வரலாறு தன்னை மீண்டும் கூறுகிறதா? [பகுதி 03]



வரலாறு கற்பித்த பாடங்களை பின்பற்றுகிறோமா ?
Does history repeat itself? Do we follow the lessons of history?



தமிழ்நாடு, தங்கச்சிமடத்தில் உள்ள மருந்து கடை ஒன்றில் சமூக இடைவெளி இல்லாமல் பலர் கூட்டமாக மருந்து பொருட்களை வாங்க நின்றிருந்தனர். இதைப்பார்த்த கலெக்டர் அந்த மருந்து கடைக்கு, மார்ச் 29, 2020 சீல் வைக்க உத்தரவிட்டார். அதே போல இலங்கையிலும் இரண்டு தரம் ஒரே நாளில் போலீஸ் எச்சரித்தும், மூன்றாம் தரமாக போலீஸ் அங்கு பார்வையிட வரும் பொழுது மீண்டும் கடைக்குள் 20 - 30 பேர் நெருக்கமாக நிற்பதை கண்ட போலீஸ் கடையை, நீதிபதியின் உத்தரவு பெற்று, சீல் வைத்தனர் என்ற செய்தி மார்ச் 30, 2020 அறிவிக்கப்பட்டது. இதில் இருந்த நாம் அறிந்தது என்ன ? இரண்டு தரம் அனுபவம் பட்டும், அந்த கடைக்காரர் எதுவுமே அதில் இருந்து கற்கவில்லை என்பதே ? அதே போலத்தான் இந்த கோவிட் 19 நோய்த்தொற்றிலும் பல நாடுகள், வரலாறு கற்பித்த பாடங்களை உடனடியாக பின்பற்றாமையை காண்கிறோம். ”தலைக்கு மேல் வெள்ளம் போன பின்பு சாண் போனால் என்ன முழம் போனால் என்ன ?”  தலை முங்கும் [மூழ்கும்] அளவிற்கு தண்ணீர் வந்து நாம் மூழ்க நேரிட்டால் சிறிதளவு தண்ணீர் கூட நம் மூச்சு இழுக்கமுடியாமல் மூழ்கடித்து விடலாம். தலைக்கு மேல் எத்தனை அளவு தண்ணீர் என்பது இங்கே கணக்கில்லை. அதே போல பிரச்சனைகள் தொடங்கும் போதே அதை தீர்க்க முயற்சி மேற்கொள்ள வேண்டும். அல்லது பிரச்சனைகள் ஒவ்வொன்றாக அதிகமாகி நம்மால் கட்டுப்படுத்த இயலாத நிலைக்கு சென்றுவிடலாம். அப்படித்தான் இன்று பல நாடுகள் திணறுகின்றன ?

உலக தொற்று நோய் திடீர் பரவல்களுக்கு வரலாறு ஒன்றும் புதிது அல்ல. அங்கு பல வரலாறுகள் எப்படி அவற்றின் பரவலை கட்டுப் படுத்தலாம் என எமக்கு போதித்துள்ளன. ஆனால் அவ்வற்றை நாம் இன்று தக்கதருணத்தில் சரியாக பின்பற்றுகிறோமா என்பது வேறுவிடயம். அதுமட்டும் அல்ல, வரலாறு புகட்டிய அறிவுரைகளை நாம் முன்பு அலட்சியம் செய்ததற்கும் பல உதாரணங்களும் உண்டு. அதிகமாக, அரசாங்கம் உலக தொற்று நோய் பரவலை எதிர்பார்க்க தவறி விட்டதுடன் [failed to anticipate] தனது குடிமக்களுக்கு, அந்த பரவலின் தாக்கத்தின் பாதிப்பில் இருந்து மீள சரியான சமூக பொருளாதார உதவிகளையும் வழங்க தவறி உள்ளது. உதாரணமாக, கட்டாய தனிமை படுத்துதல், போக்குவரத்து தடைகள், பாடசாலைகள், வணக்க தளங்கள் மற்றும் அத்திய அவசியம் அற்ற உள்ளூர் வியாபாரங்கள் மற்றும் தொழிற்சாலைகள் போன்றவற்றை மூடுதல் போன்ற பல நடவடிக்கைகளுக்கு மக்கள் முகம் கொடுக்கவேண்டி உள்ளது. அது மட்டும் அல்ல, இந்த நெருக்கடி அங்கு புரையோடிக்கிடக்கும் சமூக சமத்துவமின்மையையும் [“These crises expose social inequality,”] இன்று  வெளிக்காட்டுகிறது. இதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். எனவே இந்த தொற்றுநோயை அகற்ற , கட்டுப்படுத்த முயலும் அரசாங்கம், உலக நிறுவனங்கள், இந்த சமூக சமத்துவமின்மையையும் நீக்க, கட்டுப்படுத்த சமகாலத்தில் முயலவேண்டும். இல்லாவிட்டால் அதனால் ஒரு பயனும் இல்லை. கிருமிக்கு உயர்ந்தவன் தாழ்ந்தவன், ஏழை பணக்காரன் போன்ற வேறுபாடுகள் கிடையாது, எங்கு பலவீனம் உளதோ அங்கு மீண்டும் ஆரம்பித்து தன் தொற்றுதல்களை முன்னெடுக்கும்.

வரலாறு எப்பவும் திருப்பி வரவே எத்தனிக்கும். எங்கள் நினைவகம் மங்கும்போது, ​​கடந்த கால நிகழ்வுகள் நிகழ்கால நிகழ்வுகளாக மாறக்கூடும். [As memory fades, events from the past can become events of the present.] எனவே நாம் அதற்க்கு இடமளிக்கக் கூடாது. உதாரணமாக நீங்கள் ஐஸ்கிரீம் ஒன்றை மிகவும் விரைவாக சாப்பிடுகிறீர்கள் என்று வைப்போம் , அப்பொழுது உங்களுக்கு தலைவலி வருகிறது என்றும் வைப்போம். அப்படியானால் நீங்கள் கட்டாயம் அடுத்தமுறை மிக மெதுவாகவே சாப்பிட முயல்வீர்கள். ஆனால் வரலாறு எச்சரிக்கைகள் நிறைந்து இருந்தாலும், நாங்கள் அவ்வற்றை  கவனத்தில் பெரிதாக எடுப்பதில்லை. தங்களது முன்னோர்களைப் போலவே கடந்த காலமும் தவறுகளைச் செய்தது, இனி வரும் காலமும் அதே தவறைத்தான் செய்வார்கள் என்று சொல்லலாம். அதில் மாற்றமில்லை ? அது தான் எமக்கு உள்ள அடிப்படை பிரச்சனை.

பெப்ரவரி வரை கொரோனா வைரஸ் சீனாவின் உள்ளூர் பிரச்சினை என்று மட்டுமே பொதுவாக கருதப்பட்டது மட்டும் அல்ல எந்தவொரு பாதுகாப்பு நடவடிக்கையும் உலக நாடுகள் எடுக்காமல் அலட்சியமாக இருந்து விட்டன. ஆனால், இன்று நிலைமை தலைகீழாய் மாறி, கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பொருளாதார ரீதியாகவும் சுகாதார ரீதியாகவும் பெரும் விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. கிறித்தவ மற்றும் யூதர்களின் திருநூலாகிய திருவிவிலியத்தில் (பழைய ஏற்பாடு) இடம்பெற்ற ஒரு நூலான சபை உரையாளர் (Ecclesiastes) எனக்கு ஞாபகம் வருகிறது, அதிகாரம் 1 இல், முன்பு இருந்ததே பின்பும் இருக்கும்; முன்பு நிகழ்ந்ததே பிறகும் நிகழும் [‘What has been, will be again. What has been done, will be done again.’- 1:9 ] என்ற ஒரு அறிவுரை காணப்படுகிறது. அப்படித்தான் முன்பு எதோ ஒரு வடிவத்தில் நிகழ்ந்ததே இன்று இன்னும் ஒரு வடிவத்தில் நிகழ்கிறது. ஆனால் இம்முறை தனிமை படுத்தல், மூடுதல் போன்றவற்றால், உதாரணமாக, அண்மைக்கால 2003 சார்ஸ் [SARS] தொற்று நோயால்  உலக பொருளாதாரத்திற்கு ஏற்பட்ட  இழப்பைவிட இம்முறை மிகப் பெரிய இழப்பு ஏற்படும் என எதிர்பார்க்கலாம்?  அது மட்டும் அல்ல முதலாளித்துவ பொருளாதார அமைப்பே ஒரு வேளை மாறலாம், ஏனென்றால் சுகாதார ரீதியாக, இன்று  உலகம் தொற்று நோய்களால் மிகவும் பாதிப்படைவதை உணர்கிறது. எனவே சுகாதாரத்தை ஆரோக்கியத்தை எல்லா மட்டத்திலும் கையாளாக் கூடியதாக பொருளாதார அமைப்பு பரிணாமம் அடையவேண்டும். இது ஒரு நன்மையாக எதிர்காலத்தில் அமையலாம்.

கோவிட் 19 , கொரோனா வைரஸாலும், இன்புளுவென்சா, இன்புளுவென்சா வைரஸாலும் ஏற்பட்டாலும், இந்த இரு வைரஸ்களும் வேறுபட்டவையாக இருந்தாலும், இந்த புதிய கிருமியின் நடத்தைகளை ஆராய, குறைந்தது 50 மில்லியன் மக்களை கொன்ற 1918 உலக தொற்று நோய், ஒரு பொருத்தமான மாதிரியாக [might be the best model] அமையலாம் என்று வல்லுனர்களால் [Centers for Disease Control and Prevention] கருதப்படுகிறது. இந்த இரண்டு தொற்று நோய்களும் சில அம்சங்களில் வேறுபட்டவையாக இருந்தாலும், இரண்டிற்கும் ஒற்றுமையான திறமையான மருந்து அல்லாத கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை [The most effective class of nonpharmaceutical control measures] காணமுடிகிறது. உதாரணமாக, சமூக இடைவெளி பேணுதல், மக்கள் ஒன்றுகூடல்களை ரத்து செய்தல், வணக்க தளங்களை, பாடசாலைகளை, மதுபான கடைகளை, உணவகங்களை மூடுதல், நோயுற்றவர்களை மற்றும் அவர்களுடன் தொடர்பு வைத்தவர்களை தனிமைப்படுத்தல் [social distancing: canceling public gatherings, closing places of worship, schools, bars and restaurants, isolating the sick and quarantining those they came in contact with.] போன்றவையாகும். இதை இன்று பல உலக நாடுகள் கையாள தொடங்கி உள்ளன, என்றாலும் தாமதங்களும் எதோ எனோ என்று தொடக்கத்தில் அலட்சியமாக இருந்ததும், மக்கள் இதன் உண்மையான வீரியத்தை உணராததும், இந்த உலக நோய்த்தொற்றை விரைவாக கட்டுப்படுத்துவதிலும் குறைப்பதிலும் சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது
என்பதை உணரமுடிகிறது.

தொற்றுநோயியல் துறையில், ஒரு நோய்த்தொற்றின் அடிப்படை இனப்பெருக்கம் எண் (சில நேரங்களில் அடிப்படை இனப்பெருக்க விகிதம், மேலும் R 0, r சுழியம் எனக் குறிக்கப்படுகிறது), ஒரு தொற்று நோய் பாதிப்பானது அது வீரியமாக செயல்படும் காலப்பகுதியில் சராசரியாக உருவாக்கும் நோய் பாதிப்புகளின் எண்ணிக்கையாக  கருதப்படுகிறது. உதாரணமாக R 0 ஒன்றிலும் பார்க்க கூட இருந்தால் [ > 1] தொற்றானது மக்களிடையை எளிதில் பரவ முடியும் என்பதை எடுத்துக் காட்டுகிறது. உதாரணமாக , பருவகால காய்ச்சல் [seasonal flu] பரவும் வீதம் [அடிப்படை இனப்பெருக்க எண் / basic reproductive rate / number] 1.3 என்றும், அதே நேரம் கோவிட் 19 இன் வீதம் 2.25 என்றும் கருதினால், . முதலாவது நோயாளரில் இருந்து, ஒருவரில் இருந்து ஒருவராக பத்து தாவலின் பின், முதல் தொற்று கண்டவர் மொத்தம் 56 பேருக்கு நோயை பரப்பி இருப்பார், ஆனால் கோவிட் 19 அதே பத்து தாவலின் பின், முதல் தொற்று கண்டவர் 2047 பேருக்கு பரப்பி இருப்பார். இதில் இருந்து கோவிட் 19  இன் பரப்பும் ஆற்றல் எமக்கு ஆச்சிரியத்தையும் கவலையையும் கொடுக்கிறது. இதைத்தான் இன்று உலகம் தாமதமாக உணர்கிறது. பொது மக்களும் இதை உணர்ந்து அரசுடனும் சுகாதார துறையுடனும் ஒத்துழைக்க வேண்டும், ஏன் என்றால் நோய் தோற்றிய நீங்கள் ஒருசில நாட்களிலேயே இரண்டாயிரத்துக்கு மேற்பட்டவர்களை நோய்க்குள்ளாக்கி விடுவீர்கள். எனவே வெளிப்படையாக உண்மையாக இருங்கள்.

கோவிட் 19 இன் பரவலின் குணாதிசயங்களையும் வீரியத்தையும் ஆராய இன்புளுவென்சாவை மாதிரியாக எடுத்ததிற்கு இன்னும் ஒரு காரணம் அதன் அடிப்படை இனப்பெருக்கம் எண் 2 இற்கும் 3 இக்கும் இடையில் இருப்பதாலும், அதே நேரம் கோவிட் 19 இன் அடிப்படை இனப்பெருக்கம் எண் 2 இற்கும் 2.5 இக்கும் இடையில் ஆகும். எனவே கோவிட் 19 இன் கூடிய பெறுமானம் அல்லது எல்லை, இன்புளுவென்சாவின் சராசரியுடன் ஒத்து போவதால் ஆகும். 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]
பகுதி 04 தொடரும்

ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துங்கள் → Theebam.com: வரலாறு தன்னை மீண்டும் கூறுகிறதா? [பகுதி 01]

0 comments:

Post a Comment