உங்கள் நண்பரைக் கண்டுபிடியுங்கள்………………

 வணக்கம்,இணைய வாசகர்களே! உறவுகள் ஒன்றுகூடி குதூகலிக்கும் தீபாவளித் திருநாளில்  உங்கள் சிந்தைக்கு விருந்தாக உங்களை சந்திப்பதில் மகிழ்வடைகிறோம்.
    எம் இனிய இளையோரே!உலகத்தில் உத்தமராக வாழத் துடித்துக் கொண்டிருக்கும் இதயங்களே!உங்கள் உண்மை நட்புக்குரியவன் யாரென்று அறிந்து கொண்டீரா?அல்லது,உங்களுடன் பழகும் எல்லோருமே உங்கள் நண்பர்கள் என்று நம்பி ஏமாந்து கொண்டு இருக்கின்றீர்களா?ஆராய்ந்து கொள்ளுங்கள்.
      சகோதர சகோதரிகளே!நீங்கள் தேர்ந்தெடுக்கும் நிறம்கூட உங்கள் குணம் காட்டும்.நீங்கள் உங்கள் வாழ்க்கைக்காக தேர்ந்தெடுக்கும் வழிகூட உங்கள் நண்பரின் குணம் காட்டும்.எனவே உங்கள் நண்பர்களை எப்படித் தெரிவு செய்தீர்கள்.ஒருமுறை அலசிப்  பாருங்கள்.
   நாம் பாடசாலையில் படிக்கின்றபோது  நிறைய மாணவர்கள் எம்முடன்  படிக்கின்றார்கள்.அவர்கள் எல்லாம் எமது நண்பர்களா?எம்முடன் திரைப்படம் பார்க்க கூடவே சிலர் வருகிறார்கள்,அவர்கள் நண்பர்களா?வீதிகளில்  சந்திப்பதில் சிலர் சிரித்து எம்முடன் கதைக்கிறார்கள்.அவர்கள் நண்பர்களா?விளையாட்டு மைதானத்தில் எம் கூட  சந்தோசமாக  இணைந்து விளையாடும் அவர்கள் எல்லாம் எமது நண்பர்களா?அல்லது தொலைபேசியில் பலமுறையும் தொடர்புகொண்டு நேரம் போவது தெரியாமல் எம்முடன் கதைக்கிறார்களே அவர்கள் நண்பர்களா?சிந்தித்துப் பாருங்கள்.
   கூட இருந்து கூழ் குடிக்கும்போது நண்பன் என்று கூறியவன் நம் வாழ்வுக்குக் குழிபறிக்கக் கூடும்.உற்றார் ஆக   நடித்து உதவி பெற்றவன் தன் தேவை முடிந்ததும் நம் இதயத்தினை உதைக்கக்  கூடும்.சிரித்துப் பேசி நல்ல நண்பனாக இருந்தவன் கூட நம்மை அடுத்தவன் பார்த்து சிரிக்க வைக்கக் கூடும்.நமக்காக அழுது  அழுது நடிப்பவன் நம் சந்தோசத்தினை அழித்து நம்மை அழ வைக்கக் கூடும்இருவருக்கிடையே நட்பு உருவாகுவதற்கு ஏற்கனவே தொடர்பும் பழக்கமும் நிச்சயம் இருக்கவேண்டும் என்றில்லை.இருவருக்கும் இடையே காணப்படும் ஒத்த மன உணர்வே போதுமானது.நேரில் காணும்போது புன்சிரிப்புக் கட்டுவது மட்டும் நட்புக்கு அடையாளம் ஆகாது.இதய பூர்வமாக  நேசிப்பதே உண்மையான நட்பாகும்.
    மேலும்,
                            உடுக்கை யிழந்தவன் கைபோல வாங்கே 
                            யிடுக்கண் களைவதா நட்பு. அதாவது 
நண்பன் எனப்படுபவன் நம் உடலை விட்டு உடை நழுவும்போது எமது உத்தரவுக்குக் காத்திராமல் எமது கைகள் தாமாகச் சென்று அவ் உடையினைசரிசெய்வதுபோல்,
நண்பனுக்குவரும் துன்பத்தைப் போக்க தாமாக த்துடி துத்து முன்சென்று  நண்பனுக்கு உதவுவதுதான் நட்புக்கு சிறந்த இலக்கணமாகும் எனத் திருக்குறள் அழகாகச் சொல்கிறது.
பழகும் இருவருக்கிடையில் வளரும் இதய பூர்வமான அன்பினால் கிடைக்கும் இன்பமும் வளருமானால் அதுவே உண்மையான நட்பு ஆகும்.
நல்ல பண்பு இல்லாதவர்கள் அன்பு செலுத்துவது போல் இருந்தாலும்,
அவர்களது தொடர்பு தீய வழிகளுக்கே நம்மை இட்டுச்செல்லும். தீய காரியங்களுக்கெல்லாம்கூட்டுச்சேர்வதெல்லாம் நட்பு என்று கூற முடியாது.
  • -தனக்குப் பயன் கிடைக்கும் போது இணைந்திருந்து தேவை முடிந்ததும் பிரிந்து செல்பவர்,
  • -ஆபத்து  வேளைகளில்,எமைவிட்டுஓடுபவர்கள்.
  • -பொழுதுபோக்குக்காக சிரித்துப் பேசுவதற்காக மட்டும் எம்மோடு இணைவோர்கள்,
  • -நிறைவேற்றக் கூடிய நியாயமான செயலை செய்யவிடாமல்  எம்மைத் தடுப்பவர்,
  • -சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பில்லாதவர்,
  • -தனிமையில் பேசும் பொது இனிக்கப் பேசி விசயங்களைப் பெற்றுப்பின் பொது   இடங்களில்,அதனை வைத்து,மற்றவர்களுடன் பழித்துப் பேசுபவர்.
இவர்களின் தொடர்பு நட்பாக ஏற்றுக்கொள்ள முடியாது. அதற்காக அவர்களை விலக்கிடவும் கூடாது.
ஔவையாரும் தனது மூதுரையில் 
                                                     ''அற்ற குளத்தில் அறு நீர்ப்பறவை போல்
                                             உற்றுழித் தீர்வார் உறவு அல்லர்; அக்குளத்தில்

                                             கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே

                                             ஒட்டி உறுவார் உறவு''
அதாவது, குளத்தில் நீர் வற்றிய உடன் விலகிச் செல்லும் 
பறவைகள் போல, நமக்குத் துன்பம் வந்தபோது நம்மை விட்டு 
விலகிச் செல்பவர்கள் உறவினர் அல்லர்.  அந்தக் குளத்திலேயே 
அப்போதும் சேர்ந்து வாடும் கொட்டி, அல்லி, நெய்தல் 
கொடிகளைப் போல, நம்முடனேயே நம் இன்பங்களையும் துன்பங்களையும் பகிர்ந்து 
கொள்பவர்களே நம் உறவு.எனப் பொதுவாகக் கூறுகிறார்.

எனவே உங்கள் உண்மையான நண்பனை யார் என உணர்ந்து நலமாக வாழப் பழகிக் கொள்ளுங்கள்.
                                            
                                            --------------செ.மனுவேந்தன்.

1 comments:

  1. vinothiny pathmanathan dkSaturday, August 20, 2011

    நட்பின் தகுதி பற்றி மிக ஆழமாக சிந்தித்து யதார்த்தத்தினை வெளிக்கொணர்ந்த உங்களுக்கு நன்றிகள். நம்பிக்கையான நட்பு என்பது இன்றைய
    காலகட்டத்தில் ஒரு கேள்விக்குறி தான். தோழன் என்பவன் சிரித்துப் பேசுவதற்கு மட்டும் அல்ல ,துவண்டு போகும் போது தோள் கொடுக்கவும் தான் என்று மிகவும் சிறப்பாக இந்த தொகுப்பினை வழங்கியிருக்கின்றீர்கள் .பாராட்டுக்கள் வேந்தன் அண்ணா !

    ReplyDelete