செக்குமாடாய் உழைக்காதீர்கள்

வாழ்க்கையில் உயர வேண்டுமானால் உழைப்பு மிக அவசியம் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் கடுமையாக உழைப்பது மட்டுமே உயர்வுக்கு உத்திரவாதமாகுமா என்றால் இல்லை என்பதே உண்மை. எவ்வளவோ பாடுபட்டு உழைப்பவர்களை நாம் பார்த்திருக்கிறோம். பலர் எத்தனை காலமாக அப்படி உழைத்தாலும் துவக்கத்தில் இருந்தது போலவே பலகால உழைப்பிற்குப் பின்பும் இருக்கிறார்கள். உழைப்பு உயர்வுக்கு உத்திரவாதமென்றால் அவர்கள் எத்தனையோ உயர்ந்திருக்க வேண்டுமே, ஏன் அவர்கள் அவ்வாறு உயரவில்லை? காரணம் அவர்கள் செக்கு மாடாகத் தான் உழைத்திருக்கிறார்கள்.
செக்குமாடு ஒரு நாள் நடக்கும் தூரத்தைக் கணக்கிட்டால் அது மைல் கணக்கில் இருக்கும். ஆனால் அது ஒரே இடத்தில் தானே சுற்றி நடக்கிறது. அப்படித்தான் பலருடைய உழைப்பும் இருக்கிறது. இந்த செக்குமாடு உழைப்பில் சிந்தனை இல்லை. நாளுக்கு நாள் வித்தியாசம் இல்லை. புதியதாய் முயற்சிகள் இல்லை. மாற்று வழிகள் குறித்த பிரக்ஞை இல்லை. இது போன்ற உழைப்பு உங்கள் நாட்களை நகர்த்தலாம், ஆனால் வாழ்க்கையை நகர்த்தாது.

நாளுக்கு நாள் உலகம் மாறிக் கொண்டே இருக்கிறது. புதிது புதிதாகத் தேவைகள் உருவாகின்றன. பழைய சூழ்நிலைகள் மாறி புதிய சூழ்நிலைகள் உருவாகின்றன. உங்கள் தொழிலைத் தீர்மானிக்கும் மனிதர்கள் மாறுகிறார்கள். நேற்று வெற்றியை ஏற்படுத்திய வழிமுறைகள் இன்று அதே விளைவுகளை ஏற்படுத்தத் தவறுகின்றன. இப்படிப்பட்ட நேரத்திலும் ஒரே போல் எப்போதும் கண்களை மூடிக் கொண்டு உழைப்பது தான் செக்குமாட்டின் உழைப்பு. இப்படி உழைத்து விட்டு உயரவில்லையே என்று வருத்தப்படுவதில் பயனில்லை.
உயர வைக்கும் உழைப்பு எப்படி இருக்க வேண்டும்?

*செய்யும் செயல் நமது அறிவுக்கும் திறமைக்கும் ஏற்றதாக இருக்க வேண்டும்.

*என்ன செய்கிறோம், ஏன் செய்கிறோம், கிடைக்கக்கூடிய பலன் என்ன, அது உழைப்பிற்குப் போதுமானது தானா என்பதை எப்போதும் தெளிவாக அறிந்திருங்கள்.

*நாம் செயல்புரிகிற விதம் கச்சிதமானது தானா, மற்றவர்கள் எப்படிச் செய்கிறார்கள், நம்மை விட அவர்கள் செயல்புரிகிற விதம் சிறந்ததாக உள்ளதா என்பதை விருப்பு வெறுப்பில்லாமல் பார்க்க வேண்டும். அப்படி நம்மை விடச் சிறப்பாக இருந்தால் அதைப் பின்பற்றத் தயங்கக்கூடாது. நம்முடைய வழிமுறை என்பதற்காக தரம் குறைந்த ஒன்றை கண்ணைமூடிப் பின்பற்றும் முட்டாள்தனத்தை செய்யக்கூடாது.

*செய்யும் செயலில் ஈடுபாடும், முழுக் கவனமும் இருக்க வேண்டும். செய்யச் செய்ய செயலில் நாளுக்கு நாள் மெருகு கூடா விட்டால், தரம் உயரா விட்டால், செயலைக் கச்சிதமாகச் செய்து முடிக்கும் நேரம் கணிசமாகக் குறையா விட்டால் நமக்குள்ள ஈடுபாட்டிலோ, கவனத்திலோ குறை உள்ளது என்பது பொருள்.

*நம் தொழில் சம்பந்தமாக புதிது புதிதாக வரும் மாற்றங்களை கண்டிப்பாக கவனித்து வர வேண்டும்.

*சரியாகச் செய்தும், முயன்றும் போதிய பலன் தராத தொழிலை விட்டுவிடத் தெரிய வேண்டும். 'செண்டிமெண்டல்' காரணங்களுக்காக அதைத் தொடர்ந்து செய்வது முட்டாள்தனம்.

*இதை விட்டால் வேறு வழியில்லை, இது தான் எனக்கு விதித்திருக்கிறது, இதைத் தவிர வேறு எதற்கும் லாயக்கற்றவன் என்று நம்மை நாமே மட்டுப்படுத்திக் கொள்ளக் கூடாது. புதியதை முயன்று பார்க்கத் தயங்கக்கூடாது. முயன்று பார்த்தால் ஒழிய நம் உள்ளே உள்ள திறமைகளை நாம் அறிய முடியாது.

இப்படி எல்லா அம்சங்களையும் உள்ளில் கொண்டு உழைக்கும் உழைப்பே உயர்வைத் தரும்.


நன்றி -என்.கணேசன்

0 comments:

Post a Comment