மூடநம்பிக்கையில் முடங்கும் முயற்சிகள்


வழுவழுப்பான பட்டு மெத்தையில் தூவியிருக்கும் கமகமவென்ற வாசனையுள்ள மலர்களின் இதழ்களுடைய பாதையில் பயணிக்கின்ற மனிதனுடைய வாழ்க்கைப் பாதங்கள், சுட்டெரிக்கும் பாலைவனத்து மணலின் மீது தானாகத் தோன்றிய முட்புதர்களைக் கொண்ட கள்ளிச் செடியையும் பாதையாக்கிக் கொள்கிறது. ஒரு காலகட்டத்தில் கரடுமுரடான பாதையைக் கடந்து செல்லுகிற மனிதனுடைய வாழ்க்கை இன்னொரு காலகட்டத்தில் தடுமாற்றம், தடைகளில்லாத பாதையிலும் பயணிக்க ஆசைப்படுகிறது. இந்த இருவகையான பாதையில் பயணிக்கும் மனிதனுடைய வாழ்க்கை அந்தந்த காலகட்டத்தின் தாக்கத்தை அனுபவிக்கிறது. ஒரு சமயம் வாழ்க்கையின் இனிப்பை சுவைக்கும் மனிதன் மறுகணம் அதனுடைய கசப்பையும் விழுங்குகிறான். இனிப்பும் கசப்பும் கலந்த சுவை மனிதனுடைய வாழ்க்கை பாடப்புத்தகத்தை சுவாரஸ்யமாக்குகிறது. அவ்வப்போது வாழ்க்கையில் பிரச்சனைகள் முளைக்கிறது. இது ஒரு சாதாரண மனிதனின் சாதாரண வாழ்க்கையாகும். பிரச்சனைகள் சூழ்ந்து கொள்ளும் போது, அவன் பல யுக்திகளைக் கையாளுகிறான். தைரியம், விடாமுயற்சி, உழைப்பு, கடவுள் நம்பிக்கை, தன்னம்பிக்கை ஆகிய வழிகளைக் கையாளுகிற மனிதன் மூடநம்பிக்கையையும் கைப்பற்றுகிறான். படிக்காதவர்கள், படித்தவர்கள் என்று வித்தியாசமில்லாமல் மூடநம்பிக்கையில் விழுகிறார்கள் என்ற செய்தி விசித்திரமாகதான் தோன்றுகிறது.
பெண் ஒருத்தி இள  வயதில் விதவையானாலும் கூட மரண வீட்டில் அவளை ஒரு சுமங்கலிக் கூ ட் டம் அவளை அமங்கலி ஆக்கும் கூத்து பார்ப்பவர்களுக்கே நெஞ்சை நெருடும் எனில் அவள் இதயம் கணவனை இழந்த கவலையல்ல மேலும் அவளை கொடுமைப்படுத்தல் என்பது சகிக்க முடியாததொன்று. எரியும் நெருப்பில் நெய் ஊற்றும் இச் செயல் அவளுக்கு மேலும் மன சோர்வினை அளித்து தனியே வாழ்வில் முன்னேறவிடாது தடுக்கிறது.
பெண் குழந்தையைப் பெற்று, வளர்த்து, படிக்க வைத்து, திருமணம் செய்து கொடுப்பதோடு பெற்றோர்களின் கடமை முடிந்து விடுவதில்லை. இனிமேல் தான் அவர்களுடைய கடமைகள் தொடங்குகிறது. பெண்ணுடைய திருமண வாழ்க்கை எப்படி அமைகிறதென்று கண்காணிப்பதும் பெற்றோர்களின் தலையாய கடமையாகும். வயிற்றையும் வாயையும் ஒடுக்கி சேமித்தப் பணத்தில் திருமணம் செய்து கொடுக்கும் பெற்றோர்கள், மகளுடைய சந்தோஷத்தை உயிருக்கும் மேலாக கருதுகிறார்கள். தொன்றுதொட்டு நிலவிவரும் வரதட்சணையென்ற வியாபாரம் இன்றைய திருமணத்தில்பரிசுஎன்ற சொகுசான பெயரில் புழங்கி வருகிறது. குடும்பக் கௌரவத்தை மையமாகக் கருதும் பெற்றோர்கள், தகுதிக்கும், அந்தஸ்திற்கும் மீறி மணமகளோடு வீடு, உயர்தர வாகனம், தங்க நகைகள், வெள்ளிப் பொருட்கள், ரொக்கப் பணம் போன்றவைகளைப் பரிசாகக் கொடுத்து அனுப்பி வைக்கிறார்கள். இத்தனை பரிசுகளும் திடீரென்று கிடைத்தவுடன், சித்தம் பேதலித்த பிள்ளை வீட்டார்கள் வீட்டிற்கு வந்த மருமகளை ஒரு கற்பக விருட்சமாகப் பார்க்கிறார்கள். பல துன்பங்களுக்கு ஆளாகும் அந்தப் பெண் உடலாலும், உள்ளத்தாலும் வேதனையை அனுபவித்து, அதனுடைய வலியைத் தாங்க முடியாமல் மீண்டும் பிறந்த வீட்டிற்கு திரும்புகிறாள. வாழ வேண்டிய பெண் வாழாவெட்டியாக இருப்பதைப் பார்த்துக் கண்கலங்கிய வண்ணம், எதைச் சாப்பிட்டால் பித்தம் தெளியும் என்ற நிலைக்கு தள்ளப்பட்ட பெற்றோர்கள் செய்வதறியாமல் மூடநம்பிக்கை என்ற வலையில் விழுகிறார்கள்.

ஒரு அரவாணி (திருநங்கை) வாழாவெட்டியான பெண்களுக்கு வாழ்க்கையைக் கொடுப்பதாகவும், மேலும் அந்த அரவாணி மேற்கு தில்லியிலுள்ள நெரிசலான பகுதியில் பல ஆண்டுகளாக வசித்து வருகிறாள். செங்குத்தான மாடிப்படிகளின் நடுவே தாழ்ந்த கூரையுடைய சின்ன அறையில் சக்தி படங்களுக்கு எதிரே எலுமிச்சைப் பழங்களோடு, நெற்றி முழுவதும் குங்குமத்தை பூசிக் கொண்டு குடுகுடுப்பையோடு சுலோகங்களை உச்சரித்த வண்ணம் தோற்றமளிக்கிறாள். செவ்வாய்க் கிழமை, வெள்ளிக் கிழமை ஆகிய இருநாட்களில் அரவாணியின் அருளைப் பெறுவதற்கு பாதிக்கப்பட்ட பெண்களோடு பெற்றோர்களின் கூட்டம் அலை மோதுகிறது. பெண்ணுக்கு நல்லதொரு வாழ்க்கை அமைய வேண்டுமென்ற கவலையில் வசதிக்குத் தகுத்தாற் போல பணத்தை அவ்விடத்தில் கொட்டுகிறார்கள். படித்தவர்களும் இத்தகைய மூடநம்பிக்கையில் சிக்கிக் கொள்ளும் செய்தி அதிர்ச்சியை தருகிறது.

உத்திரப் பிரதேசத்திலுள்ள ஒரு கிராமத்தில் பெற்றோர்கள், இரண்டு பிள்ளைகளைக் கொண்ட சின்ன குடும்பமொன்று விவசாயத்தை நம்பி வாழ்ந்து கொண்டிருந்தது. திடீரென்று அந்தக் குடும்பத்திலுள்ள இரண்டாவது மகன் பாம்பு கடித்து மரணமடைந்தான். சடலத்தை எரித்த அன்றைய இரவு விரிச்சோடிக் கிடந்த அவனுடைய கட்டிலில் பாம்பு படுத்துக் கொண்டிருந்தது. அடுத்த நாள் காலையில் அவனுடைய தாய் கட்டிலில் படுத்துக் கொண்டிருந்த பாம்பைத் தன்னுடைய மகன் திரும்பி விட்டான் என்ற புரளியைக் கிளப்பி, கிராம மக்களை நம்ப வைத்து, அதற்கு முட்டையும் பாலும் கொடுத்து வளர்க்கத் தொடங்கினாள். வீட்டில் பாம்பு காலடி எடுத்து வைத்தவுடன் அவர்களுடைய வாழ்க்கை தரமும் உயர்ந்தது. கிராமத்திலுள்ள பிரச்சனைகளை தீர்த்து வைக்க மக்கள் ஒன்றுகூடி பாம்பைத் தெய்வமாகக் கொண்டாடத் தொடங்கினார்கள். முட்டையும் பாலும் கொடுத்து, காணிக்கை செலுத்தி, ஒரு பாம்பை தெய்வமாக கொண்டாடும் கிராமத்து மக்கள், தங்களுடைய வாழ்க்கைத் துடுப்பை அதனிடம் ஒப்படைத்து விட்டார்கள். ஏமாறுபவர்கள் இருப்பதால் தான் ஏமாற்றுகிறவர்கள் வளர்ந்து கொண்டிருக்கிறார்கள். பணத்தில் புழங்கிக் கிடக்கும் அந்தக் குடும்பம் விவசாயத்தை மறந்து விட்டு, உழைக்கும் கரங்கள் ஒய்வெடுத்துக் கொண்டும், மூடநம்பிக்கையில் வயிற்றை நிரப்பிக் கொண்டிருக்கிறது.

மூன்றுமாதக் குழந்தைகள், விஷஜுரம், வாந்தி, இடைவிடாது வயிற்றுப் போக்கு ஆகிய நோய்களால் பாதிக்கப்படாமலிருக்க, அதனுடைய இளகிய மேனியில் தகதகவென்று கொதிக்கும் பால் அல்லது பாயசத்தை ஊற்றும் காட்சி தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் வாரனாசியில் மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. குழந்தையின் மேனியில் கொதிக்கும் பால் விழுந்தவுடன், குழந்தை சுருண்டு கொண்டு துடிக்கிறது, வீரிட்டுக் கொண்டு அழுகிறது. மூன்று ஆண்டுகளாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மக்கள், காவல்துறையைச் சார்ந்தவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், தற்சமயம் தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்டதால் விழித்துக் கொண்டு, சாமியாரை சிறையில் அடைக்க முனைந்தது. இந்த சம்பவத்தை நிகழ்த்திய போலி வேடம் தரித்த கோபால் யாதவ் என்ற சாமியார் காவல்துறையின் கைகளில் சிக்காமல் தப்பித்து விட்டதாக செய்தியும் தெரிய வந்தது. மூடநம்பிக்கையின் பெயரில் பிறந்த குழந்தைகளை சாமியாரிடம் ஒப்படைத்து, பிஞ்சு உள்ளங்களோடு விளையாடுகிற இந்த நரிக்கூட்டத்தை விவரிக்க நம்முடைய அசையும் உதடுகளிலிருந்து வார்த்தைகள் வெளியேறத் தடுமாறுகிறது.

பரந்து கிடக்கும் இந்தியாவின் ஒவ்வொரு கிராமத்திலும் இப்படி அதிர்ச்சி தரும், மெய்சிலிர்க்க வைக்கும் மூடநம்பிக்கையான சம்பவங்கள் நம்முடைய கண்களுக்கு தெரியாமல் அதிக அளவில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. மூடநம்பிக்கையில் நம்பிக்கையை வளர்க்கும் மக்களின் கூட்டம் பெருகப் பெருக, இத்தகைய சம்பவங்களும் இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் வளர்ந்து கொண்டு வருகிறது. பெண்ணுடைய வாழ்க்கையை ஒரு அரவாணியின் கையில் ஒப்படைத்த பெற்றோர்களின் துயரங்கள் தீர்ந்ததா? ஒரு பாம்பைத் தெய்வமாகக் கொண்டாடும் அந்த கிராமம் சொர்க்க லோகமாக மாறியதா? இதழ்களை மூடிக் கொண்டிருக்கும் மொட்டைப் போலுள்ள பிஞ்சு உயிரை நோய் நொடியில்லாமல் அந்த சாமியாரால் காப்பாற்ற முடிந்ததா? மூடநம்பிக்கை என்ற கதவுகளுக்கு பின்னால் ஒளிந்து கொண்டிருக்கும் போலியான செய்கைகளைத் தூக்கி வீசுங்கள். மூடநம்பிக்கையின் பின்னால் நம் முயற்சிகளைத் தொலைத்து ஏமாற்றத்தைத் தவிர்க்க அனைவரும் முன்வரவேண்டும்.
நன்றி -சந்தியா கிரிதர்

0 comments:

Post a Comment