துவரம் பருப்புகளை சாப்பிடுவதால் தீரும் நோய்கள் என்ன தெரியுமா?



உலகெங்கிலும் ஏராளமான பருப்பு வகை பயிர்கள் மனிதர்கள் உண்பதற்காக பயிரிடப்பட்டு வளர்க்கப்படுகின்றன. இந்தப் பருப்புகள் அனைத்துமே நமது உடல்நலத்திற்கு மிகவும் அத்தியாவசியமான சத்துக்களை கொண்டதாக இருக்கிறது. இதில் நம் நாட்டு சமையலில் அன்றாடம் இடம்பெறும் ஒரு பருப்பு வகையாக துவரம் பருப்பு இருக்கிறது. இந்த துவரம் பருப்பு சாப்பிடுவதால் ஏற்படும் மருத்துவ ரீதியான பலன்கள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

 துவரம் பருப்பு பயன்கள்

 இரத்த அழுத்தம் 
நடுத்தர வயது மனிதர்களுக்கு ரத்த அழுத்தம் ஒரு முக்கிய பிரசாணையாக இருக்கிறது. துவரம் பருப்பில் உள்ள பொட்டாசியம் சத்து அதிகம் உள்ளது. இது இரத்த குழாய் விரிப்பானாக‌ச் செயல்பட்டு இரத்த ஓட்டத்தை சீராக நடைபெறச் செய்கிறது. இதனால் இரத்த அழுத்தம் குறைந்து, உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. எனவே ரத்த அழுத்த பிரச்சனை தீர அடிக்கடி உணவில் துவரம் பருப்பை சேர்த்து கொள்வது அவசியம்.

 ஆரோக்கியமான வளர்ச்சி
 உடலில் தசைகளின் வலுவிற்கும் வளர்ச்சிக்கும் மிகவும் அத்தியாவசியமான ஒரு சத்து புரதச் சத்து ஆகும் துவரம் பருப்பில் ஆரோக்கியமான உடல் வளர்ச்சிக்குத் தேவையான புரதச் சத்து அதிகமுள்ளது. புரதமானது செல்கள், திசுக்கள், எலும்புகள், தசைகளின் உருவாக்கத்திற்கு மிகவும் அவசியமானது. எனவே குழந்தைகள் மற்றும் கடுமையான உடல் உழைப்பை கொண்டவர்கள் துவரம் பருப்பை அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டு வர வேண்டும்.

 காயங்கள் 
நாம் அனைவருமே எப்போதாவது அடிபட்டு காயங்கள், புண்கள் ஏற்படுவது சகஜம் தான். இத்தகைய காயங்கள் வெகு விரைவில் ஆறுவதற்கு புரத சத்து மிகுந்த உணவுகளை சாப்பிட வேண்டும். காயங்களை விரைந்து ஆற்றவும், செல்களின் மறுவளர்ச்சிக்கும் புரதச்சத்து அவசியமானது. எனவே துவரம் பருப்புகளை பக்குவம் செய்து அடிக்கடி சாப்பிடுவதால் மேற்கண்ட பலன்களை பெறலாம்.

 ரத்த சோகை
 வளரும் நாடுகளில் பிறக்கும் குழந்தைகளை அதிகம் பாதிக்கும் ஒரு குறைபாடாக இரத்த சோகை இருக்கிறது. ரத்தத்தில் ஃபோலேட்டுகளின் குறைபாட்டினால் ரத்த சோகை ஏற்படுகிறது. துவரம் பருப்பில் அபரிதமான ஃபோலேட்டுகள் இருக்கின்றன. எனவே வளரும் நாடுகளில் குழந்தைகளிடம் காணப்படும் அனீமியா எனப்படும் ரத்த சோகைக்கு துவரம் பருப்பு ஒரு சிறந்த தீர்வாக இருக்கிறது. 

வீக்கம், அழற்சி
 எதிர்பாராதவிதமாக அடிபடும் போது சிலருக்கு உடலில் அடிபட்ட பகுதிகளில் வீக்கம் ஏற்படுகின்றன. மேலும் இது தீவிரமடைந்து அழற்சியும் உண்டாகிறது. துவரையில் உள்ள கனிமச்சத்துக்கள் வீக்கத்தைக் குறைப்பதோடு எதிர்ப்பு அழற்சி தன்மையையும் அதிகம் கொண்டுள்ளன. மேலும் அடிபட்ட இடத்தில் உண்டாகும் வீக்கம் மற்றும் இரத்தகட்டிற்கு துவரம் பருப்பை அரைத்துப் போடுவதால் வீக்கம் விரைவில் குறையும்.

 நோய் எதிர்ப்பு ஆற்றல்
 எத்தகைய நோய்களும் நம்மை அணுகாமல் இருக்க நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் சக்தி வாய்ந்ததாக இருக்க வேண்டும். துவரையில் உள்ள வைட்டமின் சி சத்தானது, உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கிறது. இது இரத்த வெள்ளை அணுக்களின் உற்பத்தியை அதிகரித்து, ஆன்டிஆக்ஸிஜன்டாக செயல்பட்டு உடல்நலத்தை மேம்படுத்துவதோடு நோய் எதிர்ப்பாற்றலையும் அதிகரிக்கிறது. 

இதய நலம் 
உலகெங்கிலும் இதயம் சம்பந்தமான நோய்களால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. துவரம் பருப்பில் உள்ள பொட்டாசியம், நார்ச்சத்து, குறைந்தளவு கொழுப்புச்சத்து ஆகியவை இதயநலத்தை மேம்படுத்துகிறது. பொட்டாசியம் இரத்த அழுத்தத்தைச் சீராக்குகிறது. நார்ச்சத்து கொழுப்பு சேகரமாவதைத் தடுக்கிறது. எனவே துவரம் பருப்பை அடிக்கடி சாப்பிடுவதால் இதய நலம் மேம்பட்டு, ஆயுளை அதிகரிக்கிறது. 

செரிமான சக்தி
 நாம் உண்ணும் உணவை நன்கு செரிமானம் செய்யும் சக்தி நமக்கு இருக்க வேண்டும். துவரம் பருப்பில் உள்ள நார்ச்சத்து உணவை நன்கு செரிமானம் செய்ய உதவுகிறது. மேலும் உடலில் உள்ள கழிவுகளை நீக்கி வெளியேற்றவும் நார்ச்சத்து உதவுகிறது. வயிற்றுப்போக்கு, வாந்தி, மலச்சிக்கல் உள்ளிட்ட செரிமானம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படாமல் நம்மை பாதுகாக்கிறது.

 By Hariprasath 
 😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋

1 comments: