எழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:11



(ஈ) கருத்தெழுத்து, உருபனெழுத்து, அசை எழுத்து [ideography ,logography, and syllabaries,] ஆகியவைகளை தொடர்ந்து ,அது அகர வரிசை எழுத்துக்கு [alphabet] வழி சமைத்தது எனலாம். குறைந்த எண்ணிக்கையான எழுத்துக்களுடன், ஒவ்வொரு எழுத்தும் ஒரு ஒற்றை ஒலியை குறித்து நின்றது.

இது வரை நாம் விவாதித்ததில் இருந்து நாம் அறிந்து கொள்வது என்ன வென்றால், இதுவரை கண்டு பிடிக்கப் பட்டதில் ,மிகவும் பழமையான எழுத்து உருக் நகரத்தில் [Uruk ] கி மு 3300 ஆண்டு அளவில் எழுதப் பட்டது  என்பதாகும். இது பட எழுத்து ['word-pictures'] ஆகும். அதன் பின், பல ஆண்டுகள் கடந்து, பூரண மான சுமேரியன் எழுத்து முறை 700 க்கு மேற்பட்ட குறியீடுகளை கொண்டு தோற்றம் பெற்றன. தொடக்கத்தில் உற்பத்தியையும் மற்றும் வர்த்தக கொடுக்கல் வாங்கலையும் பதிய ஒரு வசதியான வழியாக எழுத்து ஆரம்பித்தாலும், பின்னர் வரலாற்றையும் இலக்கியத்தையும் பதிய எழுத்து பாவிக்கப் பட்டன. உதாரணமாக, 4,000 ஆண்டுகள்  பழமையானதும், இன்று எமக்கு கிடைத்துள்ள உலகின் முதல் வாடிக்கையாளர் புகார்க் (Customer Complaint) கடிதம் ஒன்று பண்டைய பாபிலோனில் [ancient Babylon] இருந்து கிடைத்துள்ளது. இது நன்னி என்ற ஒரு மனிதன்,ஏ-நாசிர் என்ற வணிகருக்கு எழுதிய ஆப்பு வரிவடிவ எழுத்துரு கொண்ட அக்காடிய மொழி கடிதம் ஆகும். அதே போல, சுமேரி யாவில் கண்டு எடுக்கப்பட்ட மிகவும் பிரசித்தமான வழக்கு கி மு 1900 ஆண்டு அளவில் நடை பெற்ற ஒரு கொலை வழக்கு ஆகும். இங்கு  நன்னா -சிக் ,முடி திருத்தும் தொழிலாளியான  கு -என்லில்ல, பழத்தோட்ட  காவலரான என்லில்-
எண்ணம் என்ற மூன்று பேர், லு -ஈனன்ன என்ற மத குருவை கொல்ல சதி செய்தார்கள் என பதியப்பட்டு உள்ளது. கொலை செய்ய கருதியவரின் மனைவி,நின்-டட இந்த சதியை முன்பே அறிந்து இருந்தாள்.ஆனால் எதோ காரணத்தால் அதை, அந்த தனது கண வரின் கொலையை, நிறுத்த முயலவில்லை.கொலை நடந்த பின் கொலையாளிகள் மூவரும் கைது செய்யப்பட்டார்கள். அவர்களுடன் மௌனமாக இருந்த கொலை செய்யப்பட்டவரின் மனைவியும் கைது செய்யப்பட்டார். அங்கு எழுதப்பட்ட  நகல் வழக்கின் முழு விபரத்தை கொடுக்கிறது. மேலும் இந்த பிரசித்தி பெற்ற "நின்-டட" வழக்கை விட, இன்னும் ஒரு வழக்கையும் அங்கு காணுகிறோம். இதுவும் அதே சம காலத்தில் நடை பெற்று உள்ளது. இர்ரா-மலிக் என்ற ஒரு ஆண் தனது வீட்டிற்கு வந்த போது, அங்கே அவரது மனைவி இஷ்தார்-உம்மி வேறு ஒரு ஆடவனுடன் காதல் புரிந்து கொண்டு இருப்பதை கண்டான். அவன், அந்த இடத்தில் எந்த வித வன்முறையிலும் ஈடுபடாமல், தனது மூளையை பாவித்தான். அவன் தனது சோரம் போன மனைவி இஷ்தார்-உம்மியையும் அவளது கள்ளக் காதலனையும் அதே கட்டிலில் ஒரு கயிற்றினால் சுற்றி கட்டி, அவர்கள் இரு வரையும் இழுத்துக் கொண்டு வழக்குக்காக சட்டசபைக்கு போனான் என்றும் அந்த வழக்கின் குறுகிய விபரமும் பதியப் பட்டு உள்ளது. இது போல பல விபரங்களும் மற்றும் இலக்கியங்களும் இன்று எமக்கு கிடைப்பதற்கு எழுத்து உருவாக்களே துணை புரிந்தது ஆகும். உருக்கின் பட எழுத்து வளர்ச்சியடைந்து கியூனிஃபார்ம் எழுத்தாக மாறியது. படம்  கருத்தெழுத்தாக [ 'ideographs'] மாறி,பின் ஒலி வரைவாக ['phonograms'] மாறி,அது ஒலியையும் படத்தின் கருத்தையும் பிரதி பலித்தன. இந்த கியூனிஃபார்ம் [ Cuneiform ] எழுத்து, ஒரு அசை சார்ந்த எழுத்து வடிவம் [syllabic script] ஆகும். இது நூற்றுக் கணக்கான ஆப்பு வடிவ குறியீடுகளை [wedge-shaped signs] ஆரம்ப கால பட எழுத்தில் அல்லது  படத்தில் இருந்து மேம்படுத்தியது. இதில் இருந்து, நாளடைவில் அசையெழுத்து முறை [syllabary] உண்டாகியது. இது  பேசப்படும் தெளிவான உச்சரிப்பை எடுத்துச் சொல் கிறது. ஆகவே இங்கு ஒவ்வொரு சொல்லும்  ஒலிப்பு முறையில் எழுத்துக் கூட்டி உச்சரிக்கப்படுகிறது [spelled phonetically].

இன்றுள்ள உலகமொழிகள் பெரும்பாலும் பட எழுத்து நிலையில் இருந்து உண்டானவையே. அதற்கு சீனமொழி இன்றும் படஎழுத்து வடிவில் இருப்பதை உதாரணமாகக் காட்டலாம். ஆனால் தமிழ்மொழி என்றோ தன்னை வரியெழுத்து நிலைக்கு உயர்த்திக் கொண்டு விட்டது. வரியெழுத்து வடிவில் எழுதிய தமிழ் மொழிக்கே தொல்காப்பியர் இலக்கணம் வகுத்தார் என்பதை தொல்காப்பியம் எமக்கு அறியத்தருகின்றது.பண்டைக்காலப் புலவர்கள் இந்த ஒலிவடிவத்திற்கு இந்த வரிவடிவம் என அவ்வரிவடிங்களை வரையறுத்தனர். அதனால் அவ்வரிவடிவங்கள் ஒலிவடிவங்களையும் பெற்றிருந்தன. அதன் காரணமாக அந்த வரியெழுத்துக்களை நம் முன்னோர் ஒலியெழுத்துக்கள் என்றும் அழைத்தனர் என்பது குறிப்பிடத் தக்கது. அவ்வுண்மையை கி பி 13 நூற்றாண்டின் தொடக்கத்தில் எழுதப்பட்ட நன்னூல் காண்டிகை உரை எனும் தமிழ்மொழி இலக்கணநூல் 

“மொழி முதற்காரணமாம் அணுத்திரள் ஒலி எழுத்து”    - (நன்னூல்: எழு: 1 - 3)   
                                             
எனச்சொல்வதால் அறியலாம். இந்த நன்னூற்சூத்திரம் தமிழ் எழுத்துக்களின் பிறப்பிற்கு விஞ்ஞான முறையில் எமக்கு விளக்கம் தருகின்றது. தமிழ் எழுத்துக்களின் ஒலிவடிவம் உண்டாக அணுத்திரள்களின் ஒலியே முதற்காரணம் என்கின்றது. ‘தமிழருக்கு அறிவியல் தெரியுமா’? எனக்கேட்கும் தமிழர்கள் கொஞ்சம் நிதானமாக இச்சூத்திரத்தை படித்து அறிதல் நன்று. தமிழ்மொழி வரலாற்றுக்கு இதிலே வரும் ‘அணுத்திரள் ஒலி எழுத்து’ என்னும் சொற்றொடர் கிடைத்தற்கரிய ஒன்றாகும். இந்த அறிவியல் கருத்தைச் சொல்லும் நன்னூலே இன்னொரு சூத்திரத்தில்

“தொல்லை வடிவின எல்லா எழுத்தும்”  - (நன்னூல்: எழு: 5 - 1)                    
                                       
என தமிழ் எழுத்துக்களின் வடிவம் பற்றிக்கூறுகின்றது. தொல்லை வடிவின - பண்டைக்கால வடிவத்துடனே எழுத்துக்கள் யாவும் இருந்தன எனச்சொல்வதால் தமிழ் எழுத்துகளுக்கு ஒலி வடிவத்தைக் கொடுத்த அணுத்திரள் ஒலி எழுத்தும் அதிலிருந்து உண்டான வரிஎழுத்தும் மிகப் பழமையானது என்பது பெறப்படும். மேலும்  தமிழும் படஎழுத்து நிலையில் இருந்து உண்டானது என்பதற்கு எழுத்து என்ற சொல்லே ஆதாரமாக இருக்கின்றது. சங்க இலக்கியங்கள் (கி மு 500 - கி மு 200) எழுத்து என்ற சொல்லை சித்திரம் ஓவியம் என்ற பொருளிலும் சொல்கின்றன. சங்கச் சான்றோரான பரணர் அருவி வீழும் கொல்லி மலையை மேலும் அழகு படுத்த கடவுள் வடிவம் கீறிய பாவை அமைத்ததை

“களிறுகெழு தானைப் பொறையன் கொல்லி
ஒளிறுநீர் அடுக்கத்து வியல்அகம் பொற்பக்
கடவுள் எழுதிய பாவை”    - (அகம்: 62: 13 - 15)                            
                                                 
என அகநானூற்றில் கூறியுள்ளார். மேலும் சங்க காலத்தில், திருப்பரங்குன்றத்திருந்த சித்திர மண்டபத்தில் கண்காட்சிக்கு வகை வகையாக வைக்கப்பட்டிருந்த ஒவ்வொரு ஓவியங்களாகக் காட்டுமிடத்தில்

“இன்ன பலபல எழுத்துநிலை மண்டபம்”

எனச் சங்ககால புலவரான நப்பண்ணனார் பரிபாடலில்
சொல்கிறார். இது சங்ககாலத்தில் ஓவியத்தை எழுத்து என்று சொன்னதைக் காட்டுகிறது. அதே போல, ‘கடவுளின் உருவம் எழுத ஒரு கல் கொணர்வோம்’ என சேரன் செங்குட்டுவன் கூறியதை இளங்கோஅடிகளும்

“கடவுள் எழுதவோர் கல்கொண்டல்லது” - (சிலம்பு: கால்கோள்: 14)  
                                           
என சிலப்பதிகாரத்தில் சொல்கிறார். இவையாவும் தமிழ்மொழியும் தன் தொடக்க நிலையில் படஎழுத்தாக வரையப்பட்டது என்பதையே காட்டி நிற்கின்றன.

இனி சுருக்கமாக மீண்டும் படஎழுத்து, கருத்தெழுது, அசையெழுத்து என்றால் என்ன என்பதைப் பார்ப்போம். மனிதன் தனது எண்ணங்களை மற்றவர்களுக்கு வெளிப்படுத்த உருவங்களைப் படமாகக் கீறினான். உருவத்தால் ஆன அந்தப் படத்தை உருவஎழுத்து என்றும் படஎழுத்து என்றும் ஓவிய எழுத்து என்றும் கூறுவர். படஎழுத்தில் உள்ள உருவம் அதன் பெயரைக் குறிக்காமல் ஒரு கருத்தைச் சொல்லுமானால் அது கருத்தெழுத்து எனப்படும். அதாவது ‘புகைத்தல் தடைசெய்யப்பட்டுள்ளது’ (No Smoking) என்பதற்கு நாம் பயன்படுத்தும் அடையாளத்தைப் போன்றதே கருத்தெழுத்து. அவ்எழுத்துக்கு ஒலி இல்லை. அசையெழுத்து என்பது கூட்டெழுத்தாகும். க்+அ எனும் இரு எழுத்துக்களும் கூட்டாகச் சேர்ந்து ‘க’ எனும் எழுத்தை உருவாக்குவது [க்+அ=க] போன்றதே அசையெழுத்து. தமிழில் உள்ள உயிர்மெய் எழுத்துக்களை அசையெழுத்து என்றும் கூறலாம். 
கி மு 1500 ஆண்டளவில் [1900 BCE to 1100 BCE],பண்டைய அண்மைக் கிழக்கு நாடுகளில்  அகரவரிசை எழுத்து [அரிச்சுவடி] கண்டு பிடிக்கப் பட்டது, இது எழுத்தின் வளர்ச்சியின் மூன்றாவது கட்டம் என குறிக்கலாம். உதாரணமாக, சிரியாவில் உள்ள உகரிட் [Ugarit] என்ற நகரில் ,அகரவரிசை எழுத்து முறை ஒன்று கியூனிஃபார்ம் சின்னங்களில் இருந்து அல்லது பழங்கால எகிப்தியரின் சித்திர வடிவ எழுத்துக்களில்  [Egyptian hieroglyphs ] இருந்து  உருவாகியது. இந்த அகரவரிசை, இன்றைய அரிச் சுவடிக்கு, ஒரு முன்னோடியாக [ forerunner ] இல்லா விட்டாலும், இன்று நாம் பாவிக்கும் எழுத்து முறை அமைப்பின் ஒப்புமை யாக கருதலாம். எகிப்தின்  தென் மேற்கு  சினாய் குடாவில் தொல் பொருள் ஆய்வாளர்களால் பொதுச் சுவற்றில் செதுக்கி எழுதப் பட்ட,  பல ஆதிமுன்னோர் சார்ந்த. சினாய் எழுத்துப் பிரதி [புரொடோ-சின்னாட்டிக்] அல்லது  ஆதிமுன்னோர் சார்ந்த.கானானிய  எழுத்துப் பிரதி ["Proto-Sinaitic script" or  Proto-Canaanite script] கண்டு பிடிக்கப் பட்டன. இது அகரவரிசை எழுத்தின் வரலாற்றை அறிவதற்கு துணை புரிந்தது. இதில் இருந்து தான் பண்டைய  பினீசிய எழுத்து அல்லது அரிச்சுவடி (Phoenician alphabet) வளர்ந்தது எனலாம். இந்த பினீசிய அரிச்சுவடி, குறைந்தது  கி மு 1250 ஆண்டை சேர்ந்ததும் இன்று அறியப்பட்ட அகரவரிசை எழுத்தில் மிகவும் பழமையும் ஆகும். இந்த பழமையான முதல் தோன்றிய அகரவரிசை எழுத்து இங்கு இணைக்கப் பட்டு உள்ளது [படம்:02]. எந்த ஒரு மொழியிலும் ஒலிகள் மிக்க குறைவு என்பதை புரிந்து கொண்ட இவர்கள், 22 எழுத்துக்களை மட்டுமே கொண்டு இந்த அகரவரிசை எழுத்தை அமைத்தனர். இங்கு ஒவ்வொரு எழுத்தும் ஒவ்வொரு குரல் ஒலியை குறித்தன. அவை எண்ணற்ற வழிகளில் சேர்க்கப் பட்டு, பேச்சு மொழியை அப்படியே எடுத்து எழுத ,முன் என்றுமில்லாத, ஒரு நெகிழ்வு தன்மையை ஏற்படுத்தியது எனலாம். இந்த,முன்னைய அகரவரிசை எழுத்து அதற்கும் முற்பட்ட  அசை எழுத்தில் [syllabaries] இருந்து முற்றிலும் மாறுபட்டது. உதாரணமாக,ஆப்பெழுத்து [கியூனிஃபார்ம் ஸ்கிரிப்ட்] அடிப்படையில் உருபனெழு த்தாக இருந்தாலும், அது  பொதுவாக அசை எழுத்து முறைமையை  [although based on logograms, are largely syllabic in nature.] கொண்டுள்ளது. அதே போல எகிப்திய புனிதஎழுத்து [எகிப்திய ஹைரோகிளிஃப்ஸ் /Egyptian hieroglyphs ] உருபனெழுத்துக்கு உரிய,அசைகளுக்குரிய மற்றும் அகரவரிசைக்கு உரிய கூறுகளின் கூட்டாக உள்ளது [ combined logographic, syllabic and alphabetic elements]. எது எப்படியாயினும் சினாய் குடா அல்லது சினாய் மலை  [சின்னாட்டிக் /Sinaitic] மக்கள் தோராயமாக, எருது தலை, வீடு போன்ற பட குறிகளை மட்டும் தேர்ந்து எடுத்து, அவைகளை ஒவ்வொரு மெய்யெழுத்துக்கு [consonant] குறியீடாக பாவித்தார்கள். அப்படி என்றால் எப்படி எந்த குறியீடு எந்த மெய்யெழுத்துக்கு என தீர்மானித்தார்கள்? எடுத்துக் கொண்ட பருப்பொருள் [எருது தலை,வீடு,....] ஒன்றின் சித்திரமே குறியீடாகும். அந்த பருப் பொருளை குறிக்கும் சொல்லின் முதல் மெய்யெழுத்து, அந்த குறியீடு குறிக்கும் ஒலியை குறிக்கிறது எனலாம். சொற்களின் முதல் அசை அல்லது எழுத்து அல்லது ஒலி படக்குறியீடுகளால் குறிக்கப்படும் முறை இதுவாகும். சுருங்கக் கூறின் ,இது முதலொலி எழுத்து முறை [acrophonic principle] ஆகும். உதாரணமாக எருத்துக்கான [ox ] சொல் /'aleph/, ஆகும். இது சத்தம் [அல்லது ஒலி]  /'/, என்பதை குறிக்கிறது. இந்த சத்தத்தை [/'/] குரல்வளை வொடுப்பொலி [glottal stop (also written as /?/)] என அழைப்பர். 

அதன் பின்னர் பழங்காலத்தில் இருந்த ஒரு நாடான,தற்கால இசுரேல், லெபனான் நாடுகளின் பெரும் நிலப் பகுதியை உள்ளடக்கிய கானானுக்கு [Canaan], புரொடோ-சின்னாட்டிக் [Proto-Sinaitic] விரைவாக பரவியது. இதனால் இதை புரொடோ-கானானிட்  [Proto-Canaanite, or Old Canaanite script] எனவும் அழைப்பர். அங்கு இது பினீசிய எழுத்தாக [Phoenician script],பல நுற்றாண்டுகள் எடுத்து படிவளர்ச்சி அடைந்தது. இதன் முக்கிய மாற்றம் குறைந்த வளைவுகளை கொண்ட பெரும்பாலும் நேர்கோட்டு [more linear (less curved)] வடிவ குறிகளாகும். மற்றும் படி அதிகமாக எல்லாம் முன்பு போலவே இருந்தன. இந்த மெய்யெழுத்து அகரவரிசை எழுத்து முறை [consonantal alphabetic system] மற்ற பகுதிகளுக்கு,குறிப்பாக கிரேக்கத்திற்கு [Greece] பரவ, பினீசிய வணிகர்கள்  [The Phoenician merchants ] முக்கிய பங்கு ஆற்றினார்கள். கிரேக்கத்திற்கு கி மு 800 ஆண்டுகளுக்கு முன்பே இது பரவியது எனலாம். கிரேக்கர்கள் இதை  உயிரெழுத்து அல்லது உயிரொலி- a, e, i, o, u. இணைத்து 27 அகரவரிசை எழுத்தை கொண்ட  கிரேக்க எழுத்து முறையை உண்டாக்கி முழுமையாக்கினார்கள். இதன் பின்  மேற்கத்திய அகரவரிசை எந்த ஒரு அடிப்படை மாற்றத்தையும் செய்யவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

பகுதி:12  தொடரும்

0 comments:

Post a Comment