பழகத் தெரிய வேணும் – 12

 👪குடும்பச் சுற்றுலா👫


“அடுத்தமுறை, உலகத்தைச் சுற்றிப் பார்க்கப் போகும்போது, என்னையும் அழைத்துப் போகிறாயா?” கேட்டது என் எட்டு வயதாகியிருந்த பேரன். நான் எங்காவது அயல்நாடு போய்விட்டு, கதைகதையாகச் சொல்வதைக் கேட்டு, அவனுக்கும் ஆர்வம் பிறந்திருந்தது.

 

அப்படி என்ன கதை?

தற்போது கிழக்கு மலேசியா என்று அழைக்கப்படும் போர்னியோ காட்டுக்கு என் மகளுடன் சென்றிருந்தேன்.

 

காட்டில் ஆங்காங்கு சிறு குடில்கள். ஜன்னலோரமாக வைத்திருக்கும் வாழைப்பழத்தை வெளியிலிருந்து உரிமையுடன் எடுத்துச் சாப்பிடும் குரங்குகள். குடிலுக்கு வெளியே இருந்த மரத்தில் பின்னிப் பிணைந்த நாகம். இவையெல்லாம் நகர்ப்புறத்தில் காணக் கிடைக்காத அனுபவங்கள்.

 

‘இங்கு குழாய்த்தண்ணீர் சிவப்பாக இருக்கும். மரங்களின் வேரால் அப்படி ஆகிறது. ஆனால், சுத்தமான நீர்தான்,’ என்று முதலிலேயே எச்சரிக்கை விடுத்திருந்தார்கள்.

 

குளியலறைக்குப் போனபோது, அங்கு ஒரு தவளை இருப்பதைக் கண்டு, வெளியே ஓடி வந்தேன்.

 

‘வேண்டுமென்றுதான் ஒவ்வொரு குளியலறையிலும் ஒன்றை விட்டிருக்கிறோம். அப்போதுதான் கொசுத்தொல்லை இருக்காது!’ என்ற விளக்கம் கிடைத்தது.

 

JUNGLE TREKKING என்று காட்டு வழியில் நடப்பதற்குப் புறப்பட்டேன். அதுதான் முதன்முறை. என்ன எதிர்பார்ப்பது என்று புரியாததால் உற்சாகமாக இருந்தது.

 

நான் போகும் வழியில் ஒரு PROBOSCIS குரங்கு உட்கார்ந்திருந்தது. பெரிய உருவம்.  நட்டநடுவிலா, இப்படி உட்கார்ந்திருக்கும்!

 

இம்மாதிரி தருணங்களில்தான் பக்தி அதிகரித்துவிடுகிறது.

 

நான் அதற்கு மிக அருகில் நடந்துபோனேன். அது கவனிக்கவேயில்லை. சில சமயங்களில் நாம் அடையும் அச்சம் அனாவசியம் என்று புரிந்தது.


முன்பின் பழக்கமில்லாமல் ஒரு காரியத்தில் இறங்கினால் எதை எதையோ சந்திக்க வேண்டியிருக்கும்.


நேபாளத்தில்

காட்மாண்டுவின் தென்மேற்குப் பகுதியில் இருந்த சிட்வான் (CHITWAN) என்ற இடத்திற்குப் போனோம். அக்காட்டில் யானைகளை வளர்க்கிறார்கள்.

 

ஒரு யானைமேல் கால்களை இரு பக்கங்களிலும் தொங்கவிட்டு அமர்ந்தபடி காட்டினூடே பயணம் செய்தது மறக்க முடியாத அனுபவம்.

 

அங்கு விதவிதமான பறவைகள், அசையாது, இறந்ததுபோல் கிடந்த முதலைகள்.

 

நீண்ட யானைச் சவாரிக்குப்பின் இறங்கவே சிரமப்பட்டேன். காலில் தசைநார் கிழிந்துபோக, ஆறுமாத காலம் நொண்டியபடிதான் நடக்க முடிந்தது.

 

‘செலவு, நோய்நொடி எல்லாவற்றையும் தவிர்க்க இருக்கும் இடத்திலேயே சௌக்கியமாக இருக்கலாமே!’ என்று பார்த்தால் முடியுமா? வீட்டில் செய்த காரியத்தையே செய்துகொண்டிருப்பது சலிப்பைத்தான் தரும்.

 

முன்னேற்பாடாக, தேவைப்படும் ஆடைகளையோ, மருந்துகளையோ எடுத்துக்கொண்டு போகவேண்டியதுதான்.

 

(நீண்ட பயணத்திற்கு உலர்ந்த திராட்சையை அவ்வப்போது மென்றால், சோர்வு ஏற்படுவதில்லை. சிசுக்களை விமானத்தில் அழைத்துச் செல்லும்போது அவர்கள் காதில் பஞ்சை அடைத்தால், ஓயாமல் கதறி அழமாட்டார்கள்).

 

உணவு, உறக்கம்

என் ‘சாதனை’களைக் கேட்ட பின்னர், தானும் இம்மாதிரியான சாகசங்களை எதிர்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது என் பேரனுக்கு.

 

“நீ சாப்பிடப் படுத்துவாயே! வெளியில் என்ன கிடைக்கிறதோ, அதைத்தான் சாப்பிட வேண்டியிருக்கும்”.

 

மறுநாளிலிருந்து வீட்டில் என்ன சமைக்கிறோமோ, அவைகளையெல்லாம் ‘பிடிக்காது, பழக்கமில்லை,’ என்றெல்லாம் வழக்கம்போல் ஒதுக்காது, மிளகாய் வற்றல், கறிவேப்பிலையைக்கூடச் சாப்பிட ஆரம்பித்தான்!

 

நீண்ட பயணத்தின்போது தூங்கினால்தான் இறங்கியபின்னர் உற்சாகத்துடன் சுற்றிப்பார்க்க முடியும். ஓயாமல் பேசிக்கொண்டோ, விளையாடிக்கொண்டோ சென்றால், ஊரைச் சுற்றிப் பார்க்கும்போது உடல் களைத்து, எதையும் சரியாகப் புரிந்துகொள்ள இயலாது.

 

குழந்தைகளுடன் சுற்றுலா போவதால் நன்மை அவர்களுக்கு மட்டுமல்ல.

 

அறிவு முதிர்ச்சி

புதிய இடங்களில் பழக்கமில்லாத மொழி, கலாசாரத்தைப்பற்றி அறிவது அறிவு முதிர்ச்சியை அளிக்கிறது. அதிகாரம் செய்வதைவிட மரியாதையாகப் பிறரை நடத்துவது நல்ல பலனை அளிக்கும் என்று புரிந்துபோகிறது. நம்மிடமிருந்து மாறுபட்ட எவரையும் ஏற்கும் குணம் வருகிறது.

 

வீடு திரும்பியபின், எந்த வயதினரும் எப்போதும் செய்துவந்த காரியங்களைச் செய்ய உற்சாகம் காட்டுவார்கள்.

 

காலப்போக்கில், பெற்றோரைவிட்டு வெகுதொலைவு சென்றாலும், சிறுவயதில் குடும்பத்துடன் கழித்த சில தருணங்கள் நினைவில் நிலைத்து, மகிழ்ச்சியைத் தரும்.

 

அவை வாழ்க்கையில் ஏற்படும் இடர்களால் ஒரேயடியாக இடிந்து போய்விடாது நம்மைக் காக்கும்.

:நிர்மலா ராகவன் -/-எழுத்தாளர், சமூக ஆர்வலர். மலேசியா

தொடரும்.... 
👉அடுத்த பகுதியை வாசிக்க...அழுத்துக
SOON
👉ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக 

0 comments:

Post a Comment