தொலைந்த விமானம்; குதம்பும் சாத்திரிமார்

ரைசதொலைந்துபோய் இருக்கும் மலேசிய விமானம் பற்றி, சாத்திரிமார் பலரும் பலவித கண்டு பிடிப்புகளைச் செய்து
கொண்டிருக்கின்றார்கள்; என்ன வெண்டு ஒருக்காப் பாருங்கோ!

விமானம் புறப்பட்ட நேரக் கிரக நிலைகளை வைத்துப் பார்த்து அவர்கள் துல்லியமாகக் கண்டு பிடித்தவை என்னவெண்டுதான் படியுங்கோவன்!
* சந்திரன் 7ஆம் வீடு ரிசபத்தில் உச்சம் அடைந்து இருப்பதால், சந்திரன் தண்ணீரின் அதிபதி என்பதால், விமானம் தண்ணியின் உள்ளேதான் இருக்கும் எண்டு அப்படியே வெட்ட வெளிச்சமாய் தெரியுது பாருங்கோ! ஆகவே அது திரும்பி இருக்கவோ, அல்லது கடத்தப்பட்டிருக்கவோ சாத்தியம் இல்லவே இல்லை எண்டு தெரிஞ்சு கொள்ளுங்கோ!

* அய்யய்யோ, 2ஆம் வீட்டு அதிபதி 8ஆம் வீட்டில் எல்லோ இருந்து தொலைத்து விட்டார்! (என்ன விசயமோ தெரியாது; திரும்பி வராமல் அடம் பிடிக்கின்றார்). அதனால்தான் அதைக் கண்டு பிடிப்பதில் தாமதம் ஏற்ப்படுது! இந்த வாரம் (22/03/2014) முடிவு தெரிய வரும்; அவசரப்படாதையுங்கோ!

*அது மட்டுமே! இந்த வியாழன் ஒரு நல்ல மனுஷன். ஆனால், அந்த நேரம் பார்த்து தன் பகையான 8ஆம் வீட்டில் எல்லோ அநியாயமாய் போய் குந்தி இருந்து விட்டார்! (இந்த 269 பேரின்ரை உயிரைக் காப்பாத்தாமல் பகையாளி வீட்டிலை அவர் இருந்ததுக்கு நல்ல காரணம் என்னவெண்டால், வேறை எங்கையோ ஒரு 26,900 பேரின்ரை  உயிரைக் காப்பாத்தவும் இருந்திருக்கலாம்!) அதாலைகூடவே இருந்து விமான ஓட்டிக்கு உதவ ஒரு நல்ல குரு இல்லாமல் போய் விட்டுதுங்கோ! இந்தக் கலி யுகத்திலை நல்லவையையும் நம்பேலாது போலை!

*போதாததுக்கு, உந்த சனியும், செவ்வாயும் கூடி, ஒரு இரக்கமும் இல்லாமல், வழக்காமாய் முன்பக்கம் ஓடுறவை, அப்பவெண்டுபார்த்து பின்பக்கமாய் (ஒழிஞ்சு) ஓடி, அதுவும் இடமில்லாமல், போயும் போயும் ராகுவோடை 12ஆம் வீட்டிலை எல்லோ போய் இருந்து விட்டினம். சரியாய் இவை எல்லாத்தையும் ஆராய்ஞ்சு பாத்தால், இது அப்படியே ஒரு  பயங்கரவாதிகளின் வேலை எண்டுதான் கிளீயராய்த் தெரியுதுங்கோ!.

*எண்டாலும், இயந்திரக் கோளாறு நடந்திருக்கவும் கூடிய சாத்தியக் கூறுகள் இருக்குது. ஏனெண்டால்,  3 பின்னோக்கிப் போன கிரகங்கள் அந்த மர்மமான 12ஆம் வீட்டிலும் இருந்தது பத்தாமல், கேது தன் பகை வீடு 6 இலும், 6 ஆம் வீட்டு அதிபதி செவ்வாய், ஸ்தனாதிபதியாய்  இருந்து கொண்டு 12 ஆம் வீட்டில் போய் குந்தி இருந்தால், -நம்பவே முடியேல்லையுங்கோ!! - (மெக்கானிக்குகள் இல்லாத விமானத்தில்) இயந்திரக் கோளாறுவராமல் வேறு என்னத்தை எதிர்பாக்கலாம் எண்டு நீங்களே சொல்லுங்கோவன்!

இப்பிடி, இப்பிடி மிகவும் கேவலமான நேரத்திலை உந்த விமானத்தை ஏன்தான் பறக்க அனுப்பினவையோ தெரியாது. படிச்ச முட்டாளுகள்!

இப்படியான விபத்துகளை வரும் காலத்திலை தடுக்க வேண்டுமெண்டால், உலகத்து எல்லா விமான நிலையங்களிலும், இனிமேல் சகல விமானங்களையும் நல்ல நேரம் பார்த்து எழும்ப விட வேண்டும்.
அதற்காக, எல்லா விமான நிலையங்களிலும் தனியான சாத்திரப் பிரிவு  ஒன்றை உருவாக்கி, அதற்கு பிரதம சாத்திரப் பண்டிதர், உதவிப் பிரதம  சாத்திரப் பண்டிதர், மேலதிக . பி. சாத்திரப் பண்டிதர், மற்றும் முழுநேர சாத்திரப் பண்டிதர்மார் ஒரு 10 பேரை எண்டாலும் நியமிக்க வேண்டும்.

இவர்கள், ஒவ்வொரு பறப்பின் முன்னும், எடுப்பதற்கான சரியான நல்ல நேரம் பார்த்து, அதைப் பயணிகள் ஒவ்வொருவரினதும் சாத்திரத்தோடு ஒத்துப் பார்த்து, பொருத்தம் இல்லாப் பயணிகளை விலத்தி, ஒத்துப் போகும் சாத்திரமுள்ள பிரயாணிகளை மட்டும் அனுமதித்து, அதை பயணிகளுக்கு அறிவிப்புப் பலகை மூலம் தெரியப் படுத்த வேண்டும்!

அத்தோடு, தேவையான நேரத்தில், தேவை இல்லாத வீடுகளில் போய் குந்தி இருக்கும் நல்ல (ஆனால் விவஸ்த்தை கெட்ட) கிரகங்களுக்கு விருப்பமான பரிகார பூசைகள் செய்து, அவர்களைக் குஷிப்படுத்தி, அவர்களுக்கு விருப்பமான வீடுகளுக்குத் திருப்பி அழைத்துவசதிகள் செய்து கொடுத்து இருக்க வைத்து, (வாடகை முதலிய செலவுகளை அரசு ஏற்கவேண்டும்) அவர்களிடம் நல்லவிதமான பலன் தரக் கூடிய வேலைகளை வாங்குவதும் இவர்களின் தலையான கடமைகளாய் இருக்க வேண்டும்! இது பல உயிர்கள் சம்பந்த்தப் பட்ட விஷயம் பாருங்கோ! (இதற்கு முதலில் சாத்திரிமாருக்கு நல்ல பங்களா, கார் என்று எல்லா வசதியையும் முதல்லை செய்யுங்கோ! அப்பத்தான் அவர்கள் மற்றயவையை கவனிப்பினம்).
இவ்வழியில், எல்லா இருக்கைப் பதிவு முறைகளையும் சீரமைப்புச் செய்யுமாறு எல்லா நாட்டு அரசாங்கங்களையும் கேட்டுக் கொல்லுகின்றோம்!
நானும் அடுத்த முறை பயமில்லாமல் பயணம் செய்ய வேணும் இல்லையோ!
--ஆக்கம்:செல்வதுரை,சந்திரகாசன்

0 comments:

Post a Comment