எந்த நாடு போனாலும் தமிழன் ஊர் [திரிகோணமலை]போலாகுமா?

 திருகோணமலை/Trincomalee
⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭
திருகோணமலை அல்லது திரிகோணமலை இலங்கையின் கிழக்குப் பகுதியிலுள்ள முக்கிய நகரங்களில் ஒன்றாகும். இதே பெயரே இந்த நகரம் அமைந்துள்ள மாவட்டத்துக்கும் வழங்கிவருகின்றது.
இலங்கையின் கீழ் கரையில் அதாவது கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ளது. இதன் எல்லைகளாக அனுராதபுரம், பொலநறுவை, மட்டக்களப்பு, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்கள் அமைந்துள்ளன.
திருக்கோணமலையில் தமிழர், சிங்களவர், முஸ்லீம்கள் ஆகிய மூன்று இன மக்களும் இந்த நகரத்தில் வாழ்கின்றபோதிலும் நகரத்தில் தமிழர்களே பெரும்பான்மையாக வாழ்கின்றனர்.

பிரித்தானியர் ஆட்சி

1957 வரை திருக்கோணமலை பிரித்தானியக் கடற்படையின் முக்கிய தளமாகவும், அதில் பணி புரிந்த இங்கிலாந்து பிரசைகளின் வசிப்பிடமாகவும் இருந்தது. திருமலை கோட்டை பிரித்தானியர்களாலும் பாவிக்கப்பட்டது. 1950 களில் பிரித்தானியரால் கோட்டையினுள் கட்டப்பட்ட பல பங்களாக்கள் இன்றும் நிலைத்து இருப்பதுடன். சிங்கப்பூரை ஜப்பானியர்கள் கைப்பற்றிய பின்பு திருக்கோணமலையே பிரித்தானியரின் பிரதான கடற்படைத்தளமாக செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

திருக்கோணேச்சரம்
இது இலங்கையின் புகழ்பெற்ற ஆலயங்களுள் ஒன்றாக விளங்குகின்றது. இது கி.பி ஏழாம் நூற்றாண்டில் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரின் பாடல் பெற்ற தலமாகும். உலகில் உள்ள வழிபாட்டுத்தலங்களில் மிகப்பழமையான இவ்வாலயத்தை இலங்கையை ஆண்ட மனு மாணிக்கராஜ என்ற மன்னன் கி.மு. 1300ஆம் ஆண்டிற்கு முன்னர் இக்கோயிலைக் கட்டினான் என்று சான்றுகள் கூறுகின்றன. இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் ஈழ நாட்டுத் தலங்களில் ஒன்றாகும்.

போர்த்துக்கேயர் கோவிலை அழித்தமை

கி.பி. 1624 ஆம் ஆண்டில் போர்த்துக்கேயத் தளபதியாகவிருந்த கொன்ஸ்டன்டைன் டீ சா கோயிலை இடித்து கோவிலில் இருந்த கல்வெட்டுப் பிரதியொன்றினை போர்த்துக்கேய மன்னனுக்கு அனுப்பி வைத்தான். கோயிலின் மூல விக்கிரகம் நகர உலா சென்றபோது போர்த்துக்கேயர் கோவில் குருமார் போன்று வேடம் தரித்து கோயிலினுள் புகுந்து அதன் சொத்துக்களை கொள்ளையிட்டதுடன் கோயிலையும் அழித்தனர். அழிக்கப்பட கற்களைக் கொண்டு திருகோணமலைக் கோட்டையையும் கட்டினர். இந்தக்காலப்பகுதியில் பல பெளத்த இந்து ஆலயங்கள் போர்த்துக்கேயரால் அழிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கோட்டை சுவரில் "முன்னே குளக்கோட்டன் ..." எனும் கல்வெட்டு காணப்படுவதும், கயல் சின்னம் (பாண்டியருடயது) பொறிக்கபெற்றிருப்பதும் இக்கோவிலின் தொன் பெருமையை உணர்த்தும்.


இராணுவ காட்சியகம் 


இங்கு இராணுவ காட்சியகத்தில் முதலாம் உலகப் போர் காலத்திலிருந்து இன்றுவரையில் உபயோகித்த/உபயோகிக்கும் ஆயுதங்கள், மட்டுமல்லாது உள்நாட்டு யுத்தத்தில்  விடுதலைப் புலிகள் பாவித்த புதுவகையான எந்த நாட்டிலும் இல்லாத பேராயுதங்களும்  காட்சிப் படுத்தப்பட்டிருந்தன.

கன்னியா வெந்நீரூற்று
கன்னியா வெந்நீரூற்று திருகோணமலை மாவட்டத்தில் உள்ள ஒரு இயற்கை வெந்நீரூற்று ஆகும். குறிப்பிட்ட அந்த இடத்தில் 90 - 120 செ.மீ ஆழமுடைய ஏழு சிறிய சதுர வடிவான கிணறுகள் அமைந்துள்ளன. இயற்கையாகவே ஏற்பட்டிருந்த வெந்நீரூற்றில், நாளடைவில் செயற்கைக் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கிணற்றிலுமிருந்து வெவ்வேறு வெப்பநிலையில் நீர் ஊறி வந்து கொண்டிருக்கும்.
தமிழ் வரலாற்றின் படி, பத்துத் தலை படைத்த இராவணன் தனது தாயாருக்கு இறுதிக் கிரியைகள் செய்வதற்காக உடைவாளை உருவி ஏழு இடங்களில் குத்தியதாகவும் அந்த இடங்களில் இந்த வெந்நீர் ஊற்று உருவாகியதாகவும் ஐதீகம் உண்டு.
தற்போது பெருமளவு சுற்றுலாப் பயணிகள் இங்கு சென்று நீராடுகின்றனர்.

வரலாறு 

 திருகோணமலை மரபுரிமைகள் நிறைந்ததும், ஆரம்ப வரலாற்றுக் காலகட்டம் முதல் வாழ்ந்த மனிதர்களின் சான்றுகள் நிறைந்ததுமான பிரதேசமாகக் கருதப்படுகின்றது. இப்பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகளின் போது ஆரம்ப வரலாற்றுக் காலகட்டத்திலிருந்து அந்நியர் ஆட்சிக் காலம் வரை வாழ்ந்த மனிதர்களின் எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டு உறுதிப்படுத்தப் பட்டுள்ளன. சமவெளிப் பிரதேசமாகக் காணப்படுகின்ற இந்த மாவட்டத்தில் இயற்கையாக அமைந்துள்ள கற்குகைகளில் ஆதி மனிதர்கள் வாழ்ந்தமைக்கான பல சான்றுகள்  அண்மையில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகளின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. விசேடமாக இங்கு அமைந்துள்ள இயற்கையான துறைமுகம், சேருவில பிரதேசத்தில் இயற்கையாக அமைந்துள்ள செம்புச் சுரங்கம் போன்ற விடயங்கள் காரணமாக திருகோணமலை மாவட்டம் வரலாற்றுச் சிறப்பு மிக்க பிரதேசமாக விளங்குகின்றது. கி.மு. 4 ஆம் நூற்றாண்டில் இருந்து கி.பி. 12 ஆம் நூற்றாண்டு வரையான காலப்பகுதியினுள் சேருவில பிரதேசத்தில் இருந்த செம்புச் சுரங்கத்திலிருந்து பெற்றுக் கொள்ளப்படும் செம்பு வர்த்தக ரீதியாக உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் பாவனையில் இருந்ததற்கான சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. செம்பு அகழ்ந்தெடுக்கப்பட்ட இடங்கள், அவற்றை உருக்குகின்ற இடங்கள், உருக்குவதற்காகப் பயன்படுத்தும் அடுப்புகள் என்பன தொல்பொருளியல் ஆய்வுகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இலங்கையின் கிழக்குக் கடற்கரைப் பிரதேசத்தில்  அமைந்திருக்கும் திருகோணமலை இயற்கைத் துறைமுகம் தவிர்ந்த கடந்த காலங்களில் பாவனையில் இருந்த ஏனைய பல சிறு துறைமுகங்கள் தொடர்பான தகவல்களும் வெளியாகியுள்ளன. திருகோணமலைத் துறைமுகம் புராதன காலத்தில் கோகண்ண துறைமுகம் என அழைக்கப்பட்டதாகவும், இலங்கையிலேயே உள்ள மிகப் பெரிய இயற்கைத் துறைமுகம் எனவும் பிரசித்தி பெற்று இருந்தது. புராதன காலந்தொட்டு மேலைத்தேய மற்றும் கீழைத்தேய நாடுகளை இணைக்கும் வர்த்தகத் தொடர்பு மையமாகவும் விளங்கிய இத்துறைமுகம் சுற்றிவர மலைகளால் சூழப்பட்ட ஒரு வளைகுடா போன்று அமைந்திருப்பதனால், சீரற்ற காலநிலைகள் காரணமாக கப்பல்களுக்குச் சேதமேற்படாதவாறு காப்பதற்கான ஒரு சிறந்த பாதுகாப்புப் பிரதேசமாக அமைந்திருப்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும். இந்து மகா சமுத்திரத்தில் மிகவும் பாதுகாப்பாகவும், வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடிய சிறந்த துறைமுகமாகவும் விளங்குவதாக மேலை நாட்டவர் கருத்துத் தெரிவித்துள்ளனர். ஆகையால் துறைமுகம் சார்ந்த பிரதேசத்தில் தமது கோட்டைகளை நிறுவினார்கள். தற்போது எஞ்சியுள்ள பிரெட்றிக்  கோட்டையை ஒல்லாந்தர் நிர்மாணித்துள்ளதாகவும், கடந்த காலம் தொடங்கி இன்று வரை மிகவும் பாதுகாப்பானதொரு கோட்டையாக இது விளங்குகின்றது. விசேடமாக கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலந் தொடங்கி செயற்பாட்டில் இருந்த கிழக்கு மாகாண பிரதான பாதை திருகோணமலையில் இந்த துறைமுகத்தில் முடிவடைகின்றது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். 


📂செ.மனுவேந்தன்





1 comments:

  1. திருகோணமலையின் வரலாறு, திருக்கோணேசர் பெருமை, கன்னியா வெந்நீரூற்றின் சிறப்புகள் அருமையாக கூறப்பட்டுள்ளது. சுற்றுலா செல்பவர்களுக்கு இலகுவாக அல்லது உதவியாக இருப்பதற்கு திருகோணமலையின் பார்வை இடக்கூடிய வேறு ஏதாவது இடங்கள் இருந்தால் அவற்றையும் சேர்க்கலாம் என்று நினைக்கிறேன். வாழ்த்துக்கள். பாராட்டுக்கள். நன்றி.

    ReplyDelete