நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா?[8A]

 [சீரழியும் சமுதாயம்] 

[4]தொழில்நுட்பத்துடன் இணைத்தல் [Fusion With Technology]

மீவுமனிதர் [Transhuman] என்பது படிவளர்ச்சிக்கு அமைய மனிதரில் இருந்து அல்லது மனிதருக்கு அடுத்தபடியாக ஆதிக்கம் செலுத்த போகும் உயிரினம். இது தற்போது ஒரு கருதுகோளே. மரபணு பொறியியல், தானியங்கியல், நனோ தொழில்நுட்பம் போன்ற நுட்பங்கள் மீவுமனிதரை உந்துவிக்ககூடும் என்று சிலர் எதிர்வு கூறுகின்றனர். இதன் அடிப்படையில், 2017, இல் ,தானாக இயங்கி செலுத்தும் மோட்டார்க் காரை உருவாக்கிய முன்னைய கூகிள் விஞ்ஞானி [former Google self-driving car developer Anthony Levandowski], அந்தோணி லெவண்டோவ்ஸ்கி, "எதிர்காலத்தின் வழி" ["Way of the Future"] என்ற ஒரு புதிய மத அமைப்பை உருவாக்கினார். இந்த புதிய "தேவாலயம்" செயற்கை நுண்ணறிவு [artificial intelligence] மனிதனை விட உயர்ந்த ஒரு சத்தியென புகழ்ந்து, நம்மை அது எதிர்காலத்தில் அழிக்காதபடி பார்த்துக்கொள்ள அதை வணங்க வேண்டும் என போதிக்கிறது. செயற்கை நுண்ணறிவுடன் மனித நாகரிகத்தை ஒட்டியிணைத்தல் அல்லது ஒன்று சேர்த்தாலே அவரின் இறுதி இலக்கு ஆகும். இப்படி வேறு சிலரும் முன்னின்று செயல்படுகிறார்கள். கூகிளின் பொறியியல் இயக்குனர், ரே குறவெய்ல் [Ray Kurzweil], 21 ஆம் நூற்றாண்டின் நடுப் பகுதிக்கு முன், ஒரு நுட்பியல் ஒற்றைப்புள்ளி [technological Singularity] ஏற்படும், அதாவது தொழில்நுட்பத்தால், மாந்தர்களின் வாழ்வில் உந்தப்படும் நிகழ்வுகளின் இடைவெளி மாற்றங்கள் குறைந்து வருகின்றன. இவ்வாறான மாற்றங்கள் ஒருமித்து (குவிந்து) மனித வாழ்வு மீண்டும் மீளமுடியாதவாறு வர இருக்கும் ஒரு காலகட்டமே நுட்பியல் ஒற்றைப்புள்ளி (Technological Singularity) எனப்படுகிறது. இம்மாற்றம் எவ்வாறு அமையும் என்று தெளிவாக எதிர்கூறமுடியாது, ஆனால் குமுகம் (சமூகம்), அரசியல், சூழல், பொருளியல் என அனைத்து தளங்களிலும் இந்த மாற்றம் இருக்கலாம், அத்துடன் மனித இருப்பின் பொருள் அல்லது தன்மையைக் கூட இந்த நிகழ்வு மாற்றி அமைக்கலாம் என எதிர்வு கூறப்படுகிறது. சுருக்கமாக ஒரு இயந்திரங்கள் மற்றும் கணினிகளின் தொகுதி, மனிதர்களை விட புத்திசாலியாக மாறும் என்கிறார். மேலும் இன்றைய மேற்கத்திய நாகரிகம் [Western civilization] இந்த கொடூரமான சம்பவத்தால் வாழ முடியாமால் போகலாம் என்று ஊகம் கூறுகிறார்.

இன்று உலகின் உயர்ந்த உயிரினமாக மனிதன் காணப்படுகிறான். அவன்  விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பத்தில் பாரிய வளர்ச்சி அடைந்து, நினைக்கும் எதையும் செய்து முடிக்கும் வல்லமை படைத்தவனாக விளங்குகிறான். உலகில் எத்தனையோ மில்லியன் ஆண்டுகளுக்கு முன் ஒரு உயிரணுவில் உருவான உயிரியல், பரிணாமம் அடைந்து, இன்று மனிதனாக இருக்கிறான். ஆனால் அதனினும் வியப்பு, இது முற்றுப்பெறாத மாற்றமாக, பரிணாமமாக இன்னும் தொடரும் என்ற ஊகம் தான். அதன் விளைவைத்தான் மீவுமனிதத்துவம் [Transhumanism] என்ற மனிதரின் உடல் உள ஆற்றலை விருத்தி செய்ய உதவும் அறிவியல் தொழில் நுட்ப துறைகளுக்கு ஆதரவான இந்த இயக்கம் ஆகும். உதாரணமாக, ஊனம், வலி, நோய், முதுமை, இறப்பு போன்ற விரும்பப்படாத அம்சங்களை குறைக்க அல்லது தீர்க்க இந்த இயக்கம் முயல்கிறது. மீவுமனிதர் என்பது படிவளர்ச்சிக்கு அமைய மனிதருக்கு அடுத்தபடியாக ஆதிக்கம் செய்யபோகும் ஒரு உயிரினம் என்ற ஒரு கருதுகோள் ஆகும்.

கிமு 2000 ஆண்டுகளுக்கு முன் செய்யுள் வடிவத்தில் களிமண் பலகைகளில் எழுதப்பட்ட, உலகில் தோன்றிய முதல் இலக்கியமான கில்கமெஷ் காப்பியத்தில்  [ “Gilgamesh Epic”/ written c. 2150 - 1400 BCE ]   முதுமை, இறப்பு போன்ற விரும்பப்படாத அம்சங்களை குறைக்க அல்லது தீர்க்க வழி தேட தூண்டும் ஒரு உந்தலை காண்கிறோம். உதாரணமாக,  இந்த இதிகாசத்தில், ஒரு கட்டத்தில், என்கிடு [Enkidu] என்ற ஒரு காட்டு வாசியும் உற்ற நண்பரும் தனது சாவைப் பற்றிய கவலையை கில்கமெஷிடம் தெரிவிக்கிறான். அதற்கு கில்கமெஷ் இவ்வுலகில் எவருமே நிரந்தரமாக இருப்பதில்லை, நம் வாழ்வு குறுகியது, முகில் போலக் கலைந்து போகும்; என சிரித்து அதை நிராகரிக்கிறான். என்றாலும், என்கிடு இறந்ததும், கில்கமெஷ் மிகவும் கலக்கம் அடைந்து, குழப்பம் அடைந்து, இறப்பு அற்ற நிலைவாழ்வை பெறுவதற்க்காக உட்னபிசிதிம் (Utnapishtim) என்ற கடவுளை நாடி, மரணமில்லாமை பற்றிய ரகசியத்தை அறிய முயற்சிக்கும் கில்கமெஷின் பயணத்தை இந்த நூல் விவரிக்கிறது. கில்கமெஷ் அழியாத வாழ்வை பெறாவிட்டாலும், 126 ஆண்டுகள் ஆட்சி நடத்தியதாகவும் [the Sumerian King List records his reign as 126 years] மிகப்பெரிய வலிமை கொண்டவனாகவும் இருந்தான் என்கிறது. அதே போல மந்தர மலையை மத்தாக்கி வாசுகிப்பாம்பை நாணாக்கி, பாற்கடலை  கடைந்து அங்கு திரண்டெழும் (சாகாமல் உயிர்வாழ உதவும்) அமுதத்தை அசுரர்களுடன் கூட்டு சேர்ந்து, ஆனால் பின் மகாவிஷ்ணுவின் உதவியுடன் ஏமாற்றி, தேவர்கள் மட்டும் குடிக்கும் ஒரு "பால் கடல் கடைதல்" என்ற புராண கதையை இந்து புராணத்திலும் காண்கிறோம். இவையும் சாகா உயிரை அல்லது மனிதனை உண்டாகும் ஒரு பண்டைய கற்பனை முயற்சியே எனலாம்? 

ஆனால் ஒரு உண்மையான முயற்சி ஒன்றை, கிமு 221 ஆம் ஆண்டில் ஒருங்கிணைந்த சீனாவின் முதல் பேரரசர் யிங் ஷெங் [Ying Zheng] என்னும் சொந்தப் பெயர் கொண்ட சின் ஷி ஹுவாங் ,கிமு 259 – செப்டெம்பர் 10, கிமு 210, [Qin Shi Huang, 'First Emperor of Qin, 18 February 259 BC – 10 September 210 BC ] என்பவர், தான் பெற்ற அதிகாரத்தையும் வலிமையையும் நிரந்தரமாக பாதுகாக்க, என்றென்றும் இறைவா வாழும் யோசனை ஒன்றை கொண்டிருந்தார். தனது கடைசி காலத்தில், புராணத்தில் கூறப்பட்டிருந்த, அனைத்து நோய் நிவாரணியான அமுதம் ஒன்றை [mythical elixir of life] இறைவா மருந்தாக அருந்த பாடுபட்டார். ஆனால் அவர் பாதரச மாத்திரைகளை [mercury pills] அந்த முயற்சியில் சாப்பிட்டு தன் உயிர் நீத்தார் என வரலாறு கூறுகிறது. என்றாலும் அவரின் சாவிற்கு பின்பும் அவர் ஆரம்பித்த முயற்சி நிற்கவில்லை. ஏறத்தாழ ஒன்பதாம் நூற்றாண்டில், சீன துறவிகள், அப்படி ஒன்றை கண்டுபிடிக்கும் முயற்சியில், அவர்கள் கண்டு பிடித்தது தான், உடனடி இறப்பை ஆயிரக்கணக்கான மக்களுக்கு கொடுக்க வழிசமைத்த வெடிமருந்து [gunpowder] ஆகும். தேச ஆராய்ச்சிக்காரன், பொன்சே டி லியோன் [Spanish explorer Ponce de Leon,1474 – July 1521] என்பவர், பூர்வீக கரீபியன் தீவுவாசிகள் [native Caribbean islanders] மூலம் அறிந்த ஒரு கதை, அவரை பிமினி [an island known as Bimini] என்ற ஓர் தீவில் உள்ளதாக நம்பப்படும் ஒரு மாயாஜால நீரின் நீர் என்று அழைக்கப்படும் இளைஞனின் நீரூற்று [“fountain of youth”] ஒன்றை தேட தூண்டிவிட்டது. நவீன உலகில் முதிர்ச்சியடைதல் பெரிய குறைபாடாகிறது. வலுவான, உறுதியான உடல்கள், மென்மையான, சுருக்கம் இல்லாத தோற்றம், விரைவான சிந்தனை மூளை, அவர்களில்  இளைஞர்களைப் போன்ற சுறுசுறுப்பு, ஆற்றல் மற்றும் பொது ஆரோக்கியத்தை மீண்டும் பெறுவதற்கான வழிகளை மக்கள் தொடர்ந்து தேடுகிறார்கள். இவரும் அப்படியான நம்பிக்கையில், அதாவது அந்த நீரூற்றில் நீந்தினால் ஆயுளை அல்லது உயிர் ஆற்றலை மீட்டெடுக்கலாம் என்ற நம்பிக்கையில், தனது தேடுதலை தொடங்கினார். அந்த தேடுதலில் அவர் கண்டு பிடிச்சது தான் புளோரிடா மாநிலம் [state of Florida]. ஆனால், அவரால் அப்படி ஒரு நீரூற்று ஒன்றை கண்டுபிடிக்க முடியவில்லை.

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]


பகுதி: 08B தொடரும்

பகுதி 01 லிருந்து வாசிக்க அழுத்துங்கள்→
Theebam.com: நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா? [சீரழியும் தமிழ் ச...01A

பகுதி: 08B வாசிக்க அழுத்துங்கள் →
     Theebam.com: நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா?/பகுதி: 08B

0 comments:

Post a Comment