திருமூலர் கூறிய வழிபாடும் ...இன்றும்

திருமூலர் அகத்தியரைத் தரிசிப்பதற்காகத் தென்னாட்டிற்கு வந்தார். வழியில், மேய்ப்பனை இழந்த மாடுகள் கதறிக்கொண்டிருந்ததைப் பார்த்தார். அவற்றின் கலக்கத்தைத் தீா்ப்பதற்காகக் கூடுவிட்டுக் கூடு பாய்ந்தார். தேடிவந்த மேய்ப்பனின் மனைவியை விலக்கி, தவம் மேற்கொண்டு ஆண்டு ஒன்றிற்கு ஒரு பாடலாக எழுதினார். அதுவே திருமந்திரப் பாடல்களாக மலர்ந்தன. வழுக்கிவிழக்கூடிய வாய்ப்புகள் பல இருந்தும், அவற்றில் எச்சரிக்கையாக இருந்ததால்தான், காலக்கணக்கைக் கடந்து, சித்த புருஷராக இருக்கிறார். அப்படிப்பட்ட அனுபவசாலி ஓா் அற்புதமான தகவலைச் சொல்கிறார். இன்றைய காலகட்டத்தில் மிகமிக அவசரத் தேவை இப்பாடல்:

இத்தவம் அத்தவம் என்று இருப்போரிடம்
பித்தரைக்காணின் நகும் எங்கள் போ் நந்தி
எத்தவம் ஆகில் என்? எங்கு பிறக்கில் என்?
ஒத்து உணா்வார்க்கு ஒல்லை ஊா் புகலாமே
(திருமந்திரம்-1568)

இப்பாடலில் திருமூலா், தான் சிரிப்பதாகக் கூறவில்லை. மாறாக, இறைவன் நகைப்பதாகக் கூறுகிறார். இறைவனுக்கே நகைப்பு வரும்படியாக அப்படி என்னதான் நடந்தது?

இந்தத் தெய்வம்தான்! உயர்ந்தது. இல்லை அந்தத் தெய்வம்தான் உயா்ந்த வழி என்றெல்லாம் சண்டை போடுகிறார்கள் அல்லவா? அவா்களைப் பார்த்துத்தான் இறைவன் நகைக்கிறாராம். பிறகு, நகைக்காமல் வேறு என்னசெய்வார்? அப்பப்பா! என் மதம், உன் மதம்; ஒரு மதத்திற்குள்ளேயே, உன் கொள்கை, என் கொள்கை எனப்பல பிரிவுகள்; அப்பிரிவுகளுக்குள்ளும் என் வழிபாடுதான் உயா்ந்தது, உன் வழிபாடு தாழ்ந்ததுஎவ்வளவு வாதங்கள்!  தெய்வத்தைப் பற்றிய உண்மையை உணர முயலாமல், தங்கள் கொள்கைதான் உயா்ந்தது என வாதத்தில் ஈடுபடுபவர்களைக் கண்டு,கடவுள் நகைக்கமாட்டாரா என்ன? நகரத்தைச் சோ்ந்தவர்களால் மட்டும்தான் மலை உச்சியை அடைய முடியுமா? கிராமத்தில் பிறந்தவர்களால் அடைய முடியாதா? படிப்பறிவு பெற்றவர்கள்தான் பாங்காக வாழ்வார்கள்; படிப்பறிவு இல்லாதவர்களுக்கு வாழ்வே கிடையாது என்றா சொல்ல முடியும்?

யாராக இருந்தால் என்ன, எங்கு பிறந்தால்தான் என்ன? மனதில் விருப்புவெறுப்பு இல்லாமல், கோபம், பகை இல்லாமல், அன்பும் கருணையும் கொண்டு👫அனைவரையும் ஒன்றுபோலப் பார்ப்பவர்கள்,  எக்காரணம் கொண்டும் சமயச் சண்டையில் ஈடுபடாதவர்கள்  பேதம் பாராட்டாதவர்கள்   நன்னிலை அடையலாம் என்ற திருமூலா், இதன் எதிர்மறை விளைவை நம்மையே உய்த்து உணரச் செய்கிறார். எந்த எதிர்மறை விளைவு? சமயச் சண்டை போட்டுக்கொண்டு👫பேதம் பாராட்டித் திரிந்தால் துயரம்தான் விளையும் என்பதே திருமூலரின் கருத்து.  நன்றாகவே தெரிகிறது. ஆனால், அனுபவத்தில் வரும்போது முடியவில்லை, சிக்கலில்  அகபபட்டுக் கொள்கிறோம். ஏன்?  விடையைத் திருமூலா் சொல்கிறார்:

எல்லாம் அறியும் அறிவு தனை விட்டு
எல்லாம் அறிந்தும் இலாபம் அங்கு இல்லை
எல்லாம் அறிந்த அறிவினை நான் என்னில்
எல்லாம் அறிந்த இறை எனலாமே
(திருமந்திரம்-2596)

பிரச்னைகளுக்கான காரணத்தைப் பாடலின் தொடக்கத்திலேயே கூறுகிறார் திருமூலா். பயமாகவும் இருக்கிறது; பிரமிப்பாகவும் இருக்கிறது. திருமூலா் அந்த அளவிற்குச் சொல்லியிருக்கிறார். ‘எல்லாம் அறியும் அறிவுஅபூா்வமான சொற்பிரயோகம் இது. நமக்குத் தெரிந்ததை எல்லாம் விட்டுவிட்டுச் சற்றுத் திறந்த மனதோடு, தயவுசெய்து வாருங்கள்! இப்போது இல்லாவிட்டாலும்,கூடிய விரைவில் தெளிவு பிறக்கும். உலகம் தோன்றிய நாள்தொட்டு இன்றுவரை, எதுவும்  மாறவில்லை. யானை மரக்கறி உணவுதான் உண்கிறது; சிங்கம் மாமிசம்தான் உண்கிறது. பூனை எலியைத் துரத்த, எலி பயந்து ஓடுகிறது. எதுவுமே மாறியதாகத் தெரியவில்லை. ஆனால், மனிதர்களாகிய நாமோ, பத்தாண்டுகளுக்கு முன். இல்லையில்லை, சென்ற ஆண்டு இருந்ததைப்போலஇந்தாண்டு  இருப்பதில்லை! பெற்றவர்கள் போல் பிள்ளைகள் நடந்ததில்லை. அப்பிள்ளைகள் போல் அவர்களது பிள்ளைகள் நடந்ததில்லை. அது ஒரு முடிவில்லாத தொடர்கதை.

 அந்த அளவிற்கு நம்முடைய ஆறாவது அறிவு பரந்து விரிந்து, பலப் புதுமைகளைக் கண்டுபிடித்து, அனைத்தையும் அனுபவிக்க, தயாராகிவிட்டோம் .
 புதுமைகளைக் கண்டாலும்,பெண்தெய்வம் என்று கூறி  கர்ப்பக் கிரகத்தில் வைத்துப் பூசை செய்து உழைத்துக்கொண்டு, 👫பெண்கள் அங்கு செல்லக்கூடாது, ஐயப்ப மலையில் ஏறக்கூடாது என்ற கோஷங்கள் மனிதனை விலங்கு நிலையிலும் கீழ் நிலைக்கே கொண்டு செல்கிறது.
 ஆசைகள் அண்டத்திலும் பெரும் ஆசைகளாக விரிந்து இலகுவாகக் கிடையாதோ? ,இனாமாகக் கிடையாதோ? என்ற வெறியில் உண்டாக்கிய 100 தெய்வங்கள் போதாதென்று பொன்னுக்காக, பொருளுக்காக வாயைத் திறந்தவன், எல்லோரையும் சுவாமி, என்றும் கடவுள் என்றும் அவனடி வீழ்ந்து மேலும் ,மேலும் ஆன்மீகத்திற்கான கடவுள் வழிபாட்டினை கேலி செய்து மும்மலங்களிலும் இன்று மனிதன்  மூழ்கித்  தவிக்கிறான்.
உண்மைகள் கசக்கும். ஆனால் கசக்கும் மருந்துகள்தான் நோயினைச் சுகப்படுத்தும்.

Ω℧Ω℧Ω℧ தொகுப்பு:மதன்-வேனுந் Ω℧Ω℧Ω℧


0 comments:

Post a Comment