இதேபோல வெண்ணிலா நாடக மன்றம் நிகரை வாலிப மன்றம் , பாலமுருகன் நாடக மன்றம் மன்றங்களும் புகழ் பெற்றிருந்தன.
கலை வளர்ச்சியில் முன்னிலையில் நிற்கும் எமது பட்டினத்தில் உருவான நகைச்சுவை நடிகர்களான திருவாளர்கள் ஜெயபால், சபான், பொன்னுத்துரை, கந்தசுவாமி போன்றவர்களும் புகழ் பெற்றிருந்தனர்.
தென் இந்தியத் திரைவானில் திரைக்கதை வசனம் எழுதிப் புகழ் பெற்ற பின்னர் தயாரிப்பாளராக மாறியுள்ள திரு . சி . குகநாதனைச் தெரியாதவர் யாருமில்லை. சங்கானையில் உதித்த அவர் மேற்படிப்பை இந்தியாவில் முடித்துக்கொண்டு இன்று திரையுலகில் முன்னணிக் கலைஞ்ராக ஒளிவிசீக் கொண்டிருக்கிறார்கள்.
இத்தகைய சிறப்புப்பெற்ற, சகல வசதிகளும் கொண்ட சங்கானை மண்ணின் நினைவுகள் என்று நம் மனதைவிட்டு அகலாது.
-:நன்றி தமிழன் வழிகாட்டி:-

0 comments:

Post a Comment