உண்மைச் சம்பவம்::-வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்.......

அன்று பாடசாலை நாள்.பாடசாலை மதிய இடைவேளை என்றால் வழமையாக உணவு உண்ண ரவியருகில்  வந்து அமர்ந்துவிடுவான் ஆனந்த்.அந்த வேளையில் அவன் பாடும் பதிகங்களில் துளசி புராணமும் ஒன்று.ஏனோ தெரியவில்லை அவர்களோடு படிக்கும் துளசியைக்கண்டால்  அவனுக்குப் பிடிப்பது இல்லை.

துளசி ஒரு பணக்காரக்  குடும்பத்தில் பிறந்தவள்.அழகிலும் கல்வியிலும் சராசரியாகவே இருந்தாள்.வகுப்பில் எல்லோரிடமும் அளவுக்கு அதிகமாகவே  பேசுவாள்.அவள் யாரையும் தாழ்த்தி ஒதுக்கியதும் இல்லை.போற்றிப் புகழ்ந்ததும் இல்லை. அவள் வகுப்பில் இருந்தால் வகுப்பு என்றும் கலகலப்பாகத்தான் இருக்கும்.

அன்றும் பாடசாலை மதிய உணவு இடைவேளையில் ரவியருகில் வந்து இருந்த ஆனந்த் உணவுப்பார்சலை அவிழ்த்துக்கொண்டே, தன் வாயில் ஊறிய உமிழ்நீரை ஒருமுறை விழுங்கிக்கொண்டான். வழமையாக அவன் இடியப்பத்துடன் கொண்டுவரும் கருவாட்டுக் குழம்பு  ரவியின்  மூக்கினை ஒருமுறை இன்றும் துளைத்து அறுத்து தாக்குதலை மேற்கொண்டது.

ஒரு கவளம் உணவினை தன் வாயினுள் வைத்த ஆனந்து  ஒரு புன்னைகையினை ரவி மேல் வீசியவாறு தன் உரையாடலை  ஆரம்பித்தான்."மச்சான் ரவி இவள் துளசியென்ன பொம்பிளை மாதிரியே நடக்கிறாள். பார்!.வகுப்பிலை எல்லாருக்கும் பல்லுக்கட்டுறாள். இளிக்கிறாள். எப்ப பார்த்தாலும் பெட்டையள் ,பெடியளோட கலகலப்பும் சிரிப்பும்தான். இவளைப்போல ஒருத்தியையும் நான் வாழ்க்கையில காணேல்லை மச்சான்".

இப்படியெல்லாம் ஆனந்த் தினசரி ரவியுடன்  அவளைபற்றிப் பிதற்றுவதினால் சந்தேகமடைந்த ரவியும் அன்று  அவனிடம் "நீ அவளை லவ் பண்ணிறியா மச்சான்" என்று கேட்டுவிட்டான்.

"டேய்,நீ என்ன பகிடிவிடுறியே?உனக்கு விடிய விடிய என்ன கதை சொல்லுறன்.நீ என்ன மொக்கு மாதிரிக் கதைக்கிறாய்.லவ்வுகிவ்வு என்று விசர் கதை கதையாதை , சொல்லிப்போட் டன் ' என்று கூறிக்கொண்டு எழுந்து விரைந்து சென்றுவிட்டான் ஆனந்த்.

அன்றிலிருந்து ரவியோடு துளசி தொடர்பான கதையினை ஆனந்த் தவிர்த்து வந்தாலும் முன்னரைப்போலவே அவன் பழகிவந்தான்.

ஒருநாள் மத்திய உணவு வேளையில்  இருவரும் பேசிக்கொண்டிருக்கும்பொழுது,அவர்களுடன் படிக்கும் மதியின் கதை வரவே ஆனந்த்
"மச்சான், இவள் மதி என்ன பிறவி மச்சான். சரியான திமிர் பிடிச்சவள் என்ன!    ஒருதரேம் நிமிர்ந்தும் பார்க்கமாட்டாள். ஒருத்தருடனும் கதைக்கவும் மாட்டாள். தான் பெரிய கெட்டிக்காரி எண்ட ஆணவம் அவளுக்கு.”
ரவி கொஞ்சம் சத்தமாகவே சிரித்துவிட்டான்.

"ஏண்டா ரவி சிரிக்கிறாய்." என்று புரியாமல் கேடடான் ஆனந்த்

"வேறென்ன!பெண் பிள்ளையள் சிரித்துக்கதைச்சாலும் ஏசுகிறாய்.
அமைதியை இருந்தாலும் ஏசுகிறாய். அப்படியெண்டால்  அவையளை என்னதான்  செய்யச்சொல்லுகிறாய்நீயே ஒரு தீர்வை சொல்லு பார்ப்போம்!  என்ற ரவியின் கேள்வியில் ஆனந்த் மௌனமாகத் தலைகுனிந்தான்.

-------- செ.மனுவேந்தன்(பெயர்கள் யாவும் கற்பனை)


2 comments:

  1. பெண்கள் நின்றாலும், நடந்தாலும், அமர்ந்தாலும், எழுந்தாலும் பேர் வைக்க மட்டும் இந்த உலகம் மறப்பதில்லை..
    அழுதால் நீலிக் கண்ணீர்..
    அழாவிட்டால் நெஞ்சழுத்தகாரி...

    துணிச்சலாய் இருந்தால் திமிர்...
    துணிவில்லை என்றால் அப்பாவி..

    ஜடமாய் இருந்தால் அமைதி..
    கேள்வி கேட்டால் ஆணவம்...

    வளைவு நெலிவுகளோடு இருந்தால் சூப்பர் பிகர்..
    இல்லையெனில் சப்ப பிகர்...

    ஆண்களிடம் சிரித்து பேசிவிட்டால் மேட்டரு...
    காரமாய் பேசினால் முசுடு...

    #like பெண்கள் நின்றாலும், நடந்தாலும், அமர்ந்தாலும், எழுந்தாலும் பேர் வைக்க மட்டும் இந்த உலகம் மறப்பதில்லை..

    ReplyDelete