பழகத் தெரிய வேணும் – 73

குழந்தைகளும் கைத்தொலைபேசியும்

பெண்களுக்கு இயற்கையாக, மூளையின் இரு பக்கங்களும் ஒரே சமயத்தில் மாறி, மாறி வேலை செய்யும். ஒரு பக்கம் குழந்தை அழ, சமையலையும் அதனுடன் கவனித்துக்கொண்டு, இன்னும் பிற வேலைகளையும் ஒரே சமயத்தில் செய்ய முடியும்.

 

Lateral thinking (பக்கவாட்டு சிந்தனை) என்னும் இத்திறனைப் பெற ஆண்களுக்குப் புத்தகங்கள் வழிகாட்டுகின்றன.

 

தொலைக்காட்சி, கைத்தொலைபேசி போன்று, திரையையே உற்றுப் பார்க்க வைப்பவையோ, இரு பக்க மூளைக்கும் வேலை கொடுப்பதில்லை. அதன் நடுப்பாகத்தைத்தான் உபயோகிக்கின்றன. இதனால் ABSTRACT THINKING குறைந்துவிடுகிறது. அதாவது, எதிரில் இல்லாத பொருளைப் புரிந்துகொள்வது கடினமாகிவிடுகிறது.

 

பாலர் பள்ளியில், இரண்டும் இரண்டும் என்பதுபோன்ற எளிதான கூட்டல் கணக்கு போட, கரும்பலகையில் இரு ஆப்பிள்களை வரைந்து காட்டும் நிலை இன்று.

 

இதைத் தவிர்க்க, சிறுவயதில் இருபது நிமிடங்களுக்குமேல் இச்சாதனங்களைப் பயன்படுத்த விடுவது நல்லதல்ல.

 

சிறுவயதிலிருந்தே, பக்கத்திலிருப்பவர்களுடன் பேசுவதைவிட, எங்கோ ஆயிரக்கணக்கான மைல் தூரத்திலிருக்கும், முகமறியாத `நண்பர்களுடன்’ பேசுவதுதான் பழக்கமாகிவிடுகிறது.

 

அவர்களில் எத்தனைபேர் நல்லெண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள்? தம் குழந்தைகள் நல்ல நண்பர்களுடன் பழகுகிறார்களா என்று கண்காணிப்பது அவசியமாக இருந்தாலும், கடினமாகிவிடுகிறது.

 

தனித்திருந்தால் கற்பனை வளம் பெருகும். ஆனால், இவ்வாறெல்லாம் தனிமையையே நாடுகிற குழந்தைகளுக்குப் பிறருடன் பழகத் தெரிகிறதா என்பது சந்தேகம்தான்.

 

தூக்கமே வரதில்லே!

படுத்துக்கொண்டு கைத்தொலைபேசியை உபயோகித்தால், களைப்பில்லாது பல மணி நேரத்தைச் செலவிடலாம். ஆனால், கண்கள் பழுதாகிவிடுவது என்னவோ உறுதி.

 

இரவில் தூங்கப்போகுமுன், படுத்தபடி கைபேசியில் கவனம் செலுத்துகிறவர்கள் விரைவில் தூங்க முயற்சித்தாலும் அது இயலாத காரியமாகிவிடும். ஏதேதோ யோசனைகள் எழும். மிகுந்த ஒளியுடன் இருக்கும் திரை செய்யும் காரியம் அது. இதனால், அடுத்த நாள் பள்ளியில் தூங்கிவிழுவார்கள்.

 

அதன் விளைவு?

பள்ளிக்கூட இடைவேளையில் கைத்தொலைபேசியைப் பயன்படுத்துகிறவர்களின் கற்கும் திறன் குன்றுவதோடு, மன நிலையையும் பாதிக்கப்படுகிறது. நட்பு இருக்கவேண்டிய இடத்தில் முரட்டுத்தனம், இல்லை, அதிகாரம்.

 

இச்சாதனத்தைப் பள்ளிக்குக் கொண்டுவரக் கூடாது என்று சில பள்ளிகள் விதித்திருப்பதன் காரணம் இதுதான்.

 

`குழந்தைகளின் நச்சரிப்பிலிருந்து தப்பலாம்’ என்று, இரண்டுவயதுக் குழந்தைகளைக்கூட இச்சாதனங்களை உபயோகிக்கப் பழக்கும் பெற்றோர், பதின்ம வயதில் அவர்கள் தம்முடன் அதிகம் பேசுவதில்லையே என்று குறைப்படுவது என்ன நியாயம்!

 

மூளையில் பாதிப்பு

இரு நிமிடங்கள் உபயோகித்தபின், கைத்தொலைபேசியிலிருந்து எழும் வானொலி அலைகள் குழந்தைகளின் மூளையில் ஒரு மணி நேரம்வரை தங்கியிருக்கும் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

 

பதினாறு வயதுக்குட்பட்ட சிறுவர்களின் மூளை பெரியவர்களைவிட 60% அதிகமாகக் கதிர்வீச்சை உள்வாங்கிக்கொள்கிறதாம். அதனால் மூளையிலும் காதிலும் கட்டிகள் வரக்கூடும்.

 

ஐபேட் (I pad) போன்றவற்றைச் சிறுவயதிலேயே உபயோகிக்க ஆரம்பிக்கும் குழந்தைகள் ரோபாட்போன்று இயந்திரகதியில் பேசுகிறார்கள்.

 

கணினி, கைத்தொலைப்பேசி போன்றவை இன்று அவசியமானதாக இருந்தாலும், செய்யவேண்டிய வேலைகளை ஒத்திப்போட வைக்கின்றன என்பதுதான் உண்மை.

 

`இவற்றை அதிக நேரம் பயன்படுத்தக்கூடாது,’ என்ற நல்லெண்ணத்துடன் சிறுவர்களைத் தடுத்தால், அழுது, முரட்டுத்தனம் செய்கிறார்களா? அப்படியானால், அவர்களுக்கு இப்பழக்கம் போதை அளிக்கிறது என்று அர்த்தம். ஆரம்பத்திலேயே தவிர்க்கவேண்டும்.

 

இப்படிப் பல வேண்டாத விளைவுகளை எப்படித் தவிர்ப்பது?

 

நான் பெரியவனாப் பிறந்திருக்கணும்

 

எங்கள் குடும்பத்தில், `பத்து வயதுப் பையனுக்கு அரைமணி, ஏழு வயதிற்கு கால்மணி’ என்று நான் பேரன்களுக்கு உத்தரவு போட, “நான் ஏன் மொதல்லே அம்மா வயத்திலிருந்து வரலே?” என்று சின்னவன் சண்டை பிடித்தான்!

 

அத்துடன், `புத்தகங்களும் படித்தாக வேண்டும்,’ என்ற கட்டாயத்திற்கு உள்ளாக்கினோம். சிந்தனைவளம் வேறு எப்படித்தான் பெருகும்!

 

முந்தைய தலைமுறைகளில், குடும்பத்திலுள்ள பெரியவர்கள் கதை சொன்னார்கள், குரலில் ஏற்ற இறக்கத்துடன்.

 

இரவு வேளைகளில், அல்லது உணவருந்தும்போது, பயனுள்ள கதைகள் சொல்வது நன்மையை விளைவிக்கும் என்று அவர்களுக்குத் தெரிந்திருந்தது.

 

என்ன நன்மை?

 

படிக்கத் தெரியாத வயதில் கதை கேட்பதாலோ, பிறகு சுயமாகப் படிப்பதாலோ, கற்பனாசக்தி வளரும்.

 

தம் நலனில் அக்கறைகொண்டு, நேரத்தைச் செலவிடும் பெரியவர்களிடம் அன்பும் மரியாதையும் நிலைக்கும். தம் அன்றாட வாழ்க்கையை அவர்களுடன் பகிர்ந்துகொள்வார்கள்.

 

வித்தியாசமான பிறரைப் புரிந்துகொள்ளவும் முடியும்.

 

குழந்தைகளை விடுங்கள்! அலுவலகத்தில் வேலை செய்யும்போதே கைத்தொலைபேசியில், `புதிதாக என்ன வந்திருக்கிறது?’ என்று இடையிடையே பார்ப்பவர்களின் I.Q (நுண்ணறிவு) பத்து எண்கள் குறைந்துவிடுகிறதாம். மரியுவானா என்று போதைப்பொருளால் விளையும் தீங்கைப்போல் இருமடங்கு!

 

இரு காரியங்களை ஒரே சமயத்தில் செய்வது

 

புத்தகம் படிக்கும்போதோ, காரோட்டிப் போகையிலோ, கைத்தொலைபேசியில் கண்ணைப் பதித்தால் சக்தி விரயமாவதுடன், கவனமும் குறைந்துவிடும். தெரு விபத்துகள் அதிகரிக்காமல் என்ன ஆகும்?

 

எல்லாவற்றிற்கும் ஒரே கருவி

 

கைத்தொலைபேசி உபயோகத்தில் வந்ததிலிருந்து, புகைப்படக் கருவிகளுக்கு அவசியம் இல்லாது போயிற்று. மணிக்கட்டில் கட்டிய கைக்கடிகாரத்தைவிட தம் விரல்களுடன் சொந்தம் கொண்டாடும் தொலைபேசியைத்தான் ஆண்கள் பார்க்கிறார்கள், நேரத்தைத் தெரிந்துகொள்ள. தேதி பார்க்க இனி எதற்கு காலண்டர்?

 

`என்ன சாப்பிடுகிறோம்?’ என்றே புரியாது, கண் கைத்தொலைபேசியில் நிலைக்கிறது பலருக்கும்.

 

கைத்தொலைபேசி இளைத்துக்கொண்டே வருகிறது. மனிதர்களோ, அதற்கு நேர் எதிரிடை!” என்று புலம்புகிறார் ஒருவர்.

 

முகமறியாதவர்களுடன் ஓயாமல் பேசிக்கொண்டும், திரையை வெறித்துக்கொண்டும் இருந்தால், உடற்பயிற்சிக்கு ஏது நேரம்?

 

`அதுதான், சாயங்கால வேளைகளில் உலவப்போகிறேனே!’ என்கிறீர்களா?

 

அப்போதுகூட, கைத்தொலைபேசி, அதன் பெயருக்கேற்ப, கையைவிட்டு இறங்குவதில்லையே!

 

::நிர்மலா ராகவன்-/-எழுத்தாளர், சமூக ஆர்வலர். மலேசியா.

 ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக...  Theebam.com: பழகத் தெரிய வேணும் – 1

 

0 comments:

Post a Comment