எங்கட தமிழ் ஆட்கள்-பறுவதம்பாட்டி


(இது ஒரு நடப்பு நிகழ்வுகளின் அலசல்)
அன்று பாடசாலையின் விடுமுறை என்பதால் விடிந்து நெடுநேரமாகியும் புரண்டு படுத்துக் கொண்டிருந்தேன். மாமா வீட்டில் வாழும் அண்ணாமலைத் தாத்தாவின் தொலைபேசி அழைப்பாக இருக்கவேண்டும்.  பாட்டி அவசரமாக போனை எடுத்துக்கொண்டு வீட்டின் வெளிப்பக்கமாக வந்ததிலிருந்து எனக்கு அது புரிந்தது. பாட்டி போனை ஸ்பீக்கரில்விட்டு பேசிக்கொண்டிருந்தது என் அறை ஜன்னலுடாக தெளிவாகக்கேட்டது.

அண்ணாமலைத்தாத்தாதான்பேசிக்கொண்டிருந்தார்.

"ஏன் இவையள் இப்படி?" என்று தாத்தா ஆரம்பித்துக்கொண்டார். 

"ஆரைச்  சொல்லுறியள்".

"எங்கட தமிழ் ஆட்கள் தான்"

"எதை வச்சுக்கொண்டு  அப்பிடிக் கதைக்கிறியள்?"

"ஒண்டா இரண்டா. இவன் மேன் வீடு வாங்கினதிலிருந்து எத்தினை தமிழாட்களை  வீட்டில கூரை,சுவர்,நிலம்,ஜன்னல்,washroom வேலைகள் என்று பலமுறையும் தமிழாட்களை ௬ப்பிட்டு ஒவ்வொருவரும் ஏமாற்றி தானே போகினம். அவனும் தமிழாட்கள் என்று நம்பித்தானே ௬ப்பிட்டவன். அவையும் தமிழாட்கள் தானே என்டுவிட்டுத் தமிழாட்களிலை  தானே வேலை பழக வாறது. ஆனால் கதைக்க விட்டுப் பார்க்கவேணும். தங்களை விட்டால் கனடாவிலை திறமா வேலை செய்ய ஆர் இருக்கினம் எண்டு விலாசம் பேசுவினம். வீட்டு ரிநோவேசன் வேலையில தமக்கு தெரியாதவை எதுவுமில்லை தம்பட்டம் அடிப்பினம். ஆனா எதுவும் தெரியாது.கழிவிடங்களில சும்மா பொறுக்கின பழைய ஆயுதங்களோட விலாசமாய் வந்து இறங்குவினம். செய்வதெல்லாம் குப்பை வேலைகள்”.

பாட்டியும்  தொடர்ந்தாள்.

"ஏன்,இங்கை மேள் நெடுகச் சொல்லுவாள்.கார் ஒண்டை திருத்துவதற்காக கொம்பனிக்கு கொண்டுபோனா அதை உயர்த்தி  கணணி இயந்திரங்கள் மூலம் CHECKபண்ணி 2,3 மணித்தியாலங்களில் தான் என்ன பிழை எண்டு சொல்லுவாங்கள். ஆனால் தமிழாட்கள் சரியான கெட்டிக்காரர்கள்.தாங்களே ஒருமுறை குனிஞ்சு பார்த்துவிட்டு படக்கெண்டு என்ன பிழை எண்டு  சொல்லி PARTS  எங்கள் காசில வேண்டிப் போட்டு அது எப்பிடி எண்டு பழகிக் கொள்வார்கள்.ஆனால் பிழைகள் தொடரும்.தெரியாத விசயங்களுக்கெல்லாம் ஏன் தலையிட்டு பேரினைக் கெடுத்துக் கொள்கிறார்களோ தெரியாது".

"ஒரு வளர்ந்துவிட்ட நாட்டில வாழ்ந்துகொண்டு இன்னும் நாம் திருந்தவில்லை. ஒருவனை ஏமாற்றினால் அவன் தன்னோட பழகிற உறவுகள், நண்பர்கள் எல்லோருக்கும் சொல்லாமல் விடமாட்டான். இவர்கள் எத்தினை பத்திரிகைகள்,வானொலிகளுக்கு விளம்பரம் கொடுக்கட்டும்.ஆனால்  அவை எல்லாவற்றிலும் வலிமையானது வாடிக்கையாளரின் பிரச்சாரம் என்பது எங்கட ஆட்களுக்கு  இன்னும் புரியாதது ஏன் என்று  விளங்கவில்லைஎன்றார் அண்ணாமலைத்தாத்தா.

முடிவாகப் பாட்டியும், தமிழரிட்டை போகக் கூடாது என்பது பிள்ளையளின்ட நோக்கமில்லை.அவர்கள் தான் தமிழரை ஏமாத்தக் கூடாது என்று முடிவேடுக்கவேணும். அந்த எண்ணம் எங்கடயளிண்ட நெஞ்சில எப்ப முடிவாகுதோ அப்பத்தான் எங்கடயலும் இந்த நாட்டில வளர்ந்துவிட்ட இனங்களுக்கு சமமாக வளர்ந்துவிட முடியும்.

பாட்டியின் இவ் முடிவுரையினை நான் நற்சிந்தனையாக  உள்வாங்கிக்கொண்டேன்.


ஆக்கம்: பேரன் செ.மனுவேந்தன்

3 comments:

  1. இங்கு ஒவ்வொரு தமிழனும் விடும் தவறுகளை தொடர்ந்து தரும் பேரனுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. கந்தையா தில்லைவிநாயகலிங்கம்Sunday, November 18, 2012

    ஏமாற்றாதே ஏமாற்றாதே ..............

    படம்:அடிமைப் பெண்
    இசை:கே வீ மஹாதேவன்
    பாடியவர்கள்:டி எம் எஸ்


    "ஏமாற்றாதே ஏமாற்றாதே
    ஏமாறாதே ஏமாறாதே"

    ["ஆரை சொல்லுறியள்". "எங்கட தமிழ் ஆட்கள் தான்"]

    "அந்த இருட்டுக்கும் பார்க்கின்ற விழி இருக்கும்
    எந்த சுவருக்கும் கேட்கின்ற காதிருக்கும்"

    [வீட்டில கூரை,சுவர்,நிலம்,ஜன்னல்,washroom வேலைகள் என்று பலமுறையும் தமிழாட்களை ௬ப்பிட்டு ஒவ்வொருவரும் ஏமாற்றி தானே போகினம்]

    "சொல்லாமல் கொள்ளாமல் காத்திருக்கும்
    தக்க சமயத்தில் நடந்தது எடுத்துரைக்கும்"

    [அவனும் தமிழாட்கள் என்று நம்பித்தானே ௬ப்பிட்டவன்.அவையும் தமிழாட்கள் தானே என்டுவிட்டுத் தமிழாட்களிலை தானே வேலை பழக வாறது.]

    "ஏமாற்றாதே ஏமாற்றாதே
    ஏமாறாதே ஏமாறாதே"

    [வீட்டு ரிநோவேசன் வேலையில தமக்கு தெரியாதவை எதுவுமில்லை தம்பட்டம் அடிப்பினம். ஆனா எதுவும் தெரியாது.]

    "ஒரு நீதிக்கும் நேர்மைக்கும் பயந்துவிடு
    நல்ல அன்புக்கும் பண்புக்கும் வளைந்து கொடு"

    [ஆனால் தமிழாட்கள் சரியான கெட்டிக்காரர்கள்..தாங்களே ஒரு முறை குனிஞ்சு பார்த்து விட்டு படக்கெண்டு என்ன பிழை எண்டு சொல்லி PARTS ஐ எங்கள் காசில வேண்டிப் போட்டு அது எப்பிடி எண்டு பழகிக் கொள்வார்கள்.]

    "இன்றோடு போகட்டும் திருந்தி விடு
    உந்தன் இதயத்தை நேர் வழி திருப்பிவிடு"

    [ஒரு வளர்ந்துவிட்ட நாட்டில வாழ்ந்துகொண்டு இன்னும் நாம் திருந்தவில்லை]

    "ஏமாற்றாதே ஏமாற்றாதே
    ஏமாறாதே ஏமாறாதே"

    [ ஒருவனை ஏமாற்றினால்.... எல்லாவற்றிலும் வலிமையானது வாடிக்கையாளரின் பிரச்சாரம் என்பது எங்கட ஆட்களுக்கு இன்னும் புரியாதது ஏன் என்று விளங்கவில்லை”என்றார்அண்ணாமலைத்தாத்தா.]]

    "நிழல் பிரிவதில்லை தன் உடலை விட்டு
    அது அழிவதில்லை கால் அடிகள் பட்டு"

    [முடிவாகப் பாட்டியும், தமிழரிட்டை போகக் கூடாது என்பது பிள்ளையளின்ட நோக்கமில்லை.அவர்கள் தான் தமிழரை ஏமாத்தக் கூடாது என்று முடிவேடுக்கவேணும்.]

    "நீ நடமாடும் பாதையில் கவனம் வைத்தால்
    இங்கு நடப்பது நலமாய் நடந்து விடும்"

    [அந்த எண்ணம் எங்கடயளிண்ட நெஞ்சில எப்ப முடிவாகுதோ அப்பத்தான் எங்கடயலும் இந்த நாட்டில வளர்ந்துவிட்ட இனங்களுக்கு சமமாக வளர்ந்துவிட முடியும்.]

    "ஏமாற்றாதே ஏமாற்றாதே
    ஏமாறாதே ஏமாறாதே"

    ReplyDelete
  3. MANUVENTHAN SELLATHURAIWednesday, September 09, 2020

    இது இவ்வாரம் இடம்பெற்றது. பால்கனி கதவின் விசேடமான பூட்டு பிழையாகிவிட ,அது எம்மால் புதிது போடமுடியாத நிலையில் ,முதலில் ஒரு தமிழ் லொக் சுமித் க்கு தொலைபேசியில் அழைக்க அவர் நேர்மையாக அப் பூட்டு தனக்கு போட தெரியாது என்கிறார். இன்னொருவருக்கு அழைக்க ,அப்பூட்டு கனடாவில் இல்லையாம்,இத்தாலியிலிருந்து எடுக்க வேண்டுமாம் என்று இன்றய இன்டர்நெட் காலத்திலும் கணக்கு விட்டார்.வெள்ளை காரனுக்கு அழைப்பு விட ,அவன் வந்து அன்றைக்கே புதிது வாங்கிப் பூட்டி சென்றான்.எப்படி இருக்கு?

    ReplyDelete