உறக்கம் பற்றிய நம்பிக்கையும் அறிவியலும்/ பகுதி: 06



[The belief and science of the sleep]

புறநானூறு-320, யானையை வேட்டையாடும் வேட்டுவன் ஒருவனின் வீட்டு முற்றத்தில் முன்னைக் கொடியும் முசுண்டைக் கொடியும் அடர்த்தியாகப் படர்ந்து இருந்ததால் அங்கு பந்தல் தேவையில்லாமல் நிழல் மிகுதியாக இருந்தது. பலா மரத்திலிருந்து பலாப் பழங்கள் அங்கே தொங்கிக் கொண்டிருந்தன. அந்த முற்றத்தில், அவன் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தான் என, 

"முன்றில் முஞ்ஞையொடு முசுண்டை பம்பிப்
பந்தர் வேண்டாப் பலாத்தூங்கு நீழல்
கைம்மான் வேட்டுவன் கனைதுயில் மடிந்தெனப்"

என்று கூறுகிறது, அவனுக்கு அருகில், அந்த முற்றத்திலேயே, மான்களைப் பிடிப்பதற்காகப் பயிற்சி அளிக்கப்பட்ட இளம் பெண்மான் (பார்வை மான்) ஒன்றை, வேறு தொழில் எதுவும் இல்லாத ஆண் மான் ஒன்று தழுவிப் புணர்ந்து மகிழ்ச்சியோடு விளையாடிக் கொண்டிருக்கிறது, கணவனைக் காண வந்த வேட்டுவனின் மனைவி, மான்கள் புணர்ச்சி இன்பத்தை அனுபவிப்பதையும், கணவன் மெய்மறந்து உறங்குவதையும் கண்டாள். தான் ஏதாவது ஒலி யெழுப்பினால், கணவன் விழித்துக் கொள்வான் என்றும் மான்களின் புனர்ச்சி இன்பம் தடைப்பட்டு ஆண் மான் பெண் மானை விட்டு விலகி ஓடி விடும் என்றும் எண்ணி அஞ்சினாள் என,

"பார்வை மடப்பிணை தழீஇப் பிறிதோர்
தீர்தொழில் தனிக்கலை திளைத்துவிளை யாட
இன்புறு புணர்நிலை கண்ட மனையோள்
கணவன் எழுதலும் அஞ்சிக், கலையே
பிணைவயின் தீர்தலும் அஞ்சி,"

என்று கூறுகிறது, அந்த இன்புறு புணர்நிலையிலும், மனைவியின் வருகையிலும் குழம்பாதவாறு அவன் ஆழ்ந்து உறங்குவதை காண்கிறோம். பொதுவாக, நமக்கென சில படுக்கும் நிலைகள் இருக்கும். அப்படி படுத்தால் மட்டும் தான் உறக்கம் வரும். அதுவும் நம் வீட்டில் நம் மெத்தையில் நாம் நினைத்தபடி உறங்கினால் தான் நிம்மதியான உறக்கம் வரும். அப்படி ஒரு உறக்கத்தையே அந்த வேடுவன் செய்கிறான். ஆகவே நாமும் ஒவ்வொரு இரவும் அப்படியான ஆழ்ந்த உறக்கம் கொள்ள என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வி இயல்பாகவே வரும். பொதுவாக ஏராளமான மக்கள், இன்று ஒழுங்காக உறங்கப் போராடுகிறார்கள். அத்துடன், உறங்குவதற்கான சிறந்த வழியைப் பற்றி கிட்டத்தட்ட அனைவருக்கும் வித்தியாசமான மனம் இருப்பதாக ஆராய்ச்சி காட்டுகிறது. அந்த வேடுவனும் அப்படியான தனது மனதிற்கு ஏற்றவாறு உறங்கி இருக்கலாம் என்று நாம் கருதலாம். அதே போல, உங்கள் உறக்க தரத்திலும் உங்கள் உறங்கும் நிலை ஒரு பெரிய பங்கை கட்டாயம் வகிக்கிறது. ஆனால், எல்லோருக்கும் பொருந்தக் கூடியதாக ஒரு சிறந்த உறக்க நிலை இல்லை. வெவ்வேறு உறங்கும் நிலைகளில், வெவ்வேறு நன்மைகள் உள்ளன.என ஆய்வுகள் காட்டுகின்றன. எனவே, உங்கள் தேவைகளைப் பொறுத்து, உங்களுக்கு வேண்டிய நன்மைகளைப் பொறுத்து, எந்த உறக்க நிலை உங்களுக்கு வசதியாக இருக்குமோ அதை தகுந்த காரணத்துடன் பின்பற்றுங்கள். அதே நேரம், எங்கள் வாழ்க்கை தொடர்ந்து மாறிக் கொண்டே இருப்பதை மறந்து விடாதீர்கள். வயதாகும் போது நம் உடல் வடிவம் மாறுகிறது. நாங்கள் சிலவேளை கர்ப்பமாகி விடுகிறோம் அல்லது அவ்வப்போது குளிரால் பாதிக்கப்படுகிறோம். எங்கள் உறக்க நிலைகள் வாழ்க்கையின் ஏற்றத்தாழ்வுகளுடன் அல்லது வாழ்க்கையின்  மாறுபாடுகளுடன் சரிசெய்யப்பட வேண்டும் [our sleep positions should also adjust with life’s vicissitudes] என்பதை மறந்து விடாதீர்கள்.

நாம் இரு வகை உறக்கங்களில் ஈடுபடுவது வழமை, உறக்கத்தை நீண்ட நேரம் எடுத்து கொண்டால், அது ஆழ்ந்த உறக்கமாக கருதப்படும். வெறும் 05 நிமிடம் முதல்  20 நிமிடம் வரை உறங்கினால் "குட்டி உறக்கமாக" (Nap Sleep) கருதப்படும். என்றாலும் சிலர் இதை விட கொஞ்சம் கூடுதலாக, அதிகபட்சம் ஒரு மணி நேரம் வரை உறங்குவதும் உண்டு. நன்றாக உண்ட பகல் பொழுதிலோ, மனச்சோர்வின் போதோ இந்தக் குட்டி உறக்கம் வரும். இந்த குட்டி உறக்கம் எப்படியும் உறங்கலாம், அதற்கு என்று ஒரு குறிப்பிட்ட படுக்கும் நிலை இல்லை. என்றாலும் ஆழ்ந்த உறக்கம் பொதுவாக நான்கு வகையான படுக்கும் நிலைகளை கொண்டுள்ளது. அவை 1] குழந்தை போல உறங்கும் நிலை [fetal position], இது கருவில் உள்ள குழந்தையை போன்று, கை, கால்களை குறுக்கி கொண்டு உறங்கும் நிலையாகும். 2] மல்லாந்து படுக்கும் நிலை [Back Sleeping]  3] குப்புறப் படுக்கும் நிலை [Stomach Sleeping], 4]  திரும்பிப் படுக்கும் / ​​பக்கவாட்டில் படுக்கும் நிலை  [Side Sleeping], ஆனால் இது மேலும் இரண்டு வகையாக பிரிக்கலாம், அதாவது வலது புறம் திரும்பி படுக்கும் நிலை மற்றும் இடது புறம் திரும்பிப் படுக்கும் நிலை ஆகும்

முதலாவது வகையான குழந்தை போல உறங்கும் நிலை பொதுவாக பிரபலமானது, மற்றும் இந்த நிலை, கழுத்து மற்றும் மார்பிற்கு தீங்கை குறைக்க மருத்துவத் தொழிலில் பயன்படுத்தப்படுகிறது.[This position is used in the medical profession to minimise injury to the neck and chest] மேலும் இந்த நிலையில் ஆண்களை விட பெண்கள் தான் உறங்குகிறார்களாம். இப்படி உறங்குவது கர்ப்ப காலத்தில் சிறந்தது ஏனெனில் தாய்க்கும் குழந்தைக்கும் இரத்த ஓட்டம் சீராக இருக்குமாம். என்றாலும் நாட்பட  உடல் வலி உண்டாக காரணியாகவும் அமையலாம். ஏன் என்றால், மிகவும் இறுக்கமாக சுருண்டு கிடப்பது, உங்கள் கீழ் முதுகில் இயற்கைக்கு மாறான முறையில் வளைவை ஏற்படுத்தும், எனவே, காலையில் குடைச்சல் மற்றும் வலிகளுக்கு வழிவகுக்கும் [Being too curled up too tight can cause your lower back to arch in an unnatural manner, leading to aches and pains in the morning] பொதுவாக இடுப்பிற்கு பாதிப்பை ஏற்படுத்தலாம்.மேலும் உடல் குளிர்ச்சியாக இருக்கும்போது, குறிப்பாக பலர் இந்த நிலையில் உறங்குகிறார்கள். இரண்டாவது வகையான மல்லாந்து படுப்பது அல்லது முதுகில் படுப்பது, முதுகு வலியை குறைக்கும். மற்றும் இது முதுகெலும்பை, அதன் இயற்கையான நிலையிலேயே ஓய்வில் வைத்திருக்கிறது [resting your spine in its most natural position], அது மட்டும் அல்ல, உங்கள் முழு எலும்புக்கூடும் உங்கள் முதுகில் உறங்குவதற்கு உங்களுக்கு நன்றி தெரிவிக்கும், ஏன் என்றால், கைகள், தோள்கள் மற்றும் கால்கள் உங்கள் உடலின் எடையின் கீழ் நெரிசலுக்கு ஆளாகாது  என்றாலும் மல்லாக்க படுப்பது [Back Sleep or Supine sleep] குறட்டையை அதிகரிக்க வாய்ப்பு கூட, காரணம், புவி ஈர்ப்பு உங்கள் நாக்கை உங்கள் தொண்டையின் பின்புறம் இழுப்பதால் [gravity pulls your tongue to the back of your throat] ஆகும். மேலும் உறக்கத்தில் மூச்சுத்திணறு [ஸ்லீப் அப்னியா / Sleep apnea] பவர்களுக்கு இது உகந்தது அல்ல.

மூன்றாவது வகையான குப்புறப் படுப்பது, செரிமானத்தினை [digestion] கூட்டலாம், ஆனால் முகத்தினை பக்க வாட்டில் வைத்து படுத்தால் தான் நன்கு மூச்சு விட முடியும். எனவே, இது மிகக் குறைந்த நபர்களால் பயன்படுத்தப்படும் தூக்க நிலையாகும். இது உங்கள் கழுத்து மற்றும் முதுகெலும்புகளுக்கு, வலி மற்றும் மன அழுத்தங்களை [pain and stress] உண்டாக்குகிறது. நாலாவது வகையான திரும்பிப் படுப்பதில்  / ​​பக்கவாட்டில் படுப்பதில் , இயன்றவரை இடது பக்கமாக உறங்குவது உண்மையில் உங்கள் ஆரோக்கியத்திற்கு பலனளிக்கும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன, காரணம், மேம்படுத்தப்பட்ட செரிமானம் மற்றும் இரத்த ஓட்டத்திற்கு [improved digestion and blood flow] அது வழிவகுப்பதால் ஆகும். உங்கள் இரத்தம் உங்கள் உடல் முழுவதும் பாய்ந்து, இறுதியில் வலது பக்கத்தில் இதயத்திற்குத் திரும்புகிறது. ஆனால் நீங்கள் உங்கள் வலப்பக்கத்தில் உறங்கும் போது, உங்கள் இதயத்திற்கு [நெஞ்சுப்பைக்கு / ticker] திரும்பும் இரத்த நாளங்களுக்கு [blood vessels] எதிராக உங்கள் உடலின் அழுத்தம் அமுக்குகிறது. ஆனால், உங்கள் இடது பக்கத்தில் உறங்குவது, உங்கள் வலது புறத்தை  அமுக்காததால்,  உங்கள் இதயத்திற்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் சாத்தியம் கூடுகிறது.
மேலும் எந்த பக்க வாட்டில் படுத்தாலும் நெஞ்செரிச்சல் [reduce heartburn] குறையும். என்றாலும் திருப்பி படுப்பதால் மிகப்பெரிய குறைபாடு பயமுறுத்தும் அளவிற்கு கை உணர்ச்சியற்று அல்லது மரத்துப் [dreaded numb] போவதாகும். அது மட்டும் அல்ல, ஒரு ஒப்பனை பார்வையில், பக்க வாட்டில் படுத்தல், முக சுருக்கங்களுக்கு வழிவகுக்கும் [side sleeping can lead to more face wrinkles],  ஏனெனில் நீங்கள் உங்கள் முகத்தை இரவு முழுவதும் தலையணைக்கு எதிராக அழுத்துகிறீர்கள், அத்துடன் பொதுவாக எடுப்பான மார்பகங்களை எப்போதும் தக்கவைத்து கொள்ள வேண்டும் என்று பெண்கள் விரும்புவார்கள். ஆனால் இது மார்பங்களை தொய்வதற்கு [Saggy breasts] வழிவகுக்கிறது, காரணம் ஈர்ப்பு சக்தியாகும் [gravity].இன்னும் ஒன்றை நான் இங்கு சொல்லவேண்டும், பொதுவாக, குழந்தையை போல உறங்கும் நிலையும் ஒரு பக்கவாட்டு உறக்கமே, ஆனால் பின்புறம் வளைந்திருக்கும், தலை குனிந்திருக்கும், கைகால்கள் வளைந்து உடற்பகுதி வரை மார்பகத்தை நோக்கி சுருட்டி இருக்கும் [the back is curved, the head is bowed, and the limbs are bent and drawn up to the torso] அது தான் வேறுபாடு.

 [கந்தையா தில்லைவிநாயகலிங்கம்.
பகுதி: 07 தொடரும் .. ..வாசிக்க அழுத்துக Theebam.com: உறக்கம் பற்றிய நம்பிக்கையும் அறிவியலும் / பகுதி: 07:
ஆரமப்த்திலிருந்து வாசிக்க அழுத்துக: Theebam.com: உறக்கம் பற்றிய நம்பிக்கையும், அறிவியலும் /பகுதி: 01

0 comments:

Post a Comment